March

March

1704 சிவிலியன்கள் கட்டுப்பாட்டு பகுதி வருகை

Wanni_Warமுல்லைத் தீவில் புலிகளின் பிடியிலிருந்து 1704 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.பாதுகாப்புப் பிரதேசத்தை நோக்கி நேற்று மாத்திரம் 1565 சிவிலியன்கள் வருகை தந்திருப்பதாக படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம் புதுமாத்தளனிலிருந்து 139 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களுள் 47 ஆண்களும், 38 பெண்களும், 27 இளைஞர்களும் 27 யுவதிகளும் அடங்குவதாகவும் படையினர் தெரிவித்தனர். இவர்கள் பாதுகாப்பான முறையில் பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லப் பட்டதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

ஸ்ரீகொத்தா கூட்டத்திற்கு செல்லாது ரணில் பகிஷ்கரிப்பு

ranil-wickramasinghe.jpgஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து நீக்குவதற்கென ஸ்ரீகொத்தாவில் நேற்று மாலை நடத்தப்படவிருந்த இரகசிய வாக்கெடுப்புக்கு ரணில் விக்கிரமசிங்க சமுகமளிக்கவில்லை.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது கூட்டத்தை ஒத்தி வைத்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக இன்று (18) நடைபெறவுள்ள அரசியல் அதியுயர்பீட கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நேற்று மாலை ஸ்ரீகொத்தாவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்தும் கூட அவர் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 ஸ்ரீகொத்தாவுக்கு சமுகமளித்த ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை கட்சி உறுப்பினர்கள் தமக்கு எதிர்ப்பு தெரிவிக்குமிடத்து தலைமைத்துவப் பதவியிலிருந்து தாம் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரிடம் தெரிவித்தி ருப்பதாகவும் தெரிய வருகிறது.

சிறுமி வர்ஷாவின் படுகொலை சந்தேக நபர்கள் ஆட்கடத்தல், கப்பம் கோரல், கொலைகள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

varsa.jpgதிருகோண மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 வயது சிறுமியான ஜூட் ரெஜி வர்ஷாவின் படுகொலை தொடர்பாக கைதான சந்தேக நபர்கள் 5 பேரும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுத் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்களில் இருவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் தமது விசாரணைகளில் விசேட கவனம் செலுத்தி வருவதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை, சந்தேக நபர்கள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் இடம் பெற்ற 30இற்கும் மேற்பட்ட ஆட்கொலைகள், கப்பம், ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

வர்த்தகர்கள் ,சினிமா திரையங்கு உரிமையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கப்பம் பெற்றுள்ளமையும் தெரிய வந்துள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நபர்கள் கொலை செய்தவர்களின் சடலங்கள் கடந்த காலங்களில் நடுக்கடலில் வீசப்பட்டுள்ளன. சிறுமியின் சடலத்தையும் இதே பாணியில் கடலில் போடுவதற்கே இவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும் அன்றைய தினம் கடற்படையினரால் விதிக்கப்படடிருந்த மீன் பிடித்தடை காரணமாக அது சாத்தியப்படவில்லை என்றும் தமது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்

உயிர் நீத்த படை வீரர்களின் குடும்பத்தினரை பாதூகாப்புச் செயலாளர் சந்தித்தார்

defence_sec.jpgஉயிர்நீத்த மற்றும் படுகாயமுற்ற இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதூகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ (17) சந்தித்து உரையாடினார். அநுராதபுரம் சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படைப்பிரிவின் முகாமில் இச்சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

படை வீரர்களின் குடும்பத்தினரின் துயரங்களைக் கேட்டறிந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து வைபவத்தில் உரையாற்றிய அவர், தாய் நாட்டை மீட்பதற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்கள் எக்காலத்திலும் நினைவுகூரப்படுவர் என்றும் நாட்டுக்காக உயிர்நீத்த தேசிய வீரர்களின் பட்டியலில் அவர்கள் பெயர்கள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

இந்திய டாக்டர்கள் இராணுவத்தினர் அல்லர் பாராளுமன்றில் அமைச்சர் நிமல் தெரிவிப்பு

nimal.jpgஇந்தியாவிலிருந்து புல்மோட்டைக்கு வருகை தந்திருப்பவர்கள் இராணுவ டாக்டர்கள் அல்லர் என்று சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்ற முழுமையான ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு ஒழிக்க முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோர் இந்தியாவுடன் மேற்கொண்ட இராஜதந்திர மட்டத்திலான உறவுகளின் அடிப்படையில் இந்தியா மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.

புல்மோட்டைக்கு டாக்டர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இராணுவ டாக்டர்கள் அல்லர். இந்த விடயத்தை பிரதானமாக்கிக் கொண்டு ஜே. வி. பியினர் தங்களது போஸ்டர் பிரசாரத்துக்கான புதிய தொணியொன்றை ஏற்படுத்த முயற்சிக்கிறது எனவும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்திய டாக்டர்கள் குழுவினர் இலங்கை வந்துள்ளமை தொடர்பாகவும், அவர்கள் புல்மோட்டையில் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாகவும் ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார்.

இலங்கை வந்துள்ள மருத்துவக் குழு இராணுவ மருத்துவக் குழு என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புல்மோட்டை பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு கனியப் பொருட்கள் உள்ளன. எனவே இந்த இந்திய டாக்டர்களின் புல்மோட்டை வருகையை ஜே. வி. பியினர் விமர்சனத்திற் குள்ளாக்குகின்றனர். ஜே. வி. பியினர் தேவையில்லாத கற்பனையை செய்து கொண்டு உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் சுனாமி நேரத்தில் இந்தியா உதவி வழங்கிய போது ஏன் இந்தியாவின் உதவியை ஏற்கவில்லை என கேட்டனர். இப்போது ஏன் உதவியை பெறுகிaர்கள் என கேட்கிறார்கள் ஜே. வி. பி. இரட்டை வேடம் போட்டுக்கொண்டிருக்கிறது. புல்மோட்டையில் 45 கட்டில்களைக் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரியே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அடிப்படை சிகிச்சையை பெறுபவர்கள் பதவிய, கந்தளாய், திருமலை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்படுவார்கள். உடனடியாக கழற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லக்கூடியவாறுதான் இந்த ஆஸ்பத்திரி இயங்குகிறது. இதனாலேயே இதனை நடமாடும் ஆஸ்பத்திரி என்று கூறுகிறோம். இது கூட தெரியாமல் நடமாடும் ஆஸ்பத்திரி என்றால் என்ன? என ஜே. வி. பி. கேள்வி கேட்கிறது.

இந்தியா பெருந்தொகையான மருத்துவப் பொருட்களை எமக்கு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு தேவையான மருந்து வகைகள் அல்ல. எமது நாட்டிற்கு ஏற்ற எம்மால் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்கியிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகள் பலவும் உதவி வழங்க முன்வந்துள்ளன. எவரையும் நாம் நிராகரிக்கவில்லை.

இந்திய டாக்டர்கள் இலங்கைக்கு வந்துவிட்டார்கள் என்பதற்காக இலங்கையின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. முப்படைகளுக்கும் நிரந்தர டாக்டர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் ஒரு விண்ணப்பம் கூட வரவில்லை. நாட்டுப் பற்றாளர்கள் என கூறிக்கொள்பவர்களின் விண்ணப்பங்கள் கூட கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 50 டாக்டர்களை கட்டாயமாக முப்படையின் மருத்துவ பிரிவுக்கு அனுப்ப வேண்டி வந்தது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மரணத்தின் விளிம்பில் வன்னி மக்கள் நிற்க, லண்டனில் ….. : த ஜெயபாலன்

Marie_CalvinMarie_CalvinMarie_Colvin_Before1._._._._._.

வன்னி மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் பாரபட்சமற்ற தாக்குதல்கள் பற்றி விருதுகள் பெற்ற யுத்தச் செய்தியாளர் மேரி கொல்வின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றக் கட்டிடத்தில் பார்வையாளர்களுக்கு விளக்கியது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய நாளிதலான சண்டே ரைம்ஸ் பத்திரிகையிலும் விரிவாகவே எழுதி உள்ளார். இலங்கை இராணுவத்தின் பிடியில் தமிழர்கள் எதிர்நோக்கக் கூடிய இன்னல்கள் பற்றி அவர் யாரிடமும் கேட்டு அறிய வேண்டிய தேவை இருக்கவில்லை. 2001ல் வன்னிப் பகுதிக்குள் சென்று திரும்பியவர் இராணுவத்தின் பிடியில் ஏற்பட்ட சொந்த அனுபவமே தமிழர்களின் நிலையை விளக்க போதுமானதாக இருந்தது.’The Forgotten Conflict in Sri lanka’ என்ற தலைப்பில் மார்ச் 17 நடைபெற்ற விசேட கருத்தரங்கில் மேரி கொல்வின் வன்னி மக்களின் அவல நிலைபற்றி எடுத்துக் கூறினார். அமெரிக்க ஊடகவியலாளரான மேரி கொல்வின் பிரித்தானிய தேசிய நாளிதலான ரைம்ஸ் பத்திரிகையில் பணிபுரிகிறார்.

200 000 பேர் வரையானவர்களை புலிகளே தடுத்து வைத்துள்ளனர் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நிராகரித்த அவர் வன்னி மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் மீதுள்ள பீதி பயம் அவர்களைப் புலிகளுடனேயே செல்ல நிர்ப்பந்தித்தாகவும் கூறினார். புலிகள் தங்களைப் காப்பவர்கள் என்ற எண்ணமே வன்னி மக்களிடம் இருப்பதாகவும் அவர்களிடம் பெரும்பாலும் புலிகளுக்கான ஆதரவு இருப்பதாகவும் மேரி கொல்வின் சுட்டிக்காட்டினார்.

ஊடகங்கள், மனிதாபிமான அமைப்புகள் அனைத்துக்கும் இலங்கை அரசு தடைவிதித்துள்ள நிலையில் ஊடகங்கள் வன்னி யுத்தம் பற்றி செய்திகளை வெளியிட இயலாத நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டிய மேரி கொல்வின் ஊடகங்கள் – தாங்கள் அங்கு நின்று செய்திகளை வெளியிடவே விரும்பவதாகவும் ஆனால் அதற்கு தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் பிரித்தானியாவிற்கு காலனித்துவ பொறுப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்தரங்கை All Party Parlimentary Group for Tamils அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு இவ்வமைப்பின் முக்கியஸ்தரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கியஸ்தருமான சென் கந்தையா தலைமை தாங்கினார். வன்னி மக்களின் நிலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் எதுவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் ஆயினும் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார். காஸாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலை 22 நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்த சர்வதேச சமூகம் அதனிலும் மோசமான யுத்தம் நடைபெறும் வன்னியில் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இலங்கை அரசாங்கம் பிரச்சார ரீதியில் நங்களிலும் பார்க்க முன்னுக்கு நிற்பதையும் சென் கந்தையா சுட்டிக்காட்டினார்.

சென் கந்தையாவின் தலைமை உரையை அடுத்து வன்னி யுத்த களத்தில் பதிவு செய்யப்பட்ட 10 நிமிட விடியோப் பதிவு காட்சிப்படுத்தப்பட்டது. அப்பதிவில் வன்னி மக்கள் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொள்ளும் சொல்லொனாத் துயரமும் விபரிக்க முடியாத வேதனையும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கு அப்பால் அதனை விபரிக்க வேண்டிய அவசியம் தன்ககு; இல்லையென அதனைத் தொடர்ந்து உரையாற்றிய மேரி கொல்வின் குறிப்பிட்டு இருந்தார்.

இவற்றைத் தொடர்ந்து வன்னியில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் தங்கள் துயரை வெளிப்படுத்தினர். நடேசன் மயில்வாகனம் என்பவர் சாதாரண காய்ச்சல் வந்து அதற்கு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில் தனது வயோதிபத் தந்தை காலமானதை வேதனையுடன் சுட்டிக்காட்டினார். தந்தையைக் காண வவுனியாவின் எல்லைவரை சென்ற நடேசன் மயில்வாகனம் தந்தையை உயிருடன் பார்க்க முடியவில்லை.

இன்னும் சிலர் தங்கள் உறவுகள் உயிரிழந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் தனது சகோதரி, தனது தாய், தனது அண்ணி என குடும்பத்தில் மூவரை ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெண்ணொருவர் கண்ணீர் மல்க தனது இழப்பை பகிர்ந்து கொண்டது அங்கிருந்த ஒவ்வொருவரது உள்ளத்தையும் தொட்டது. உயிரிழந்த உறவுகளை கண்ணாடிச் சட்டத்தினுள் தாங்கியவாறு நின்ற அப்பெண் எதுவும் பேசவில்லை. அதுவே பல விடயங்களைப் பேசியது. வார்த்தைகளிலும் பார்க்க அந்த மௌனம் அந்தக் கண்ணீர் உண்மையானதாக இருந்தது. உணர்வுகளைத் தொட்டது.

இக்கருத்தரங்கில் All Party Parlimentary Group for Tamils அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தொழிற்கட்சி லிபிரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே பெரும்பாலும் கலந்து கொண்டிருந்தனர். தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர் லியம்பொக்ஸ் வெளியிட்ட அறிக்கை இலங்கை அரசுக்கு சார்பானதாக அமைந்ததாக அங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பிரதமர் கோர்டன் பிரவுணும் அவரது அமைச்சரவையும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் கரிசனையுடன் நடந்துகொள்வதாகப் பாராட்டிய சென் கந்தையா பிரித்தானியாவே முதலில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தியதாகவும் பிரித்தானியாவின் அழுத்தத்தினாலேயே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து அறிக்கையை வெளியிட்டதாகவும் அங்கு குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்முனையாக இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தங்கள் அரசாங்கத்தைக் கொண்டு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் மாணவர்களாகவும் தமிழ் மக்களும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பிரித்தானிய அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட அம்மாணவர், இலங்கை அரசு இனப்படுகொலை புரிவதாகவும் நைஜீரியா பிஜி பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கியது போல் இலங்கையையும் பொதுநலவாய அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.

அதற்குப் பதிலளித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானியா அதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தவும் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்கவும் பிரித்தானிய அரசு கடுமையாக உழைப்பதாகக் கூறிய அவர் யுஎன் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதை ரஸ்யா தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கருத்தரங்கில் வழமையான புலிப் பல்லவிகளுக்கும் சரணங்களுக்கும் எவ்வித பற்றாக்குறையும் இருக்கவில்லை. மேற்குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு சில விடயங்கள் தவிர மற்றும்படி வழமையான கோயில் மேளங்களே முழங்கின. அதனால் அங்கு பேசப்படக் கூடிய ஆரோக்கியமான அம்சங்களும் கோயில் மேளத்தின் சத்தத்தில் கரைந்து போனது.

2._._._._._.

‘தமிழீழமே எமது மக்களுக்கு ஒரே தீர்வு.’ ‘புலிகளுடைய தடையை நீக்க வேண்டும்.’ புலிகள் சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை.’ ‘புலிகள் மனித உரிமைகளை மீறுவதில்லை.’ ‘சர்வதேசம் இலங்கை அரசு சொல்வதையே நம்புகிறது.’ போன்ற விடயங்கள் இவ்வாறான புலி ஆதரவு அமைப்புகளால் நடாத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதே  நபர்களால் கூறப்படுகிறது. கருத்தரங்கு என்னவோ மறக்கப்பட்ட வன்னி மக்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் வன்னி மக்களை அந்த மரணப் பொறியில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்பதிலும் பார்க்க இந்த அவலத்தைக் கொண்டு தங்கள் தமிழீழக் கனவுக்கு உறுதி சேர்ப்பதாகவே கருத்துக்கள் அமைந்தது.

வழமையான புலி ஆதரவுக் கூட்டங்களில் கருத்துச் சொல்ல எழும் அம்மையார் ஒருவர் இந்தக் கருத்தரங்கையும் விட்டுவைக்கவில்லை. புலிகள் சிறுவர்களை படைகளில் சேர்ப்பதாக பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது என்று ஆரம்பித்த அவர் தான் சிறுமியாக இருக்கும் போதே இங்கு வந்துவிட்டதாகவும் ஆனால் தனக்கு குழந்தைகள் இருந்திருந்தால் அவர்கள் வீணாக இறப்பதிலும் பார்க்க புலிகளில் சேர்ந்து இறந்திருந்தால் அதனை எண்ணிப் பெருமைப்பட்டு இருப்பேன் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் பலத்த கரகோசம் எழுப்பினர். விசிலடிக்காத குறை. இதிலுள்ள உண்மை என்னவென்றால் அந்த அம்மையார் குழந்தைக்கு தாயானவர் அல்ல. திருமணமாகாதவர். அரசியல்வாதிகள் போல் கைதட்டல்களுக்காகவும் விசிலடிச்சான் குஞ்சுகளைத் திருப்திப்படுத்தவும் மிக முக்கியமான விடயங்களை கவர்ச்சியாக்கி பேசும் இப்போக்கு தமிழரசுக் கட்சி கூட்டணி என்று இன்று லண்டனிலும் தொடர்கிறது.

இது அந்த அம்மையாரில் மட்டும் தவறு அல்ல. அதற்கு கூட இருந்து கைதட்டிய சீமான்களும் சீமாட்டிகளும் அவருக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களும் அல்ல. பெரும்பாலும் பிரைவேட் ஸ்கூலில் படிக்கும் டொக்டராகவும் இன்ஜினியராகவும் இல்லாவிட்டால் குறைந்தது எக்கவுண்டனாக ஆவது வரக் கனவு காணும் தங்கள் பிள்ளைகளை தங்கள் தமிழீழக் கனவுக்கு அனுப்புவார்களா? ஆனால் வன்னியில் உள்ளவர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை விரும்பி புலிகளின் படைகளில் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு இவர்கள் கைதட்டி பாராட்டுகிறார்கள்.

நாங்கள் எங்கள் வருமானத்தைப் பார்க்காமல் வேலைகளை விட்டுவிட்டு பெல்ஜியத்துக்கு சென்று குரல் எழுப்பினோம் ஆனால் எந்தப்பயனும் இல்லை என்று குறைப்பட்டார் அங்கு கருத்து வெளியிட்ட ஒரு வர்த்தகப் பிரமுகர். ஒரு சில நாள் போராட்டத்திற்கே கணக்குப் பார்க்கும் இவர் கடந்த முப்பது வருடமாக போராடி கடந்த மூன்று மாதகாலமாக தங்கள் பதுங்கு குழிகளே புதைகுழிகளாகலாம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் கணக்கு வழக்கைப் பார்க்கத் தயாரா?

இந்த உரையாடலில் சென் கந்தையா கொள்கை விளக்கம் அளிக்கிறார். வன்னி மக்களை வெளியேற்றுவது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை ஒரு உறுதியான நிலைப்பாடு எடுத்து உள்ளதாம். அந்த மக்களை அவர்கள் வாழும் பூர்வீகப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதை புலம்பெயர்ந்த மக்கள் அனுமதிக்க முடியாதாம். வடக்கு கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். மிகுதமானோரில் அரைப்பங்கினர் தெற்கிற்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். ஆக மொத்தம் வெளிநாடுகளுக்குப் போக வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றாகிவிட்டது. வசதி சற்று குறைந்தவர்கள் கொழும்புக்குச் சென்றாகிவிட்டது. எதற்கும் நாதியற்றவர்கள் முல்லைத்தீவில். இவர்களுக்கு இல்லாத பூர்வீக பூமியின் அக்கறை முல்லைத் தீவில் மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களுக்கு இருக்கிறதாக சென் கந்தையா விளக்கம் அளிக்கிறார். கேக்கிறவன் கேனையன் என்றா இப்படித்தான் கொள்கை விளக்கங்கள் இருக்கும்.

வன்னிக்கு வாழ்க்கையில் ஒரு தடவையோ சில தடவையோ சென்ற ஒரு ஊடகவியலாளரைக் கூட்டிவந்து தமிழ் மக்களுக்கு வன்னி அவலத்தை விளக்க வேண்டிய அவசியம் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை. (சில சமயம் போராட்ட காலத்துக்கு முன்பே புலம்பெயர்ந்த டொக்கடர் என்ஜினியர்களுக்கு ஆனந்தி அக்கா சொன்னால் விளங்காது ஒரு வெள்ளைத் தோல் ஜேர்னலிஸ்ட் மூலம் தான் கதைசொல்ல வேண்டும் என்றும் கருதி இருக்கலாம்.) பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரித்தானிய ஊடகவியலாளர்களையும் அழைத்து வந்து இந்த கருத்தரங்கை அவர்களுக்காக நடத்தி இருந்தால் வன்னி நிலவரத்தை சர்வதேச மயப்படுத்த உதவியிருக்கும். இவ்வாறான கோயில் மேளங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து நடத்தப்படும் கருத்தரங்குகள் கூட்டங்கள் …… வாக்கு வங்கிகளுக்கு மட்டுமே உதவும்.

அத்துடன் கூட்டத்தின் முடிவில் 5 பவுண்களுக்கு ‘Free Tamil Eelam’ விற்கலாம். நேற்றும் விற்றார்கள். புலம்பெயர் மக்கள் 5 பவுண்களுடன் தமிழீழத்தை பெற்றுக்கொண்டார்கள்.

போரில் சிக்கியுள்ள பொதுமக்கள் நிலை குறித்து டில்லியில் ஆலோசனை

icrc-mp.gifஇலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களில் பெருமளவிலான பொதுமக்கள் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து செவ்வாய்க்கிழமை புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

மனித உரிமைகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் இந்தியத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள், கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் கேஸ்டெல்லா மற்றும் புதுடெல்லியில் இருக்கும் பிராந்திய தலைவர் ஃபிராங்காய்ஸ் ஸ்டேம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இலங்கையில் நடைபெற்று வரும் போரில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்தும் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும்

house-in-srilanka.jpgவடக்கிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் வீடமைப்பு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தேசிய வீடமைப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் எல்.எஸ். பலன்சூரிய தெரிவித்தார்.

ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் 60 இலட்சம் ரூபா செலவில் மட்டக்களப்பு கல்லடியில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; யுத்தம் மற்றும் கடல்கோள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு கடந்த இரண்டு வருடகாலத்தில் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

யுத்தம் மற்றும் கடல்கோளினால் வீடுகளை இழந்த 15 ஆயிரம் குடும்பங்கள் இதனால், நன்மையடைந்தன. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் சில அமைப்புகளின் நிதி உதவிகளுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டன.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வீடமைப்பு நிர்மாண நடவடிக்கைகளைப் போலவே வட மாகாணத்திலும் வீடுகளை நிர்மாணிக்க ஆவண செய்யுமாறு வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

யுத்த சூழல் மாறி வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் சென்று குடியேறும்போது அவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்க தேசிய வீடமைப்பு அதிகாரசபை உதவும்.

இதன்படி வடபகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளவும், இந்த வேலைத்திட்டத்தை வீடுகளைப் பெறுபவர்களின் பங்களிப்புடன் குறைந்த செலவில் செயற்படுத்தவும் வீடமைப்பு அதிகாரசபை திட்டமிட்டுள்ளது என்றார்.

“பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைத்தால் பல்கலைக்கழகங்களில் ஆர்ப்பாட்டம்’

kelaniya-sri-lanka.jpgபல்கலைக் கழகங்களினுள் பொலிஸ் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுமாயின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ரஜரட்ட மற்றும் களனி பல்கலைக்கழகங்களில் பொலிஸ் சோதனை நிலையங்களை அமைப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஒன்றியத்தின் இணைப்பாளர் உதேவ பிரேமரட்ன இதனைத் தெரிவித்தார்.

இவ்விரு பல்கலைக்கழகங்களிலும் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த செயற்பாட்டை கைவிடுமாறு நாம் கோருகின்றோம். எமது வேண்டுகோளையும் மீறும் பட்சத்தில் இதற்குத் எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

கொழும்பு – யாழ்ப்பாண பஸ் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது

bus.jpgஏ9  பாதையூடாக கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பஸ் போக்குவரத்தை ஆரம்பிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்து தன்னிடம் அது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.  இதன்படி சாதாரண தனியார் பஸ்களும் சொகுசு பஸ்களும் சேவையிலீடுபடவுள்ளன.

சுமார் 500 தனியார் பஸ்கள் ஏ9 பாதையூடாக சேவையிலீடுபடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். தெற்கில் இருந்து பௌத்த யாத்திரிகர்கள் நயீனாதீவுக்கு போய்வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடமும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதேபோல இ.போ.ச.பஸ்களும் இச் சேவையில் ஈடுபடவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.