பிரபாகரன் எங்கும் ஓடவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார். எங்களுடன்தான் இருக்கிறார். போரை முன்னின்று நடத்தி வருகிறார் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது…
கேள்வி: வன்னிப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்கள் தப்ப முடியாமல் நீங்கள் தடுத்து வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளதே…?
நடேசன்: முதலில் சிக்கியுள்ள என்ற வார்த்தையே தவறானதாகும். இது எங்களது மக்களின் நிலம். காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக இங்கு அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களது நிலங்களை விட்டு, வீடுகளை விட்டு இலங்கை அரசு விரட்டியடிக்கும் வரை அங்குதான் வசித்து வந்தனர். அவர்கள் சிக்கித் தவிக்கவில்லை, மாட்டிக் கொள்ளவில்லை.
தங்களுக்கு மீண்டும் கவுரவத்துடன் தங்களது நிலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள்.
கேள்வி: பிரபாகரன் தற்போது எங்கு இருக்கிறார்?
நடேசன்: நீங்கள் சொன்னது போல எங்களது தலைவர் குறித்து நிறைய வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் எங்களது தலைவர், எங்களது மக்களுடன்தான் இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.
கேள்வி: இனப்போரில், இந்தியாவின் நிலையை மாற்ற விடுதலைப் புலிகள் அமைப்பால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
நடேசன்: இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை, அப்படிச் செய்யும் உத்தேசமும், எங்களிடம் இல்லை. இந்தியாவை நாங்கள் எதிரியாகவே பார்க்கவில்லை.
இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பும், பலமும், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் இங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் பின்னிப் பிணைந்தது.
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இந்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பாரா, அப்படிப்பட்ட விருப்பம் அவரிடம் உள்ளதா?
நடேசன்: எந்தவித முன் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் இருந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தியதாக இருந்தால் நிச்சயம் பேசத் தயார். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. இந்தியா எங்களது நண்பர். எங்கள் பக்கம் இந்தியா இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்.
கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையை, தங்களது உள்ளூர் அரசியல் லாபங்களுக்காக தமிழக அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கிறீர்களா?
நடேசன்: உள்ளூர் அரசியல் நிலவரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேறுபட்ட கொள்கைகள், நிலைப்பாடுகள் இருப்பது சகஜமான ஒன்றுதான். இதுகுறித்து கருத்து கூற முடியாது.
இருப்பினும், தமிழக மக்கள் எங்களுக்கு வழங்கி வரும் ஒருமித்த ஆதரவை ஈழத் தமிழர்கள் முழுமையாக பாராட்டுகிறார்கள், மதிக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் இன்றைய பெரும் பலமே, தமிழக மக்களின் பேராதரவும், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உறுதியான ஆதரவும்தான் என்று கூறியுள்ளார் நடேசன்.