March

March

பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதர் சிங்கை அமைச்சர் இராதாகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.

vkadan.jpgபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட ஆனந்தவிகடன் புத்தகப் பிரதிகளை யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் அனுப்பியதன் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதர் சிங் மற்றும் அவரின் உதவியாளர் எஸ்.சுதர்சன் ஆகியோரை அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்தியாவில் அச்சிடப்படும் குறித்த புத்தகத்தில் புலிகள் அமைப்பின் படங்கள் மற்றும் செய்திகள் என்பன வரையப்பட்டிருந்தது அதனை விமானம் மூலம் யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு திரும்பியபோது கைது செய்யப்பட்ட இவர் கல்கிசைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரின் விடுதலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியிருப்பதாக பிரதி அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்களைக் காப்பாற்றுமாறு தமிழ்க்கூட்டமைப்பு வேண்டுகோள் – உலக நாடுகளிடம் 4 கோரிக்கைகள் முன்வைப்பு

gajenthiran.jpg
தாக்குதல்களில் இருந்து உடனடியாக வன்னி மக்களை காப்பாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு அனைத்துலக நாடுகளிடம் நான்கு கோரிக்கைகளை பகிரங்கமாக முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 2,150 பேர் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேர் வரை கொல்லப்படுவதாகவும் கூட்டமைப்பின் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வன்னிப் பெருநிலப் பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1015 தடவை இடம்பெயர்ந்து இருப்பிடம் இன்றி மரநிழல்களிலும் காடுகளுக்குள்ளும் வாழ்ந்து வருகின்றனர்.

இடைவிடாத தாக்குதல்களுக்கு அஞ்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 3,30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அரசாங்கம் 70 ஆயிரம் மக்கள் மாத்திரமே வன்னிக்குள் இடம்பெயர்ந்திருப்பதாக கூறுகின்றது.

அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை செய்துவருகின்றது.உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் அமைச்சர்கள் கூறுகின்றனர். இங்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில் அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுகின்றது.

வன்னிப் பிரதேசங்களுக்கு அரசாங்கம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாகக் கூறியபோதும் மிகவும் குறைந்தளவிலான பொருட்களே இங்கு அனுப்பப்படுகின்றன.

வன்னியிலுள்ள மருத்துவமனைகள் எல்லாம் படையினரின் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன. மாத்தளன் மருத்துவமனை இயங்குகின்றது. அதுவும் சத்திர சிகிச்சை வசதிகள், வெளிநோயாளர் வசதிகள் எதுவும், மருந்துகள், மருத்துவர்கள் இல்லாத நிலையில் இயங்குகின்றது.

எந்தவித வசதிகளும் இன்றி தற்காலிகமாக புதுமாத்தளன் பகுதியில் மருத்துவமனை ஒன்று இயங்குகின்றது. அதனை நம்பித்தான் 3,30,000 மக்கள் வன்னியில் வாழ்கின்றனர்.

ஆகவே நான்கு கோரிக்கைகளை அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு உடனடியாக முன்வைக்கின்றோம். மனித அவலங்களைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்துலக நாடுகள் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வன்னியில் உள்ள 3,30,000 மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் மருந்துப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். அத்துடன் மக்கள் தங்கியிருப்பதற்கான கூடாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர் குழுவும் மற்றும் அனைத்துலக மனித நேய அமைப்புகளும் மக்களுடன் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு உள்ளூர், அனைத்துலக ஊடகங்கள் சென்று உண்மை நிலைமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் இடமளிக்கப்படவேண்டும்.

அனைத்துலக நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையானால் பெரும் மனித அவலங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டீர்கள் என்றுதான் கருதவேண்டிய நிலை ஏற்படும் என அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் உணவு பொருட்கள் 142 தொன் இறக்கப்பட்ட நிலையில் கப்பல் திருகோணமலை திரும்பியது

ltte_attack.pngவன்னிப் பகுதிக்கு கப்பல் மூலமாக  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஒருபகுதி அன்று மாலையே இறக்கி கரை சேர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள உணவுப் பொருட்கள் இறக்கப்படாமலே அந்த கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைக்கு திரும்பியது.

அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி தாக்குதல் நடத்தியதாகவும், அதனாலேயே அந்த கப்பல் உணவுப்பொருட்களை தரையில் இறக்காமல் திருகோணமலைக்கு திரும்பியதாகவும் இலங்கை இராணுவத்தின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
 

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த மண்ணில் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை – மீலாத் செய்தியில் ஜனாதிபதி

mahinda.jpgஇலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலுமுள்ள தமது முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூருவதை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம்களிடம் மிக முக்கியமான நாளாகக் கருதப்படும் இத்தினம், ஐக்கியத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி மிக முக்கியமான ஒரு சிறந்த சமய கலாசார பாரம் பரியத்தைக் கட்டியெழுப்பி ஆய்வு மற்றும் அறிவியல் சிந்தனைகளின் அபிவி ருத்திக்கு வித்திட்ட முஹம்மது (ஸல்) அவர்களுடைய போதனைகளைக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளின் வழி யில், இஸ்லாம் மனித சமூகத்தை சகோதரத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை என்பவற்றின்பால் வழி காட்டி அழைத்துச் செல்வதுடன் இன்று உலகெங்கிலும் பல்வேறு சமூகங்கள் மத்தியிலும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் நிராகரித்து அமைதியும் அகிம்சையும் நிறைந்ததொரு சிறந்த வழியைக் காட்டுகின்றது.

இலங்கையில் மீலாதுன் நபி விழா ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வருட மீலாதுன் நபி விழாவை மாத்தறை மாவட்டத்தில் நடத்தி அங்குள்ள முஸ்லிம்களின் சமய, கலாசார நடவடிக்கை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சனநாயகத்தை ஏற்படுத்தி வட மாகாணத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடு விப்பதற்காக மிக வேகமாக நடவடிக்கைகள் முனனெடுக் கப்பட்டுவரும் ஒரு சூழலில் இலங்கை முஸ்லிம்கள் இவ்வருட மீலாத் விழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

இவ்விரண்டு மாகாணங்களில் இருந்தும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து அங்கு ஒரு தனியான இன ஆட்சியை ஏற்படுத்துவதையே பயங்கரவாதம் தனது இலக்காகக் கொண்டிருந்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்களது சொந்த மண்ணில் திரும்பிச் சென்று ஏலவே இருந்த அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்த விசேட தினத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவி எமது மக்கள் மத்தியில் புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்று அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்.

தேசிய மீலாத் விழா கலாசார ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 14 பேர் பலி 46 பேர் காயம்.

akkurassa-02.jpgஇன்று மு.ப. 10.40 மணியளவில் மாத்தறை அகுரஸ்ஸை கொடபிட்டிய எனுமிடத்தில் போர்வை முஸ்லிம் ஜூம்ஆப் பள்ளிவாசல் அருகே குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருக்கும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள அதிகாரி ஒருவருடன் தேசம் நெற் தொடர்பு கொண்ட போது இத்தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தேசம் நெற்க்கு உடனடியாகத் தெரிவித்தார். இத் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் 14பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

akkurassa-05.jpgஇந்தச் சம்பவத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சர் மகிந்த விஜயசேகர பலத்த காயங்களுக்கு உட்பட்டுள்ளார். மாத்தறை வைத்திய நிலையத்திலிருந்து கிடைக்கும் தகவல் படி அமைச்சர் மஹிந்த விஜயசேகர உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, அமீர் அலி, மகிந்தயாப்பா உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

akkurassa-04.jpgமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினத்தை அரசாங்கம் தேசிய ரீதியில் வைபவமாகக் கொண்டாடுவதுண்டு. இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மீலாதுன் நபி விழா விழாக் கொண்டாடங்கள் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ கொடபிட்டிய எனுமிடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

akkurassa-01.jpg அமைச்சர்கள் விழாவில் பங்கு கொள்ள ஊர்வலமாக வருகை தந்திருந்த நேரத்தில் சைக்கிளில் வந்த குண்டுதாரர் ஒருவர் மூலமாக குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஹெக்டர் வீரசிங்க தகவல் தருகையில் கொழும்பிலிருந்து விசேட பயிற்சி பெற்ற டாக்டர்கள் குழுவொன்று மாத்தறை வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புகைப்படங்கள் lankadeepa.lk இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.

அகதிகளுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சர் ரிசாட் பதியுதீன் தகவல்

risard.jpgஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்து, வவுனியா மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், உணவு, வைத்தியம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி வசதிகள் என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவனியா மாவட்டத்தில் தற்போது 3 நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தாங்கள் சமைத்து உண்பதற்குரிய வகையில் உணவுப்பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கு கூட்டு சமையல் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா அரச செயலகத்தில் இன்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினதும், உள்ளுர் தொண்டு நிறுவனங்களினதும் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.

இலங்கை கடற்பரப்புக்குள் அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த கப்பலும் வர முடியாது

rohitha_bogollagama.jpgஇலங்கைக் குச் சொந்தமான கடற்பரப்புக்குள் எந்தவொரு வெளிநாட்டு யுத்தக் கப்பலோ சரக்குக் கப்பலோ அரசாங்கத்தின் அனுமதியின்றி வரமுடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அமெரிக்க இராஜதந்திரிகளின் உயர் மட்டக் குழுவொன்று வன்னியில் இடம் பெற்றுவரும் மோதல்களில் தமது யுத்தக் கப்பல்களை ஈடுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அமைச்சர் போகொல்லாகம முழுமையாக மறுத்தார்.

வெளிநாட்டு யுத்தக் கப்பல்களோ சரக்குக் கப்பல்களோ எமது கடல் எல்லைக்குள் வரவில்லையெனவும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அமைச்சர் அழுத்தமாக கூறினார். வெளி விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் புலிப் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவும் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களை விடுவி ப்பதற்காகவும் தாம் பல்வேறு நாடுகளு டன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதுடன் உதவிகளையும் நாடியுள் ளோம். தவிர வெளிநாடுகளின் இராணுவ உதவிகள் எமக்கு அவசிப்படாதெனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

மோதல்களை மேலும் தீவிரமடையச் செய்து புலிப் பயங்கரவாதிகளை ஒரேயடியாக அழித்துவிட முடியும். ஆனால் நாம் அப்படிச் செய்யாததற்குக் காரணம் சிவிலியன்களே என்றும் அமைச்சர் தெரிவித்தார். சிவிலியன்களை பாதுகாப்பான முறயில் வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்வ துடன் சர்வதேசத்தின் உதவிகளை நாடியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அத்துலத் கஹன லியனகே கருத்துத் தெரி விக்கையில், இதுவரையில் அரச கட்டு ப்பாட்டு பகுதிக்கு 30 ஆயிரத்து 579 சிவிலியன்கள் வருகை தந்திருப்பதாகவும் ஐ.சி.ஆர்.சி. யின் உதவியுடன் இறுதியாக 3 ஆயிரத்து 240 பேர் திருமலை வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் 2 ஆயிரத்து 806 பேர் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சகல நவீன மருத்துவ வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களின் மருத்துவ வசதிகளுக்காக வவுனியா, மன்னார் மற்றும் செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டில்களை வழங்க இலங்கையிலுள்ள ஐ.நா. அமைப்பு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை நேற்றுக் காலை திருகோ ணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது புலிகள் மேற் கொண்டுள்ள ஆட்டிலறி தாக்குதலை அரசாங்கம் சார்பாக தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் போகொல் லாகம இச் செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார். இம்மாநாட்டில் நீதியமைச்சின் செயலாளர் சுகந்த கம்லத், அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் எ. லியனகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு பாக். சாரதியால் ஏற்பு

cricket_pakisthan.jpg இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் விடுத்த அழைப்பை இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் வாகனச் சாரதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார நேற்று குறித்த வாகனச் சாரதியுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உரையாடினார். இதன்போதே நிறுவனம் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். வாகனச் சாரதியான முஹம்மட் கலீலுக்கான அழைப்பு, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக கடந்த வாரம் அனுப்பப்பட்டிருந்தது.

உங்களின் துணிச்சலான வீரமிக்க செயற்பாட்டுக்கு நாங்கள் தரும் கெளரவம் இது என குறித்த அழைப்பிதழில் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களை காப்பாற்ற முடிந்ததையிட்டு மட்டில்லா மகிழ்ச்சியடைவதாக வாகனச் சாரதி, நிறுவன தலைவருடனான தொலைபேசி உரையாடலின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

38 வயதுடைய இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் வாகனச் சாரதியாக சுமார் 22 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இரண்டு ஆண்கள் ஜவாத் (10), உஸாமா (13), இரண்டு பெண்கள் ஷவியா (7), லியவா (4).

ஏ-9 வீதி ஊடாக 12ம் திகதி யாழ் குடாவுக்கு மீண்டும் உணவுப் பொருட்கள்

lorries.jpgயாழ் குடாநாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மேலும் 45 லொறிகள் நாளை மறுதினம் 12ம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவுள்ளதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நேற்று தெரிவித்தது.

‘ஏ-9’ வீதியூடாக இப்பொருட்கள் கொண்டு செல்லப் படவுள்ளதுடன், மாதாந்தம் 150 லொறிகளில் யாழ் குடாநாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யு. எல். எம். ஹால்தீன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் லொறிகள், அங்கிருந்து யாழ் குடா நாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை இங்கு ஏற்றிவந்து சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டுக்கு 350 மெற்றிக் தொன் உணவுகளை ஏற்றிக்கொண்டு 35 லொறிகள் நேற்றுக் கொழும்பு வெலிசறை உணவுக் களஞ்சியசாலையிலிருந்து புறப்பட் டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வாராவாரம் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்கள் யாழ் குடாநாட்டுக்கு அனுப்பப்படும். தெற்கில் போன்றே குறைந்த விலையில் யாழ் குடாநாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட் களைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 115 சிவிலியன்கள் வருகை

navy_rg.jpgபாதுகாப்புப் பிரதேசத்துக்கு 115 பொது மக்கள் நேற்று வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கியே 115 பொதுமக்களும் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் 1800 பொது மக்கள் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர், கடல் மற்றும் தரை வழிகளைப் பயன்படுத்தி யாழ்., வவுனியா, திருகோணமலையை நோக்கி ஜனவரி முதல் இதுவரை 38, 477 பொது மக்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினரிடம் தஞ்சமடைந்த 115 பொதுமக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இராணுவத்தினர் செய்து கொடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், வழக்கமான நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர்களை நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.