யாழ். குடாநாட்டுக்கு கிழக்கே சுமார் 1200 கிலோ மீற்றர் தொலைவில் சூறாவளியாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் தமிழக கரையோரங்களை நோக் கியே நகர்கிறது.
இதனால் அடுத்த 48 மணி நேரத்தின் பின்னர் வடக்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யுமே தவிர சூறாவளி தாக்கம் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
வங்கக் கடலில் தென்கிழக்கு திசையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் உட்பட தென்மா நிலங்களில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் தமிழகத்திலுள்ள சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரித்துள்ளது.
இக்காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் ஏற்பட்டதைவிட வலுவடைந்து காணப்படுவதாகவும் கரையோரத்தை அணுகும்போது புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது இத்தாழமுக்கம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே நிலை கொண்டுள்ளதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது இலங்கையில் சகல பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இக் காலங்களில் இலங்கையில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் வெப்ப நிலை அதிகரித்திருப்பதுடன் பூமியின் உஷ்ண நிலையும் அதிகரிக்கிறது.
இரவு நேரங்களில் காற்று வீசினாலும் உஷ்ணமடைந்த காற்றாகவே வீசுகிறது. கடற்பரப்பிலிருந்து தரைப் பகுதியை நோக்கி காற்று வீசினாலும் கடற்பகுதியும் உஷ்ண நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓரிரு தினங்களுக்கு தொடரலாம் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.