
திருகோணமலையில் 6 வயது சிறுமி படுகொலை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பிரதான சந்தேக நபரின் சடலத்தை அவரது தாயார் அடையாளம் காட்டிய போதிலும் அதனைப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார்.
நித்தியபுரத்தைச் சேர்ந்த ஒப்ரின் மேர்வின் ரினோசன் (வயது 26) என்ற இந்நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்திய பரிசோதனைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வேளை, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை நெரித்துத் தப்பியோட முயன்றபோது, குறித்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்ற போது சாட்சியமளித்த சந்தேக நபரின்தாயார் “கடந்த 3 வருடங்களாக இவருக்கும் குடும்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கணவரை விட்டு பிரிந்து நான் வாழ்ந்து வருகின்றேன்.இவரது சடலத்தை பொறுப்பேற்பதற்கும் நான் விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டார்.
சடலத்தைப் பொறுப்பேற்கத் தாயார் மறுத்ததையடுத்து அரச செலவில் அடக்கம் செய்யுமாறு பொலிஸாருக்கு மரண விசாரணையின் பின்பு மஜிஸ்திரேட் ரி.எல்.ஏ.மனாப் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து அவரது சடலம் இன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது.
இச் சிறுமியின் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருகோணமலை பொலிஸ் தகவல்களின்படி சந்தேகத்தின் பேரில் கைதானவர்களில் ஒருவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் என்றும் மற்றுமொருவர் தமிழ் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடையவர் என்றும், மேலும் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக சிறுமிக்குக் கணினி கற்பிப்பதற்காக வீட்டுக்கு சென்று வந்தவர் என்றும் தெரிய வருகின்றது. கணனி கற்பித்தவர் சிகரம் என்னும் இணைய வானொலி சேவையொன்றை நடத்தி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இச்சிறுமி உவர் மலையிலுள்ள தமிழ் அரசியல் கட்சியொன்றின் காரியாலயத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, மற்றும் இரண்டு சந்தேக நபர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை போன்ற தகவல்களும் தமது விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவற்றைத் தவிர, இந்தச் சந்தேக நபர்கள் திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற சில கடத்தல் மற்றும் கப்பம் கோரும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அதே வேளை படுகொலை செய்யப்பட்ட சென்.மேரிஸ் மகளிர் பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவியான ஜூட் ரெஜி வர்ஷாவின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்
மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு கண்ட அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும் : சிறீ-ரெலோ
கடந்த புதன்கிழமை (மார். 12) திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தரம் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதான யூட் றெஜி வர்சா என்ற சிறுமியின் கொலை குறித்து சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு) திருகோணமலையில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு தமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு தமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சிறீ-ரெலோ வெளியிட்ட துண்டுப்பிரசுரம் முழுமையாக;
கண்டன அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும்
செல்வி ஜுட் றெஜி வர்ஷா
( St.Mary’s College முதலாம் ஆண்டு மாணவி)
பிறப்பு 30.10.2003 இறப்பு 11.03.2009
எங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான இழப்புகளும், அழிவுகளும் போதாதா, சொந்த மண்ணில் மக்கள் படும் துயரம் தீராதா, என்று எந்நாளும் எதிர்பார்ப்பில் வாழும் மக்கள் சகல பிரச்சனைகளையும் தீர்த்து வாழுதல் வேண்டாமா? இந்த நிலையில் இங்கு நடப்பது என்ன? பள்ளிப் பிள்ளைகள் பணத்துக்காக கடத்தப்பட்டு கொல்லப்படுவது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாரும் இதை அனுமதிக்க முடியாது.
எமது மக்களின் வாழ்வுக்கான தியாகத்தில் எமது இழப்புகளும் சாதாரணமானதல்ல. ஜனநாயக வழியில் எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் நிர்ணயிக்கும் பாரிய மக்கள் கடமையில் எம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வந்திருக்கும் நாம் இந்தக் கொடுமைகளையும், அராஜகத்தையும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான மக்கள் விரோத செயலுக்கு எதிராக நாம் எப்போதும் விழிப்புடனும் எதனையும் முன்னெடுக்கவும் தயக்கம் காட்ட முடியாது. மக்களே இவ்வாறான மக்கள் விரோத செயலில் ஈடுபடுபவர்களுக்க்கெதிராக எம்முடன் சேர்ந்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.
இன்று இப்பள்ளிப் பிள்ளையின் இழப்பு நாம் அனைவரும் வேதனை சுமப்பது மட்டுமல்ல, வெட்கித் தலைகுனியும் செயலுமாகும். இப்பிள்ளையின் இழப்பு கல்விச் சமூகத்துக்கும் மட்டும் அல்ல முழு தமிழ்ச் சமூகத்துக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும்.இக்குழந்தையின் குடும்பத்தினர் தாங்கும் துன்பத்தில் நாமும் சேர்ந்த போதும் அது முழுமையான ஆறுதலாகுமா?
ஆயினும் எமது அனுதாபம், ஆறுதல் அவர்களுக்கு எப்போதும் பிணைவாகும்.
மீண்டும் அனைத்து சமூக சக்திகளுக்கு சிறீ ரெலோ அமைப்பினரான நாம் வேண்டுதலாக முன்வைப்பது, இவ்வாறான கொடூர செயலில் ஈடுபடுவோரை இனங்கண்டு பாதுகாப்பு தரப்புக்கும் ஊடகங்களுக்கும் ஏனையவர்களுக்கும் அறியத் தருவதை தவற விடாதீகள்.
மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு எமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு எமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்கிறோம்.
சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு)