October

October

ஆரம்பமானது 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு!

2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை இன்றைய தினம் தவிர, எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் 1, மற்றும் 4 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

மேற்கண்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் மக்கள் போராட்டம்!

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட தமது உறவினர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருமாறுக்கோரி உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தங்களது உறவினர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடையாது எனவும், அவர்களின் சம்பளங்களும் தமக்கு கிடைக்கப்பெறுவதில்லை எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் குடும்ப செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுளள்னர்.

கடந்த அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய கடன்கள் எவற்றையும் நாம் பெறவில்லை -அமைச்சர் விஜித ஹேரத்

அரசாங்கத்தினால் எந்தவொரு விதத்திலும் புதிய கடன்கள், எந்தவொரு நாட்டில் இருந்து அல்லது நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கம் பணத்தை அச்சிட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது – ஜனாதிபதி அனுர குமார

“அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

 

“ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர். இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை.

 

எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. அன்று கூறிய அனைத்தும் பொய்யென உறுதியாகியுள்ளது.

 

எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

 

எனவே, எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள். இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

 

அறுகம்பே சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர்.

 

மூன்று வாரங்களுக்கு முன்னரே எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறையும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் அதேவேளை திட்டமிட்டவர்களையும் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

கடவுச்சீட்டில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சிங்களம் – அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

புதிய கடவுச்சீட்டில் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகள் முன்னிலையில் இருந்து பின்னிலைக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலான முடிவு சமகால அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அது கடந்த அரசாங்கத்தின் முடிவு என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், கடவுச்சீட்டு நெருக்கடி நிலைமை தொடர்பிலும், புதிதாக விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டில் பழைய கடவுச்சீட்டில் முதல் இரண்டு இடங்களில் இருந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

 

கடவுச்சீட்டு பிரச்சினை நாம் வந்து ஏற்படுத்தியது அல்ல. கடந்த அரசாங்கம் முறையாக கடவுச்சீட்டுகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவற்றை உரிய காலத்தில் அனுப்ப தவறியுள்ளனர். இந்த நேரத்தில் பழைய கடவுச்சீட்டும் போதுமான அளவு கையிருப்பில் இருக்கவில்லை. நாம் வரும் போது இதுவே நிலைமையாக இருந்தது.

 

இன்னுமொரு நிறுவனம் குறித்த டென்டருக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் போயிருந்தது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கம் சென்ற பாதையில் சென்றிருந்தால் ஒரு கடவுச்சீட்டும் இருந்திருக்காது. நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய முன்னர் கடவுச்சீட்டை பெற்ற நிறுவனத்திடம் இருந்து அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பல மாதங்களா கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தமையினால் இப்போது கேள்விகள் அதிகரித்துள்ளதால் அதிகமானவர்கள் கடவுச்சீட்டு பெற செல்கின்றனர். இதனால் மக்களிடம் அத்தியாவசிய தேவையாக இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு அலுவலகம் செல்லுமாறு கோருகின்றோம்.

 

இதேவேளை, புதிய கடவுச்சீட்டுகளை வடிவமைத்தது நாம் அல்ல. அதனை நாங்கள் மாற்றம் செய்ய போகவில்லை. அதற்குள் புகைப்படங்கள் பல உள்ளன. அவை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தமையாகும். அனைத்தையும் மாற்றினால் நெருக்கடிகளே ஏற்படும். இப்போதுள்ள தொகை 6 மாதங்களுக்கு போதுமானது. அடுத்தக் கட்டமாக புதிய கடவுச்சீட்டுகளை கொண்டுவர புதிய நிறுவனத்திற்கு விலைமனு கோரல் வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் ஏனைய சாதிகளையும் தொடர்ந்தும் நிராகரிக்கும் வெள்ளாளிய தேசியவாதம்! யாருக்கு வாக்களிப்பது? : பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல்

இன்று (26/10/2024) PAFFREL அமைப்பு என்னை பேசவிடாதது:
வழியற்ற தேர்தல் பற்றி: அங்கும், இங்குமான ஒரு விரிவுரை
சாமுவேல் இரத்தினஜீவன் ஹேபேட் ஹூல்

PAFFREL கூட்டமும் அதன் பின்னணியும்:

இன்று மத்திய கல்லூரி தந்தை செல்வா மண்டபத்தில் 9 மணிக்கு செல்வநாயகமும் தமிழ் தேசியமும் என்ற தலைப்பில் ஒரு புத்தக வெளியீடு இருக்க இருந்தது ஆனால் “திட்டமிட்ட தேர்தல் திகதி” என்ற தலைப்பில PAFFREL பேச்சுக்கு பேசச் சொல்லி கடைசி நேரத்தில் என்னை எனது யாழ் பல்கலைக்கழக நண்பன் கலாராஜ் வரக்கேட்டார் ஆனால் நான் ஏற்கனவே செல்வநாயகம் நிகழ்வுக்கு செல்வேன் என்று வாக்குக் கொடுத்தேன் எனச் சொல்ல வேறு இரு பேச்சாளர் இருப்பதாலும் நான் பிந்தி வருவதால் அவர்கள் பேசியதை தவிர்க்க “வழியற்றற்ற தேர்தல் அங்கும் இங்கும் ஒரு பேச்சு” என்ற தலைப்புக்கு சம்மதித்தோம் நானும் மினக்கட்டு பேச்சை தயார் பண்ணினேன்.

10:30 மணிக்கு கட்டாயம்வெளியேற வேண்டும் ஒன்று சம்பவ ஏற்பாட்டாளருக்கு சொல்லி இருந்தேன் அவர்கள் என்னை பத்தரைக்கு முன்பு முதல் வெளியிட்ட புத்தகத்தை பெற்று போகலாம் என்றார்கள் ஆனால் கூட்டத்துக்கு ஒழுங்குபடுத்தி இருந்த ஆளுநர் வேதநாயகன் ஐய்யா வரவில்லை அவருக்கு பதிலாக பிஷப் ஜெபநேசன் தலைமை தாங்கினார் பிரதம விருந்தினர் இந்திய தூதரக துணைத் தூதர் ஸ்ரீ சாயும் வரவில்லை.

பேச்சாளர்களும் கொப்பி அடித்த மாதிரி வேதங்களை பெண்களும் கீழ் சாதியாரும் கேட்கக்கூடாததென்ற சட்டத்திற்கு இசையும் மாதிரி “பெரியோர்களே, தாய்மாரே …” என்று தாய்மார் பெரியோர் இல்லை என்ற மாதிரியும் தாய் ஆகாத பெண்களுக்கும் ஸ்திரிகளுக்கும் அவர்கள் பேச்சு இயக்கப்படவில்லை என்ற மாதிரியும் பேசினர்.

PAFFREL urges to prevent use of public property for LG election campaigning

பத்தரைக்கு புத்தகம் கிடைக்காது வெளிக்கிட்டு; PAFFREL கூட்டத்துக்கு சென்றேன். அங்கு முன்னாள் தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர் முகமட் தன் பேச்சை முடித்து, இரண்டாவது பேச்சாளர் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கணேசலிங்கம் தன் பேச்சை முடிக்கும் தறுவாயில் நான் என் பேச்சை ஆரம்பித்தேன். இதோ என் பேச்சு:

ஜனாதிபதி முறைமையை வைத்திருக்கப் போகிறோமா? அல்லது குறித்த நாளில் தேர்தலா?

அமெரிக்காவில் எப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அமெரிக்க யாப்பில் திட்டவட்டமாக உள்ளது. அங்கு அரசாங்க தலைமைக்கானவரின் வாரிசு தெளிவாய் கூறப்பட்டுள்ளது. யாப்பின்படி நொவெம்பர் மாத முதல் திங்களுக்கு அடுத்து வரும் செவ்வாய் இரட்டை வருஷங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கு காரணம் கொங்கிரஸின் கீழ் தளத்தில் உள்ள House of Representatives இற்கு இரண்டு வருஷத்துக்கு ஒருக்கால் அங்கத்தவர்கள் தெரியப்படுவர். ஜனாதிபதி 4 வருஷத்திற்கு ஒருக்கால் தெரிவுசெய்யப்படுவார். கொங்கிரஸின் மேல் தளத்திலுள்ள Senate அங்கத்தவர்கள் 6 வருஷத்திற்கு ஒருமுறை தெரிவு செய்யப்பட்டாளும் Senate அங்கத்தவர்களில் ஒரு பகுதியினரே ஒரு தேர்தல் வருஷத்தில் தெரியப்படுவார்கள்.

இது இரட்டை வருஷம். முதல் திங்கள் 4ம் திகதி. அதற்கடுத்த செவ்வாய் 5ம் திகதி. ஆகவே 5ம் திகதி ஜநாதிபதிக்கும் House of Representatives பிரதிநிதிகளுக்கும் சில Senate பிரதிநிதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.

அமெரிக்காவில் தெரியப்படுபவர்கள் எல்லாரும் இந்த குறித்த செவ்வாயில் தெரியப்படுவார்கள்.

ஜனாதிபதி இறந்தால் அல்லது ஓடினால் அல்லது நிக்கப்பட்டால் யார் அவருடைய வாரிசு என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு 10 பேருக்க மேல்பட்ட பட்டியலில் யாப்பில் காட்டப்பட்டுள்ளது. தேர்தல் இல்ல்லாமலே புதிய ஜனாதிபதி பதவியேற்பார். வேறு நாட்களில் தேர்தலுக்கு இடமில்லை.

எப்போதென்றாலும் தேர்தல் வைக்கும் அமைப்பு பிரதானமாக இங்கிலாந்திலேயே உள்ளது. அங்கு கூட திட்டமிட்ட தேர்தல் நாள் ஒரு விசேஷ சட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்டு அதன் பிறகு அதன் படி 2015 இல் ஒரே ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த காரணம் “இந்த சட்டத்தால் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் அச்சட்டம் பக்க வாதத்தை உண்டாக்கிட்டு” என்று கூறப்பட்டது.

ஆனாலும் அதிகாரம் பரப்பப்பட்ட ஸ்கொட்லன்ட் போன்ற பாராளுமன்றங்களில் அது ரத்து செய்யப்படவில்லை. அமெரிக்க யாப்பில் உள்ளவாறு அதே சொற்களில் பாராளுமன்றம் எப்போது நியமிக்கப்பட வேண்டுமோ அதே சொற்களில் அதிகாரம் பரப்பப்பட்ட ஸ்கொட்லன்ட், வேல்ஸ் போன்ற பாராளுமன்றங்களில் இன்றும் தேர்தல் நடத்தப்படுகிறது.

பிரதம மந்திரி அரசாங்கத் தலைவராக உள்ள அமைப்பில் பிரதமர் இல்லாது போனால் இன்னும் ஒருவரை நியமிப்பது சுலபமே. இலங்கையில் உள்ள அரச தலைவரின் வாரிசு ஏற்பாட்டில் ஜனாதிபதி இல்லாமல் போனால் பிரதமர் தற்காலிகமாக பதவியேற்று பாராளுமன்றம் ஒரு ஜனாதிபதியை நியமிக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரேயடியாக ஏதாவது விபத்தில் நீக்கப்பட்டால் அல்லது ஏதும் ஒரு விதத்தில் நீக்கினால் என்ன நடக்கும் என்பது தெளிவில்லை.

இன்று ஜனாதிபதி பதவியை நீக்க வேண்டும் என்கிறோம். அதே போல திட்டமான நாளில் தேர்தல் வைக்கப்பட வேண்டும் என்றும் இந்த அவையிலும் வேறு இடங்களிலும் கருத்து முன் வைக்கப்படுகிறது. இது சரிவராது. ஏனென்றால் பிரதமர் பக்கம் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு மாறினால் உடனடியாக தேர்தல் வைக்கப்பட வேண்டும். அதே போல ஒரு கூட்டுக் கட்சிகளுடைய அரசாங்கத்தின் கூட்டு ஒப்பந்தம் பிழைத்தாலும் பெரும்பான்மை இன்றி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். குறித்த நாள் தேர்தல் ஒழுங்கு இருந்தால், அது இதைவிடாது. ஆகவே நாம் ஒன்றில் ஜனாதிபதியை வைத்திருக்க வேண்டும், அல்லது குறித்த தேர்தல் நாளை வைத்திருக்க வேண்டும். இரண்டையும் வைத்திருக்க முடியாது.

அரசியல் நேர்மை:

The March 12 Movement strongly denounces the passage of the Online Safety Bill – Transparency International Sri Lanka

அந்த தலைப்பை முடித்து அரசியல் நேர்மைக்கு வருவோம். PAFFREL முன்வைத்த சிறந்த கொள்கைகள் உடைய மார்ச் 12 அமைப்பைப் பார்ப்போம். இந்த ஒப்பந்தப்படி கையொப்பம் போடும் கட்சிகள் நேர்மையானவர்களை மட்டும் தேர்தல்களுக்கு முன்வைக்க ஒத்துக்கொள்வார்கள்.

இதன் ஸ்தாபனக் கூட்டம் பண்டாரநாயக்கா மண்டபத்தில் இடம்பெற்ற போது நானும் தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவராக அழைக்கப்பட்டிருந்தேன்.

அக்கூட்டத்துக்கு கட்சி பிரமுகரகள், இரண்டே இரண்டு பேர்தான் வந்திருந்தனர். ஒன்று UNPல் இருந்து கையொப்ப பிரச்சனையில் ஈடுபட்டு நீக்கப்பட்டவர் திஸ்ஸ அத்தநாயக்க. அதே மாதிரி இரண்டாவது மஹிந்தானந்த அலுத்கமகே என்ற சில குற்றச்சாட்டுகளின் கீழ் இருந்தவர்.

பொங்கு தமிழ் கணேசலிங்கமும் – யோகேஸ்வரி மீதான பாலியல் வல்லுறவும்:

இன்று PAFFREL ஒரு சிறுபிள்ளை வேலைக்காரியை துஷ்பிரயோகம் பண்ணி பொலிஸ் பிடித்தபோது புலிகளினால் காப்பாற்றப்பட்டவரென்று பெண்கள் இயக்கங்களால் குற்றம் சாட்டப்படும் பொங்கு தமிழ் புலிப்பிரமுகரை மேடையில் ஏற்றியுள்ளது. இதை தெரிந்தும் சிறு பிள்ளைகளுக்கெதிராக PAFFREL செய்த வன்செயல்.

இவற்றிலிருந்து PAFFREL இன் மார்ச் 12 இயக்கம் ஏன் வேர் ஊன்றவில்லை என்பதை நாம் கணிக்கலாம்.

எமது மத்தியில் ஜனநாயகம் ஒரு போலி ஆட்டம். 1990 இல் முஸ்லிம் காரரை வடக்கிலிருந்து இன அழிப்பு செய்தும் அச்செயல் பிழை என்பவருக்கு தமிழர் மத்தியில் பெரிதாக வாக்கு கிடையாது.

2005 இல் புலிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் கொடுத்து அந்தத் தேர்தலில் இருந்து எம்மை நிறுத்தி வாக்களிக்க தடை செய்தனர். அப்படி ராஜபக்சாவை ஜனாதிபதி ஆக்கி முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு வழி வகுத்தவர்களுக்கு இன்றும் எம்மத்தியில் ஆதரவு உள்ளது.

 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் ஒரே தலைவர் - News View

அந்த ராஜபக்சவோடு சேர்ந்து வாக்குகள் இல்லாமல் டக்லஸ் தேவானந்தா மந்திரி ஆகினார். காலப்போக்கில் இப்போது வாக்குகளை பள்ளிக்கூட சப்பாத்தும் கொடுத்து பெற்றுவருகிறார். குப்பை அள்ளுவதற்க்கும் சில வேலை வாய்ப்புகளுக்கும் தமது உரிமைகளை வித்து வாழ்பவர்கள் உள்ளார்கள். உண்மை பிரதிநிதிகள் உள்ள போது டக்ளஸ் போன்றவர்கள் ஊடாக அரசாங்கம் நிவாரனங்கள் கொடுப்பது ஜனநாயக விரோதம். டக்ளஸ் இந்தியாவில் பொலீசாரால் வேண்டப்பட்டவராய் உள்ளபோது அவர் இங்கு மந்திரியாக இருப்பது எப்படி? எம்மத்தியில் அவரை தடைசெய்ய எமக்கு வழியே இல்லை. இன்று. கொப்பிக்கும் சப்பாத்துக்கும் எமது ஜனநாயகத்தை கெடுத்தவர்கள் பலர்.

ஒரு வாத்தியார் மாதிரி எமது ஜனநாயகத்திற்கு புள்ளிகள் போடுவதென்றால் ஒரு பெரிய F (Fail) தான் கொடுக்கலாம்.

ஏன்? எம் சமுதாயத்தில் என்ன குற்றம் செய்தவர்களிடமிருந்தும் கை நீட்டி சலுகைகளை எடுப்போம். இதனால் வால் பிடிக்க பலர் உள்ளனர் என்பதை காட்டுகிறது. வெட்கம் என்று ஒன்று எமது மத்தியில் இல்லை. களவெடுத்து பணக்காரராய் வந்தவர்களுக்கு எம்மத்தியில் மரியாதை உண்டு. அவர்களை எம் சடங்குகளுக்கு கூப்பிட்டால், களவெடுத்ததின் ஒரு சிறிய பகுதியை கூப்பிட்ட கோவிலுக்கோ பள்ளிக்கூடத்திற்கோ தருவார்.

பல பெண்சாதிகள் உள்ள கடவுள்களை கும்பிடுவோம். புருஷன் தவம் இருக்க பெண்சாதி அனுஷியாவை மயக்கினவரை எமது, மிகப் பெரிய கடவுள் ஆக்கியுள்ளோம். ஏங்கிருந்து எம் குணங்கள் வருகின்றன என்பது தெளிவு.

ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்:

Dr. Aaruthirumurugan – My WordPress Blog

அனாதை இல்லத்திலுள்ள பெண் பிள்ளைகளை அவர்கள் குளிக்கும் போது படம் எடுத்தாலும் தலைமை விருந்தினராக எம் பல்கலைக்கழகம் கூப்பிடும். இன்றும் தமிழ்நாட்டில் 9-10 வயதுப் பிளளைகளை பிராமணர் பிடித்து ஏறி நசித்து இடுப்பை உடைத்து பிள்ளை தாச்சி ஆக்கிற விவரங்கள் பல. தமிழ் நாட்டு ஒடுக்கப்படும் சாதிகள் விழிக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நேர்மை அரசியலுக்கு எங்கே இடம்? எமது வெட்கம் எங்கே?

இதற்கு விடை நாம் என்ன காரணங்களுக்கு வாக்களிக்கிறோம் என்பதிலும் உள்ளது. அடையாளம் பார்த்தே வாக்களிக்கிறோம். மேல் சாதியினருக்கு பயம்.

 

சாதி பார்த்து அருண் சித்தார்த்தை ஒதுக்குகின்றார்கள்:

அருண் சித்தார்த் – தேசம்

இன்று (26/10/2024) இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிகளை அழைத்து எமது எம்பி எமது குரல் என்ற தலைப்பில் வேட்பாளர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் தேர்தலில் பதக்கம் சின்னத்தில் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் என்ற கட்சி இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. என்ன காரணம். அதன் தலைவர் அருண் சித்தார்த் ஒரு நளவர் சமூகத்தவர் என்பதையும் தாங்கள் இந்த வெள்ளாளியர்களால் நூற்றாண்டு காலமாக இன்றும் எவ்வாறு ஒடுக்கப்பட்டு வருகின்றோம் என்பதையும் சொல்லி வருகின்றார். அவருடைய குரலை அடைப்பதற்கு அவரை அப்புறப்படுத்துவதற்கு இந்த வெள்ளாளிய தமிழ் தேசியம் எல்லாம் செய்கின்றது. வெள்ளாளியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் ஊடக மையமும் கூட அருண் சித்தார்த்தை கூட்டி அள்ளி குப்பையில் போடவே வேலை செய்கின்றன. நீங்கள் ஒற்றுமை பற்றிப் பேசுவது வெள்ளாளர் எல்லாம் ஒற்றுமையாக வாங்கோ என்றா? கஜேந்திரகுமாரின் விக்கினேஸ்வரனின் சித்தார்த்தனின் தமிழ் தேசியத்துக்குள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடமில்லை. முஸ்லீம் களுக்கு இடமில்லை. கிறிஸ்தவர்களுக்கு இடமில்லை. செல்வம் அடைக்கலநாதன் சைவ வெள்ளாளியர்களுக்கு சேவகம் செய்யாவிட்டால் கிறிஸ்தவர்களுக்கு குரல் கொடுத்தால் அவரும் விரட்டப்பட்டு விடுவார்.

நாம் எவ்வாறு வாக்களிக்கின்றோம்:

நான் என் பொறியியல் மாணவர்களுக்கு நெறிமுறைகள் பற்றியும் படிபிப்பது உண்டு. தேர்தல் பிரச்சாரம் மாதிரியே எமது சேவைகளை விற்கும் பிரச்சாரமும். நான் உபயோகிக்கும் புஸ்தகங்களில் ஒன்று North, Shaw, Grossmann, Lipsitz ஆகியவர்களால் எழுதப்பட்டது. பல பல்கலைக்கழகங்களாலும் உபயோகிக்கப்படும் புஸ்தகம். அவர்கள் சொல்வது நாம் வாக்களிக்கும் போது ஐந்து பிரதானமான காரணங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று. இவற்றில் மிக பிரதானமானதிலிருந்து வரிசைப்படுத்தினால்:

முதலாவது சமூக அடையாளம்: இதனுள் இனம், சொந்தம் சாதி, அந்தஸ்து, ஊர் அடங்கும். தமிழனும் சிங்களவனும் எம் வாக்கை கேட்டால் தமிழனுக்கே போடுவோம். மச்சான் அல்லது ஊர்க்காரன் கேட்டால் அவருக்கே வாக்கைப் போடுவோம்.

இரண்டாவது கட்சி அடையாளம்: வழக்கமாக எமது குடும்பங்களுடன் ஒரு கட்சி அடையாளப்படுத்தப்படும். அப்பா யாருக்கு போட்டாரோ, அதே கட்சிக்கு நாமும் போடுவோம்.

மூன்றாவதாக தேசிய பொருளாதார நிலை: இதுதான் காரணங்களில் நல்லதொன்று.

நான்காவதாக கொள்கைகள்: இதுவும் அடையாளத்துடன் நன்றாக சம்பந்தப்படும் அதிகாரப் பரவலாக்கல் செய்வாரா? தொழிற்ச்சாலைகள் எங்கள் ஊரில் போடுவார்களா? எங்கள் ரோட்டை திருத்துவாரா?

ஐந்தாவதாக தோற்றம், பழக்கவழக்கம் போன்றவை: இதுதான் அழகான நடிகர்களை கட்சிகள் முன்வைப்பது. ஆனால் இதுவும் ஒரு விதத்தில் அடையாளத்துடன் சம்பந்தப்பட்டது. உதாரணமாக காகத்துக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்றுமாதிரி பொதுவாக நம்மை போன்றவர்களையே அழகு என்று நாம் கருதுகிறோம். வெற்றிலை சப்பி காறித் துப்புகிறவர்களுக்கு எமது வாக்கை கொடுக்க தயங்குவோம்.

எனது அனுபவத்திலிருந்து:

எனது சொந்த அனுபவத்தில் இருந்து ஒரு சில காரியங்களை சொல்ல விடுங்கள். எனது அடையாளம் என்ன? தமிழரசு கட்சியிலிருந்தும் எனது குடும்பத்திலிருநதும் என் அடையாளம் வருகின்றது. எனது. பாட்டன் பெயர் சாமுவேல் சங்கரப்பிள்ளை சோமசுந்தரம். இவர் பட்டப்பெயர் மாவிட்டபுரம் கோயில் கொடிமர சங்கரர். இவர் கிறிஸ்தவனாக மாற முன்பு கோவிலில் கொடியேற்றம் உரிமை உடையவர்.

தந்தை செல்வாவினுடைய பெண்சாதிப் பக்க அளவெட்டி மருமகளை முடித்தது எனது தமிழரசு கட்சியைச் சேர்ந்த மாமா பீட்டர் சோமசுந்தரம். கதிரவேற்பிள்ளை, வன்னியசிங்கம், தர்மலிங்கம், தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் ஆகிய MP மாரும் சோமசுந்தரத்தின் ஊடான என் சொந்தக்காரர். இதே போலவே நல்லூர் MP இரும்பு மனிதன் நாகநாதனின் உண்மையான பெயர் ஹென்ஸ்மன். ஹென்ஸ்மன் என்பவர் 1865 இல் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்ட முதல் தமிழ் அங்கிலிக்கன் போதகர் (பாரம்பரியம் தெரியாமல் குரங்கின் கையில் பூமாலை என்றமாதிரி நல்லூர் பரி. யாக்கோபு ஆலயத்தை நடத்துபவர்கள் சவக்காளையில் இடமில்லை என்று சொல்லி அங்குள்ள 5-6 ஹென்ஸ்மன் பெயரிலுள்ள கல்லறைகளை இடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்). அரசியலுக்காக வேண்டி பாரம்பரியமுள்ள அப்பெயரை கைவிட்டவர் MP நாகநாதன். அவர் குடும்பமும் இரண்டாவதாக 1866 இல் அபிஷேகம் பண்ணப்பட்ட எலைஜா ஹூல் இன் குடும்பமும் ஒன்றிற்குள் ஒன்று கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள்.

இப்படி அடையாளம் இருக்கிறபோது வாலிபனாக நான் என் மாமா மறியலுக்கு போய் தேர்தல் கேட்ட போது “வீட்டுக்கு நேரே புள்ளடி” என்று கத்தி திரிந்தது எனது ஒரு காலப் பழக்கம்.

அதே போலவே சத்தியாக்கிரக காலத்தில் வவுனியாவிக்கு சிங்களவர் வந்து எம்மை அடிக்கப் போகிறார்கள் என்று கதை வர நாங்கள் “தமிழருக்கு ஜே“ என்று கத்திக்கொண்று எமது வாலிபச் சங்கத் தலைவர் யோகேந்திரன் அரசரட்ணத்தின் பின் செம்மணி ரோட்டால் லொரி லொரியாக வவுனியா செல்பவர்களை பின்தொடர்ந்த காலம் அது. அந்த வேர்கள் அழிந்துபோயினது ஏப்படி?

நான் பெரிய உற்சாகத்துடன், ஊக்கத்துடன், அமெரிக்காவிலிருந்து என் பிளைளைகளுக்கு வேர் கொடுக்க வேண்டும், ஏதும் சேவை செய்யலாம், என்று திரும்பி வந்தேன். எனக்கோ என் மனைவிக்கோ யாழ்ப்பாணத்தில் இடம் கிடைக்கவில்லை.

இறுதியில் பேராதனையில் சிரேஷ்ட மின் பொறியியல் பேராசிரியராக இருந்த போது எனக்கு பேரவை வாக்களித்து யாழ் துணைவேந்தராகினேன். அப்போதும் எனக்கு வாக்களித்த இருவர் நான் பரமேஸ்வரா கோவிலில் கும்பிட்டு மேள தாளங்களுடன் வந்தே VC கதிரையில் உட்கார வேணடும். ஏனென்றால் அதுவே பாரம்பரியம் என்றனர். அதனுடன் என் உச்சாகம் குறைந்தது. சம்மதித்திருந்தால் என் சரித்திரம் மாறி இருக்கலாம். அந்த யோசனையே பாவம்.

துரோகி என்றார்கள். கிறிஸ்தவன் என்றார்கள். பல்கலைகழக வாசலில் என் கொடும்பாவியை எரித்தார்கள். கொலை மிரட்டு வந்தபோது விட்டு ஓடினேன். துணை வேந்தராக இருந்ந சின்னக்காலததையும் துணை வேந்தர் பலகையில் போட மறுத்தனர். நீதி மன்றம் (USAB) கட்ளையிட பலகையை திருத்த வேணடும் என்று சொல்லி வசந்தி அரசரட்ணம் இறக்கிவிட்டார். (இப்போதைய துணைவேந்தர் சிறிசற்குணராஜா வந்து தான் என் பெயருடன் அப்பலகை திரும்பவும் ஏற்றப்பட்டது.)

உரிமைகளின் உண்மைநிலை விளங்கியது. எனினும் திரும்பி வந்தேன். தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்த சி. யோகேஸ்வரன் சைவர்கள் மட்டும் தான் தமிழர். கிறிஸ்தவர்கள் தமிழ் பேசுகிறவர்கள் மட்டுமே என்று ஒரு சைவ மகாநாட்டில் கதறினார். கிறிஸ்தவர்கள் தமிழ் பேசுகிறவர்களே ஒழிய தமிழர் இல்லை என்றார். அவருடன் தமிழரசுக் கட்சியின் வடமாகாண முதலமைச்சர் விக்நேஸ்வரன் மேடையில் துணை நிற்க யோகேஸ்வரன் தந்தை செல்வா தமிழன் இல்லையாம், தமிழ் பேசியவர் மட்டும் தானாம் என்ற மாதிரி கூறியது பத்திரிகைகளிலும் 2018 இல் வந்தது. அப்படிப்பட்ட மனிதனுக்கு 2020 இல் கட்சியின் வேட்புமனு கொடுக்கப்பட்டது. ஆனால் கட்சி அடிச்சு துரத்த வேண்டியவரை தம் வாக்கு மூலத்தை உபயோகித்து கிழக்கு மாகாண மக்கள் துரத்திவிட்டார்கள்.

தமிழரசு – மதம் – சாதி:

இதே போலவே, இம்மானுவேல் ஆர்னோல்டை யாழ்ப்பாண மேயராக்கும் போது இங்கே எம்முடன் இருக்கும் சீ வீ கே சிவஞானம் ஐயா அவர்கள் ஆர்னோல்டை கிரிஸ்தவறென்று சொல்லி எதிர்த்தாராம். ஐயா, இது தவறென்றால் சொல்லுங்கள்.

கட்சி கூட்டமொன்றில் ஆர்னோல்டை கிறிஸ்தவ சக்கிலி என்று ஒருவர் பேசினாராம். ஆர்னோல்ட் அவரை எழும்பி அடித்தாராம் பொலீஸ் ஆர்னோல்டை பிடித்துச் சென்றது பத்திரிகைகளில் வந்தது. அதை தொடர்ந்து கட்சி ஒரு குற்ற நடவடிக்கையும் எடுத்தது எனக்கு தெரியாது. ராஜபக்சாக்கலின் வழிகாட்டலில் கட்சி ஒரு குற்றத்திற்கும் தண்டனை கொடுக்காத இன்றுள்ள ஒரு காவாலிக் கூட்டம் ஆகிவிட்டது.

தமிழரசுக் கட்சியில் அகிம்சை கேள்விக்குள்ளானது:

தமிழரசுக் கட்சி வழக்கு ஜூலை 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு... - Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

இப்படியெல்லாம் சக்கிலி என்று கட்சியில் மக்கள் பேசும் போது சில கடுமையான வார்த்தைகள் உபயோகித்தால் தான் சில காரியங்களை விளக்கலாம். அகிம்சை கட்சி என்று நாம் சொன்னாலும் இந்த சண்டித்தனம் செல்வநாயகத்தின் காலத்திலேயே இருந்தது. சத்தியாக்கிரக மூட்டம் கச்சேரி-நலலூர் ரோட்டால் கச்சேரியை நோக்கி சில வல்வெட்டித்துறையார் பீரங்கி ஒன்றை தள்ளிக்கொண்று போவதை நான் கண்டிருக்கிறேன் (அது சுடப்பட்டதை பற்றி ஒன்றும் நான் கேள்ளவிப்படவில்லை).

மேலும் நடு-அறுபதாம் ஆண்டுகளில் மாநகர சபை தேர்தலின் போது அரியாலையில் வாக்கு தமிழரசு கட்சிக்குத்தான் கிடைக்கிறது. அங்கு பலர் பறையர் சாதியை அல்லது சிவ்விய சாதியை சேர்ந்தவர்கள். ஆனால் அந்த நேரம் தமிழ் கொங்கிரஸ்காரராக இருக்க வேண்டும், படித்த பறையர் சாதி வாத்தியாரை நிலைநிறுத்த தமிழரசுக் கட்சியின் நிலை அபாயம் ஆகியது. உடனடியாக காவாலிகளை பிடித்து அந்த வாத்தியாரை ரோட்டில் வைத்து அடித்து வேட்டியை உரித்து நிர்வாணமாக்கினார்கள். அந்த வாத்தியாரும் மாணவராகிய எம்மை கண்ட பாட்டுக்கு அடிக்கிறதாலும், பெண்சாதியை அடிக்க அந்த அம்மையார் தனது சபைக் குருவானவரின் வீடடிற்கு ஓடியிருந்ததாலும் அந்த நேரத்தில் அந்த வாத்தியாரககு எதிரான காட்டுமிராண்டிச் செயல் பிழையாகப் படவில்லை. சந்தோஷப்படுத்தியதென்று கூடச் சொல்லலாம். தமிழரசுக் கட்சி ஜெயித்தது. ஆனால் ஜெயித்ததில் அதன் அஹிம்சை கொள்கைகள் தோல்வி கண்டன.

இந்தக் கட்சி அடையாளத்தை அழித்த இன்னும் ஒன்று, வன்முறைகளுக்கு ஆதரவாக கட்சியில் பலர் உள்ளது. முஸ்லிம்களை பகைக்கிற பலர் முஸ்லிம்களுக்கு நாம் செய்தது பிழை என்று கூறியதற்கு சுமந்திரனின் ஆதரவு குறைகிறது. சுமந்திரனுக்கு எதிராக இன்று வன்முறை மொழி பாவிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் உள்ளவர்களும் அதனைச் செய்கிறார்கள்.

அடையாளம் புடுங்கி எறியப்படுகிறது. என் கொடும்பாவியை பல்கலைக்கழக வாசலில் 2006 இல் எரித்தார்கள். என் பிள்ளைகள் ஊருக்கு கொஞ்சம் என்றாலும் பாசம் உண்டாக்கலாம் என்று கொண்டு வந்தேன். அவர்களோ இப்போது யாழ்ப்பாணம் வருவதற்கு மறுக்கிறார்கள்: “அப்பா அவர்கள் உங்களை வேண்டாம் என்று கூறும்போது ஏன் அங்கே நிற்கிறீர்கள்?” என்று என்னைக் கேட்கிறார்கள். நானும் என் பெண்சாதியும் தனித்துப்போனோம்.

யாருக்கு வாக்களிப்பது?

அடுத்த தலைப்பாக வாக்கு போடும் விதம். முதல் விரும்பிய கட்சிக்கும் பின் அந்தக் கட்சியில் விரும்பும் ஓருவருக்கோ, இருவருக்கோ, மூவருக்கோ உங்களது தெரிவை போட வேண்டும். ஒருவருக்கும் போடாமலும் விடலாம். மூவருக்கும் கூட போடப்படாது. பிரச்சனை என்னவென்றால் சிலருக்கு பிரியமானவர்கள் இப்போ வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். ஆனால் எம்மை எமக்கு விருப்பமில்லதவர்களுக்கு எம் வாக்கை போட வில்லங்கப்படுத்துவது ஜனநாயக் கொலை. இது ஜனநாயகம் இல்லை.

வீணை / சைக்கிள் / மான் / மாம்பழம் / ஊசி / வெங்காயங்களுக்கு வாக்களிப்பதா?

எந்த ஒரு கட்சிக்கு எமது வாக்கை போடுவது என்பது ஒரு பெரிய கேள்வி. இன்று தெரிந்தெடுக்க பெரிய திறமையான தெரிவுகள் இல்லை. பல கட்சிகள் இரத்தக் கைகள் உடையன. இவற்றில் EPDP ஒரு மோசமானது. கொலை காரக் கும்பல் என்கிறேன்.

ஜூலாய் 2000 ஆம் ஆண்டு இரு TNA ஊழியர்களை வாளால் வெட்டி கொலை செய்தார்கள் இவர்களில் நெப்போலியன் என்ற செபஸ்டியான் ரமேஷ் மோசமானவன். அவன் உடன் சேர்ந்தவர்கள் நடராஜா மதனராஜா EPDP MP. மற்றும் ஜீவன் தியாகராஜா நவசியாயம், கருணாமூர்த்தி என்பவர்களும் பொலீசாரால் பிடிக்கப்பட்டார்கள். நூதனமானது என்னவென்றால் இது கொலைகார வழக்காக இருந்தும் வவுனியா நீதிமன்றத்திற்கு கொண்டு போய் அங்கு பிணை கொடுக்கப்பட்டது. அதில் நெப்போலியன் உடனடியாக லண்டனுக்கு ஓடி விட்டார். அங்கு அதிக பணத்தோடு கடை போட்டிருக்கிறாராம். அச்சம்பவத்தில் சிவாஜிலிங்கம் மாவை சேனாதிராஜா இருவரும் படுகாயப்பட்டனர்.

எனது பாட்டன் சோமசுந்தரம் ஊடாக சொந்தக்காரராகிய போஜன் குடும்பத்தினர் மற்றும் BBC நிருபர் நிமலராஜன் ஆகியவர்களின் கொலைகளிலும் EPDP குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நான் பொறியியல் பீடத்தை பொறுப்பாளராக இருந்து கட்டிக்கொண்டிருந்த நாட்களில் 2011 ஆம் ஆண்டு என்மேல் பொய்க் குற்றங்கள் சாட்டி கூலிக்கார போலீஸ்காரரையும் பிடித்து என் மேல் வழக்கு தொடர்ந்தனர். நாட்டை விட்டு ஓடினேன். அப்போதைய EPDP கட்சியின் தேர்தல்பிரச்சார கூட்டங்களில் டக்ளஸ் தேவானந்தாவுடன் மேடை ஏறும் ஊர்காவல்துறை மஜிஸ்ட்ரேட் மேடையில் தோன்றுவதை நான் கண்டுள்ளேன். அந்த மஜிஸ்ட்ரேட்டே எனக்கு ஒரு பிடி ஆணை விடுத்திருந்தார். அப்படி நீதித்துறையை கெடுத்தவர்.

நான் ஓடி அமெரிக்காவில், இருந்தபோது டக்ளஸ் என் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்துக்கு உங்கள் பேராசிரியர் இலங்கையில் பொலீசாரிடம் இருந்து தப்பி உங்ககள் பல்கலைக்கழகத்தில் ஒளித்திருப்பது தெரியுமா எனக் கேட்டார். அதற்குப் பதிலாக பல்கலைக்கழகம் நாம் அமெரிக்காவில் கருத்து வேறுபாடுகளை கொண்டாடுவது உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றும், இந்தியாவில் பொலீசாரால் வேண்டப்படும் நீங்களும் கருத்து வேறுபாடுகளின் அருமையை ஏற்பீர்கள் என்றும் கூறினர். தமது கடிதத்தை பல்கலைக்கழகம் எனக்கு கொப்பியிட்ட போதே எனக்கு தெரிய வந்தது.

பின்பு ஓகஸ்ட் 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் வர நான் உடனடியாக திரும்பினேன். புதிய அரசாங்கத்தின் கீழ் டக்ளசிற்கு மஜிஸ்ட்ரேட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை. பிடி ஆணை எனக்கெதிராக இருந்ததால், விமானத்துறையில் இருந்து நேரடியாக புதிய மஜிஸ்ட்ரேட் முன் சரணடைந்து பிணையில் வெளி வந்தேன். இதை தொடர்ந்து பொலீசார் திரும்பத் திரும்ப 2, 3 வருஷங்களாக மாதத்திற்கு ஒருமுறை போல் தாங்கள் விசாரிக்கிறார்கள், தாங்கள் விசாரிக்கிறார்கள் என்று கூறிக் கடத்த, மஜிஸ்ட்ரேட் களைத்துப்போய் தான் விசாரணை நடக்கிறது என்று நம்பவில்லை என்று சொல்லி வழக்கை தள்ளி விட்டார். ஆதாரம் கிடைத்தால் திரும்பி வழக்கை போடுங்கள் என்றார். ஆறு வருஷங்கள் ஆகிவிட்டன, EPDP இன் முறைப்பாட்டிற்கு கூலிக்கார பொலீசாரிடம் ஆதாரங்கள் இன்றும் கிடைத்ததாக தெரியவில்லை. பொலீசாரை தனது சொந்த கூலிக்காரராக்கிய குற்றம் EPDP உடையது. இந்த டக்ளஸ்க்கு ஏன் மரியாதை? ஏன் எமதுவாக்கு?

அப்படி என்றால் எந்த கட்சிக்கு எமது வாக்கு? என்னை பொறுத்தவரையில் மலைநாட்டுத் தமிழரை அறுத்துவர்கள், தமிழர்க்கு பொட்டு போட்டவர்கள், அவர்களை எதிர்த்தவர்களை தமது இந்திய முகாம்களில் வைத்து எண்ணையில் பொரித்தவர்கள் ராஜபக்சா-ரணிலுடன் சேர்ந்து துரோகிகளாக எமது ஜனநாயக உரிமைகளையும் உயிர்களையும் பறித்தவர்கள் எமக்கு வேண்டாம்.

திசைகாட்டி அல்லது வீடு தான் எமது தெரிவாக அமைய வேண்டும்:

Anura meets Northern leaders

ஜனாதிபதி தேர்தலில் எனது வாக்கு அனுர குமார திசாநாயக்கவுக்கே போனது. அந்த நேரத்தில் அவர் ஒரு தனியாள். இப்போது கட்சிக்கு வாக்கு போட வேண்டும். அது மட்டும் இல்லை, அக்கட்சியில் கூடியது மூவருக்கு போட வேண்டும். அப்படி பார்த்தால் தமிழரசு கட்சியில் இளங்கோவன், சுமந்திரன், சயந்தன் போன்றவர்கள் இருக்கிறார்கள். கட்சி பிழையான வழியில் போனாலும் காப்பாற்ற தந்தை செல்வாவின் பெயர் உள்ளது. அவரது பேரன் இளங்கோவன் கட்சியை மன்னித்தால் நாங்களும் மன்னிக்கலாம்.

அதே வேளையில் NPP க்கு வாக்கை செலுத்தினால் புதிய அரசியலை உண்டாக்க, ஆரம்பிக்க, ஒரு நல்ல சந்தர்ப்பம். அவர்கள் கள்ளரையும் கெட்டவர்களையும் வேட்பாளராக போடாதது NPP ஐ பற்றிய ஒரு நல்லதொரு அறிகுறி.

கட்சி தெரிவை பொறுத்தவரை தமிழரசு கட்சியும் NPP மட்டுமே எமக்குள்ளன. இவற்றிற்கிடையில் ஒன்றை தெரிந்து பின்பு தெரியப்பட்ட கட்சியின் வேட்பாளர் மூவருக்கு உங்கள் வாக்கை போடுங்கள்.

தேர்வு உங்கள் கையில். நன்றி.

 

 

சாவகச்சேரி நீதிமன்றத்தின் மீது தாக்குதல் எச்சரிக்கை !

யாழ் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

அனுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை தயாரிக்க என்னை பாராளுமன்றம் அனுப்புங்கள்- உதய கம்மன்பில

எதிர்கால பாராளுமன்றத்திற்கு மக்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை தயாரித்தல் மற்றும் முன்வைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தாம் மேற்கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குழு அறிக்கைகள் தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை 28) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தேசத்திடம் மன்னிப்பு கோருவதற்கும், ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரணில் விக்ரமசிங்க, ரிஷாத் பதுர்தீன் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உருவாக்கி அந்தத் திறமையை தான் வெளிப்படுத்தியுள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு மிகப்பெரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த கம்மன்பில, அனுர ஜனாதிபதி என்பதாலேயே அவர் கோமாவில் இருந்து விழித்துக்கொண்டார் என்றார்.

தமிழரசுக் கட்சியில் யாருமே மதுபானக்கடைக்கான அனுமதியை பெறவில்லை என்பதை சுமந்திரனால் உறுதிப்படுத்த முடியுமா..? – கீதநாத் காசிலிங்கம் சவால்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசன்சை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்த முடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் எம்.ஏ.சுமந்திரனிடம் சவால் விடுத்துள்ளார்.

 

கட்சியில் சிலர் பார் லைசனை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

 

“பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை எனச் சத்தியக் கடதாசி ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தேன். அதேபோல் என்னுடைய சக வேட்பாளர்கள் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்தியக் கடதாசியை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

 

ஏனென்றால் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற பார் லைசன்ஸ் விவகாரத்தில் யார், யார் இந்த பார் லைசன்ஸ்சை பெற்றுள்ளார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்.

 

மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இவர்களை நாடாளுமன்றம் அனுப்பியது சாராயக் கடைகளை வாங்குவதற்காக அல்ல.

 

ஆகவே, யார் யார் வாங்கினார்கள் என்பது வாக்களித்த மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய புதிய ஆட்சியாளர்கள் கூட அதனை வெளிப்படுத்தத் தயங்குகின்ற நிலைமைதான் உள்ளது.

 

இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் பார் லைசன்ஸ் வாங்கவில்லை என சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும்.

 

ஆனால், இதுவரைக்கும் எவரும் அப்படியான சத்தியக் கடதாசியை கொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சாராயக் கடை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்.

 

எங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரைப் பார்த்துத்தான் நாங்களும் சில விடயங்களை அதிலும் அவருடைய உரைகளில்தான் படித்துக் கொள்கின்றோம்.

 

எனவே, நாம் கேட்டது போல அவர் முன்மாதிரியாக ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும். சாராயக் கடை சம்பந்தமாக உண்மை தெரிய வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தவர் அவர்.

 

அவ்வாறு முதலில் அவரே ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியக் கடதாசியைக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை முன்மாதிரியாகச் செய்யுங்கள் என சுமந்திரனை மரியாதையுடன் கேட்கின்றோம்.

தொடரும் கடவுச்சீட்டு வரிசை – அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்துள்ள கோரிக்கை!

அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கடந்த வாரம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 40 ஆயிரம் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் இரண்டு கட்டங்களாக இறக்குமதி செய்துள்ளது.

 

அதன் பிரகாரம் ஏற்கனவே, பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவர்களுக்கு கடவுச்சீட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

 

என்றாலும், குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் தொடர்ந்து அதிகளவான மக்கள் வருவதால் வரிசைகள் இன்னமும் முடிவடையவில்லை.

 

இதுதொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ”கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. புதிய முறையின் கீழ் அத்தியாவசியமான அனைத்து நபர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படும்.

 

குறிப்பிட்ட அளவான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளன. எதிர்காலத்தில் சில இலட்சம் கடவுச்சீட்டுகள் பெறப்படும். இதனால் அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் இக்காலப்பகுதியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லாதவர்கள் பெற வேண்டாம்.” எனவும் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.