11

11

நிர்வாணப்படுத்தப்பட்ட மலைவாசிப் பெண் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

laxmi_.jpgஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த போராட்டத்தின்போது நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மலைவாசிப் பெண் ஒருவர் அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.

லக்ஷ்மி ஒராயன் என்கிற அந்த பெண்மணி, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் இன்னமும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

2007 ஆம் ஆண்டு அஸ்ஸாமின் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது, உள்ளூர்வாசிகளால் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலைவாசிமக்களுக்கு கூடுதல் உரிமைகள் கோரி அந்த போராட்டம் நடத்தப்பட்டது.

“அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடையவே கிழக்கில் தமிழ்முஸ்லிம் உறவை சீர்குலைத்தனர்’

17f1ba5605a9cde0.jpgஅரசியல் வாதிகள் தங்கள் இலக்குகளை அடைவதற்கு சமூகங்களை முறுகவிட்டு தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைத்து வந்துள்ளனர் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான தூது மகாநாடு அக்கரைப்பற்று பஸ் நிலைய சதுக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது தலைமைவகித்து உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம் மகாநாட்டுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு உரையாற்றும் போது; கிழக்கு மாகாணாத்தில் நிரந்தர சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதன் மூலமே கிழக்கை கட்டியெழுப்ப முடியும்.

கிழக்கில் சிறார்கள் ஆயுதங்களை கண்டு அச்சமடைவதாகவும் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கல்வித்துறையில் கிழக்கு மாகாணம் 9 ஆவது இடத்திலுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 50 சதவீதத்தினரே உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயமும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயமும் இல்லாது போனால் இதையும் விட மோசமாக 42 சதவீதம் காணப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படும் நியமனங்கள் அனைத்தும் இன விகிதாசாரப்படி வழங்கப்படுகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐ.எம்.எவ். போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து நிதிகளும் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கல்வி, விளையாட்டு, மீன்பிடி, சுகாதாரம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம் மகாநாட்டில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீரதிசாநாயக்கா, மாகாணசபை உறுப்பினர்களான துல்கர்நயிம், அமீர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.தவம், தேசியகாங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் டாக்டர் உதுமா லெப்பை, தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சரின் ஊடகப்பேச்சாளர் ஆஸாத்மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலிகளுக்கு ஆதரவான உள்ளூர் அமைப்பு விசாரணை நடத்துகிறது கம்போடிய அரசு

cambodia.jpgவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து கம்போடிய அரசாங்கம் பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டு ஊடகமொன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கம்போடிய வெளிவிவகார அமைச்சு உள்துறை அமைச்சர் சார் கெங்கிற்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக கம்போடியா தினசரி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மன்றமொன்று கம்போடியாவில் இயங்குவதாக அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கடிதமொன்று வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதியிடப்பட்ட கடிதமென பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“இந்த அமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்மன்றமொன்று கம்போடியாவில் இயங்குகின்றதா என்பது பற்றிய விபரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.

2007 ஜூலையில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களை வெளியிடும் சஞ்சிகையான “ஜேன்ஸ் இன்ரலிஜன்ஸ் ரிவியூ’ வெளியிட்ட தகவலில் புலிகளுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் குறிப்பிடத்தக்க இடமாக கம்போடியா விளங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெற்றுக்கொள்ளும் வட்டாரங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கவில்லை. அதனை அச்சமயம் கம்போடிய அரசாங்கம் மறுத்திருந்தது.

அனுராதபுரத்தில் நாய், பூனைகளால் கடியுண்டோருக்கு 17 ஆயிரம் ஊசி மருந்து

dogs.jpg அனுராதபுரம் மாவட்டத்தில் கடந்த வருடம் நாய்கள் மற்றும் பூனைகள் என்பவற்றால் கடியுண்டவர்களுக்காக 17 ஆயிரம் ஊசி மருந்துகள் பாவிக்கப்பட்டிருப்பதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டபிள்யூ.எம்.ரி. விஜேகோன் தெரிவித்தார். இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இவ்வாறு நாய் போன்ற பிராணிகளின் கடிக்கு ஆளாகியவர்களுக்கு 2,212 ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த பணிப்பாளர் விஜேகோன் பூனைகள், அணில், கரடி, நரி மற்றும் வெளவால் என்பவற்றினால் கடியுண்டவர்களும் இவர்களில் அடங்குவதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் வட மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தின் அநுராதபுர மாவட்ட பொதுச் சுகாதரப் பரிசோதகர் டபிள்யூ. ஏ. ரஞ்சித் தெரிவிக்கையில்;

அநுராதபுர மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான கட்டாக்காலி நாய்கள் காணப்படுகின்றன. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய கொள்கையின் பிரகாரம் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, நாம் நாய்களின் இனப் பெருக்கத் தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம். கடந்த வருடம் ஆயிரம் நாய்களுக்கு இன விருத்தித் தடைக்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டோம். இவ் ஆண்டில் அத்தகைய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கென எமது திணைக்களத்திற்கு 10 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது என்றார்.

கட்டணங்களை குறைக்காவிடின் தனது வாடிக்கையாளரை இழக்க வேண்டிய நிலை ரெலிகொம் சேவைக்கு ஏற்படலாம் – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

lorries1.jpgஸ்ரீலங்கா ரெலிக்கொம் தனது வாடிக்கையாளரில் சிலரை இழக்க வேண்டிய நிலை சிலசமயங்களில் ஏற்படலாமென அதன் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைபேசி அழைப்புக்கான கட்டண அறவீட்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நிலையான தொலைபேசி அழைப்புக்காக இவ்வருடம் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 சதவீத வரி அதிகரிப்பு மற்றும் தேச நிர்மாணத்துக்காக பெப்ரவரி முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சதவீத வரி அதிகரிப்பும் வாடிக்கையாளரை மிகவும் பாதித்துள்ளதாக ரெலிக்கொம் சேவைகள் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் உடனடியாக தனது தொலைபேசி அழைப்புக் கட்டணங்களைக் குறைக்காவிடின் ஏனைய தொலைபேசி சேவைகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படுமென தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் பி.எஸ்.பி.ஜெயசுந்தர தெரிவித்தார்.

தற்போது வாடிக்கையாளரை கவரும் வகையில் பல தொலைபேசி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் தனது தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை குறைக்காவிடின் எதிர்காலத்தில் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படுமென அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிர்வாகமும் அதன் தொழிற்சங்கங்களும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தன.

ஆனால், தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழு இக்கட்டண குறைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

வாடிக்கையாளரைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் ரெலிக்கொம் தனது கட்டணங்களைக் குறைப்பதற்கான தீர்மானத்தினை எடுக்கும் சந்தர்ப்பத்தில் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிவிப்பு எவ்வித பிரயோசனமும் இல்லாத ஒரு தீர்மானமாகும்.

இந்தப் போக்கு தொடர்ச்சியாக அனுமதிக்கப்படுமாயின் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியாது போய்விடுமெனவும் ஜெயசுந்தர மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தால் இன நல்லுறவு பலமடையும் : ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpgகிழக்கு மாகணத்தில் 25 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது ஆயுதங்களைக் களைந்து ஜனநாயக நீரோட்டத்தில் முழுமையாக ஈடுபடுவது, இம்மாகாணத்தில் இனங்களிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்குப் பலமாக அமையும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார்.

நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் ரகுமானியா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை முற்றாகக் களைந்திருப்பதை நினைவுபடுத்தியே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :

“கடந்த ஆண்டு 34ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணம், வட மாகாணம் கலந்து கொள்ளாத நிலையில் 8ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் 35 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் 7ஆவது இடத்தையாவது கிழக்கு மகாணம்பெற வேண்டும்” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.