March

March

களனி பல்கலைக்கழக மாணவர்களின் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு

kelaniya-sri-lanka.jpgகளனி பல்கலைக்கழகத்தின் மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் சில பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.  முதலாவது மனுதாரரான இனோகா நடிசனி என்ற மாணவி தன்னை ஆண் பொலிஸ் அதிகாரியொருவர் கழுத்தில் பிடித்து தள்ளி வாகனத்தில் ஏற்றியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸ் அத்தியட்சர் கே.டீ. சோமபால, கிரிபத்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசூரிய, இன்ஸ்பெக்டர் சந்தன கமகே, பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பெப்ரவரி 3 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்தனர். மாணவர்களின் கல்வீச்சின் போது சில பொலிஸார் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் இதனையடுத்து பொலிஸார் தன்னிச்சையாகச் செயற்பட்டு ஏழு மாணவர்களையும் ஒன்பது மாணவிகளையும் கைது செய்துள்ளனர் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொலிஸார் இங்கு நடந்து கொண்ட முறையினால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.  நீதியரசர்கள் என்.ஜி. அமரதுங்க, ஜெகத் பாலபட்ட பெந்தி மற்றும் சந்திரா ஏக்க நாயக்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது. ஜூன் 26 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

புல்மோட்டையில் இந்திய மருத்துவர்களின் முகாமுக்கு கூடுதலான நோயாளிகள் வருகை

pullmottaiindiadoctors.jpgபுது மாத்தளன் பகுதியிலிருந்து கப்பல் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் 460 பேர் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதேவேளை புல்மோட்டை கனிம வள தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் இந்திய மருத்துவ குழுவினர் மேற்கொண்டுவரும் மருத்துவ சேவையினை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம பார்வையிட்டுள்ளார்.

மருத்துவ முகாமில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டோரில் ஒரு தொகுதினர் பதவியா மருத்துவ மனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 80 பேர் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008, 2009: இரண்டு ஆண்டுகளில் ரூ. 1850 மில்லியன் அரசால் ஒதுக்கீடு

sirisena.jpgஅரசாங் கத்தின் விவசாயக் கருத்திட்டமான பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ செயற்றிட்டத்துக்கு 2008, 2009 ஆகிய இரண்டு வருடங்களுக்கும் அரசாங்கம் 1850 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதென விவசாய அபிவிருத்தி கமத்தொழில் சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜே. வி. பி. எம்.பி. திலகரத்ன விதானாச்சி எழுப்பி கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் சிறிசேன, உள்ளூர் விவசாயத் துறையை ஊக்குவிக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

திலகரத்ன விதானாச்சி எம்.பி. தமது கேள்வியின் போது பயிர் வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் விவசாய செயற்றிட்டத்தின் கீழ் காலி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை ஊக்குவிப்புக்காக 2008, 2009ம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விபரம் கோரினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, பயிர்வளர்ப்போம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் செயற்றிட்டத்துக்கு அரசாங்கம் 2008 ஆம் ஆண்டில் 300 மில்லியன் ரூபா ரூபாவையும் இயற்கை உர உற்பத்திக்காக 500 மில்லியன் ரூபாவையும் செலவிட்டது.

2009 ஆம் ஆண்டுக்கென மேற்படி செயற்றிட்டத்துக்கு அரசு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன் இயற்கை உர உற்பத்திக்கென 750 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது.

இந்நிதி கமநல சேவைகள் திணைக்களம் உட்பட அமைச்சின் கீழ் இயங்கும் பல்வேறு விவசாய நிறுவனங்களுக்கூடாக அந்தந்த பகுதி பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சகல திட்டங்களும் பிரதேச செயலகங்களுக்கூடாக நடைமுறைப் படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்

யாழ்ப்பாணத்திற்கு ஏ-9 திறந்ததின் பின்பு பொருட்களை கொண்டு செல்லும் செலவுத் தொகை வெகுவாக குறைவு

parliament.jpgகப்பல் மற்றும் விமானம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை யாழ். குடா நாட்டுக்கு கொண்டுசெல்லும் போது மெற்றிக் தொன் ஒன்றுக்கு சுமார் 75 அமெரிக்க டொலர்கள் செலவாகியது. ஏ-9 வீதி திறந்ததன் பின்னர் இத் தொகை 23 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. காங்கேசன்துறை வரை புகையிரத போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் இத்தொகை யை மேலும் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐ. தே. க. எம். பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-

ரயில்வே துறையை அபிவிருத்தி செய்து ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இத் திட்டத்தின் கீழ் 92 ரயில் என்ஜின்கள் திருத்தப்பட்டு தற்போது சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரயில் உதிரிப் பாகங்களைப் பெற்றுக்கொள்வதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இதன் மூலம் பழைய என்ஜின்களை சீர்செய்து சேவையில் ஈடுபடுத்துவதே தமது நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ரயில்களில் பொருட்களை ஏற்றி இறக்குதலின் மூலம் நான்கு வீத வருமானம் கிடைத்து வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தவும் வடக்கிற்கான சேவையை மேற்கொள்ளவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது:- சிறந்த ரயில் சேவையை நடத்துவதற்கு தேவைப்படுகின்ற ரயில்களின் எண்ணிக்கையையும் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட ரயில் மற்றும் “பவர் செட்” களின் எண்ணிக்கையையும் கோரினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் 44 பவர் செட்டுகள் உட்பட சில என்ஜின்களை அண்மைக் காலத்தில் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஐ.தே.க.வின் தலைவராக கரு சிரேஷ்ட தலைவராகிறார்?

unp-members.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை தற்போது பிரதித் தலைவராக இருக்கும் கருஜயசூரியவுக்கு வழங்கி, தலைமைப் பதவியிலிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்ற பதவியை வழங்குவதற்கான யோசனையொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது. ஐ.தே.க.வின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடிகள் எழுந்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நெருக்கடிகள் குறித்து ஆராய கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. கட்சியினுள் தோன்றியிருக்கும் நெருக்கடிகளை தீர்க்கும் வகையிலான யாப்பு மாற்றம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவே இந்தக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் புதிதாக “சிரேஷ்ட தலைவர்’ என்ற பதவியை உருவாக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலைமையிலேயே இந்தக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை குறித்து ஆராய எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவிருக்கும் ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் இவ்வாறானதொரு யோசனையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

எனினும், இது குறித்து காமினி ஜயவிக்ரம பெரேரா எம்.பி.யிடம் கேட்ட போது தற்போதைய நிலைமையில் கட்சியின் உள்ளார்ந்த விடயங்கள் பற்றி எதுவும் கூற முடியாதெனத் தெரிவித்ததுடன் கட்சியின் தற்போதைய நடைமுறையில் சில திருத்தங்களுடனான அறிக்கை எதிர்வரும் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் கூறினார்.  இதேநேரம், சிரேஷ்ட தலைவர் என்ற பதவியினது பெயர் சிலவேளைகளில் பிரதான தலைவர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்படலாமென்றும் அதற்கு போதியளவு அதிகாரம் இருக்குமென்பது சந்தேகமே என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

2169 சிவிலியன்கள் இராணுவத்திடம் தஞ்சம்

lankadisplaced.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 2169 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

1983 பொதுமக்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவத்தினரிடமும், 131 பொதுமக்கள் முனை பகுதியிலுள்ள கடற்படையி னரிடமும் தஞ்சமடைந்துள் ளனர். புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினரிடம் தஞ்சமடைந்த 1983 பொதுமக்களில் 524 சிறுமிகள், 393 சிறுவர்கள், 534 ஆண்கள் மற்றும் 532 பெண்களும் அடங்குவர். புதுமாத்தளனிலிருந்து படகுகள் மூலம் தப்பி சுண்டிக்குளம் கடற்பரப்பின் ஊடாக முனை பிரதேசத்திற்கு 131 பொதுமக்கள் வருகைதந்துள்ளனர்.

அவர்களில் 66 சிறார்களும், 37 ஆண்களும், 28 பெண்களும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்

ஒபாமாவின் கருத்தை இரான் வரவேற்றுள்ளது

obma-iran.jpgஅமெரிக்கா-  இரான் இடையிலான முப்பது ஆண்டுகால பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ள கருத்தை இரானிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் வரவேற்றுள்ளார்.

”ஆனால் வாஷிங்டனின் நிலைப்பாட்டு மாற்றம் வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் நீடிக்கவேண்டும், தம்முடைய கடந்தகால தவறுகளை அது அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்கா அப்படிச் செய்யும் பட்சத்தில் இரான் தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளாது” என்று அலி அக்பர் ஜவான்ஃபகிர் கூறியுள்ளார்.

இரானிய புத்தாண்டை முன்னிட்டு அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்துச் செய்தியில், இரானுடன் நேர்மையாகவும் பரஸ்பரம் மரியாதையுடனும் உறவுகளை முன்னெடுக்க தான் விரும்புவதாகக் கூறியிருந்தார்.

அக்குரஸ்ஸ சம்பவ தற்கொலைக் குண்டுதாரி மாத்தறையில் பிச்சைக்காரருடன் தங்கியவர் – சிறுவன் வாக்குமூலம்

akkurassa-02.jpgஅக்கு ரஸ்ஸ கொடபிட்டிய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் மாத்தறையில் பிச்சை எடுத்துவரும் 13 வயது சிறுவனிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட நபரின் புகைப்படத்தை பத்திரிகையில் தான் பார்த்ததாகவும் அவர் மாத்தறையில் பிச்சைக்காரர் தங்கும் சிறிய மதுரைக் கட்டிடத்தில் தங்கியிருந்தார் எனவும் அச்சிறுவன் கூறியுள்ளான் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் தனது பெயரை சமன் என்று கூறினார். ஒரு மாதத்துக்கு முன்னர் அங்கு வந்து தங்கியிருந்தார். அவர் சிங்களத்தில் உரையாடுவார். மாத்தறையில் படையினர் பயிற்சி செய்வதையும், மாத்தறை மகாநாமப் பாலத்தையும் அவர் அடிக்கடி பார்த்துவந்தார். அவருக்குப் புஷ்பகுமார் என்ற நண்பர் ஒருவர் உதவி வந்தார். இருவரும் சிங்களத்தில் உரையாடுவார்கள்.

இருவரின் நடவடிக்கைகளையும் அவதானித்து வந்தபோது அவர்களில் சந்தேகம் ஏற்பட்டது. வெலிகம பகுதிக்குப் பிச்சை எடுக்க இருவரும் போனபோது நானும் அவர்களுடன் போனேன். ஆனால் வெலிகம பொலிஸார் அதனைப் பொருட்படுத்தாமல் எம்மைப் போகும்படி கூறிவிட்டனர்.

அவர்கள் இருவரும் வெலிகம பகுதிக்கு பிச்சை எடுக்க வந்தபோது நானும் அவர்களுடன் சேர்ந்து வந்திருந்தேன். வீட்டில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு இங்கு வந்து பிச்சை எடுத்து வாழ்கின்றேன் எனவும் அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளான். விசாரணையின் பின்னர் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.

அதிகாரப் பகிர்வின் ஊடாக ஈழத்தை உருவாக்கும் பாதையில் அரசு பயணம் – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

parliament.jpgஅதிகார ங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் ஈழத்தை உருவாக்கிக் கொடுக்கும் திசையில் அரசு சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி. இந்தப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தியது.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஒய்வூதிய சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே மேலும் கூறியதாவது;

அரசு தமிழருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கப் போகின்றது. இதுதொடர்பாக ஜனாதிபதியே சர்வதேச செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசு ஈழத்தை உருவாக்கிக் கொடுக்கும் திசையில் சென்று கொண்டிருக்கின்றது.

யுத்தத்தில் படையினர் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மக்கள் பெரும் சுமைகளை சுமந்து கொண்டிருக்கின்றார்கள். படையினரும் தமது உயிர்களை தியாகம் செய்து நாட்டின் இறைமையை காக்க போராடுகின்றனர். புலிகளை ஒழிக்கும் முயற்சிக்கு மக்களின் ஆதரவைக் கோரும் அரசு அந்த மக்களின் இடுப்புப்பட்டிகளை இறுகக்கட்டுமாறு கோருகின்றது. இந்த நாட்டுக்காகவும் படைவீரர்களுக்காகவும் மக்களும் சுமைகளை சுமக்கின்றனர். ஆனால், அரசோ இதனைப் பயன்படுத்தி சுக போகங்களை அனுபவிக்கின்றது.

அதிகாரத்தை பகிர்தல், ஈழத்தை உருவாக்குதல் போன்ற அரசின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதனை அனுமதிக்க முடியாது. சமுர்த்தி அதிகாரிகள் நியமனம் அரசியல் ரீதியாகவே இடம்பெறுகின்றது. தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவே அரசு சமுர்த்தி அதிகாரிகள் நியமனங்களை வழங்குகின்றது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சீராக செயற்பட்டாலே நாடு ஒழுங்காக இருக்கும். ஆனால், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிகள் திருப்திகரமாக இல்லை. பல குளறுபடிகள், ஊழல்கள் காணப்படுகின்றன. படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகள் ஒய்வூதிய சட்டமூல திருத்தத்தை நாம் வரவேற்கின்றோம். இதற்காக நாம் முன்பிருந்தே போராடி வருகின்றோம். அது தற்போது தான் கைகூடி வந்துள்ளது.  இதேபோன்று, ஆசிரியர் ஒய்வூதிய திட்டம் தொடர்பிலும் திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.
 

சீனாவிற்கு தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவசர வேண்டுகோள்

nadesan.jpgஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் எதிர்வரும் 26 ஆம் திகதிய கூட்டத்தில் இலங்கை விவகாரத்தை ஆராய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், இவ்விடயத்தில் இடையூறு விளைவிக்க வேண்டாம் என விடுதலைப் புலிகள் சீன அரசாங்கத்திற்கு நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை  விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பா. நடேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசானது தனது இனப்படுகொலைகளை மூடிமறைக்க இது ஒரு உள்நாட்டு யுத்தம் என்ற போர்வையில் பரப்புரைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் இரண்டாவது தடவையாக எடுத்துக் கொள்ளப்பட இருந்த இவ் விவாதத்தை உள்நாட்டு பிரச்சனை என சீனா வர்ணித்திருப்பதனால் இவ்விவாதம் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சீனாவிடம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்தே, சீனா இலங்கை அரசிற்கு சார்பாக நடந்து கொள்வதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் தமிழ்மக்களின் இந்நிலை தொடர்பில் சீனா அதிகாரிகளுக்கு விளக்க விருப்பமுடையர்களாக உள்ளதாகவும், சீனாவிடம் ஐநாவில் தமிழ்மக்களின்நிலை தொடர்பில் விவாதிக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.