வடமாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலா 200 மில்.நிதி – மேம்பாட்டுத் திட்டத்திற்கு உலக வங்கி உதவும்

canrasri.jpgவட மாகாணத்தின் உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (NELSIP)  ஊடாக அரசாங்கம் இந்த நிதியை வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் உதவி வழங்கவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநர் தலைமையில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் தேசிய திட்ட இணைப்பாளராகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வியானி குணதிலக்கவும், வட மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பிரான்ஸிஸ் ஜோன்ஸன் உட்பட உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனர்.

2010 முதல் 2013 வரையான நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிரான்ஸிஸ் ஜோன்ஸன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக வழங்கப்படும் உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் வகையிலேயே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நூறு வீத மக்களின் பூரண பங்களிப்புக்களின் மூலமே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவைப் படும் வசதிகள், நடவடிக்கை உடனடியாக செய்து கொடுக்கப்படும்.

ஆண்டிறுதி கணக்கறிக்கை, கணக்காய்வு மற்றும் மக்களின் பங்களிப்பு என்பவற்றைச் சரியான முறையில் காண்பிக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கே இந்த நிதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தைத் துரிதப் படுத்தும் வகையில் எதிர்வரும் 21ம் திகதி வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் வரோதய நகரிலுள்ள விவசாய திணைக்கள கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *