07

07

இலங்கை வீரர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு எப்.பி.ஐ. உதவி

crc-04032009.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு விசாரணைகளுக்கு உதவ அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. முன்வந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியைச் சந்தித்துக் கலந்துரையாடிய எப்.பி.ஐ. யின் பணிப்பாளர் றொபர்ட் மியூலர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தமது உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர்  ஏன் பெட்டர்சன் மற்றும் பாகிஸ்தான் பிரதமரின் உள்விவகார ஆலோசகர் ரெஹ்மான் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ குழுவினர் 9ஆம் திகதி இலங்கை வருவர்

india-doctors.jpgஇந்திய மருத்துவ குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. வன்னியில் காயமடைந்து திருகோணமலை வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலேயே இந்த குழு இலங்கை வருகின்றது. புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர மருத்துவ பிரிவை அமைக்கும் நோக்கிலேயே இந்த மருத்துவ குழு இலங்கை வருவதாக இந்தியத் தூதுரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை வரும் இக்குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளனர். இந்த மருத்துவ குழுவில் அனுபவம் வாய்ந்த 8 நிபுணர்களும் மற்றும் சத்திர சிகிச்சை வல்லுனர்களும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.

தேவையான மருந்து பொருட்களையும் இந்தக் குழுவினர் எடுத்து வரவுள்ளனர். இதேவேளை, 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் சாதனங்களையும் இந்த குழுவினர், இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளனர். 

“உண்மையான’ ஆண் பெண்ணை துன்புறுத்தான் – பான் கீ மூன்

ban-ki-moon.jpgபெண்களுக் கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன், உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.  நாளை கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றிலேயே பான்கிமூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தாக்கம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவையாகவும் அளவிட முடியாதவையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பான், பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையைக் கொண்டவர்களாகவும் ஆண்கள் அடிக்கடி சண்டைக்குணம் கொண்டவர்களாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் எதிர்கால சந்ததியினரை உருவாக்குகிறார்கள். உலகின் பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் நாட்டிய பயிர்களே எமக்கு உணவாகிறது. எமது சமூகங்களை ஒன்றிணைக்கும் இழைநாராக பெண்கள் விளங்குகின்றனர். பெண்ளுக்கெதிரான வன்முறைகளை அனைவர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களாகத் கருதவேண்டும். இவை எமது உயர்ந்த நாகரிகத்தின் அடித்தளத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகும். எனவே இவ்வாறான வன்முறைகள் வெறுக்கத்தக்கவையாகவும் ஐ.நா. சாசனத்திலுள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் எதிரானவையாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  உலகம் பூராகவும் ஐந்தில் ஒருபெண் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்படும் அதேவேளை, சில நாடுகளில் மூன்றில் ஒரு பெண் வீதம் அடித்து துன்புறுத்தல் அல்லது ஏனைய வகை துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்ததையடுத்து “பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர ஒன்றிணைவோம்’ என்ற அழைப்புடன் கடந்த வருடம் பான் உலகளவிலான பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார்.

அண்மையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு துப்பாக்கி முனையில் 4 படைவீரர்களால் மிருகத்தனமான முறையில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 வயது யுவதியொருவரை சந்தித்ததாக தெரிவித்த பான், இச்சம்பவத்தால் அப் பெண் உடல் ரீதியாக மட்டும் துன்புறுத்தப்படவில்லை, சமூகம் அப்பெண்ணை களங்கப்பட்டவளாக நோக்குவதால் மனதளவிலும் அப்பெண் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார். வெட்கம் என்ற தவறான சிந்தனையால் ஈர்க்கப்பட்ட குறிப்பிட்ட பெண்ணின் குடும்பமும் சமூகம் தீண்டத்தகாதவளாக அவளை ஒதுக்கி வைக்கின்றதென தனது ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய பான்கிமூன், “வன்முறையினால் உண்டாகும் விளைவுகள் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மரணம், காயம், மருத்துவ செலவீனம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை சிறியதாக இந்தாலும் அது பல பிரச்சினைகளை உருவாக்குகிறது’ எனத் தெரிவித்துள்ளார். எனவே “இவ்வாறான துன்புறுத்தல்களுக்கெதிர?க ஆண்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேவேளை, உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் என்ற கருத்தை ஆண்களின் மனங்களில் பதிய வைக்க வேண்டியதும் அவசியமாகும். மாற்றத்திற்கான தருணத்தை நாம் சந்தித்துள்ள இவ்வேளையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த ஒத்துழைப்புக்கு அனைவரிடமும் வேண்டுகோள்விடுக்கின்றேன்’ என பான் தெரிவித்தார்.

இளையோர் போராட்டங்களும் புலி எதிர்ப்பாளர்களின் போக்கும் ஒரு மீள்பார்வை : நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

TYO_Logo யுத்தம் தொடங்கிய பின்னர், பிணங்களை உற்பத்தி செய்பவர்களும் இன்றும் பிணங்களை உற்பத்தி செய்ய வேண்டும் எனத்துடிக்கும் மனித விரோதிகளும் தெளிவாகவே அம்பலப்பட்டு நிற்கின்றனர். இந்திய பிராந்திய வல்லரசானது தனது பங்கிற்கு புலிகள் மேற்கொள்ளும் யுத்தநிறுத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறிக் கொள்கின்றது. இந்திய மையஅரசு தனக்கும் இப்போ நடக்கும் யுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சில அறிக்கைகளை விட்டு விடுகின்றனர். இன்று நடைபெறும் யுத்தமானது கூட்டுச் சதியின் ஊடாக அனைத்துத் தரப்புக்களின் ஆசீர்வாத்துடன் நடைபெறுகின்றது. மனிதத்தை கொல்பவர்களும் கொல்ல துணைபோகின்றவர்ளும் பல்வேறு தளத்தில் இருந்து தத்தம் கடமைகளை செய்துகொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் சில செயற்பாடுகளை செய்வதில் சுயமாக முடிவெடுக்கவும், கருத்துக் கூறவதை தெளிவாக முன்வைக்கும் நிலையில் அமெரிக்கா இருக்கின்றது. சர்வாதிகாரிகளை உருவாக்கும் இந்த வல்லரசு தென்கிழக்காசியாவில் நடைபெறும் மனித அலவலத்தை காட்டி தன்னுடைய நேசமுகத்தை தமிழ் மக்களின் இழப்புக்கள் மூலமாக காட்ட எத்தனிப்பதையே இங்கு கணிக்க முடிகின்றது. அமெரிக்கா தனது படையின் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்ற முனைவதாக வந்த தகவலானது இந்தியா பிராந்திய வல்லரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவாகவே கொள்ள முடிகின்றது. இவ்வாறு சுயமாக எடுக்கும் முடிவினை அமெரிக்கா கொண்டுள்ளதையும், இந்திய அதிகாரிகள் ஒப்புக்கு அறிக்கை விடுவதையும், இந்தியாவின் ஆதரவு தமக்கு கிடைக்கும் என்பதை சிறிலங்கா அரசு திடமாக நம்புகின்ற நிலையில் இந்த யுத்தத்திற்கு அமெரிக்காவே நேரடியாக பின்னிக்கின்றது.

மகிந்த அரசானது போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதால் வன்னி மக்களைக் காப்பாற்ற எங்களால் எதுவுமே செய்யமுடியாது – நெதர்லாந்தின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு பூட்டப்பட்ட பூட்டானது சாவி இன்றி இருக்கின்றது. பூட்டைத் திறப்பதற்கு சாவி யாரிடம் இருக்கின்றது என்பதை தெரிந்தும் தெரியாது ஒரு நாடகம் நடக்கின்றது. இவ்வாறு சர்வதேச சதிகள் தமிழின அழிப்பிற்கு துணை போகையில் சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே சதியினை முடியடிக்க முடியும். இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெறவேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களைப் பற்றி பலமுறை எழுதப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் அங்கு அழிக்கப்படுவது மக்கள் என்பதை ஏற்க மறுப்பவர்களாகவும், பிணங்களை உருவாக்கத் துணை போகின்றவர்களாக புலியெதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இன்று புலம்பெயர்நாடுகளில் நமது மக்களுக்காக போராட்டத்தில் குதித்துள்ள இளையோர்கள் முன் தியாகிகளாக, ஒரு விமான ஓட்டிகளான ரூபன் அல்லது சிரித்திரன்; இவர்களோ பிரபாகரன் வீரர்களாக அல்லது உதாரண புருசர்களாகத் தெரிவர். இன்றைய இளையோர் பெரும்பான்மையானர்கள் இங்கு சிறுவயதில் வந்தவர்கள் மற்றும் இங்கு பிறந்தவர்களாவர். இவர்களுக்கு வரலாற்றினை தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் இல்லை. இவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழும் காலத்தில் தமிழ் மக்களின் அவல நிலை என்ன? அவர்களுக்காக யார் போராடுகின்றார்கள்? என்பதேயாகும். இவர்களுக்கு எமக்கு தெரிந்த 30 வருட கால வரலாறு இளையோருக்கு தேவையற்றதாக இருக்கின்றது. இளையோரின் போராட்ட உணர்வை புலியெதிர்ப்பாளர்கள் எவ்வாறு சொச்சைப்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள். “இளையோர் அமைப்பை தீவிரவாதத்திற்குள் உந்திவிடும் புலிகளின் நடவடிக்கைக்ள்”

SLDF_Germany“இத்தகைய ஊர்வலங்களுக்கு இளம்பராயத்தினர் தற்போது முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். 24.02.09 அன்று ஜெர்மனி டுசல்டோர்வ் நகரத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலத்தில் பெருமளவு இளம்பராயத்தினர் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் புகைப்படங்களுடன் கலந்து கொண்டதுடன் பிரிட்டிஷ், மற்றும் ஜப்பான் தூதரங்களிற்கு எதிராக முட்டை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்காவின் தேசியக்கொடி எரிக்கப்பட்டு ராஜபக்ஷாவின் பொம்மை உருவம் பகிரங்கமாக எரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளில் புலிகளினால் இளம்பராயத்தினர் பயன்படுத்தப்படுவதால் மொத்த தமிழ்மக்கள் மீதான விமர்சனங்கள் ஏற்படும் எனவும் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.”  http://www.thenee.com/html/290209-4.html

இளையோரைப் பொறுத்தவரை வரலாறு தேவையற்றவையாக இருக்கின்றது. இளையோரின் தேசத்தின் மீதான பற்றுதல் மதிக்கப்பட வேண்டியதாகும். இவர்களைத் தூற்றுவதால் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்க முடியும் என்பதையே புலியெதிர்ப்பாளர்களின் அறிக்கை காட்டுகின்றது. இழையோர் அவர்களின் வயதுக்குரிய துடிப்புடன் போராடுகின்றார்கள். இவர்களை வழிநடத்துவதற்கு சரியாக அமைப்பு இல்லை என்பதே உண்மை. தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் தலைவர், தேசியம், தமிழீழம் என்ற மட்டத்தினுள் இருந்து கொண்டு போராடுகின்றதினால் இவர்களின் உழைப்பு என்பது வீண் விரையமாகின்றது. முன்னர் கூறியதுபோல தேசத்திற்காக உயிரைக் கொடுப்பவர்கள் தான் உதாரண புருசர்களாக இருக்க முடியும். இழையோரின் போராட்டப் பாதையை நெறிப்படுத்துவதை விட்டுவிட்டு எதிரியுடன் துணைபோகும் குழுக்கள் இந்த இழையோரின் உதாரண புருசர்களாக உருவாக மாட்டார்கள்.

இன்னெரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். அதாவது போராட்டம் என்பது மாலை நேரவிருந்தல்ல. போராட்டங்கள் பலவகை உண்டு. அதேவேளை உணர்வுகள் வெளிப்படுவதிலும் பல வகை உண்டு. இவைகள் அரசியல் உணர்விற்கேற்ப மாறுபடும். இன்று போராட்டத்தை ஐரோப்பிய வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் உண்டு. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தச் சமூத்துடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் போது மேற்கொள்ளப்படுகின்ற இனவாதத்திற்கு எதிரான எந்தப் போராட்டங்களிலும் பங்கெடுக்காதவர்கள், உலகில் போராடும் இனங்களின் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவைக் கொடுக்காதவர்கள், தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கெடுப்பதில் ஆர்வமின்மை, வாழுகின்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற பொதுப்பிரச்சனைக்கான போராட்டங்களில் பங்கெடுக்காதவர்கள் இவற்றை வெறுத்து ஒதுங்கினர். போராட்டத்தில் பங்கு பற்றினால் அவர்களைப் பற்றி கீழ்தரமாக கணித்துக் கொண்டனர்.

நாம் ஊர்வலங்களுக்கு செல்வதில்லை. அவ்வாறானவர்கள் வேறுவிதமான சிந்தனை கொண்டவர்கள். இடதுசாரி அமைப்புக்களுடன் ஏற்படுத்தப்படும் தொடர்புகளின் மூலம் தமது நலன் பாதிக்கப்படும் என ஒதுங்கியவர்கள். இடதுசாரிகளுடனான தொடர்பு என்பது தீண்டத்தகாத சாதியுடன் கூட்டு வைப்பது போல புலம்பெயர்ந்தவர்கள் பலரின் நிலைப்பாடு இருந்தது. ஏன் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டாளர்கள் தீபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கு என்று ஒரு பெயர் உண்டு அதனை காப்பாற்றுவது போல நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதனையும் மீறி லண்டன் ஊர்வலத்தில சில அசம்பாவிதம் நடைபெற்றது. இவ்வாறான நிகழ்வுகள் கூட இவர்களின் போராட்ட விதிமுறைக்கு அப்பாற்பட்டதாக போராட்ட ஒழுங்கிணைப்பாளர்களுக்கு இருந்தது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.

TYO_Protestஇன்று மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வேளையில் இங்கு நடைபெறும் போராட்டங்களில் பங்குபற்றுவது எப்போ? ஆதரவு திரட்டுவது எப்போ? எனக் கேள்வி கேட்கப்படுவதும் இயல்பானதே. ஆனால் புலிகளின் ஆதரவாளர், ஆய்வாளர் எனக் கூறிக் கொள்ளும் பிரேம் என்பவர். மக்கள் மீது குற்றம் சுமத்துகின்றார். அதாவது கடந்த காலத்தில் தனியே இராணுவ வெற்றிகளை இட்டு சந்தோசமடைந்தவர்கள். (இதற்கு யூதர்களைப் போல மூலதனத்தைப் பெருக்கி பெரும் பணக்காரர்கள் ஆகி, மேற்கு அரச யத்திரத்தை அசைக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் வளரும் படி தீர்வை முன்வைத்தார்.) இன்றைய இராணுவத் தோல்விகளை இட்டு விரக்தி கொள்வதற்கு மக்களே காரணம் எனக் கூறுகின்றார். மக்கள் தேசத்தின் விடுதலை பற்றி ஆழமாகச் சிந்திக்கவில்லை என்வும் கூறினார்.

ஆனால் புலிகளின் தலைமை மீதுதான் இந்த விமர்சகர் குற்றம் சுமத்தியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு லாயக்கில்லாது அப்பாவிகளான மக்கள் மீது தனது வெறுப்பைக் காட்டினார். இவ்வாறானவர்களின் பேச்சுக்களை மாற்றியமைப்பதற்கு இங்கு வாழ்து போராடுவதன் மூலமே போராட்டத்திற்காக பாதைகளை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். எமது போராட்டம் இன்றோ நாளையே முடியப் போவதில்லை. இன்று சர்வதேச சதியினால் எமது மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படப் போகின்றது. உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற போகின்ற நிலையில் புதிய தலைமுறையாகி நீஙகள் நடைமுறைப் போராட்டத்தின் மூலம் உங்கள் எதிரிகள் யார் என்பதை போராட்டங்களே கற்றுக் கொடுக்கும்.

வன்னியில் இனவழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலம் முதலே உங்கள் போராட்டத்திற்கு தகுந்த பலன்கிடைக்கவில்லை என உங்கள் மனம் குமுறுகின்றது. இவைகளை உணர முடிகின்றது. இங்கு சர்வதேச சதி என்பது பொருளாதார நலனின் அடிப்படையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுரண்டும் பொருளாதார அமைப்பை பற்றி அறிந்து கொள்ள அதற்கான தேடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

நாம் எதிர்காலத்தை தீர்க்கமாக அறிந்து கொள்ள எமக்கு அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலமே தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம் என்பது உரிமைகள் மறுதலித்து, மழுங்கடிக்கப்படுகின்ற நிலையை போக்குவதற்கான போராட்ட நுணுக்கம் உங்களுக்கு ஏற்படும்.

நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது – ஐ.தே.க

ravi-karunanayaka.jpg இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டின் முதனிலை நிறுவனங்களாகக் கருதப்படும் 41 நிறுவனங்களில் 37 நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்து 182 பில்லியன் மேலதிகப் பற்றைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு முன்னணி பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை குறைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றி போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போகொல்லாகம வியட்நாம் பயணம்

rohitha-sir-john.jpgவெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழனன்று போய்ச் சேர்ந்த அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை, பிரதிப் பிரதமர் பாம் கிய கியாம் வரவேற்கிறார்.

2003 ஆம் ஆண்டு வியட்நாமில் இலங்கைத் தூதரகம் திறந்ததன் பின்பு வெளிவிவகார அமைச்சரின் முதலாவது விஜயம் இதுவாகும்.
 
 

புதுமாத்தளன் பகுதியில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதில் புலிகள் திட்டமிட்ட செயற்பாடு

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் புலிகளே திட்டமிட்டு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். இதனூடாக பட்டினிச் சாவை மக்கள் எதிர் கொள்வதாகக் கூறி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவும் புலிகள் முயற்சிக்கின்றனர் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

இதுவரை இப்பகுதிக்கு மிகவும் சிரமத்துக்கு மத்தியிலும் கப்பல் மூலமாக 250 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களை நாம் அனுப்பிவைத்துள்ளோம். இன்றும் சுமார் 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கடல்மார்க்கமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. திருமலை துறைமுகத்திலிருந்து இது புறப்படும்.

இவ்வாறு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் புலிகளேதான். நாம் அனுப்பும் உணவுப் பொருட்களில் 50 வீதத்தை புலிகளே எடுக்கின்றனர் என்பதும் அனைவருக்கும் தெரியும். புலிகளுக்கு எதிராக போர் புரிந்து கொண்டு புலிகளுக்கும் சேர்த்த உணவு அனுப்பும் ஒரே அரசாங்கம் எமது அரசுதான்.

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பகுதிகளுக்கு தரைமார்க்கமாக முன்பு அனுப்பிய உணவுப் பொருட்கள் கூட இப்போதும் போதுமானதாக இருக்கக் கூடியவாறுதான் அனுப்பினோம். உணவு லொறிகள் மேல் தாக்குதல் நடத்தியதாலேயே தரை மார்க்கமாகவும் அனுப்ப இயலாமல் போனது.

மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையோடு சிரமங்களுக்கு மத்தியிலும் கடல்மார்க்கமாக உணவை அனுப்புகிறோம். இந்நிலையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்கிறார்களென சர்வதேசத்துக்குக் காட்டி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில்தான் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

உணவின்றி மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்கிறார்கள் என்று கூறும் சில ஊடகங்கள் ஏன் மக்களுக்கு அனுப்பும் உணவை புலிகள் பறித்துக் கொள்கிறார்கள் என்பதை கூற முன்வருவதில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.

2010இல் பல்கலைக்கழக மாணவர்களில் 60 முதல் 70 வீதமானோருக்கு விடுதி வசதி – பேராசிரியர் விஸ்வவர்ணபால

vishva-warnapala.jpg பல்கலைக் கழக மாணவர்களில் 45 வீதமானோருக்குத் தற்போது விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால 2010 ஆம் ஆண்டளவில் 60 முதல் 70 வீதமான மாணவருக்கு விடுதி வசதி வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார். பேராதனை பல்கலைக்கழகத்தில் 5,500 மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் 584 பேருக்கு விடுதி வசதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உயர் கல்வி அமைச்சர் விஸ்வ வர்ணபால கொழும்பு பல்கலைக்கழத்தில் விடுதியிலுள்ள மாணவர்கள் வருடமொன்றுக்கு 1200 ரூபாவை செலுத்த வேண்டிய அதேவேளை, யாழ். பல்கலைக்கழக விடுதியிலுள்ள மாணவர்கள் வருடமொன்றுக்கு 200 ரூபாவை செலுத்த வேண்டுமென்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. ரவிகருணா நாயக்க கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ரவி கருணாநாயக்க எம்.பி. தனது கேள்வியில், இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகத்தின் உலகதரங்கள், விடுதி வசதி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, அவற்றுக்கு பெறப்படும் கட்டணங்கள் உள்ளிட்ட பலவற்றை கேட்டார். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்;

மொரட்டுவ பல்கலைக்கழகம் 16 ஆவது இடத்திலும் கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன முறையே 18, 29, 65, 89, 95, 99, ஆவது தரங்களில் உள்ளன என்றார். விடுதி வசதி பெற்றுள்ள மாணவர்களின் விபரங்களை அவர் வெளியிடுகையில், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3,177, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 5500, ஸ்ரீ ஜெயவர்த்தன புரபல்கலைக்கழகத்தில் 3,505, களனி பல்கலைக்கழகத்தில் 3,152, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 1,036, யாழ். பல்கலைக்கழகத்தில் 584, றுகுணு பல்கலைக்கழகத்தில் 2,032, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 543, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 743, ரஜரட்ட பல்கலைக்கழத்தில் 2,193 மாணவர்கள் விடுதி வசதிகளைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

விடுதிகளுக்கு மாணவர் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பாக கூறுகையில்;

கொழும்பு பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 1,200 ரூபா, பேராதனைப் பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 750 ரூபா, களனி பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 350 ரூபா, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 650 ரூபா, யாழ். பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 200 ரூபா, கிழக்கு பல்கலைக்கழத்தில் மாதமொன்றுக்கு 60 ரூபா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமர்வொன்றுக்கு 300 ரூபா, ரஜரட்ட பல்கலைக்கழத்தில் வருடமொன்றுக்கு 600 ரூபா, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 500 ரூபா, வயம்ப பல்கலைக்கழகத்தில் வருடமொன்றுக்கு 550 ரூபா, திறந்த பல்கலைக்கழகத்தில் நாளொன்றுக்கு 25 ரூபாவும் அறவிடப்படும் என்றார்.

சிவிலியன்கள் வந்த படகுகள் மீது புலிகள் தாக்குதல்; மூன்று பேர் பலி

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவு பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆறு படகு கள் மூலம் தப்பி வந்த பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படு காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஆறு படகுகள் மூலம் தப்பிவந்த பொதுமக்கள் மீது பின் தொடர்ந்து சென்றே தாக்குதல்களை புலிகள் நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து ஆறு படகுகளில் சென்ற போது மக்கள் மிகவும் அச்சத்துடன் தட்டுத்தடுமாறியுள்ளனர்.

ஆறு படகுகளில் இரண்டு படகுகள் கெவில் மற்றும் சுண்டிக்குளம் கரையை சென்றடைந்துள்ளது. இவர்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர்.ஏனைய, நான்கு படகுகளும் கடற்படையினரின் உதவியுடன் முனை பிரதேசத்துக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதென்றார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி நேற்று 200 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர். இவர்களை இலக்கு வைத்து புலிகள் எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள படையினரை இலக்கு வைத்து புலிகள் 130 மி. மீ. ரக மற்றும் 120 மி.மீ. ரக பீரங்கிகளை பயன்படுத்தி நேற்றும், நேற்று முன்தினமும் தாக்குதல் நடத்தினர். புலிகள் எந்தப் பகுதியிலிருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது படையினரின் ராடார் கருவிகளில் தெளிவாக பதிந்துள்ள போதிலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக படையினர் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

வேலை வாய்ப்பில் அங்கவீனர்களுக்கு 3 சதவீத ஒதுக்கீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானம்

athauda-senavi.jpgஅங்க வீனரான நிலையில் இருப்போருக்கு 3 வீதமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரட்ண தெரிவித்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வேலைத் தளங்களில் அங்கவீனராகவுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இணங்கியுள்ளதுடன் ஏனையோருக்கு வழங்கப்படுவது போன்ற கொடுப்பனவுகளை இவர்களுக்கு வழங்குவதற்கும் நிறுவனங்கள் சம்மாதம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அங்கவீனர்கள் தமது கடமையின் போது கூடுதலான அக்கறையுடன் பணியாற்றுவதோடு அதிக பயனுள்ள வகையிலும் அவர்கள் சேவையாற்றுகின்றனர். மேலும், அங்கவீனர்களைக் கடமைக்காகச் சேர்த்துக் கொள்ளும் போது தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  தொழில் வாய்ப்புக்காக 500 அங்கவீனர்கள் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ள இருப்பதோடு அனைத்து அங்கவீனர்களையும் இந்த தொழில் சந்தைக்குள் பங்குக் கொள்ளச் செய்ய முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் அனைத்து அங்கவீனர்களையும் இந்தத் தொழிற் சந்தைக்குள் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் அதற்குள் பொருத்தமான வேலைகளை அவர்கள் தெரிவு செய்ய முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்