அரசாங்க ஆஸ்பத்திரிகளில் காயங்களுக்கு மருந்து கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணிக்கு நிலவும் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத்துணித் தட்டுப்பாட்டை துரிதமாக நிவர்த்திப்பதற்கு தேவையான சகல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் காயங்களுக்கு மருந்து கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணியை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு தடவைப்படி கோட்டாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்துணி உற்பத்தியாளர்களுக்கு அவற்றை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கவென மூன்று மாதத்திற்கு ஒரு தடவையே கோட்டா வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காயங்களுக்கு மருந்துகட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான துணியை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கும் 262 உள்ளூர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவசரமாக அழைத்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் போது உற்பத்தியாளர்களின் குறை, நிறைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின் படியே கோட்டாவை ஒரு வருடத்திற்கு ஒரு தடவை வழங்குவதாக அமைச்சர் அறிவித்தார். இத்துணி உற்பத்தியையும் அதன் உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆஸ்பத்திரிக ளில் இத்துணிக்குத் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் இச்சமயம் கேட்டுக்கொண்டார்.