June

June

இலங்கையில் யுத்தப் பிரதேசத்தில் பணிபுரிந்திருந்த மருத்துவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்

இலங் கையில் வடபகுதிப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தி உட்பட நான்கு பேர் நேற்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆஜர் செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையில் அமலில் இருக்கும் அவசரகால சட்டத்தின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் டாக்டர் சத்திய மூர்த்தி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் தடுப்புக் காவலுக்கு அனுப்பப்பட்டார். டாக்டர் சத்திய மூர்த்தியும், அவரது சக சுகாதார அதிகாரிகளும் போர் குறித்த தவறான தகவல்களை வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சத்தியமூர்த்தியுடன், விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டர், விடுதலைப் புலிகளின் டாக்டரான கந்தசாமி துரை கேதீஸ், அவர்களது தாதியான ஆறுமுகம் ஜெயலக்ஷ்மி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

ஜோர்ஜ் மாஸ்டர் நேற்று 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் ரயில் நிலையமும் விரைவில் புனரமைக்கப்படும்

yaal-devi.jpgயாழ்ப் பாணம் ரயில் நிலையம் புனரமைக்கப்படவுள்ளது. இப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுவதால் அவற்றை முற்றாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, யாழ்.ரயில் நிலையத்துக்கு அருகில் சேதமான விடுதிகள், அலுவலகங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபன தாங்கிகள் என்பனவும் புனரமைக்கப்படவுள்ளன.

இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்தியா தலையிடாது – மேனனின் கருத்துக்கு ஜ.தே.கூ வரவேற்பு

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா தலையிடாது எனும் சிவசங்கர் மேனன் அவர்களின் கருத்தை ஜனநாயக தேசியக் கூட்டணி பெரிதும் வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தனியான இறைமை கொண்டுள்ள ஒரு நாடு என்ற வகையில் இலங்கை மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளின் தலையீடின்றி தீர்வுத்திட்டமொன்றை நோக்கிச் செல்வதே சிறந்ததாகும். இந்த யதார்த்தத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

உண்மையில் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியும் என்பதை ஏற்றுக்கொண்டால் இந்திய முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தலையிடுவதும் நியாயம் என ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையை இந்நாட்டு மக்களே தீர்த்து சகலரும் நிம்மதியாக வாழும் சூழலை இலங்கையர்கள் உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் யதார்த்தத்தை புரிந்து கொண்ட கருத்தாக இருக்க முடியும்.

இன நல்லுறவுடன் வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வித் திட்டம் : த ஜெயபாலன்

mr-wais.jpgவன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு இலங்கை மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன் வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.

2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 2, 777,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று சிந்தனைவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.

மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்”க்கு வழங்கிய விசேட நேர்காணல் எதிர்வரும் தினங்களில் இடம்பெறும்.

டுவென்டி 20 உலககோப்பை கிரிக்கெட்’சூப்பர் 8′ சுற்றுப் போட்டியில் இலங்கை வெற்றி

muralitharan-sri-lankas.jpgஇங்கி லாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் சற்றுமுன் நடைபெற்று முடிந்த ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘எப்’ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது

டாஸ் வென்ற இலங்கை அணி 20 வது ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

வட பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற வற்புறுத்துங்கள்: இலங்கை தமிழ் எம்.பி.க்கள் இந்தியாவிடம் கோரிக்கை

tna-india.jpgஇலங்கை வட பகுதியிலிருந்து ராணுவம் விரைவில் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சி என்று கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் 4 எம்.பி.க்கள் தில்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அரசின் அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா அளிக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் தமிழ் தேசியக் கட்சி பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரினர்.

தமிழர்களை மீண்டும் அவர்களது வசிப்பிடங்களில் குடியமர்த்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழ் எம்.பி.க்கள் குழு தலைவர் சம்பந்தன் பாராட்டினார்.

அமைச்சர் கிருஷ்ணாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு தமிழ் எம்.பி.க்கள் பேட்டியளித்தனர். இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கு முன்பாக அங்கிருந்து ராணுவம் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு இந்தியா இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம் என்றனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். ராணுவ முகாம்கள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப் பட வேண்டும். ராணுவம் தொடர்ந்து இருந்தால் மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ முடியாது என்று தமிழ் எம்.பி. மாவை சேனாதிராஜா கூறினார்.

வட பகுதியில் தமிழர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவும் மறுவாழ்வு பணிகளுக்கும் இந்தியா இன்னும் அதிக நிதி ஒதுக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.மறுவாழ்வுப் பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் திருப்தியளிப்பதாக உள்ளது என்று சேனாதிராஜா கூறினார்.வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனையும் தமிழ் எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினர்.

லசந்த விக்ரமதுங்க படுகொலை : அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

lasantha.jpgசண்டே லீடர் பத்திரிகையின் பிரதமர் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவம் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மிரிஹான மற்றும் கல்கிஸை காவல்துறையினரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் செல்லிடத் தொலைபேசியைத் திருடிய சந்தேக நபரைத் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தப் படுகொலை சம்பவம் குறித்த விசாரணைகளை இரகசிய காவல்துறையினரோ அல்லது உயர் காவல்துறை அதிகாரிகளோ மேற்கொள்ள பணிக்குமாறு அமரர் லசந்த விக்ரமதுங்கவின் குடும்பம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும், சட்டத்தின் பிரகாரம் அவ்வாறான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என கல்கிஸை நீதவான் தெரிவித்துள்ளார். 

இறுதிப் போர் குறித்து வெளிப்படையான பன்னாட்டு விசாரணை வேண்டும்: பான் கீ மூன்

06bankimoon.jpgவிடு தலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போரில் சர்வதேச போர் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த பன்னாட்டு குழுவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறிலங்க அரசை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.வில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பான் கீ மூன், “போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சர்வதேச சட்ட விதி முறை மீறல்களை கண்டறிந்து அதற்குக் காரணமானவர்களைப் பொறுப்பாக்க வெளிப்படையான விசாரணை நடத்துவது தொடர்பாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அதிபர் ராஜபக்சவுக்குத் தான் இன்று (நேற்று) கடிதம் எழுதப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் 22,23ஆம் தேதிகளில் இலங்கைக்குச் சென்ற பான் கீ மூன், பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பான் கீ மூன், “அங்கு கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது” என்று கூறியிருந்தார்.

வரலாறு திரும்பக் கூடாது என்றால்…

போர் முடிந்துவிட்டது என்று சிறிலங்க அரசு அறிவித்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான நிவாரணம், மறுவாழ்வு, மீள் குடியமர்த்தல், அவர்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகளை உறுதி செய்யும் இணக்கப்பாடு ஆகியன குறித்து அளித்த உறுதிமொழிகளை சிறிலங்க அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய பான் கீ மூன், “இரு தரப்பு அறிக்கையில் ஒப்புக் கொண்டு அளித்த உறுதிமொழிகளை சிறிலங்க அரசு நிறைவேற்றுவது அவசியம்” என்று கூறினார்.

இலங்கையின் சிறுபான்மை மக்களான தமிழர்களுக்கு உரிய அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வை அளிக்கும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என்று கூறிய பான் கீ மூன், அதனைச் செய்யத் தவறினால் வரலாறு திரும்புவதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

“தமிழ் சிறுபான்மை மக்களையும், மற்றவர்களையும் சிறிலங்க அரசு உடனடியாக அணுகி அவர்களிடையே இணக்கப்பாட்டை உருவாக்கும் முதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வரலாறு மீண்டும் திரும்பக் கூடாது என்று நினைத்தால் இதனைச் செய்ய வேண்டும், உடனடியாகச் செய்ய வேண்டும். மீண்டும் சொல்கிறேன் அதனை உடனடியாகச் செய்ய வேண்டு்ம்” என்று பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

தற்பொழுது இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களி்ல் 80 விழுக்காட்டினரை அந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த சிறிலங்க அரசு உறுதியளித்துள்ளது நம்பிக்கையளிக்கிறது என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

“(இடம் பெயர்ந்த தமிழர்கள்) தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை மிகக் கடினமானதாகவுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், அவர்கள் தங்கள் பகுதிகளுக்குள் சென்று வர சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும், தங்கள் குடும்பாத்தாருடன் சேர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் – சானியா மிர்சா அரையிறுதிக்கு முன்னேற்றம்

27-saniamirza.jpgஇங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஹங்கேரியின் மெலிண்டா ஜின்க்கை 6 1, 7 6 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்

கலாநிதி தங்கத்துரை வில்லியம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்.

parliament-of-sri-lanka.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் மரணமானதை தொடர்ந்து உருவான வெற்றிடத்திற்கு கலாநிதி தோமஸ் தங்கத்துரை வில்லியம் அவர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கப்பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பதவியேற்றுள்ள இவர் பாண்டிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.