குருதியுறைந்து போகாத ஒரு குக்கிராமம். பிணக்குவியல்களும் மணற்குவியல்களுமாமகக் காட்சிதரும் கடற்கரைப் பகுதி. நாளை பொழுது புலர்ந்தால் இன்னும் ஆயிரமாயிரம் பிணக்குவியல்களின் மேல் புலிகளை அழித்துவிட்டதாகப் பெருமைகொள்ளக் காத்திருக்கும் சிறீலங்கா அரசின் கோரத்தாண்டவம். ஏழு சதுர கிலோ மீற்ரர் புதுக்குடியிருப்புக் கரையோரப் பகுதிக்குள் முடக்கப்பட்டுவிட்ட இன்னமும் கொல்லப்படாத மனிதர்களின் தொகை கூட யாருக்கும் தெரியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக எத்தனை பிணங்களின் மேலும் புலிகள் அழிக்கப்படலாம் என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் மகிந்த குடும்ப அரசாங்கம். கண்மூடித்தனமான கொலைவெறிக்கு அப்பாவித்தனமாக ஆதரவளிக்கும் சிங்கள மக்கள். “இவர்கள் புலிகளோடு பத்து வருடங்களாக வாழ்ந்தவர்கள். முட்கம்பி முகாம்களை விட்டு வெளிவிட்டால் ஆபத்து” என்று பிரித்தானியத் தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கும் இராணுவ அதிகாரி. இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் கையாலாகது திகைத்து நிற்கும் இன்னொரு கூட்டம்.
கொல்லப்படுதலை நிறுத்த நாம் யார்க்கும் பலமில்லை. அழுவதற்குக் கூடக் கண்ணீரில்லை. ஆனால் செத்துப் போகாமல் தப்பிவரும் அப்பாவிகளின் எதிர்காலமென்ன என்றாவது சிந்திக்க மறுக்கிறோம். இழப்பதற்க்கு உயிரைத் தவிர இல்லாமல் போன சமூகத்தின் எதிர்காலம் கூட மரணத்துள் வாழ்தலோ என சிறீலங்காவில் வளரும் பாசிசம் சந்தேகம் கொள்ளவைக்கிறது.
மனிதர்கள் கருத்துக்களால் பிழவுபட பாசிசம் கோரமாய் தனது விஷ வேர்களை ஊன்றி விருட்சமாய் வளர்கிறது.
1. பேரினவாத அரசாங்கம் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ மதிப்பதில்லை. இதற்கெதிராகப் போராட்டம் நடத்துவது புலிகள். ஆக, புலிகள் தான் மக்களின் காப்பாளர்கள் என்கிறது மிகப்பெரும் பகுதியான தமிழ் பேசும் மக்கள் பகுதி.
2. புலிகள் தான் தமிழ் பேசும் மக்களை “முன்னேற்றமடைய விடாமல்” குண்டுகளையும் துப்பாக்கிகளையும் தூக்கிக்கொண்டலைகிறார்கள். இதற்கெதிராக அரசாங்கம் போராடுகிறது. ஆக இலங்கை அரசின் ஆதாரவாளர்களாக வரித்துக்கொண்டு புலிகளை அழித்தலே பிரதானமான செயற்பாடாகக்கொண்டு இலங்கை அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் மிகச்சிறிய கூட்டம்.
இதில் முதலாவது பகுதியினரான பெருந்திரளான புலம் பெயர் தமிழர்களும் அவர்களின் உணர்வு பூர்வமான எழுச்சிகளையும், பங்களிப்பையும் தமது சொந்த அபிலாசைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் நபர்களும் அடங்குவர். இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும், குறிப்பாக வடபகுதி மக்கள் மத்தியிலும் இவ்வாறான புலிகளுக்கான மறுதலையான ஆதரவு உள்ளது என்ற கசப்பான உண்மையை யாரும் மறுக்க முடியாது.
உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய வாழ்க்கைச் சுமையின் தாக்கத்திற்கு மத்தியிலும் கொட்டும் மழையிலும், கொடிய பனியிலும், தொலை தூரங்களிலிருந்துகூட அரசிற்கெதிராகப் புலி ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் பெருந்திரளான மக்களின் உணர்வுகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இவர்களின் பெரும் பகுதியானவர்களிடம் புலிகள் தொடர்பாக விமர்சனப் பார்வை இருந்த போதிலும், அரசிற்கெதிராகப் புலிகளைத் தவிர எந்த மாற்று சக்தியும் இல்லாத நிலையிலேயே புலிகளின் தமது சொந்த உறவுகளுக்காக எதிர்ப்பிடங்களில் பங்கு கொள்கிறார்கள்.
இவ்வாறான புலிகளுக்கெதிரான மாற்று வழி கருத்தியல் ரீதியாக உருவாவதை மழுங்கடிப்பதில் பிரதான பாத்திரம் வகித்தவர்கள் இரண்டாவது பகுதியினரான அரச சார்பு குழுக்களே. அடிப்படையில், புலிகளை விமர்சித்தல் என்பது, இனப் படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசை ஆதரித்தல் என்ற கருத்தை உருவாக்கியதில் பிரதான பாத்திரத்தை வகித்தவர்களும் இந்த அரச ஆதரவுக் குழுக்களே.
இவ்வாறு புலி ஆதரவு என்பது அரச பாசிசத்தையும், அரச ஆதரவு என்பது புலிகளின் பாசிசத்தையும் வளர்த்தெடுத்த போக்கில் உருவான இன்னொரு போக்கும் இந்த இரு பகுதியினரின் கருத்தியலில் வளர்ச்சியின்றி முடங்கிப் போனது. அந்த மூன்றாவது அணுகுமுறை என்பது ஐந்து வருடங்களுக்கும் மேலாக அரச ஆதரவுக்குழுக்களின் அபாயகரமான போக்கை எச்சரித்திருந்தது.
3. இலங்கை அரசிற்கெதிரான போராட்டமென்பது, சில சமூக விரோதிகளால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்களல்ல, மாறாக இலங்கை அரசின் தொடர்ச்சியான தேசிய இன அடக்குமுறைகெதிரான எழுற்சியேயாகும். இவ்வடக்குமுறையின் இன்னொரு உச்ச வடிவம் தான் இன்றைய இன அழிப்பும் கூட. இந்த இனச் சுத்திகரிப்பிற்கெதிரான போராட்டத்தை புலிகள் தம்மைச்சுற்றிய பாசிசமாக வளர்த்தெடுத்து சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக, இலங்கை அரசிற்கெதிராகப் போராடுவதற்கான உரிமையை கோரிப் புலிகளை நோக்கிய போராட்டத்தையும், பிரதான எதிரியான இலங்கை அரசிடம் சரணடையாத விட்டுக்கொடுப்பிற்கு அப்பாலான போராட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தியது இந்த மூன்றாவது கருத்தியல்.
கெரில்லாப் போராட்ட அமைப்புக்களை நிர்மூலமாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, உலகெங்கிலும் முன்னதாகப் பலதடவைகள் பிரயோகிக்கப்பட அதே தந்திரோபாயத்தை இலங்கை அரசும் தமிழ்பேசும் மக்கள் மீதும் பிரயோகிக்கும் இன்றைய வன்னிச் சூழலானது, இந்த மூன்றாவது போக்கைக் கொண்டோரையும் ஒன்றில் முதலாவது போக்கிற்கு ஆதரவு நிலை கொண்டதாகவோ அல்லது இரண்டாவது போக்கின் சார்புனிலை கொண்டதாகவோ மாற்றியுள்ளது.
போராட்டங்களை அழித்தல்…
கிரேக்கத்தில் நடந்த சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்தொழிக்க பிரித்தானிய அமரிக்க அரசுக்கள் பயன் படுத்திய அதே தந்திரோபாயத்தையே இலங்கை அரசும் மிக வலுவான இனவாத இராணுவத்தின் துணைகொண்டு தமிழ் மக்கள் மீது பிரயோகிகின்றது. 1946 முதல் 1946 – 1948 காலப்பகுதில் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவம் பெரிய நிலப்பரப்பினைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. சுமார் ஒரு ரில்லியன் பவுண்ட்கள் வரை செலவுசெய்தும் போராட்ட அமைப்பை அழித்தொழிக்க முடியாமல் பின்வாங்கிய பிரித்தானிய அரசிற்குப் பின்னதாக, கம்யூனிஸ்ட்டுக்களை அழிக்க அமரிக்கா முன்வந்தது.
போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் நீர் வினியோகத்தைக் கட்டுப்படுத்துமாறு ஆணையிட்ட அமரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ, அப்பகுதியிலுள்ள மக்கள் மீது தேசிய இராணுவமான அரச படைகள் தாக்குதல் நடத்தவும் உறுதுணையாக அமைந்தது.
சோவித் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகளின் இராணுவம் நிலைகொண்டிருந்த கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. மக்களைப் பட்டினி போட்டுக் கொன்று குவித்தது அரச படைகள். இதன் விளைவாக போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பியோடிய மக்களை சுட்டிக்காட்டி போராளிகளுக்கெதிராக கிரேக்க அரசு உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டது. போராளிகள் தனிமைப்பட்டுத்தப்பட்டு அழிக்கப்பபடும் நிலையில் வெளியேறும் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்க ஆரம்பித்தனர். இவ்வாறு போராளிகளுக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு வளர்ச்சியடைய, இதுவரை போராட்டத்திற்கு ஆதரவளித்த பெரும்பாலான விவசாயிகள் அதற்கு எதிரானவர்களாக மாற, அரச படைகள் வெற்றிகொண்டன. போராட்டம் அழிக்கப்பட்டது.
இந்த வெற்றியினூடாக இரண்டு பிரதான விடயங்களைச் சாதித்துவிட்டதாக பின்னதாக சி.ஐ.ஏ அதிகாரிகள் ஆவணமொன்றில் குறிப்பிடுகின்றனர்.
1. சோவியத் ஆதிக்கத்திற்கெதிரான வெற்றி.
2. மக்களுக்குப் போராட்டத்தின் மீதான நிரந்தரப் பயவுணர்வும் வெறுப்பும்.
மகிந்த அரசின் நிக்ழ்ச்சி நிரல்…
இவ்வாறு நீண்டதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலானது, பல நாடுகளில் போராட்டங்களும் புரட்சியும் அழிவின் மறுவடிவம் என்ற சிந்தனைப் போக்கினை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது.
இங்கு குறிப்பிடத்தக்க இன்னொரு விடயம், சோவியத் கமியூனிஸ்ட் கட்சியின் போராட்டமானது மக்கள் சார்ந்த மக்களில் தங்கியிருக்கும் மக்களின் கண்காணிப்பிலான போராட்டமாகவன்றி, இராணுவ நோக்கிலான போராட்டமாக அமைந்திருந்ததே அரச படைகளின் அழிப்பிற்கு உட்படக்கூடியதான நிலைக்கு மாற்றப்பட்டதன் அடிப்படைக் காரணமாகும்.
போராட்டங்களையும் புரட்சிகளையும் அழித்து தாம் விரும்பிய அதிகாரத்தை நிறுவிக்கொள்ள உலகெங்கும் ஏகாதிபத்தியங்கள் கையாண்ட அதே வகைமுறையைத் தான் பேரினவாத மகிந்த குடும்பமும், அனைத்து ஏகாதிபத்திய வல்லசுகளின் மௌனமான அங்கீகாரத்துடன் கையாள்கின்றது.
அழிந்துபோகும் போராட்ட நியாயம்…
புலிகளின் போராட்டம் என்பது தவறான அடித்தளத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டது என்பதை போராட்டம் ஆரம்பித்த காலம்முதலே பல ஜனநாயகவாதிகளும், இடதுசாரிகளும் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. புலிகளின் தவறு என்பது போராட்டத்திற்கான நியாயத்தையே மழுங்கடிக்குமளவிற்குப் பாசிசமாக வளர்ந்து இன்று அரச குண்டுகளினதும் துப்பாக்கிகளினதும் வீச்சுக்குள் மக்களை நிறுத்தி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுகின்ற மனித அவலமாக விசுவரூபமெடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்கவில்லை.
மகிந்த குடும்ப பாசிசமானது, தனது சொந்த தேசத்தின் மக்களை கிரேகத்திலும் கொரியாவிலும் அமரிக்க அரசு திட்டமிட்டது போலவே கிராமங்களுக்குள் முடக்கி, அவர்கள் மீது கொலைவெறியாட்டம் நடத்துகிறது. இதனால் புலிகளைத் தனிமைப்படுத்து, ஏற்கனவே மக்கள் மீது எந்தப் பற்றுமறுமற்ற புலிகளை மக்களுக்கெதிரான தாக்குதலில் ஈடுபடும்படியான புறச் சூழலை ஏற்படுத்தியது. புலிகளின் பிரதேசங்களிலிருந்து வெளியேறிய மக்களை சுட்டிக்காட்டி தேசிய விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் விரும்பாத புலிகள் என்ற குழுவின் போராட்டம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.
1. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்பது இல்லாதவொன்றென்றும், புலிகள் மட்டுமே மக்களின் பிரச்சனை என்பதை நிறுவ முற்படுகிறது.
2. புலிகளைக் காரணமாக முன்வைத்துத் தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியிலிருந்து மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் முன்னெழக்க்கூடிய அனைத்துப் போராட்டங்களையும் அழித்தொழிப்பது.
3. போராட்டங்கள் மீதான மக்களின் வெறுப்புணர்வை சமூகத்தின் நினைவு மட்டத்தில் வளர்த்தெடுப்பது.
4. புலிகளை முன்வைத்து ஜனநாயக சக்திகள் உட்பட அரச எதிர்ப்பாளர்களையும் தவிர்க்கமுடியாமல் அரசின் பாசிச எல்லைக்குள் உள்ளாக்குதல்.
இனவழிப்பு நடவடிக்கையே…!
உலகெங்கிலும் போராட்டங்களை நிர்மூலமாக்கவும், அதன் மீதான வெறுப்புணர்வை உருவாக்கவும் கையாளப்பட்ட அதே தந்திரோபாயத்தைத்தான் இலன்கையரசும் பிரயோகிக்கின்றது என்பது ஒருபுறமும் மறுபுறத்தில் இலங்கையரசானது ஏனைய அனைத்து ஒடுக்குமுறைகளினதும் உச்ச வடிவமாக அமைகிறது என்பது அதன் இனப்படுகொலையூடாக நிரூபிக்கிறது.
தான் விரும்பும் ஒன்றை அடைவதற்காக ஒரு நாட்டின் சட்டரீதியான அரசு நிராயுத பாணீகளான ஒரு குறித்த மக்கள் பிரிவினர் மீது இன்னொரு மக்கள் பிரிவினரின் நலனை அடிப்படையாக முன்வைத்து நடாத்துகின்ற கொலைகளும், சூறையாடல்களும் அழிவுகளும் இனப்படுகொலை என்பதை வரையறுக்கப் போதுமான முன்நிபந்தனையாகும்.
புலிகளை அழித்தல் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அம்மக்களின் அழிவைப் பொருட்படுத்தாது, அவர்களைச் சாரிசாரியாகக் கொன்றொழித்தும், அந்தக் கொலைக்களத்திலிருந்து தப்பியோடியவர்களை மிருகங்கள் போல முட்கம்பிச் சிறைகளில் அடைத்தும் பெரும்பான்மைச் சிங்களமக்களின் ஆதரவோடு நடாத்தும் இந்த அரசியலை இனவழிப்பு நடவடிக்கையே!
இன்னொரு தடவை தமிழ் மக்கள் தமது கடற்பிரதேசத்தில் மீன்பிடிக்கவோ, தனது நிலத்தில் விவசாயம் செய்யவோ, ஏன் வாழவோ உரிமை கேட்கும் போதெல்லம் தான் விரும்பியதை அடைவதற்காக இதே அரசாங்கம் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்துத் தமிழ் மக்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக படுகொலை நடத்தும் தார்மீக உரிமையை இலங்கை அரசு இன்றைய இனப்படுகொலைகளூடாக அறிவித்திருகிறது.
போராட்டத்தின் அவசியம்…
1970 களிலிருந்து தொடர்ச்சியாக ஆட்சிக்குவந்த இனவாத அரசுகளுக்கெதிராக பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் போராட்டமானது 1980 களின் பின்னர் தேசிய இன அடக்குமுறையின் உச்சனிலை கண்டு ஆயுதப்போராட்டமாக பரிணாமமடைந்தது.
இன்று இந்தத் தேசிய இன அடக்குமுறை என்பது சிங்கள அரச பாசிசத்தின் அங்கீகாரத்தோடு இனப்படுகொலை என்ற நிலைக்கு வந்தடைந்துள்ளது. இந்த அரசியற் பின்புலத்தில் சிறீலங்கா அரச பாசிசத்திற்கெதிரானதும், இனப்படுகொலைக் கெதிரானதுமான தமிழ் பேசும் மக்களது போராட்டத்தின் தேவை முநிறுத்தப்பட வேண்டும். அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இணைந்து அரசிற்கெதிரான இப் போராட்டத்தை வளர்தெடுக்க வேண்டும். போராட்டத்தின் மீதான பயவுணர்வையும் வெறுப்புணர்வையும் மக்கள்மத்தியில் விதைத்து சரணடைவைக் கோரும் சிறிலங்கா அரச பாசிசத்தையும் அதன் ஆதாரமாக அமையும் அனைத்து சக்திகளையும் முன்னைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு அம்பலப்படுத்தவேண்டும். பல உணர்வுபூர்வமான தேசபக்த சக்திகளை உள்ளடக்கிய புலிகளின் ஆதரவுத் தளமானது சரியான போராட்டத்தை நோக்கி வென்றெடுக்கப்ப்பட வேண்டும்.
அரச பாசிசம்…
லசங்க விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளன் அரசை நோக்கிக் கேள்வியெழுப்பிய ஒரே காரணத்திற்காக தெருக்கோடியில் வைத்துக் கொல்லப்பட்டார். சர்வதேச ஊடகங்களிலும் அறியப்பட்ட, மிகப்பலமான தொடர்புகளைக் கொண்ட ஒரு ஊடகவியலாளன் நடுத்தெருவில் வைத்து அரச காடையர்களால் தேசபக்தியின் பேரால், போரின் பேரால் கொல்லப்பட்ட சில நாட்களில் மகிந்த குடும்பத்தின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அவர் கொல்லப்பட்டதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று சர்வதேச ஊடகங்களுக்க்ச் செவ்வி வழங்குகிறார். 70 இற்கும் மேலான ஊடகவியலாளர்கள் அதிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அன்னிய தேசங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல ஊடகங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தனது அனைத்து எதிரிகளையும் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. அப்பாவிச் சிங்கள மக்கள் தேசபக்தி உருவாக்கிய பாசிசத்தில் கட்டுண்டு போயுள்ளனர்.
தமிழர்களுக்கெதிரான உணர்வு தலைவிரித்தாடுவதாக அண்மையில் இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த சிங்கள ஊடகவிலாளர் துயர்பட்டுக்கொண்டார். பேரூந்துகளில் சிங்கள நடத்துனர்கள் கூட தமிழர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு மிரட்டப்படுகின்றனர்.
தொலைதூரக் குக்கிராமங்களில் கூட சிங்கள தேசம் என்ற உணர்வும், மூன்று தேச சிங்கள உணர்வும் மகிந்த அரசை பௌத்த சிங்களத்தின் காவலனாகக் காண்பிக்கிறது. மகிந்த சிந்தனைய என்ற தேர்தல் வாக்குமூலம் இதைத்தான் முன்மொழிந்தது. ஆக, தெற்காசியாவின் கொல்லைப்புறத்தில் ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன், இந்தியாவின் நேரடிப்பங்களிப்புடன், அவற்றின் வியாபார அரசியல் நலன்களுக்காக ஒரு கோரமான பாசிச அரசு உருவாகிவருகிறது.
பிரமித்துப் போன ஊடகவியலாளன்…
இவற்றிற்கெல்லம் மத்தியில், தேசிய இன ஒடுக்குமுறைகெதிராக ஆயுதப்போராட்டத்தை கோரி அரசியலுக்கு வந்தவர்களும், புலிகளிடம் போராடுவதற்கான உரிமையைக் கோரி ஜனநாயம் பேசியவர்களுமன தமிழர்கள் பலர், ஒவ்வொரு காரணங்களுக்காக சிறீலங்கா அரசின் ஆதரவு சக்திகளாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அரசின் நிகழ்ச்சியொன்றைப் பிரதானப்படுத்தவில்லை என்ற புறக்கணிக்கத்தக்க காரணத்திற்காகக் கூட தெருவில் வைத்துத் தாக்கப்பட்ட ஊடகவியலாளன் வாழும் ஒரு இருண்ட தேசத்திற்கு “மக்கள்” ஊடகவியலாளன் அரச வரவேற்புடன் அரசின் கோட்டைக்குள், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளுள் மிக முக்கியமான ஒருவரான பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துவிட்டு வந்து அரசின் திறமையில் மலைத்துப் போய் தேசம்னெற் ஆசிரியரான கொன்ஸ்டன்டைன் எழுதிய கட்டுரைகண்டு அதிர்ச்சியடைந்தவர்களுள் நானும் ஒருவன். அவரின் அரசியல் பற்றி இதுவரை நான் அறிந்திராவிட்டாலும், மனிதாபிமான உணர்வும், குறைந்தபட்சம் கொல்லப்பட்ட சக ஊடகவிலாளர்கள் மீதான அனுதாப உணர்வும், இனப்படுகொலைகளுகெதிரான கோபமும் கொண்டிருப்பார் என்றே எண்ணியிருந்தேன்.
கொன்ஸ்ரன்ரைன் கட்டுரையில் பெருமிதம் கொள்ளும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளுள் வலம் வந்த அதே நேரத்தில் பவானி பெர்னாண்டோ என்ற இலங்கை வக்கீல் இந்தச் சிறைகளில் மக்கள் மந்தைகளாக நடாத்ததப்படுவதை சர்வதேச ஊடகமொன்றிற்கு விலாவாரியாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார். எல்லாம் போகட்டும் “ஆவணங்களே இல்லாமல்” ஏன் ஊடகவியலாளர்கள் திறந்தவெளிச் சிறை முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றாவது ஒரு கேள்வியை கனவான் பசிலின் காதுக்குள் போட்டுவைத்திருக்கலாமே.
அரசிற்குப் பிரமித்துப் போய் நீங்கள் வரைந்த கட்டுரையைப் படிக்கும் சாதாரண புலம் பெயர் தமிழனை இது பிரமிப்பில் ஆழ்த்திவிடாது. புலிகளுக்கு எதிர் என்பதெல்லாம் அரச ஆதரவு என்று புலிகளும், தமிழ் அரச ஆதரவாளர்களும் சேர்ந்து வளர்த்தெடுத்த சூத்திரத்தை வலுப்படுத்தும், இது புலிகளின் பாசிசத்தையே வளர்த்தெடுக்கும்.
மக்கள் ஒருவிடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். எமது பிரதான எதிரி சிறீலங்கா அரசு என்பதில் அவர்களுக்குக் குழப்பம் இருந்ததில்லை. ஆனால் புலிகளுக்கு எதிரான மாற்று அரசியல் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் வரை தவிர்க்க முடியாமல் அவர்கள் புலிகளையே ஆதரிப்பார்கள். ஆக, இன்றைக்கு சிறிலங்கா பாசிச அரசிற்கெதிரான போராட்டமே எமக்கு முன்னாலுள்ள பிரதான தேவை. இதற்கான அரசியலை முன்வைப்பதனூடாகவே ஜனநாயகத்தை வெற்றிகொள்ள முடியும்.!
Related Posts:
http://inioru.com/?p=2300
http://inioru.com/?p=2225