October

October

இந்தோனேசியாவில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம்

01-indonesia.jpgஇந்தோனே சியாவில் இன்று காலை 6.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 கடந்த மாதம் 30ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்நிலையி்ல் இன்று காலை சுமார் 9.06 மணிக்கு இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் மேற்கு பபூவா மாகாண தலைநகர் மனோக்வரி நகரில் இருந்து வடமேற்கே 128 கிமீ தூரத்தில், சுமார் 39 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.

சேதம் குறித்து உடனடி தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலநடுக்கத்துக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இரண்டு வேறு வேறு கண்ட தட்டுக்களில் உள்ளன என்றார்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை குறித்து பரிசீலனை – இந்திய உள்துறை அமைச்சர்

041009chidambaram.jpgதமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில், சிதம்பரம். தமிழக முதல்வரை சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளார் 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து முதல்வருடன் கலுந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் கடற்படை மீட்பு

ஆழ்கடல் படகுகளில் மீன் பிடிக் கச் சென்று மூன்று நாட்களாகக் கட லில் தத்தளித்துக்கொண்டிருந்த 11 இலங்கை மீனவர்களைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

இரண்டு ஆழ்கடல் படகுகளிலிரு ந்த மீனவர்களை பருத்தித்துறையிலி ருந்து 160 கடல் மைல் தொலைவில் ஒரு கடற் பகுதியிலும் சங்கமன்கந் தையிலிருந்து 85 கடல் மைல் தொலைவில் ஓர் இடத்திலும் மீட்டதாகக் கடற்படைத் தலைமையகத்தின் ஒருங் கிணைப்பாளர் கமாண்டர் அதுல செனரத் தெரிவித்தார்.

திருகோணமலை துறை முகத்திலிருந்தும், மிரிஸ்ஸ மீன்பிடித் துறை முகத்திலிருந்தும் கடந்த 28ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற 11 மீனவர்களையே கடற்படையினர் காப்பாற்றிள்ளனர்.

குருநாகல் குண்டுவெடிப்பு : சந்தேகத்தில் படைவீரர் ஒருவர் கைது

021009kurunagala.jpgகுரு நாகலில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் நின்று செயல்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் படைவீரர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகிலிருந்த இராணுவ விடுதி ஒன்றில் தமது பதவியை ராஜினாமா செய்த இவர், வேனில் குண்டைப் பொருத்திவிட்டு தலைமறைவாகியிருந்தார் என விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

12 வயது சிறுமி ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்கள் எண்மர் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். வேன் உரிமையாளரின் வீட்டு முற்றத்தில் வைத்தே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வேனை சாரதி செலுத்த ஆரம்பித்த வேளை, குண்டு வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த ஏனையோர் பாடசாலை செல்லும் மாணவர்களை விடுவதற்காக வேன் உரிமையாளர் வீட்டுக்கு வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு உதவிகள்

040909batticaloa.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின் கீழ் சனிக்கிழமையன்று முதற்கட்டமாக பெண்கள் உட்பட பலருக்கு சுய தொழில் வாய்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க உதவித்திட்டத்தின் கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தையல், விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உட்பட பல்வேறு வகையிலான சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தமது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைத்ததாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு மற்றும் யு.எஸ்.எயிட் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

வவுனியா நகர அபிவிருத்தி திட்ட வரைவு ஏகமனதாக ஏற்பு

வவுனியாவைப் புதிய நகரமாக மாற்றி அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை தயாரித்துள்ள திட்ட நகல் வரைவு அரச அதிகாரிகளாலும் மக்கள் பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸின் வேண்டு கோளுக்கிணங்கவும், ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக் குச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமை யவும் நகர அபிவிருத்தி அதிகார சபை புதிய நகரத்திற்கான திட்ட நகல் வரைவைத் தயாரித்து வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகளையும் நகர சபை பிரதிநிதிகளையும் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு அழைத்து

விளக்கமளித்தார். இதனையடுத்து திட்ட நகல் வரைவை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல பகுதிகளில் சிறிய நகரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பூவரசங்குளம், நெலுக்குளம், செட்டிக்குளம், நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரவில் ஒரு பகுதி, ஓமந்தை, மாமடு உள்ளிட்ட பகுதிகள் சிறிய நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படுமென அரச அதிபர் தெரிவித்தார். அவ்வப் பகுதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய நகரில் வசதிகள் ஏற்படுத்தப்படுமென அவர் கூறினார்.

வவுனியா நகரில் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் அரச திணைக்களங்களை ஒன்றிணைத்து தாண்டிக்குளத்தில் அரச திணைக்களங்களின் கட்டடத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. அரச விடுதிகளை ஒன்றிணைத்து பூந்தோட்டத்தில் விடுதித் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படும்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகள், உல்லாசத் துறை உள்ளிட்ட துறைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வவுனியா குளத்தைப் புனரமைப்புச் செய்வதுடன் உல்லாச விடுதிகளின் வசதிகளும் மேம்படுத்தப்படுமென அரச அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

புதுடில்லி இலங்கை தூதரகத்தை தாக்கியவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை

03srilankanhighcommissioninde.jpgபுதுடில்லி யிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.

இத் தாக்குதல் சம்பவத்துக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டதுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் இலங்கை தூதரகத்துக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நேற்று முன்தினம் பகல் சுமார் 2.30 மணியளவில் புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரலாயத்தின் முன்னாள் சுமார் 40, 50 பேர் கூடி நின்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறி ‘இலங்கையே கச்சதீவை விட்டு வெளியேறு, தமிழ்நாடு மீனவர்களை படுகொலை செய்யாதே’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுள் சுமார் 10 பேர் பாதுகாப்பையும் மீறி தூதரக வளவுக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்த முற்பட்டனர்.

உள்ளே நுழைந்தவர்கள் தூதரக நுழைவாயிலுக்கருகே வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சிலவற்றை நிலத்தில் அடித்து நொருக்கியுள்ளதுடன் தூதரகத்திற்கும் சிறு சேதங்களை விளைவித்துள்ளனர். உடனடியாக பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்வது அவர்களது ஜனநாயக உரிமை. எனினும் அத்துமீறி தூதரக வளவுக்குள் பிரவேசிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இது தொடர்பாக இந்திய அரசுக்கும், பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதரகத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்னா தெரிவித்தார்.

இச்சம்பவத்தை அடுத்து புதுடில்லி உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் வந்து தூதரகத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் தரப்பில் 305060 நியமனங்கள்! பிரதி நிதி அமைச்சர் தகவல்

உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு பல உலக நாடுகள் தொழில் வாய்ப்புக்களை குறைக்கும் வேளையில் இலங்கை அரசாங்கம் அரச துறையில் 3,05,060 நியமனங்களை வழங்கியுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி குறிப்பிட்ட கால எல்லையில் 205,349 புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் வெற்றிடங்களுக்கான நியமனங்கள் 99,711 வழங்கப்பட்டுள்ளன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருக்கும் போது பலதரப்பட்ட சுற்றறிக்கைகளை வெளியிட்டு அரச சேவையில் பெரும் எண்ணிக்கையிலான நியமனங்களை இல்லாமல் செய்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச துறையில் அத்தியவசிய சேவைகளில்; நிலவும் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை பகிரங்கமாக நியமிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தூர்.

புத்தளம் மினி சூறாவளியில் 600 வீடுகள் சேதம்; 20க்கு மேற்பட்டோர் காயம்

021009monsoon-rains.jpgபுத்தளம் நகரில் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 600 வீடுகள் சேதமாகியதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்றுப் பகல் சுமார் 1.30 மணியளவில் நகரை ஊடறுத்து பலத்த காற்றுடன் மழையும் பெய்தது. சுமார் 3 அல்லது 4 நிமிட நேரம் பலமான காற்று மினி சூறாவளியாக வீசத் தொடங்கியது.

புத்தளம் கடற்கரை வீதி, 4ஆம் வட்டாரம், மன்னார் வீதி, மரைக்கார் வீதி, நூர் வீதி பகுதிகளிலுள்ள வீடுக ளின் கூரைகள் பறந்தன. வர்த்தக நிலை யங்களின் பெரிய பெயர்ப் பலகைகள் சரிந்தன. வீடுகளில் இருந்த உடை மைகள் தூக்கி வீசப்பட்டன. வீடுக ளின் கூரைகளில் கட்டப்பட்டிருந்த நுளம்பு வலைகள் மின் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருந்தன.

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் பலத்த காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. எல்ப்ரக வாகனமொன்று ஆட்டோக்களில் மேல் விழுந்ததால் சேதம் ஏற்பட்டது. இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்ற தகவல்களை புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ. டி. எச். பந்துசேன தெரிவித்தார்.

தொலைபேசி வயர்கள் வீதியெங்கும் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தன மின்சாரம் தடைப்பட்டிருந்தது. மழை காரணமாக மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தனர். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஸ்தலத்துக்கு விரைந்து பார்வையிட்டதுடன் மக்களுக்கு உடனடி நிவாரண ஏற்பாடுகளை செய்யுமாறும் சேத விபரங்கள் தொடர்பாக மதிப்பீடுகள் செய்யுமாறு கிராமசேவகர்களுக்கும் பணிப்புரைகளை வழங்கினார். பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் புத்தளம் நகரில் சேதமடைந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். மீட்புப்பணிகள் தொடர்கின்றன.

பிரபாகரனை அழித்தது தவறெனக் கூறி எதிர்க்கட்சி விசாரணை நடத்தக் கோருகிறது

mahinda-rajapaksha.jpgஊடகவிய லாளர்கள் மட்டுமல்ல அரசியல்வாதி களேயானாலும் இந் நாட்டில் சட்டம் சகலருக்கும் சமமானதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பை வைத்துக் கொண்டு சர்வதேசமெங்கும் எதிர்க்கட்சியினர் விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாம் பிரபாகரனை அழித்தது தவறு எனக் கூறி விசாரணை நடத்தக் கோரி வருகின்றனரென்றும் குறிப்பிட்டார்.

தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்வொன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

தென் மாகாண மக்களின் காணி உறுதிகள் பற்றி நாம் குறிப்பிடும் போது இன்னொன்றும் ஞாபகத்துக்கு வருகிறது.  எமது நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும் மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பையும் ரணில் விக்கிரமசிங்க புலிகளுக்கு எழுதிகொடுத்த சம்பவம்தான் அது. அதை வைத்துக் கொண்டு புலிகள் தனி நிர்வாகமொன்றையே நடத்தினர். பொலிஸ், நீதிமன்றம்,  முப்படை, வங்கிகள் என அனைத்தையும் நிறுவி நிர்வாகம் செய்தவர்களுக்கு நாட்டின் ஒரு பகுதியை எழுதிக் கொடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க.

இன்று அந்த நிர்வாகம் கலைக்கப்பட்டு பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டு விட்டது. எம்மால் இந்நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்துள்ளது. நாம் யுத்தத்தை மட்டும் நடத்தவில்லை. அத்துடன் முழு நாட்டிலும் அபிவிருத்திகளை மேற் கொண்டோம். மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ் நாம் ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதும் இதுவரை ஐந்து இலட்சம் காணித் துண்டுகளை எம்மால் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளது.

அரச வேலைவாய்ப்புக்களைக் குறைப்பதற்காக அன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் உலக வங்கியிடம் உறுதிமொழியளித்தனர். இன்று நாம் அரச துறையில் 12 இலட்சம் ஊழியர்களுக்கு தொழில் வழங்கி சகல சலுகைகளையும் வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எமக்குக் கடன் வழங்க வேண்டாமென எதிர்க்கட்சியினர் சர்வதேசத்திடம் கோரி வருகின்றனர். எத்தகைய நிலையிலும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தென் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசாங்கம் பெருவெற்றி பெறுவது உறுதி எனக் குறிப்பிட்டதுடன், சர்வதேசக் குற்றச்சாட்டுக்களிலிருந்து நாம் விடுதலைபெற தென் மாகாண மக்கள் வழங்கும் வெற்றி மிகவும் உறுதுணையாக அமையுமெனவும் தெரிவித்தார்.