ஆப்பிரிக்க முனை வழியே பயணம் செய்யும் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை சம்பவங்களை எதிர்த்து அனைத்துலக சமூகம் உறுதியுடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சோமாலியாவின் பிரதிநிதி கேட்டுள்ளார்.
இந்த கடற்கொள்ளையர்களுக்கு நிதியுதவி வழங்கி, பின்னணியில் இருந்து இயக்கி வரும் சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்றும் கண்டிக்க வேண்டும் என்றும் சோமாலியத் தூதர் ஐக்கிய நாடுகள் சபைபில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் மட்டும் சோமாலிய எல்லையை அண்மித்த கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது கைப்பற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளன.
சோமாலியாவின் தென்புறத்தே, பிரான்ஸின் போர்க்கப்பல்களில் ஒன்று, கென்யாவின் கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் 11 பேரை கைப்பற்றியுள்ளதாகவும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.