இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ நேற்று முல்லைத்தீவுப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.முல்லைத்தீவுக்கான பாஸ்கோவின் விஜயமானது “பரிசீலனைக்கான பயணம்” என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நேரில் கண்டறிவதற்காகவே பாஸ்கோ வருகை தந்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவித்தன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரச அதிகாரிகள், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் உட்பட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர், சிவில் சமூக குழுக்கள் ஆகியோரை லின் பாஸ்கோ சந்திக்கவுள்ளார்.
நேற்று புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்தவுடன் முல்லைத்தீவுக்குப் பயணமாவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை பாஸ்கோ சந்தித்துள்ளார். இன்று வியாழக்கிழமை மாலை 6.30, 7.30 மணியளவில் ஐ.நா. தகவல் நிலையத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் அவர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.