March

March

முடிவுக்கு வருகிறது அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரத போராட்டம் !

பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 17 வது நாளாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

பிரித்தானிய அரசிடம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என தெரிவித்து கடந்த 17 நாட்களாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவரின் கோரிக்கைகளில் ஒன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே உண்ணாவிரதத்தை வெற்றியுடன் முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பிகை செல்வக்குமாரின் போராட்டம் இன்று பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 3.00 முதல் 5.00 மணியளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை” – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் !

“அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை” என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள அவர் அந்தக்காணொளியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை மிக உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்லத் தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் பெருமை அடைகின்றார் எனவும், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் தன்னுடன் அடிக்கடி கதைக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது வீண்போகவில்லை என்றும் பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிரான தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு உத்தரவு !

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் பிரித்தானியாவின் உட்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் இதனால் விடுதலைப் புலிக்ள அமைப்பு மீதான தடை நீக்கப்படலாம் எனவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1978ஆம் ஆண்டு இலங்கையில் தோற்றம் பெற்ற இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலைக் குண்டுதாரிகளை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை 2001இல் பிரித்தானியா தடை செய்தது. எனினும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த தடைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், பிரித்தானியாவில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டுப் பயங்கரவாத ஆய்வு நிலையம், விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உட்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டுமென சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், “நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். மேன்முறையீட்டாளரின் இறுதிப் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அதுவரை விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும்” என உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியை கடந்தது – அமெரிக்காவில் 03 கோடி !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.65 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.08 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89 ஆயிரத்து 350-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.45 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.20 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு !

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார்.

இணையம் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.

“நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” – நாடாளுமன்றில் பேராசிரியர் ஹரினி அமரசூரிய

“நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என தேசிய மக்கள் சக்தியின் (மக்கள் விடுதலை முன்னணி) நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற்றப்பட்டு, பெற்றுக்கொண்ட கடனை செலுத்தமுடியாத பலர் எமது நாட்டில் இருக்கின்றனர்.

மேலும் நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் பாரிய சூரையாடல்கள் காரணமாக எமது நாட்டில் 2,8மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 24இலட்சத்தி 38ஆயிரம் பேர் பெண்களாகும். அதேபோன்று 200பெண்கள் வரை நுண்கடன் திட்டத்தில் சிக்கிக் கொண்டு கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மேலும் நுண்கடன் நிதி நிறுவனங்கள் மிகவும் மோசமான முறையில் பெண்களை இலக்குவைத்து இந்த கடன் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. இலாபத்தைவிடவும் பாரிய சூரையாடலையே மேற்கொள்கின்றன.

அதனால் நுண்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள், அவற்றின் சட்ட முறைகள் தொடர்பாக கணக்காய்வொன்றை மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்ற செயற்குழுவில் ஆராய்ந்து முறையான செயற்திட்டங்களை ஏற்படுத்தவேண்டும்.

அதேபோன்று நுண்கடன் திட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு கடன் நிவாரணங்களை வழங்குவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டபோதும் அந்த நிவாரணங்கள் இதுவரை அந்த பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு! 

சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு!

சமூகப் போராளி வயிதீஸ்வரன் சிவஜோதியின் நினைவு நிகழ்வு இன்று [ஞாயிறு மார்ச் 7ம் திகதி] இடம்பெற்றது.

கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மக்கள் சிந்தனைக் கழகமும் லிற்றில் எய்ட் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அமரர் சிவஜோதி மக்கள் சிந்தனைக் கழகத்தின் உருவாக்கத்தில் சிவஜோதி முக்கிய பங்கெடுத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவஜோதி 2017 முதல் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகப் பணியாற்றி அதன் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தவர். இன்று எல்லோர் மனங்களிலும் சமூகப்போராளியாக ஒரு முன்ணுதாரணமாக வாழ்கின்றார்.

இந்நிகழ்வில் ‘சிவஜோதி எனும் ஆளுமை…’ என்ற தலைப்பிலான சிவஜோதியின் வாழ்க்கை மற்றும் சமூகப் போராட்டத்தை பற்றிய நினைவுகளைத் தாங்கிய நூல்  வெளியிடப்பட்டது. இந்த நினைவு நூலினை சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது

இந்நூலுக்கான பதிப்பு அனுசரணையை யா. விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பொறுப்பேற்றிருந்ததுடன் இந்நூலை லிற்றில் எய்ட் நிறுவனம் சார்பாக சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்கள் வெெளியிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் சமூகசெயற்பாட்டாளர்கள், பாடசாலை அதிபர்கள், கலை-இலக்கிய செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் லிட்டில் எய்ட் நிறுவனத்தின் உறுப்பினர்கள், அமரர் சிவஜோதியின் பாடசாலை நண்பர்கள்,  அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

சிவஜோதி எனும் ஆளுமை… நூலின் இணைப்பு:

ஆளுமை பற்றி…

‘சிவஜோதி எனும் ஆளுமை…’ ஒரு ஆளுமையாக எண்ணப்படுவதற்கு முதற்காரணம் அவ்வாளுமை தான் சார்ந்த சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கமே. இன்றைய காலகட்டத்தில் உலகத் தலைவர்களே கோமாளிகளாக, பொறுப்பற்றவர்களாக, வினைத்திறனற்றவர்களாக, ஏன், மோசடியாளர்களாகவும், பாதகம் செய்பவர்களாகவும் இருப்பதால் ஆளுமைகளை வரலாற்றில் தான் தேட வேண்டியுள்ளது. கீழைத்தேச நாகரிகத்தின் – இந்தியாவின் மோடியில் இருந்து, மேலைத்தேச நாகரீகத்தின் – அமெரிக்காவின் ட்ரம் வரை, இவர்களிடம் இருந்து எதைத்தான் நாளைய தலைவர்கள் கற்றுக் கொள்வது? இம்மண்ணில் பிறக்காத உயிரின் (pசழ டகைந) உரிமைக்காகப் போராடும் அமெரிக்கர்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் கொல்லப்படும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற, துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு கூடத் தயாரில்லை. பொறுப்பற்ற இந்த பொதுப்புத்தி மனிதர்களை நாம் ஆளுமைகளாகக் கொள்ள முடியாது.
உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் பட்டினியில் வாடுகிறார்கள். பள்ளிச் சிறுமிகள் மாதவிடாய் அங்கிகளை வாங்குவதற்கு வசதியில்லாததால் பாடசாலைக்குச் செல்வதில்லை. ஆனால் பிரித்தானிய அரசு ஆயதத் தளபாடங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து உள்ளது.

இன்று வல்லரசுகள் வைத்துள்ள அதிநவீன ஆயுதங்களால் ஒரு கொரோனா வைரஸைக் கூட சுட்டு வீழ்த்திவிட முடியாது. ஆனால் இந்த நவீன அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் பாதுகாக்கவும் இந்த வல்லரசுகள் பல பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. ஆனால் மருத்துவர்களையும் தாதிகளையும் உருவாக்குவதற்கு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதற்கும் கூட இந்த உலகத் தலைவர்கள் தயாரில்லை.

இந்தக் கொரோனா தாக்கத்தினால் 270 மில்லியன் மக்களின் ஒரு நேர உணவே கேள்விக்குறியாகி இருக்க, 2200 பில்லியனெர்கள் 2020 ஏப்ரல் முதல் 2020 ஜூலை வரையான நான்கு மாதங்களில் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். இந்த சம்பாத்தியத்தில் வெறும் 20 பில்லியன் டொலர்களை வழங்கினால் அந்த 270 மில்லியன் மக்களின் வறுமையைப் போக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.
அரசுகளும் அரசுத் தலைவர்களும் செய்ய முடியாத, செய்ய விரும்பாத விடயங்களை தனிநபர்கள் தங்கள் தோள்களில் சுமக்கின்றனர். சமூகம் என்ற கட்டமைப்பு ஒன்றில்லை, அவரவர் தங்கள் தங்கள் நன்மைகருதிச் செயற்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் தன்னலம்சார்ந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பு; தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. சமூகம் என்பதன் அவசியம் இன்று உலகெங்கும் உணரப்படுகின்றது. இந்த சமூகத்தில் சராசரி மனிதர்கள் ஆற்றுகின்ற பங்கின் முக்கியத்துவம் உணர வைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில், கல்லூரியில், பல்கலையில் உயர்புள்ளி பெற்றவர்கள் எல்லாம் சமூகத்தைவிட்டு ஒதுங்க, சராசரியானவர்களே சமூகத்தின் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்தனர். அவ்வாறு சுமந்ததனாலும் அந்த சமூகத்திற்கு வழிகாட்டியதனாலுமே நாங்கள் இத்தன்னலமற்ற மனிதர்களை ஆளுமைகளாக கணிக்கின்றோம். அவ்வாறான ஆளுமைகளே மக்களோடு மக்களாக நின்று அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கின்றனர். அவ்வாறான ஒரு ஆளுமையே இந்த ‘சிவஜோதி எனும் ஆளுமை…’

சிவஜோதி தனது 49 ஆண்டுகால குறுகிய வாழ்க்கைக் காலத்தில் தனது பன்முக ஆளுமையை பல கோணங்களில் வெளிப்படுத்தி உள்ளார். கலை, இலக்கியம், நாடகம், கல்வி, சமூக செயற்பாடுகள் என சிவஜோதி பதித்த தடங்கள் குறிப்பிடத்தக்கன. இத்தடங்களைப் பதிப்பதற்கு சாதி, மத, இன எல்லைகள் எதுவும் தடையாக இருக்கவில்லை. இந்த எல்லைகளைத் தாண்டி மக்களின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் சிவஜோதி பயணித்தது குறிப்பிடத்தக்கது.

பொலார்ட் அதிரடி – தோல்வியுடன் தொடரை ஆரம்பித்தது இலங்கை! 

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 இலக்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில்  நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிசங்க 39 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஒபேட் மெக்கோய் 2 இலக்குகளையும் கெவீன் சின்க்ளாயார், எட்வட்ஸ், ஹோல்டர், பிராவோ மற்றும் பெபியன் அலென் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 13.1 ஓவர்கள் நிறைவில் இலக்குகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 4 இலக்குகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிய்ரன் பொலார்ட் 38 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், அகில தனஞ்சய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

குறிப்பாக இப்போட்டியில் இலங்கையின் அணியின் அகில தனஞ்சய, ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

அத்துடன், இப்போட்டியில் கிய்ரன் பொலார்ட், இலங்கையின் அணியின் அகில தனஞ்சயவின் ஓவருக்கு ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் ரி-20 கிரிக்கெட்டில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை பொலார்ட் பதிவுசெய்தார். முன்னதாக இந்தியாவின் யுவராஜ் சிங் இந்த சாதனையை பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கிய்ரன் பொலார்ட் தெரிவுசெய்யப்பட்டார்.