இந்திய கடற்பரப்பினுள் செல்ல வேண்டாம்! அமைச்சர் மீனவர்களுக்கு எச்சரிக்கை

f-m.jpgதமிழ் நாட்டு கடற் பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் நேற்று முதல் 45 நாட்களுக்கு தடைவிதித்துள்ளதாக மீன் பிடி அமைச்சு தெரிவித்தது.  இந்தத் தடையை மீறி இந்திய கடல் எல்லைக்கு மீன் பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவர் எனவும், இதனால் இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும் மீன்பிடி அமைச்சு இலங்கை மீனவர்களை கோரியுள்ளது.

மீன் உற்பத்தியை பெருக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கம் 45 நாள் மீன் பிடித் தடையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டு அரசாங்கம் மீன்பிடி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

மீன்பிடித் தடை தொடர்பாக இலங்கை மீனவர்களை அறிவூட்டியுள்ளதாகவும் இந்தத் தடையை மீறி இந்திய கடல் எல்லைக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் இந்தியக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைதாகும் இலங்கை மீனவர்களை விடுவிக்க எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அவர்களுக்கு இலங்கை அரசும் தண்டனை வழங்கும் எனவும் அமைச்சு கூறியது. கடந்த காலங்களில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் பல இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எனவே இந்த 45 நாள் தடை அமுலிலுள்ள நாட்களிலாவது இந்திய கடல் எல்லைக்குச் செல்வதை தவிர்க்குமாறு அமைச்சு கோரியுள்ளது.

இதுபற்றி தமிழ்நாட்டு அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் 45 தினங்களுக்கு தமிழ்நாட்டு கடற்பரப்பில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தினுள் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம். கடந்த காலங்களில் பல இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடித்து வருகின்றனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *