மட்டக் களப்பு மாவட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின் கீழ் சனிக்கிழமையன்று முதற்கட்டமாக பெண்கள் உட்பட பலருக்கு சுய தொழில் வாய்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்க உதவித்திட்டத்தின் கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தையல், விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உட்பட பல்வேறு வகையிலான சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தமது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைத்ததாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு மற்றும் யு.எஸ்.எயிட் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.