16

16

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் இன்று மேனனுடன் பேச்சு

tna_.jpgஇந்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக நான்கு எம்.பிக்கள் அடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் நேற்று டில்லிக்கு சென்றனர்.

இலங்கையில் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்க வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக் களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.

இருப்பினும் சில எம்.பிக்கள் பேசிப் பார்க்கலாம் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சேனாதிராஜா, பிரேமசந்திரன், அடைகலநாதன், இரா. சம்பந்தன் ஆகிய நான்கு எம்.பிக்கள் நேற்று டில்லிக்கு சென்றனர். அவர்கள் நான்கு பேரும் வெளியுறவுத் துறைச் செய லாளர் சிவசங்கர மேனனை இன்று சந்தித்துப் பேசுவார்கள்

இந்திய கடற்பரப்பினுள் செல்ல வேண்டாம்! அமைச்சர் மீனவர்களுக்கு எச்சரிக்கை

f-m.jpgதமிழ் நாட்டு கடற் பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் நேற்று முதல் 45 நாட்களுக்கு தடைவிதித்துள்ளதாக மீன் பிடி அமைச்சு தெரிவித்தது.  இந்தத் தடையை மீறி இந்திய கடல் எல்லைக்கு மீன் பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவர் எனவும், இதனால் இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும் மீன்பிடி அமைச்சு இலங்கை மீனவர்களை கோரியுள்ளது.

மீன் உற்பத்தியை பெருக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கம் 45 நாள் மீன் பிடித் தடையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டு அரசாங்கம் மீன்பிடி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

மீன்பிடித் தடை தொடர்பாக இலங்கை மீனவர்களை அறிவூட்டியுள்ளதாகவும் இந்தத் தடையை மீறி இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் இந்தியக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதாகும் இலங்கை மீனவர்களை விடுவிக்க எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அவர்களுக்கு இலங்கை அரசும் தண்டனை வழங்கும் எனவும் அமைச்சு கூறியது. கடந்த காலங்களில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் பல இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனவே இந்த 45 நாள் தடை அமுலிலுள்ள நாட்களிலாவது இந்திய கடல் எல்லைக்குச் செல்வதை தவிர்க்குமாறு அமைச்சு கோரியுள்ளது.

இதுபற்றி தமிழ்நாட்டு அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 45 தினங்களுக்கு தமிழ்நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தினுள் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம். கடந்த காலங்களில் பல இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடித்து வருகின்றனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தொழில் உற்பத்தி குறைந்துள்ளது

_car2.jpgஅமெரிக்காவில் ஆலைத் தொழில் உற்பத்தி அளவு, கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத மிகவும் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வ அமெரிக்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவந்த உற்பத்தி கடந்த மார்ச் மாதத்தில் 1.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் உபயோகிப்பாளர்கள் செலுத்திய விலைகளும் தொடர்ந்து சரிவைக் கண்டன. கடந்த ஆண்டைவிட 4 விழுக்காடு அதிகமாக சரிவைக் கண்ட விலைகள், கடந்த 50 ஆண்டுகளில் காணப்படாத முதலாவது வருடாந்திர விலை வீழ்ச்சி என்று கூறப்படுகிறது.

அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் ஆழ்ந்த மந்த நிலையிலேயே இருக்கிறது என்றும் அதிபர் ஒபாமா குறிப்பிட்ட நம்பிக்கைச் சுடர் மிகவும் பரீட்சார்த்த நிலையிலேயே இருக்கிறது என்பதனையே இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

காவற்துறையின் தலையீட்டை அடுத்து கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்?

swiss_01.jpgவன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.

13.04.2009 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து 15.04.2009 இரவு 8 மணிவரை தொடர்ந்தது.

ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் முதல்கட்ட வாக்களிப்பு இன்று

india-election.jpgபாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் 124 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்தன.

நாடு முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 16ம் திகதி இன்றும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் திகதியும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30ம் திகதியும், 4ம் கட்ட தேர்தல் மே 7ம், திகதியும் 5ம் கட்ட தேர்தல் மே 13ம் திகதியும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 13ம் திகதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் கேரளா, ஆந்திரா உட்பட 17 மாநிலங்களை சேர்ந்த 124 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலத்தில் 22, கேரளாவில் 20, உத்தரப் பிரதேசத்தில் 16, மராட்டியத்தில் 13, பீகாரில் 13, சத்தீஷ்காரில் 11, ஒரிசாவில் 10, ஜார்கண்டில் 6, அசாமில் 3, மேகாலயாவில் 2, அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், காஷ்மீர், அந்தமான், மணிப்பூர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுடன், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பா. ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

ரயில்வே மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநிலம் சரண் தொகுதியில் முதல் கட்டத் தேர்தலை சந்திக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில், பா. ஜனதா தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி (வாரணாசி), யோகி ஆதித் யநாத் (கோரக்பூர்), காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி மகாவீர் பிரசாத் (பஸ்கான்), சமாஜ்வாடி கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஞ்சேகர் (பல்லியா) ஆகியோர் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆவர்.

முதல் கட்டத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில, மத்திய பொலிஸ் படையினருடன் பதற்றம் நிறைந்த மற்றும் நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் துணை இராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 124 தொகுதிகளிலும் மொத்தம் 1715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 122 வேட்பாளர்கள் பெண்கள். அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் தொகுதியிலும் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் தொகுதியிலும் தலா 32 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

முதல் கட்ட பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் 154 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரிசா மாநிலத்தில் 70 சட்ட சபைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

வடக்கில் காற்றுடன் கூடிய மழை; சூறாவளி இல்லையென வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு

lighting.jpgயாழ். குடாநாட்டுக்கு கிழக்கே சுமார் 1200 கிலோ மீற்றர் தொலைவில் சூறாவளியாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் தமிழக கரையோரங்களை நோக் கியே நகர்கிறது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்தின் பின்னர் வடக்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யுமே தவிர சூறாவளி தாக்கம் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

வங்கக் கடலில் தென்கிழக்கு திசையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் உட்பட தென்மா நிலங்களில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் தமிழகத்திலுள்ள சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரித்துள்ளது.

இக்காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் ஏற்பட்டதைவிட வலுவடைந்து காணப்படுவதாகவும் கரையோரத்தை அணுகும்போது புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது இத்தாழமுக்கம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே நிலை கொண்டுள்ளதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது இலங்கையில் சகல பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இக் காலங்களில் இலங்கையில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் வெப்ப நிலை அதிகரித்திருப்பதுடன் பூமியின் உஷ்ண நிலையும் அதிகரிக்கிறது.

இரவு நேரங்களில் காற்று வீசினாலும் உஷ்ணமடைந்த காற்றாகவே வீசுகிறது. கடற்பரப்பிலிருந்து தரைப் பகுதியை நோக்கி காற்று வீசினாலும் கடற்பகுதியும் உஷ்ண நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓரிரு தினங்களுக்கு தொடரலாம் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டமாக இருக்கலாம்? – பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிப்பு

கிழக்கு, மலையகம், மற்றும் தென் பகுதிப் பிரதேசங்களில் நேற்றுக் காலை உணரப்பட்ட நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டத்தின் நிலப்பகுதியாகவோ அல்லது அதனை அண்மித்த கடல் பகுதியாகவோ இருக்கலாம் என்று பேராதனைப் பல்கலைக் கழக பூகற்பவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹநாயக்கா நேற்றுத் தெரி வித்தார்.

நில அதிர்வு காரணமான பாதிப்புக்கள் அம்பாறை மாவட்டத்திலேயே அதிக ளவு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இவ்வதிர்வு இம் மாவட்டத்தின் நிலத்திலோ அல்லது இம் மாவட்டத்தை அண்டிய கடலிலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த அதிர்வு காரணமாக அம்பாறை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகளிலும், கட்டடங்க ளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. இவ்வாறான பாதிப்புக்கள் இவ்வதிர்வு காரணமாக ஏனைய பிரதேசங்களில் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் அண்மைக்காலமாக இவ்வாறான நில அதிர்வுகளை பல பிரதேசங்களில் ஏற்கனவே உணர முடிந்தது. அதனால் நில அதிர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்வதும், அது குறித்து விசேட கவனம் செலுத்துவதும் மிக அவசியம் எனவும் இவ்வாறான சிறிய நில அதிர்வுகள் பாரிய பூகம்பத்தின் முன்னறிகுறியாகக்கூட இருக்க முடியும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பூகற்பவியல் பணியக உதவிப் பணிப்பாளர் டப்ளியு. கே. பிரேம், நேற்று காலை 8.50 மணி முதல் 9.00 மணி வரையான காலப் பகுதியில் சில வினாடிகள் நாட்டின் பல பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளன.

கிழக்கு, மலையகம் மற்றும் தென் பகுதி பிரதேசங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. இந்த அதிர்வு 4 ரிச்டர் அளவுக்குக் குறைவாகவே இடம் பெற்றிருக்கிறது. இது கிழக்கு மாகாணத்தின் நிலப் பகுதியிலோ அல்லது அம்மாகாணத்தை அண்டிய கடல் பகுதியிலோ தான் முதலில் தோற்றம் பெற்றிருக்க முடியும்.

கடற்கொள்ளையை எதிர்த்து உலகம் உறுதியுடன் செயல்பட சோமாலியா கோரிக்கை

somaliya-robbery.jpgஆப்பிரிக்க முனை வழியே பயணம் செய்யும் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை சம்பவங்களை எதிர்த்து அனைத்துலக சமூகம் உறுதியுடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சோமாலியாவின் பிரதிநிதி கேட்டுள்ளார்.

இந்த கடற்கொள்ளையர்களுக்கு நிதியுதவி வழங்கி, பின்னணியில் இருந்து இயக்கி வரும் சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்றும் கண்டிக்க வேண்டும் என்றும் சோமாலியத் தூதர் ஐக்கிய நாடுகள் சபைபில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் மட்டும் சோமாலிய எல்லையை அண்மித்த கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது கைப்பற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

சோமாலியாவின் தென்புறத்தே, பிரான்ஸின் போர்க்கப்பல்களில் ஒன்று, கென்யாவின் கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் 11 பேரை கைப்பற்றியுள்ளதாகவும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம்

இலங்கையின் வடகிழக்கே போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.  மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் அபாயகரமான நிலையில் இருக்கிறார்கள் என்றும், அங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாலும் சுத்தமான நீர் அருகி வருவதாலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

போர் பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கான சுகாதார வசதிகள் போதுமான நிலையில் இல்லாததால் அங்கு அங்கு தொற்று நோய் பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் கொழும்பிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ண  தெரிவித்தார். ஆனாலும் இதுவரை தொற்று நோய் பரவல் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உதவ விரும்புவோர் ஆணையாளரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை

p-devaaratna.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு அன்பளிப்பாக குழந்தைகள் பால் மா, உடு புடவைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்க விரும்பும் நலன்விரும்பிகள், வர்த்தகர்கள் இருப்பின் உடனடியாக தம்முடன் தொடர்புகொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு உறவினர்களின் வீட்டுக்கு செல்லல் என்ற பாரம்பரியத்தை பின்பற்றக்கூடியதாக ‘புதுமாத்தளனுக்கான உறவுப் பயணம்’ என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 20 ஆம் திகதி சுமார் 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் மேர்க்ஸ் டப்ளின் கப்பல் செல்லவுள்ளது.

இக்கப்பலில் அங்குள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்களையும், உடுபுடவைகளையும் அனுப்ப அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண ஏற்பாடுகளை செய்துள்ளார்.

 ஜனாதிபதியின் ஆலேசானைக்கு அமைய, இந்த ஏற்பாடுகள் செய் யப்படுவதுடன் அந்த மக்களுக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள், உடுபுடவைகள், பெண்களுக்கான உள்ளாடைகள், போன்றவற்றை அனுப்ப விரும்புபவர்கள் 011-2478322 அல்லது 0112478323, 0112478324, 0112478325 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.