April

April

“சிலர் கட்சியைக் காட்டிக்கொடுத்தனர். சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர். வரலாறுகளை மறக்கக்கூடாது.” – ஜீவன் தொண்டமான்

“சிலர் கட்சியைக் காட்டிக்கொடுத்தனர். சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர். வரலாறுகளை மறக்கக்கூடாது.” என   இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சீ.எல்.எஃப். வளாகத்தில் இன்று (18.04.2021) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறி வருகிறது. அத்துடன், பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை யாரும் நிராகரிக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று தெரிவித்துள்ள அவர், நுவரெலியா மாவட்டத்திற்கு உரித்தான வகையில் கொட்டகலையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, சிலர் கட்சியைக் காட்டிக்கொடுத்தனர் என்பதுடன் சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர் என்றும் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான், பழையவைகளை மறக்கக் கூடாது எனவும் வரலாறும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“அரசவளங்களை பாதுகாப்போம் என தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் தற்போது அரசவளங்களை விற்பனை செய்துவருகின்றது.” – லக்ஸ்மன் கிரியல்ல குற்றச்சாட்டு !

“அரசவளங்களை பாதுகாப்போம் என தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் தற்போது அரசவளங்களை விற்பனை செய்துவருகின்றது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு பதில் அளிக்கையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உலகின் முக்கியமான நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளதால் இன்னொரு நாடு திருகோணமலை துறைமுகத்தை கோரும் நிலையேற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
வேறு எந்த அரசாங்கமும் வெளிநாடுகள் இலங்கையில் நிரந்தரமாக கால்பதிப்பதற்கு அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அதேவேளை அந்த அரசாங்கங்கள் உலக நாடுகளுடன் சிறந்த உறவுகளை பேணிண எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 100,  150வருடங்கள் நிரந்தரமாக கால்பதிப்பதற்கான நிலையை வெளிநாடுகள் உருவாக்கியுள்ளன என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த 25 வருடங்களிற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகநகரம் மூலம் இலங்கைக்கு எந்த வருமானமும் கிடைக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இடிக்கப்பட்ட யாழ்.பல்கலைகழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள ஏப்ரல் 23ஆம் திகதி திறப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் |  Virakesari.lk

எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.

பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

“பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.” – நீதியமைச்சர் அலி சப்ரி

பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் குழுக்களை அடையாளப்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன.” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ள போது ,
சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் சிலகுழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன எனவும்  இந்த தவறான தகவல்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர்,  இந்த குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்களை உருவாக்கிவருவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா,  சிங்கப்பூர்,  மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் இலங்கையின் சூழமைவிற்கு பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுக்கிறார்கள்.” – இம்ரான் மஹ்ரூப்

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுத்தே அந்த அதிருப்தியை மறைக்கிறார்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்றைய தினம்(18.04.2021) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிங்கள அமைப்புக்கள் எதனையும் தடைசெய்யாது முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்துள்ளனர். ரமழான் மாதத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சால் முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாயலில் நூறு பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது. நோன்பு கஞ்சி பகிரமுடியாது என அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கடை வீதிகளிலும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கில் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடியதை நாம் கண்டோம். மதுபான சாலைகளில் பெரிய கூட்டமே கூடி இருந்தது. ஆகவே புத்தாண்டில் தடைகளை விதிக்காத அரசு ஏன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தடைகளை விதிக்க வேண்டும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் கொரோனா தொற்றுவது போன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என்றே நாம் கேட்கின்றோம். இதற்கு பின்னாலும் பெரிய இனவாத நிகழ்ச்சிநிரல் உள்ளது.

இந்த காலத்தில் இடம்பெறும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதே இந்த அரசின் நோக்கம். மே மாதத்தில் கொரோனாவின் மற்றொரு அலை உருவாக்கலாம் என இராணுவ தளபதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

ஆகவே மே மாதத்தில் இடம்பெறும் பெருநாள் வியாபாரத்தை முடக்க அரசு திடடமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இதனால் இப்போது எழுகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையால் முஸ்லிம் வியாபாரிகள் பலரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கவே அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களை பழிவாங்கவே இந்த அரசு முயற்சிக்கிறது. ஆனால் காபட் வீதி மற்றும் பாலங்களில் இருந்து வரும் கொமிஸ்களுக்காக சிலர் பசில் வந்தால் சரியாகும் நாமல் வந்தால் சரியாகும் என ஊருக்குள் கூறி திரிவது வேடிக்கையானது எனவும் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் !

பெண்களை இழிவாக பேசியதாக தெரிவித்தும் இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக மன்னிப்புக்கோர  வேண்டும் எனக் கோரியும்  `ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில்  மகளிர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கி பேசிய சமயம் பெண்களை  இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை பரிமாறியதாக அவர் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பல்வேறு மலையக அமைப்புகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் இவ் விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதனால் ஜீவன் தொண்டமான்   மலையக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு  கேட்க வேண்டும் எனக் கோரியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

“எமது நாட்டினை ஹொங்கொங் போன்று ஆள முடியாது.” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

எமது நாட்டினை ஹொங்கொங் போன்று ஆள முடியாது. எனவும் முதலீட்டாளர் யார் என்பது முக்கியமல்ல. நிலம் தொடர்பிலான சட்டம் அனைவருக்கும், எல்லா இடங்களுக்கும் பொருந்தும் எனவும் தேசிய மரபுரிமைகள், கலைக்கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் விதுர விக்ரமநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஹொங்கொங் போன்ற தனி நிர்வாக பிரிவை நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

முதலீட்டாளர் யார் என்பது முக்கியமல்ல. நிலம் தொடர்பிலான சட்டம் அனைவருக்கும், எல்லா இடங்களுக்கும் பொருந்தும். அத்துடன் இந்த நடவடிக்கைகள் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டமையினால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் உத்வேகத்தை அளிக்குமென்று நம்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தால் இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாகப் போகிறது.” – ஓமல்பே சோபித தேரர்

“இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தால் இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாக்கப் போகிறது.” என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவிலுள்ள போதிராஜா தர்ம நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாங்கள் அனைவரும் முப்பது வருடங்களாக கடுமையான சோகத்தில் இருந்தோம். புலிகளுடனான போராட்டம் முப்பது வருடத்துடன் நிறைவடைந்தது. உண்மையில், இலங்கை மக்களாகிய நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்.

ஆனால் தற்போது எமது வளங்கள் ஏனைய மூலோபாய வழிமுறைகள் ஊடாக கைப்பற்ற முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. நாங்கள் அதை ஒரு துறைமுக நகரமாகப் பார்க்கிறோம். மேலும் நவீன சீன காலனி துறைமுக நகரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் அதைத் தொடர முன்வைக்கப்பட்ட திட்டங்களையும் நாங்கள் பார்த்தோம்.

மேலும் புதிய சட்டத்தின் கீழ் போர்ட் சிட்டி இலங்கைக்கு சொந்தமானது அல்ல என்பதுடன் இதனை ஒரு சீன மாகாணமாகவே பார்க்கின்றோம். இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாக்கப் போகிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த துறைமுக நகர திட்டத்தின் கீழ் புதிய சீன காலனித்துவ காலனி நிறுவப்பட உள்ளது.

மேலும் புதிய சீன காலனியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த துறைமுக நகரம், நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்கு முகவர்கள் யாரும் இல்லை. அந்த நிலத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான பிரதிநிதித்துவமோ கட்டுப்பாடோ இல்லை.

ஆகவே உருவாக்கப்படவுள்ள புதிய சீன காலனி நிராகரிக்கப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நிறுவப்படக்கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது – பொலிஸார் எச்சரிக்கை !

“அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள்.” என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்,

“நாவலடியில் உள்ள நினைவிடத்தில் எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அனுஷ்டித்து வருகின்றோம்.

இந்நிலையில், அன்னையின் நினைவிடத்துக்குச் சென்று அனுஷ்டித்தால் கைதுசெய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரைப் புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது கவலைக்குரியதாகும். இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் என்பதுடன் அவரது இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எவ்வித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர் துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்தப் போராட்டத்தினையும் நடத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களது குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம். உலகம் எங்கும் இன்று அன்னைக்கு நினைவு தினம் நடத்தப்பட்டுவரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மியன்மார் இராணுவம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை !

மியன்மாரில்  இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் திகதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு இராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் சிறை வைத்துள்ள இராணுவம் நாட்டில் ஓராண்டுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

மியான்மரில் 23 ஆயிரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை - ராணுவம்  நடவடிக்கை || Tamil News Myanmar junta pardons and releases more than 23,000  prisoners

இதற்கிடையில் இராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இராணுவம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இரும்புக்கரம் கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. ஆனாலும் இராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் மியன்மாரின் திங்கியன் புத்தாண்டையொட்டி 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இராணுவம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது.

இதுகுறித்து இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

,“இராணுவ தலைவர் ஆங் ஹேலிங் 173 வெளிநாட்டவர்கள் உள்பட 23 ஆயிரத்து 47 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளதாகவும், மேலும் பலருக்கு தண்டனை காலத்தை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் விடுதலை செய்யப்பட்டுள்ள 23 ஆயிரம் கைதிகளில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்ட ஜனநாயக ஆர்வலர்களும் அடங்குவார்களா என்கிற தகவல் வெளியாகவில்லை.‌

மியன்மாரை பொறுத்தவரையில் மிக முக்கியமான பொது விடுமுறைகளின்போது கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் அங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிறகு 2-வது முறையாக மிகப்பெரிய எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் திகதி ஒற்றுமை தினத்தின்போது சுமார் 23 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.