March

March

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களின் விசாரணைகள் பூர்த்தி இடைக்கால அறிக்கை நாளை கையளிப்பு

vaccina.jpgருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக சுகாதார ஸ்தாபன மருந்துவ நிபுணர்கள் குழுவினர் தங்களது இடைக்கால அறிக்கையை நாளை 27ம் திகதி சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்குக் கையளிக்கவுள்ளனர்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆராய்வதற்காக கடந்த 22ம் திகதி கொழும்புக்கு வருகை தந்த இம்மருத்துவ நிபுணர்கள் மறுநாள் அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் மாத்தறைக்கு நேரில் சென்று ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கடந்த 19ம் திகதி மாத்தறை சென் தோமஸ் உயர் தர மகளிர் கல்லூரியின் 8ம் தர மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப உலக சுகாதார ஸ்தாபனம் இரு மருத்துவ நிபுணர்களை கொழும்புக்கு அனுப்பிவைத்தது.

இவர்கள் மாத்தறையில் ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமைக்கு உள்ளான மாணவிகள் கற்கும் பாடசாலைக்கும், மாணவி களின் வீடுகளுக்கும் நேரில் சென்று விசாரணைகளை நடத்தினர். குறித்த தடுப்பு மருந்து தொடர்பாகவும் பரிசோதனைகளை நடாத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படு கிறது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளையும், பரிசோதனையையும் முடித்துக் கொண்டு இக்குழுவினர் நேற்று கொழும்பு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் மஹிந்த விஜேய சேகரவின் உடல் நிலையில் தேற்றம்

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கொழும்பு பெரியாஸ்பத்திரி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் மஹிந்த விஜேயசேகரவின் உடல் நிலை தேறிவருவதையடுத்து அவர் கட்டணம் செலுத்தி சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, நீதி மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட ஆபத்தான நிலையில் தீவிர சத்திரசிகிச்சை கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க நேற்று (25) தெரிவித்தார்.

தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவில் ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் மஹிந்த விஜேசேகர பின்னர் நரம்பியல் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்பொழுது அமைச்சர் சுயமாக எழுந்து உட்காருவதோடு உதவியாளரின் உதவியுடன் நடந்து வருவதாகவும் அவசர சிகிச்சைப் பிரிவு பணிப்பாளர் பி. ஆரியவர்தன தெரிவித்தார். அவரின் உடல் நிலை தேரிவருவதையடுத்தே அவரை கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வார்டுக்கு மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நீதி, நீதி மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட கடந்த இரு தினங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக ஹெக்டர் வீரசிங்க கூறினார். அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறியவருகிறது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன

வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரை தண்டவாளங்களுக்கான சிலிப்பர் கட்டைகளுக்கு மட்டும் எழுநூறு கோடி ரூபா தேவை – அமைச்சர் டலஸ்

dalas_alahapperuma.jpg“யாழ் தேவி’ ரயில் சேவையை மீண்டும் வடக்கு நோக்கி ஆரம்பிக்க வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையான 159 கிலோமீற்றர் தூர ரயில் தண்டவாளங்களுக்கும் சிலிப்பர் கட்டைகளுக்கு மட்டும் 700 கோடி ரூபா தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “யாழ்தேவி’ ரயில் சேவையை மீண்டும் வடக்கிற்கு ஆரம்பிப்பதற்கான ரயில் பாதை புனரமைப்புக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் பேசும் போதே அமைச்சர் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;  “வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையான 159 கிலோமீற்றர் ரயில் பாதைக்கு இடையே 85 பெரிய பாலங்களும், 58 சிறிய பாலங்களும் 28 ரயில் நிலையங்களும் நிறுவ வேண்டியுள்ளது. இவையனைத்தையும் நிர்மாணித்து யாழ்தேவியை உடனடியாக வடக்கிற்கு கொண்டு செல்வதென்பது இலகுவான விடயமல்ல.

எனினும், ஜனாதிபதி அரசுத் தலைவரென்ற வகையில் எமது வார்த்தைகளிலிருந்து  “முடியாது’ என்ற சொல்லை அகற்றியுள்ளார். எனவே, ரயில் சேவை பணியாளர்களின் அர்ப்பணிப்பு, திடசங்கற்பம், நேர்மைத் தன்மை மூலம் இந்த பாரிய சவாலை விருப்பத்துடன் முகம் கொடுக்க முடியுமென நாம் நம்புகிறோம்.

இதேநேரம், நிலப்பரப்பை வெற்றி கொண்டது நின்று விடாது. எமது படையினர் யாழ்தேவிக்காக பாதை அமைப்பதிலும் விஷேடமான பொறுப்பை நிறைவேற்ற எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாம் எவ்வளவு திடசங்கற்பம் கொண்டாலும் இந்த பாரிய நடவடிக்கைக்காக செலவாகும் நிதியானது உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகளுடன் 3 தசாப்தங்களாக போராடிய எம்மைப் போன்ற நாட்டுக்கு இலகுவானதல்ல.

உதாரணமாக, 159 கிலோமீற்றர் தூரமான தண்டவாளங்களுக்கு மட்டும் 450 கோடி ரூபா தேவைப்படுகிறது. அந்த தூரத்திற்கான சிலிப்பர் கட்டைகளுக்கு மட்டும் 250 கோடி ரூபா தேவைப்படுகிறது ‘ என்றார்.

அக்கரைப்பற்று அளிக்கம்பையில் 40 கிலோ கிளேமோர் கண்டுபிடிப்பு

அக்கரைப்பற்று, அளிக்கம்பை பிரதேசத்தில் மறை த்து வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கிறாம் எடை கொண்ட கிளேமோர் குண்டொன் றைப் பாதுகாப்பு படையி னர் நேற்று பிற்பகல் மீட் டெடுத்ததாக இராணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரின் உதவியோடு பொலிஸார் இக்குண்டை செயலிழக்கச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் 15 மிதி வெடிகளையும், ரி 56 ரக துப்பாக்கிக்குரிய 1456 ரவைகளையும், மிதிவெடி களுக்குப் பயன்படுத்தப்படும் 204 பியூஸ்களையும் பாதுகாப்பு படையினர் இந்த இடத்திலிருந்து மீட்டெடுத்திருப்பதாக வும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணைய வழக்கு-வருண் மனு தள்ளுபடி

20-varun-ganthi.jpgபிலிபித் தொகுதியில் தான் பேசியது தொடர்பாக தன் மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள மத துவேஷ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிய வருண் காந்தியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டை அணுக பாஜக முடிவு செய்துள்ளது.

பிலிபித் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமாக பேசியிருந்தார் வருண் காந்தி. இதுதொடர்பான சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தேர்தல் ஆணையம், வருண் காந்தி, பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வருண் காந்தி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உ.பி. தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்தல் அதிகாரியின் புகாரின் பேரில், வருண் காந்தி பிலிபித் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் காந்தி மனு தாக்கல் செய்தார். மேலும் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணை நடத்தி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வருண் காந்தி தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரைக் கைது செய்ய தடை விதித்தது.  இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றம், வருண் காந்தியின் மனுவை இன்று தள்ளுபடி செய்து விட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், வருண் காந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளதால், அவரது கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

ஆனால் இந்த முன்ஜாமீன் 27ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதன் பின்னர் வருண் காந்தி கைது செய்யப்படக் கூடியவாய்ப்புகள் உள்ளன. எனவே அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

குளவி கொட்டி 38 பேர் பாதிப்பு; சிகிரிய குன்றில் சம்பவம் காப்பாற்ற சென்ற விமானப்படை வீரர்களும் ஆஸ்பத்திரியில்

சிகிரியாவில் குளவி கொட்டி பாதிக்கப்பட்ட 38 பேர் சிகிச்சைக்கென சிகிரிய கிராமிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி பொறுப்பாளர் டாக்டர் டப்ளியு. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் 18 பேரும், விமானப் படையினர் ஐவரும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவரும், ஒரு பொலிஸாரும் அடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:- சிகிரிய குன்றில் குளவி கொட்டி 38 பேர் சிகிச்சை பெறவந்தனர். இவர்களில் பத்து பேர் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.

குளவி கொட்டிய மாணவர்களைக் காப்பாற்றச் சென்ற ஐந்து விமானப் படையினரும், ஆரம்ப சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். அத்தோடு ஒரு உல்லாச பயணியும் சிகிச்சை பெற்று வெளியேறி இருக்கிறார்.

இதேநேரம் ராஜாங்கணை யாயட்ட பாடசாலை மாணவர்கள் 18 பேரும், ஒரு உல்லாசப் பயணியும், உல்லாச ஹோட்டலொன்றின் இரு ஊழியர்களும், உல்லாச பயணிகளுக்கு வழிகாட்டும் நபர் ஒருவரும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.

திருமலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் ஐவருக்கு சிகிச்சை; மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு

foods.jpgதிரு கோணமலையிலுள்ள பேக்கரி ஒன்றில் பாண் மற்றும் பணிஸ் போன்ற மாப்பண்டங்களை உட் கொண்டு பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக திருமலை பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் அனுஷியா ராஜ்மோகன் நேற்றுத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று காலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த ப்பட்டதுடன், அச்சடலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் உடற்கூற்றியல் பிரிவுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், பாண் மற்றும் பணிஸ் உட் கொண்டதால் பாதிக்கப்பட்ட 148 பேர் நேற்று முன் தினம் சிகிச்சைக்காக வந்தனர். இவர்களில் 89 பேர் மாணவ/மாணவியராவர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் தான் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் இருவர் சிறுவராவர். இதர மூவரும் மீனவர்கள். ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

இலங்கை இனநெருக்கடிக்கு கௌரவமான தீர்வுக்கு காங்கிரஸ் வலியுறுத்தும்

இலங் கையின் இனப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வைக்காண்பதற்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.  பிராந்திய அபிலாஷைகளில் உணர்வு பூர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, இலங்கையின் இனநெருக்கடிக்கு சகல சமூகங்களினதும், விசேடமாக தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை உத்தரவாதப்படுத்தும் கௌரவமான தீர்வை கட்சி வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்வையே காங்கிரஸ் கட்சி வலியுறுத்துவதாகவும் அக் கட்சி கூறியுள்ளது. கட்சியின் வெளிநாட்டுக் கொள்கையானது சுயாதீனமானது என்றும் அதேசமயம், பொறுமையுடன் ஆனால் வலுவான இராஜதந்திரத்தை மும்பைத் தாக்குதல் விவகாரத்தில் கையாண்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

இதேவேளை, இலங்கை உட்பட இந்தியாவின் அயல் நாடுகள் ஸ்திரமின்றி இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கவலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றிய இந்தியப்பிரமர் இந்தியாவை சூழவுள்ள சவால்களை நான் பார்த்தால், “ஸ்திரமின்மையை காண்கிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ளது. நேபாளம், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இடம்பெறுபவை தெற்காசியாவின் எதிர்காலம் குறித்த கவலைக்கு காரணமாக உள்ளன என்றும் கூறினார்.

நாடு பலமானதாகவும் இலக்குடைய அரசாங்கத்தையும் கொண்டிருந்தால் ?தெற்காசியாவை சமத்துவம் மிக்கதாகவும் அதிக சுபிட்சமுடையதாகவும் மீளக்கட்டியெழுப்புவதற்கான ஊக்குவிப்பு சக்தியாக இந்தியாவால் விளங்கமுடியும்’ என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இனவாத நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டுவதாகவும் அவர் சாடியுள்ளதுடன், பாரதியஜனதாவும் இடதுசாரிகளும் எதிர்மறையான மனப்பாங்குடன் இருப்பதாகவும் இது நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லாது என்றும் கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் விண்ணப்பங்கள் 24% அதிகரிப்பு -யு.என்.எச்.சி.ஆர். தெரிவிப்பு

sri-lanka-air-lanka.jpgஇலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறும் யுத்தத்தால் கைத்தொழில் துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுமக்கள் புகலிடம் கோருவது அதிகரிக்கும் என்று அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடந்த வருடம் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கைத்தொழில்துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் கோரி 2008 இல் 3 இலட்சத்து 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இது 2007 ஐ விட 12 சதவீதம் அதிகமாகும் என்று அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். ஆப்கான், சோமாலியா நாடுகளிலிருந்தே அதிகளவு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோர் விண்ணப்பங்கள் கடந்த வருடம் 24 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.  புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் அரசு விலகிக்கொண்டதைத் தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததால் இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோரின் தொகை அதிகரித்திருப்பதாக யு.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.

165 அதிபர்களால் மட்டுமே பதவி விலகல் கடிதங்கள் கையளிப்பு

மூவாயிரம் அதிபர்கள் தமது விலகல் கடிதத்தை வழங்குவதாக கூறியபோதும் 165 பேர் மட்டும் நேற்று (25) தமது விலகல் கடிதங்களை கையளித்ததாக கல்வி அமைச்சு நேற்று (25) தெரிவித்தது. கையளிக்கப்பட்ட விலகல் கடிதங்கள் கூட ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு தயாரிக் கப்பட்டிருக்கவில்லையென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சேவை மூப்பின் அடிப்படையில் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்து மூவாயிரம் அதிபர்கள் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களை அமைச்சிற்கு வழங்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் தொழில்சார்ந்தோர் தொழிற் சங்கம் அறிவித்திருந்தது. அதிபர்கள் விலகல் கடிதங்களை கையளித்தால் அவற்றை ஏற்கத் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் அறிவித்திருந்தார்.

இதன்படி, விலகல் கடிதங்களை கையேற்பதற்கென மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சு கூறியது. ஆனால், பதவி விலகுவதாகக் கூறும் படிவம் ஒன்று கல்வி அமைச்சில் உள்ள சில நபர்களிடம் கையளிக்கப்பட்டிருந்ததோடு அவை ஒழுங்கான முறையில் நிரப்பப்பட்டிருக்கவில்லையென அறிவிக்கப்படுகிறது. சில படிவங்களில் போலியான ஊர், பெயர்கள் இடப்பட்டிருந்தன என கல்வி அமைச்சு தெரிவித்தது.

ஒழுங்கான ஒரு விலகல் கடிதம் கூட கையளிக்கப்பட்டிருக்கவில்லையென கல்வி அமைச்சு கூறியது. இவற்றை உண்மையில் அதிபர்கள் தான் கையளித்தனரா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிபர்களின் பிரச்சினைகளை தீர்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதோடு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைப்பது தாமதமானதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார். பொதுச்சேவை ஆணைக் குழுவின் அனுமதி தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, விலகல் கடிதம் கையளிக்க வரும் சகலருக்கும் அமைச்சு வளாகத்திற்குள் சமுகமளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததோடு அங்கு வந்திருந்த ஐந்து அதிபர்களுடன் அமைச்சின் மேலதிக செயலாளர் பேச்சு நடத்தியுள்ளார். அதிபர்களின் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அவர் இங்கு விளக்கியதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.