நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டமாக இருக்கலாம்? – பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிப்பு

கிழக்கு, மலையகம், மற்றும் தென் பகுதிப் பிரதேசங்களில் நேற்றுக் காலை உணரப்பட்ட நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டத்தின் நிலப்பகுதியாகவோ அல்லது அதனை அண்மித்த கடல் பகுதியாகவோ இருக்கலாம் என்று பேராதனைப் பல்கலைக் கழக பூகற்பவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹநாயக்கா நேற்றுத் தெரி வித்தார்.

நில அதிர்வு காரணமான பாதிப்புக்கள் அம்பாறை மாவட்டத்திலேயே அதிக ளவு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இவ்வதிர்வு இம் மாவட்டத்தின் நிலத்திலோ அல்லது இம் மாவட்டத்தை அண்டிய கடலிலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த அதிர்வு காரணமாக அம்பாறை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகளிலும், கட்டடங்க ளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. இவ்வாறான பாதிப்புக்கள் இவ்வதிர்வு காரணமாக ஏனைய பிரதேசங்களில் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் அண்மைக்காலமாக இவ்வாறான நில அதிர்வுகளை பல பிரதேசங்களில் ஏற்கனவே உணர முடிந்தது. அதனால் நில அதிர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்வதும், அது குறித்து விசேட கவனம் செலுத்துவதும் மிக அவசியம் எனவும் இவ்வாறான சிறிய நில அதிர்வுகள் பாரிய பூகம்பத்தின் முன்னறிகுறியாகக்கூட இருக்க முடியும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பூகற்பவியல் பணியக உதவிப் பணிப்பாளர் டப்ளியு. கே. பிரேம், நேற்று காலை 8.50 மணி முதல் 9.00 மணி வரையான காலப் பகுதியில் சில வினாடிகள் நாட்டின் பல பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளன.

கிழக்கு, மலையகம் மற்றும் தென் பகுதி பிரதேசங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. இந்த அதிர்வு 4 ரிச்டர் அளவுக்குக் குறைவாகவே இடம் பெற்றிருக்கிறது. இது கிழக்கு மாகாணத்தின் நிலப் பகுதியிலோ அல்லது அம்மாகாணத்தை அண்டிய கடல் பகுதியிலோ தான் முதலில் தோற்றம் பெற்றிருக்க முடியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *