24

24

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பின் பாதுகாப்புக்கு 3000 மேலதிக பொலிஸார்

chk-poli.jpgபண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பின் பாதுகாப்புக்காக மூவாயிரம் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிடங்களிலிருந்து கொழும்பு நகருக்கு வருவோரை மோசடிக்காரர்களிடமிருந்தும், கொள்ளையர்களிடம் இருந்தும் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் இம்முறை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாதாரண உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பொலிஸார் ரோந்துச் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அத்துடன் முக்கிய இடங்களில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகரில் போக்குவரத்து நெறிசல்களை சீர்செய்ய மேலதிகமாக பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மனைவியை கொலை செய்த திருக்கோணேஸ்வர முன்னாள் குருக்களுக்கு மரண தண்டனை

தமது மனைவியை கொன்று திருக்கோணேஸ்வரம் கோயில் வளவில் புதைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த திருகோணேஸ்வர ஆலய முன்னாள் குருக்களுக்கு திங்கட்கிழமை திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம்.  இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்;
 
சிவகடாட்ச குருக்கள் திகாகேஸ்வர ஐயருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது,  இந்த வழக்கை கடந்த 21 ஜூலை 2006 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.இதனையடுத்து 26 ஜனவரி 2009 ஆம் குடிவரவு குடியகலவு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்து, 27 ஆம் திகதி ஜனவரி மாதம் 2009ல் அவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டார்

களனி பல்கலைகழகம் 26 ஆம் திகதி மீண்டும் திறப்பு

kelaniya-sri-lanka.jpgகளனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என களனி பல்கலைகழகத் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலையடுத்து பல்கலைகழகம் மூடப்பட்டது. எதிர்வரும் 25 ஆம் திகதி மாணவர்கள் பல்கலைகழக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

வருண் காந்தி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. – பாஜக

20-varun-ganthi.jpgதுவேஷப் பேச்சு தொடர்பாக வருண் காந்தி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதைக் காரணம் காட்டியும், தேர்தல் ஆணையம் அவரை போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய முடியாது. காரணம், அவர் கோர்ட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட் மூலம் 2 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே தற்போதைய சட்டப்படி தேர்தலில் நிற்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்தால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு அறிவுரை மட்டுமே கூறும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அதை அமல்படுத்த அது முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மேலும், தேர்தல் ஆணையம் அதிகபட்சம் பாஜகவின் தேர்தல் சின்னத்தை பிலிபித் தொகுதியில் முடக்கி வைக்க முடியும். அது கூட கடைசிக் கட்ட முயற்சியாகவே இருக்கும் என்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு தேர்தல் ஆணையம் அவசரப்படாது என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச காச நோய் தினம் உலகெங்கும் இன்று அனுஷ்டிப்பு

robertkoch_.jpgசர்வதேச காசநோய் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. காச நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தி நோய் பரவுவதைத் தடுப்பதுடன், நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வருடந்தோறும் மார்ச் மாதம் 24ம் திகதி சர்வதேச காசநோய் விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் இம்முறை சர்வதேச காச நோய் தினத்தை அனுஷ்டிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையங்களின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

காசநோய் பற்றி வரலாறு, நோய்க்காரணி, அதன் அறிகுறிகள், நோய்பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் நோய்பரவுவதைக் கட்டுப்படுத்துவதற் கான வழிவகைகள் பற்றி மக்களைத் தெளிவுபடுத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, காசநோய் தொடர்பாக பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் சுகாதார அமைச்சு கல்வியமைச்சுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது.

விடைபெற்றார் பக்னர்

cool.jpgதென்னா பிரிக்க அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 22 முடிவடைந்த 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியுடன் ஸ்டீவ் பக்னர் டெஸ்ட் நடுவர் பணியில் இருந்து விடைபெற்றார். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த 62 வயதான ஸ்டீவ் பக்னர் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர் என்ற பெருமையும் பக்னரையே சாரும் இதற்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்காவின் ருடீ கேட்சன் 99 டெஸ்ட்களில் நடுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி நேற்று ஸ்டீவ் பக்னரின் 20 வருடகால டெஸ்ட் நடுவர் பணி முடிவுக்கு வந்தது. பக்னர் முதல் முறையாக 1989 ஆம் ஆண்டு கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தியமேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது நடுவராக செயல்பட்டார்.

அடுத்து இங்கிலாந்து மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் வரும் பார்படோசில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஸ்டீவ் பக்னர் நடுவராக செயல்படவுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சர்வதேச நடுவர் பணியில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ளார்.