March

March

மதத்தலங்களின் மீது புலிகளின் 10வது தாக்குதல்: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

l-yaappa-abayawardana.jpgபுலிகள் மதத் தலங்களை இலக்கு வைத்து நடத்தியிருக்கும் 10வது தாக்குதல் தேசிய மீலாத் விழா நிகழ்வில் நடத்தப்பட்டதாகும். இந்த மோசமான தாக்குதலை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள இத்தகைய சூழலில் முஸ்லிம் நாடுகள் உட்பட சகல நாடுகளும் ஆயுதத்தைக் கீழே வைக்க வேண்டுமென்று புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கீ மூன், புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளதுடன் வன்னி மக்களை சுதந்திரமாக வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டுமெனவும் பல சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் இவ்வலியுறுத்தலானது புலிகள் மக்களை பணயக் கைதிகளாக அடிமைப்படுத்தி வைத்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல், ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

வடக்கில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவிவரும் விடுதலைப்புலிகள் தென்பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டு இன, மத ரீதியான குழப்பங்களை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளனர். மாத்தறை கொடப்பிட்டியவில் இடம்பெற்றுள்ள தாக்குதலும் இத்தகையதே. 1985ம் ஆண்டு ஸ்ரீமாபோதி விஹாரையின் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பத்து சமயத் தலங்கள் மீதான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச நாடுகளை நோக்குகையில் இத்தகைய சமய வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் எதேச்சையாக நடப்பவையேயல்லாமல் திட்டமிட்டு மேற்கொள்பவையல்ல. புலிகளின் இச்செயல்கள் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு இலக்காகி வருகின்றன.

மாத்தறை கொடப்பிட்டிய தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மாத்தறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இது பாரிய இழப்பாகும். இம்மாவட்டத்தில் மக்களுடன் நெருக்கமாக சேவை செய்த பல பிரதேச அரசியல் பிரதிநிதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய மோசமான சம்பவமொன்று இடம்பெற்ற போதும் மத ரீதியான குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டனர். ஊடகங்கள், மருத்துவத்துறையினர் இச்சம்பவத்தின் போது வழங்கிய உறுதுணைக்காக அரசாங்கம் நன்றி தெரிவிக்கிறது. அதேவேளை இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டால் இன முரண்பாடுகளற்ற சுமுகமான சூழ்நிலையை நாட்டில் தோற்றுவிக்க முடியும் – எம். எல். ஏ.ஏம். ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpgகிழக்கு மாகாண சபையின் முக்கியமான முதல் பணி இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதேயாகும். அதனை மிக குறுகிய காலப்பகுதியில் பூரணமாக எட்ட முடியாது. எனினும் இன்று இனங்களுக்கிடையே சுமுகமான சூழ்நிலை காணப்பட்டு வருவதானது எம்மிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு மாகாணத்தில் மக்களுடனான அனைத்து சந்திப்புக்களிலும், கூட்டங்களிலும் இவ்வினங்களின் பிரதிநிதிகள் பிரசன்னமாயிருந்து வருவது வேறு எந்த மாகாணத்திலும் காணமுடியாததொரு நிகழ்வாகும். அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டால் நிச்சயம் இன முரண்பாடுகளைத் தீர்த்து சுமுகமானதொரு சூழ்நிலையை நாட்டில் தோற்றுவிக்க முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய ஒற்றுமையைக் கிழக்கின் அபிவிருத்தி ஊடாக ஏற்படுத்தல் தொடர்பான அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் அனுசரணையுடன் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பையின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாண சபை அமையப் பெறுவதற்கு முன்னர் உலகில் காணப்படுகின்ற அத்தனை அராஜகங்களும் இம்மாகாணத்திலே மலிந்து காணப்பட்டன. அதிகாரம், நிர்வாகம் என்பன குறித்த ஒரு நபரிடம் இருந்து வந்தன. 20 வருட காலத்தின் பின்னர் மக்களின் பிரதிநிதிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து சமூகங்களினதும் கருத்துகள் , பாதுகாப்பு, இருப்பிடம், அபிவிருத்தி, வேலைத்திட்டங்கள் போன்றன துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மூவின சமூகங்களிடையே நம்பிக்கை, புரிந்துணர்வு,நல்ல மனப்பாங்கு தோன்றி அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.

இன்று ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கிழக்கு மாகாணம் கல்வி , சுகாதாரம், விவசாயம், விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்தே காணப்படுகின்றது. கடந்த கால யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றினால் பல மனித உயிர்களும் பௌதீக வளங்களும் அழிந்துபோய் உள்ளன. இதன் விளைவுகள் இன்னும் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. யுத்தம், அனர்த்தம் போன்றவற்றினால் பெண்களும் சிறுவர்களுமே அதிகமான தாக்கங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதனால் இன்றைய கணிப்பீட்டின் படி 49 ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்திலுள்ளனர். 6 ஆயிரம் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து மீண்டுள்ளனர். கல்வித்துறையில் மிகவும் மோசமான பின்னடைவு நிலை காணப்படுகிறது. க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதியவர்களில் 50 வீதத்திற்கும் குறைவானவர்களே க.பொ.த. உயர்தரத்திற்குச் செல்கின்றனர். இதேவேளை , யுத்தப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களில் அநேகமானவர்கள் 12 வயதிற்குப் பின்பே 1 ஆம் தரம் கற்பதற்காக வருகின்றனர்.

தற்போது கல்வித்துறையில் 500 ஆங்கில, விஞ்ஞான , கணிதப் பிரிவுக்கான பயிலுநர் ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். பாதைகள் அமைப்பதற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாவும் ஏனைய கட்டமைப்பு வேலைகளுக்கு ஐ.எம்.எப். பின் ஊடாக பெருமளவு நிதியும் கிடைக்கப்பெறவுள்ளது. இதேவேளை விவசாயத்துறை தற்போது பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த காலங்களை விட சென்ற வருடம் 1 இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் அதிகமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 30 வீதப் பங்களிப்பை செய்துள்ளது. இனிவரும் காலங்களில் சகல துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில் கிழக்கு மாகாணம் கட்டியெழுப்பப்படும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்த உடன்படிக்கையை வெளிப்படுத்த வேண்டும்- லக்ஷ்மன் கிரியெல்ல

kiriella.jpgநாட்டின் நிதி நிலைவரமானது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது நாட்டின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளன. இதற்கு அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கையே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்படவுள்ள 1,500 மில்லியன் டொலர் கடன் தொகையானது, எந்த அடிப்படையில் அல்லது எவ்வாறான உடன்படிக்கையின் கீழ் பெறப்பட்டது என்பதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி அரசாங்கத்தை கோருகின்றது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது எமது நாட்டுக்கு 4500 மில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைக்கவிருந்தது. டோக்கியோ பேச்சுவார்த்தையின் பின்னர் மேற்படி நிதி கிடைக்கும் தருணத்தில் இன்றைய அரச தரப்பினரும் ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய ஆகிய இனவாதக் கட்சிகளும் இணைந்து கொண்டு இந்த நிதி திரும்பிச் செல்வதற்கான சகல சூழ்ச்சிகளையும் மேற்கொண்டன. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதாக பிரசாரங்களை மேற்கொண்டன. ஆனால், கடந்த மூன்று வருட காலமாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டமைப்பு அரசாங்கமானது நாட்டையும் மக்களையும் கொள்ளையடித்ததே தவிர வேறெதனையும் செய்யவில்லை.

சர்வதேச மற்றும் உள்ளூர் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களை கொள்ளையடித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளது. தற்போது அரசாங்கம் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டித் தொகையாக 6,000 கோடி ரூபாவை செலுத்தவிருக்கின்ற அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1,900 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் விடயத்தில் கையை விரித்ததையடுத்தே தற்போது சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இருக்கின்ற இன்றைய கட்டத்தில், தமது அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களில் நம்பியிருக்கவில்லை என்றும், அப்படியான கடன்கள் தமக்குத் தேவையில்லையென்றும் கூறிவந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச கொடுக்கல் வாங்கலின் அவசியத்தை ஐக்கிய தேசியக் கட்சி உணர்ந்திருந்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத கூட்டமைப்பு அரசாங்கம் எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு இனாமாகக் கிடைக்கவிருந்த நிதி தொடர்பில் கூச்சலிட்ட ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச குழுவினர், தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள கபடத் தன்மை குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர் எனக் கேட்க விரும்புகிறேன். எமது நாட்டின் நிதி நிலைவரம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இன்னும் இரண்டு வார காலத்திற்கே நாட்டைக் கொண்டு நடத்தமுடியாத நிலையை அரசாங்கம் எட்டியுள்ளது. இதற்காகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறத் துடிக்கின்றது. இந்த கடன் திட்டத்தில் சந்தேகம் நிலவுகின்றது.

வெளிநாட்டுக் கடன்களை நம்பியிருக்கவில்லையென பொய்கூறி மக்களை ஏமாற்றியவர்கள் இப்போது எவ்வாறான உடன்படிக்கையின் அடிப்படையில் மேற்படி கடனைப் பெற்றுக்கொள்ளப் போகின்றனர் என்பது எவரும் அறியாத விடயமாகும். எனவே, இதன் ரகசியத்தை வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது என்றார்.

பெருந்தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டுத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

sri-lanka-upcountry.jpgநுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பொகவந்தலாவை தெரேசியா, கிலானி மோறார் ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தொழிலாளர் தேசிய சங்கத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களை நாம் வழங்கிய போது பெரும் வரவேற்புக் கிடைத்தது. உயர்தர மாணவர்கள் மேலதிக அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் வழங்கிய இந்நூல்கள் தமக்குப் பெரும் பயனை அளித்ததாக எமக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய கல்வி மேம்பாட்டுத்திட்டங்களை நாம் எவ்வித அரசியல் தொழிற்சங்கப் பேதங்களுமின்றியே மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு நூல்களை வழங்கும் திட்டத்தினை இவ்வருடமும் நாம் மேற்கொள்ளவுள்ளோம். இதற்குப் பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இன்று வறுமையினால் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதில் கூட மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு மலையகத்தின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான உதவிகள் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவியாக அமையும்.

இந்திய மருத்துவ குழு திருகோணமலை சென்றுள்ளது

india-dr.jpgஅமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இலங்கை வந்துள்ள இந்திய மருத்துவ உதவிக் குழு திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சென்றுள்ளது.  இலங்கையின் வடக்கே இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவது 52 பேர் கொண்ட இந்திய மருத்துவ குழுவின் நோக்கம்.

எட்டு விசேட மருத்துவர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் உட்பட சகல ஆளணி வசதிகளைக் கொண்டு சுயமாக இயங்கக்கூடியது இந்த மருத்துவக்குழு என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழு தன்னுடன் சகல மருத்துவப் பொருட்கள் முதற்கொண்டு, சத்திரசிகிச்சை உபகரணங்கள் வரையான சகல வசதிகளையும் எடுத்துவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆளணி உபகரணங்கள் யாவும் சுமார் 20 லொறிகளில் ஏற்கனவே புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அநேகமான இவ்வார இறுதிக்கு முன்பதாக இவர்கள் தம்முடைய சேவையை ஆரம்ப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் வசந்த்குமார் தலைமையிலான இந்த இந்திய மருத்துவக்குழு இன்று காலை புல்மோட்டைக்குப் புறப்படுமுன்னதாக கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் இலங்கை சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களை வரவேற்று வழியனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்வின் போது இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்களையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது. இந்தக் குழு ஒரு மாத காலத்திற்கே இங்கு தங்கியிருக்குமென்று தற்போதைக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றாலும் தேவைக்கேற்ப காலம் நீடிக்கப்படலாம் என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

பொதுமக்கள், அதிமுக்கியஸ்தர்கள் பங்குபற்றும் கூட்டங்களுக்கு பாதுகாப்பு முன் அனுமதி கட்டாயம்

udaya_nanayakkara_.jpgபொது மக்கள் பங்குபற்றும் பொது வைபவங்கள், பொதுக் கூட்டங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை பாதுகாப்பு அமைச்சு நேற்று முதல் அமுல்படுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்ற அதேசமயம் அதன் உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் அந்தக் கூட்டம் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய மீலாதுந் நபி விழாவின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து அரசாங்கமும், பாதுகாப்பு அமைச்சும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியையும், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கும் பட்சத்தில் அந்த வைபவம் சிறப்பாக நடைபெற்று முடிவதற்குத் தேவையான போது பாதுகாப்புகளை வழங்க முடிவதுடன், இது போன்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பேரழிவுகளிலிருந்து முன் கூட்டியே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை எதிர்நோக்கியுள்ள அதேசமயம் அதனையொட்டிய பல்வேறு முக்கிய சமய நிகழ்வுகள், விளையாட்டு வைபவமும் இடம்பெறவுள்ளன. இதன் போதும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே தெரிவித்தார்.

தேசிய மட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், அமைச்சர்கள் மற்றும் அதி முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு மாத்திரமின்றி பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் கூட்டம் மற்றும் நிகழ்வுகளின் போதும், ஊர்வலங்களின் போதும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

வன்னி மனிதாபிமான படை நடவடிக்கைகள் மூலம் புலிகள் முற்றாக முடக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்துள்ள புலிகள் இது போன்ற தாக்குதல்களை நடத்தி பதற்ற நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கலாம். இவற்றைக் கருத்திற் கொண்டும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் வகையிலேயே இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இடிமின்னலுடன் பலத்த காற்று வீசும்; நிக்கவெரட்டியவில் 10 வீடுகள் சேதம்

climate.jpgநீரேந்து பகுதிகள் உட்பட மேல், மத்திய, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடியும் கடும் காற்று வீசும் எனவும் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

கடும் காற்று வீசியதன் காரணமாக நிக்கவெரட்டிய பகுதியில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டு கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு சில இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வரட்சியான காலநிலை காணப்பட்டதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதிகளில் போதியளவு மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் கூறியது.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடும் காற்று வீசும் அபாயம் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது.

இணையத்தளங்கள், பத்திரிகைகளை அழித்தொழித்துவிடும் சாத்தியம்

computer.jpgபத்திரிகை கள் இணையத்தளத்தில் தமது பதிப்புகளை வெளியிடும் நிலைமைக்கு தம்மை மாற்றிக்கொள்ளாவிடின் நாளடைவில் அழிந்தொழிந்துவிடும் சாத்தியமுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பேராசிரியரான அலன் நையிற்றால் நடத்தப்பட்ட இணையத்தளமூடான ஆய்வொன்றின் பிரகாரம் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக பேராசிரியர் அலன் நைற் தெரிவிக்கையில்; இருநூறுக்கும் மேற்பட்ட முதலாண்டு ஊடகவியல் மாணவர்கள் சர்வதேச ரீதியிலான இந்த இணையத்தள ஆய்வில் செய்தித்தாள் வாசிப்பது தொடர்பான தமது கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த இளம் ஊடகவியலாளர்கள் 21 வயதிற்கு குறைவானவர்களாக இருப்பதுடன் அவர்களில் 90 வீதமானோர் பத்திரிகை வாசிப்பதை விரும்பவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களாவதற்கு விரும்புகின்றனர். அத்தொகையில் 60 வீதமானவர்கள் வாரத்திற்கு ஒருதடவையோ அல்லது அதற்குக் குறைவாகவோ பத்திரிகை வாசிக்கின்றனர்.

ஆனாலும் 95 வீதமானவர்கள் செய்திகள் தொடர்பில் ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வர்த்தகத் தொலைக்காட்சிச் சேவைகளின் செய்திகளே மூலமாக உள்ளதுடன் 50 வீதமானோர் ஒரு நாளைக்கு ஒருதடவையேனும் தொலைக்காட்சிச் செய்தியை பார்க்கின்றனர்.  தொலைக்காட்சிச் செய்திச் சேவைக்கு அடுத்தபடியாக இணையத்தளங்களூடான செய்தியினை இம்மாணவர்கள் விரும்பிப்பார்க்கின்றதுடன் கூகுள் (Google) நைன்ஸ்மென் (Ninesmen) பேஸ்புக் (Face book) விக்கி பீடியா (wikipedia) ஆகிய தளங்கள் பிரபலமானவையாகவும் உள்ளன.

computer.jpgஇதன் மூலம் ஊடகவியல் கற்கைநெறியைப் பயிலும் மாணவர்கள் கூட பத்திரிகைகளை வாசிப்பதில்லைபென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி, இணையத்தளங்களில் பிரசுரிப்பதற்கான விளம்பர வருமானங்களின் இழப்பு ஆகியவற்றால் பத்திரிகைக்குள்ள அச்சுறுத்தலைவிட இவ்விடயம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில் ஊடகவியலாளர்களே எதிர்காலத்தில் பத்திரிகைகளை வாசிக்காவிடில் பத்திரிகைகளை வாசிப்பது யாரென அலன் நைற் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளவத்தையில் ஆசிரியை வெள்ளை வானில் கடத்தல்

white-van.jpg
வெள்ளவத்தை, பஸல்ஸ் ஒழுங்கையில் வைத்து தமிழ் ஆசிரியை ஒருவர் நேற்று (மார். 10) மாலை கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெள்ளவத்தைப் பொலிஸிலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறையிட்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழு அமைப்பாளரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பில் தம்மிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நேற்று  மாலை 4.30 மணியளவில வெள்ளவத்தை  பஸல்ஸ் ஒழுங்கையில் தனது வீட்டுக்கு முன்பாக பெண்ணொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது வெள்ளை வானில் வந்தோர் அவரை பலாத்காரமாக ஏற்றிச் சென்றனர். ராஜகிரியவிலுள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 31 வயதான ஆசிரியையே கடத்தப்பட்டவரென மனோ கணேசன்  தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார நோட்டீஸில் இலங்கை பிரச்சனை பற்றி அச்சடிக்க தடை

tamil_nadu.jpgதமிழகத்தில் வருகிற மே 13-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி, குழப்பமின்றி வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் அச்சகங்களுக்கும் தேர்தல் தொடர்பாக வெளியிடும் நோட்டீஸ்கள், சுவரொட்டிகள் தொடர்பாகவும் புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

-வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் அடித்துக் கொடுக்கக்கூடாது.
 
-ஜாதி, மத அமைப்புகள் கொடுக்கும் உணர்ச்சியை, கிளர்ச்சியை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அச்சடிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
 
-மத உணர்வை தூண்டும் சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் கேலி சித்தரங்களை அச்சடிப்பதை கைவிட வேண்டும்.
 
-தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரான சுவரொட்டிகள் அடிக்கவே கூடாது.
 
-இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது.
 
-அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தணிக்கை செய்து கொள்ள வேண்டும்.