இலங்கையின் வடகிழக்கே போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் அபாயகரமான நிலையில் இருக்கிறார்கள் என்றும், அங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாலும் சுத்தமான நீர் அருகி வருவதாலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
போர் பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கான சுகாதார வசதிகள் போதுமான நிலையில் இல்லாததால் அங்கு அங்கு தொற்று நோய் பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் கொழும்பிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ண தெரிவித்தார். ஆனாலும் இதுவரை தொற்று நோய் பரவல் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.