11

11

புல்மோட்டை இந்திய வைத்தியசேவை குறித்த ஜே.வி.பி.யின்; குற்றச்சாட்டு அர்த்தமற்றது. – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விளக்கம்

l-yaappa-abayawardana.jpgவடக்கில் யுத்தத்தினால் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென்ற பெயரில் புல்மோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் வைத்தியசாலையானது உண்மையிலேயே இந்திய இராணுவத்தின் முகாமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்;டுவதில் எவ்வித உண்மையும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேல்விக்கு பதிலளிக்கையிலேயே  அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்:

ஏதாவதொரு நல்ல திட்டம் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிப்பதை மக்கள் விடுதலை முன்னணி ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. வீணான ஓர் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு முதற்கட்ட தீர்மானங்களை எடுத்து எதிர்ப்பையே தெரிவிக்கின்றது. பின்னர் உன்மையை உணர்ந்து அதனை ஏற்றுக்கொள்கின்றது.
இந்திய இராணுவம் இங்கு வரும்போதும் பல பிச்சினை ஏற்படும் என்றும் இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்ப உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்தது. அதேபோன்று எண்ணெய்த் தாங்கிகள் விடயத்திலும் பல கருத்துக்களைத் தெரிவித்தது.

இதற்கு மாகாண சபை மற்றுமொரு நல்ல உதாரணமாகும். மாகாணசபை அறிமுகப்படுத்தப்பட்ட போது இதனால் நாடு பிளவு படும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூக்குரலிட்டது. பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களும் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாகவும் பதவி வகிக்கின்றனர். இல்லாத ஒரு அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆரம்பக் கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கின்றனர்;. நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏறபடும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையோ திட்டத்தையோ அரசாங்கம் அனுமதிப்பதில்லை.

நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் தோன்றிய சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரையும் அரசாங்கம் நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. எனவே அரசாங்கத்தின் திட்டம் குறித்து வீணான அச்சத்தை ஏறபடுத்திக்கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் – ராமதாஸ்

ramsoss.jpgபோரை நிறுத்தாமல், மக்களை மீட்கிறோம் என்று அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:-

இலங்கை போர்ப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டால், அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.

இதற்கு இந்தியாவின் ஆதரவையும், அமெரிக்காவின் உதவியையும் பாசிச ராஜபக்சே அரசு நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

வன்னிப் பகுதியில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்காவின் தலைமையில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சிவசங்கர மேனன், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ் மக்களை அவர்களது பிறந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுவதும், அவர்களை கட்டாயமாக வெளியேற்ற முற்படுவதும் ஈழத் தமிழர்களின் அரை நூற்றாண்டுகால போராட்டத்தை அவமதிப்பதாகும்.

தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றி இலங்கை படையினரின் சித்ரவதை முகாம்களில் அடைத்திட முற்படும் எந்த நடவடிக்கைக்கும் இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது.

பாகிஸ்தான் ஒரு பக்கம் பகையாக இருக்கிறது. வங்கதேசம் இன்னொரு பக்கத்தில் பகைமை பாராட்டுகிறது. சீனா எந்த நேரத்திலும் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் இருக்கும் இலங்கையும் தனக்கு பகையாக மாறிவிடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக, இனப்படுகொலை நடத்தும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா துணை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் மிகப்பெரிய மோசமான தவறாகும்.

ராஜபக்சே அரசின் பாசிச அராஜக நடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ துணை நிற்பதை தமிழ்நாட்டில் இருக்கும் 7 கோடி தமிழர்களும் விரும்பவில்லை.

தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது. இந்த உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய அரசு தனது கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முன்பு இந்திரா காந்தி காலத்திலும், அதன்பிறகு ராஜீவ் ஆட்சியின் போது, தொடக்க காலத்திலும் மேற்கொண்ட நிலைப்பாட்டை இந்திய அரசு இப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம் ஆகும்.

இந்திராகாந்திக்கு இருந்த நம்பிக்கை, அவருக்கு இருந்த துணிச்சல், ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஈடுபாடு இப்போதுள்ள அரசுக்கு வரவேண்டும். இதுவும் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.

போர்ப்பகுதியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்க வேண்டும் என்று இலங்கை அரசு விரிக்கும் வலையில் இந்தியா விழுந்து விடக் கூடாது. இந்த வஞ்சக செயலுக்கு அமெரிக்காவின் துணையையும் இந்தியா நாடக் கூடாது.

அமெரிக்காவும் முன்பு சோமாலியாவில் மேற்கொண்ட முயற்சியை இலங்கையில் மேற்கொள்ள முயலக் கூடாது. ஆய்த மோதலுக்கு தீர்வு காணாமல் மக்களை மட்டும் மீட்கப் போகிறோம் என்று படையை அனுப்பி வைத்ததால்தான் சோமாலியாவில் தோல்வி ஏற்பட்டது.

இப்போதும் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல், போர்ப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று புறப்பட்டால், சோமாலியாவில் ஏற்பட்ட தோல்விதான் இலங்கையிலும் ஏற்படும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

“ஏ 9′ வீதியூடாக அத்தியாவசியப் பொருட்களுடன் 22 லொறிகள் குடாநாட்டுக்குச் சென்றன

lorries.jpgஏ 9  பாதையூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற இருபத்திரண்டு லொறிகளும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தன. முன்னதாக திங்கட்கிழமை காலை வெலிசறை உணவுக் களஞ்சியத்தில் இருந்து இந்த லொறிகள் புறப்பட்டன.

ஏ 9 பாதை போக்குவரத்திற்காகப் திறக்கப்பட்ட பின்னர் யாழ்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு முதன் முதலாக இந்த லொறிகள் சென்றுள்ளன.  யாழ்ப்பாணம் வந்த இந்த லொறிகளின் பொருட்கள் நாவற்குழி உணவுக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த லொறிகள் மீண்டும் கொழும்புக்குச் செல்லும்போது போத்தலில் அடைக்கப்பட்ட பனம் கள்ளு, பனம் சாராயம், பனம் உற்பத்திப் பொருட்கள், வெங்காயம், கடலுணவுகள் என்பன எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதேவேளை, தனியார் வர்த்தகர்களும் லொறிகளில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வாய்ப்பு தெற்காசியாவிடமிருந்து பறிபோகும் ஆபத்து -அர்ஜுன ரணதுங்க

cricket-arjuna-ranatunga.jpg2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த தெற்காசிய நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக விலகிச் சென்று விடக் கூடிய ஆபத்து இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

பாகிஸ்தான், லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பாக அர்ஜுன ரணதுங்க இந்த கருத்தை வெளியிட்டார்.

“கிரிக்கெட் விளையாட்டு இன்று பிளவடைந்து காணப்படுகிறது. அத்துடன், நடவடிக்கைகளின் போது, எமது ஒத்துழைப்புகளும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிருந்து (தெற்காசியாவிலிருந்து) விலகிச் சென்று விடக் கூடும். எனவே இது விடயத்தில் நாம் மேலும் நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும். என்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபை முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புதிய வத்திக்கான் தூதுவர்

vatican-museum.jpgஅதிவண யோசப் ஸ்பித்தேரி அடிகளார் இலங்கைக்கான புதிய வத்திக்கான் தூதுவராக பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். மோல்ரா நாட்டைச் சேர்ந்த 49 வயதான இவர் பனாமா, ஈராக், மெக்ஸிக்கோ, வெனிஸ்வெலா, போத்துக்கல், கிறீஸ் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வத்திக்கானில் உள்ள இராஜதந்திர பணியகத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் கடந்த நான்கு வருடங்களாக வத்திக்கான் தூதுவராக பணியாற்றி வந்த அதிவணமரியா செனாரி சிரியாவின் வத்திக்கான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து புதிய தூதுவர் இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணை

sri-lanka-police.jpgமாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாக படையினரும் பொலிஸாரும் தெரிவிக்கும் நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த விசாரணைகளை நடத்தும் நான்கிற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் குழுக்களும் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை நடத்துவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.டபிள்யூ.பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவுப் பொலிஸாரது (சி.ஐ.டி.) ஒத்துழைப்பைக் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தத் தாக்குதல் நடைபெற்ற போது அதனை நேரில் பார்த்ததாக கூறப்படுவோரிடம் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்னர் அப்பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் வந்ததாகவும் அதிலிருந்தவர்களின் வயிற்றுப் பகுதி சந்தேகத்திற்கிடமாயிருந்ததாகவும் அதைப் பார்த்துவிட்டு அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே அதுபற்றி பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மறித்த போது அதில் ஒன்று அங்கு நிறுத்தப்படவே மற்ற மோட்டார் சைக்கிள் அப்பால் சென்ற சில செக்கன்களில் பாரிய குண்டுச் சத்தம் கேட்டதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷேட பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் பல்வேறு தரப்புகளிடமும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்க சதித்திட்டம் : ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் எஸ்.பி. கவலை

sbd.jpgஅரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்குவதற்கு சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஐ.தே.க. தலைவரோடு நெருக்கமாக இருந்து அரசாங்கத்துக்குத் துணை போகும் சிலர், நான் அரசாங்கத்துடன் இணையப் போவதாக பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க.தேசிய அமைப்பாளருமான எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். “நான் ஒரு போதும் ஐ.தே.க.வைவிட்டு வெளியேறப் போவதில்லை. நான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதை நிரூபித்தால் அரசியலிலிருந்து வெளியேறத் தயார்” என்றும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையிலுள்ள தனது வீட்டில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்திய போதே எஸ்.பி. திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : “மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றேன். ஆனால் ஐ.தே.கவின் எம். பிக்கள் சிலர் முன் வைத்த வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோடு நெருக்கமாக உள்ள சிலர் நான் அரசாங்கத்துடன் இணையப் போவதாகவும் அதற்காக ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பல மணிநேரம் உரையாடியதாகவும் ருக்மன் சேனாநாயக்கவும் இணையவுள்ளாரென்றும் பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.அத்தோடு ஐ.தே. கட்சியின் பத்திரிகையான ‘இறுதின’வில் அப்பட்டமான பொய்ச் செய்திகளையும் வெளியிடச் செய்துள்ளனர்.

அரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்கும் சதித் திட்டத்தின் நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டு வருகின்றன. மத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுற்றவுடன் ஜனாதிபதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவ்வளவு தான். இதன் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவ்வாறு தொடர்பு கொண்டதை ஆதாரங்களுடன் நிரூபித்தல் அரசியலை விட்டு வெளியேறுவேன். இவ்வாறான செயற்பாடுகள் எமது கட்சியை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாகும். அத்தோடு அரசாங்கத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டு ஐ.தே.க. தலைவரோடு நெருங்கியிருப்பவர்களே இச்சதியை முன்னெடுக்கின்றனர். அமைச்சர் பதவியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் தூக்கியெறிந்து விட்டு ஐ.தே.க. வில் இணைந்தவன் நான். எனவே மீண்டும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணையும் தேவை எனக்கில்லை. பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் நான் விலைபோக மாட்டேன்.

தேசிய பட்டியலில் எம்.பி. பதவியைப் பெறமாட்டேன். தேர்தலில் போட்டியிட்டே அப்பதவியை பெறுவேன். அத்தோடு தற்போதைக்கு எனது நோக்கம் மத்திய மாகாண மக்களுக்கு நான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றுவதே ஆகும்.” இவ்வாறு அவர் கூறினார்.

நட்டஈடு வழங்க உடனடி நடவடிக்கை- அமைச்சர் றிஷாட்

rizad_baduradeen-01.jpgஅக்குரஸ்ஸ – கொடப்பிட்டிய குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்காகவும் காயமடைந்தவர்களுக்கும் உரிய நட்ட ஈட்டினை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுத்தீன்; தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெற்று அவர்களுக்கு உடனடியாக நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, கொடப்பிட்டிய தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அமைச்சர் றிசாட் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மத விவகாரத்துடன் தொடர்புடைய வைபவத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலென்று தெரிவித்த அமைச்சர் எவர் இதனைச் செய்திருந்தாலும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

போரை நிறுத்த இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் : விஜய்காந்த்

vijayakanth.jpgஉடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் மாதத்தில் சிங்களவர்களின் புத்தாண்டு வருகிறது. அதற்குள் தமிழர்களை அழித்து புத்தாண்டை வெற்றித் திருநாளாகக் கொண்டாட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசின் இனவெறிப்போக்கால் இனி தமிழர்கள் வாழ தனி நாடு தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐ.நா., செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் மேற்பார்வையில் முகாம்கள் அமைக்க வேண்டும். போர்நிறுத்தம் ஏற்பட இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

புல்மோட்டையில் அமைக்கப்படும் வைத்தியசாலை உண்மையில் இந்திய இராணுவத்தின் முகாமாகும் – ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின்

jvp-rilvin.jpgவடக்கில் யுத்தத்தினால் காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென்ற பெயரில் புல்மோட்டையில் அமைக்கப்படவுள்ள இந்தியாவின் வைத்தியசாலையானது உண்மையிலேயே இந்திய இராணுவத்தின் முகாமாகும் என்று ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் வெற்றிகளை காட்டிக் கொடுத்து இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வொன்றின் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இலங்கையில் புலிகள் மாத்திரம் பிரிவினைவாதிகள் அல்ல. வேறு சில ஆயுதம் ஏந்திய ஏந்தாத பிரிவினைவாத சக்திகளும் உள்ளன என்றும் அவர் கூறினார். ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று கோட்டை “”சோலிஸ்” ஹோட்டலில் நடைபெற்றபோது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரில்வின் சில்வா கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பாவோ உதவி செய்ய தேவையில்லை. எமது இராணுவத்தினரே இன்னும் ஒரு சில நாட்களில் இலங்கை பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியும் அதற்கு அப்பால் சென்றும் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்க அரசாங்கம் எடுக்கும் முயற்சியானது மீண்டுமொருமுறை பிரிவினைவாதிகளுக்கு சட்டபூர்வமாக செயல்பட அனுமதி வழங்குவது போன்றதாகும். தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குமாறு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, திஸ்ஸ விதாரண, டிலான் பெரேரா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கோரி வருகின்றனர்.  தேர்தல் மேடைகளில் தேசப்பற்றுள்ளவர்கள் என்று கூறும் நபர்கள் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்ததும் நாட்டை காட்டிக் கொடுக்கும் சதித் திட்டங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.