இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லையென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
முதன்முதலாக இராணுவத்தினர் மீது இப்படி ஓர் அபாண்டத்தைச் சுமத்துகிறார்களெனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ள கூற்றை நிராகரிப்பதாகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்தக் கண்டனத்தையும் மறுப்பையும் வெளியிட்டார்.
இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்தை (கற்பழிப்பை) யுத்தத்தின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி உள்ளார்களென்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் கூறியுள்ளமை ஓர் அப்பட்டமான கட்டுக்கதையாகுமென்று கூறிய அமைச்சர் கெஹலிய, பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி கூறியது கவலை தருவதாகக் குறிப்பிட்டார். புலிகள் இயக்கப் பெண்களும், வேறு பெண்களும் கற்பழித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாகும். இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதனைக் கருதுகிறோம். முன்பு ஒருபோதும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை. ஹிலாரி கிளின்ரன் இவ்வாறு கூறுகையில், புலிகள் இயக்கத்தினருக்குச் சட்ட ரீதியான எந்த ஆதரவும் வழங்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.
ஒரு விடுதலைக்கான நடவடிக்கையையே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர். படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக பொறுப்பற்ற விதத்தில் ஹிலாரி தெரிவித்திருக்கின்றார் என்று தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சில வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் சில அமைப்புகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஹிலாரி யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை: அமெரிக்க தூதரகம் விளக்கம்
இலங்கை போரில் பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் பொதுப்படையாகக் கருத்துத் தெரிவித்தாரே தவிர, அவர் எந்த ஒரு தரப்பையும் அது தொடர்பாகச் சுட்டிக்காட்டவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டின்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் புதன்கிழமை பேசிய கிலறி கிளின்ரன், போரின்போது பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாக சிறிலங்கா, பர்மா, பால்கன் நாடுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாலியல் வன்முறையால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின்போது உரையாற்றுகையிலேயே ஹிலாரி சிறிலங்கா தொடர்பான கருத்தையும் கூறி இருந்தார்.
ஹிலாரியின் கருத்துக் குறித்து அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டின்ஸ் (02) விளக்கம் அளித்தார். “ஏனைய நாடுகளில் இடம்பெற்றதைப் போலவே, 26 வருடங்கள் நீண்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது பாலியல் வன்புணர்வுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஹிலாரியின் அறிக்கை அத்தகைய கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தது. குற்றம் செய்தவர்கள் யார் என எவர் மீதும் அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை” எனத் தூதுவர் கூறினார்.
ஹிலாரி கிளின்ரனின் முழுப் பேச்சையும் எடுத்துக்காட்டிய தூதுவர், அதில் சிறிலங்கா அரசு குறித்தோ விடுதலைப் புலிகள் குறித்தோ குறிப்பிட்டு எதுவும் கூறப்படவில்லை என்பதையும் எடுத்துக் கூறினார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய கிலறி, பாலியல் வன்முறை குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவது ஏனையவர்களும் அவ்வாறான குற்றங்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாக அமைகின்றது எனக் கூறி இருந்தார்.
அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஹெல உறுமயவினர் ஆர்ப்பாட்டம்
அமெரிக்கா இலங்கையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகிறது என்று குற்றஞ்சாட்டி அந்நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய நேற்றுக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
விகாரமகாதேவி பூங்காவுக்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு ஒன்றுகூடிய ஜாதிக ஹெல உறுமயவினர் அங்கிருந்து பேரணியாக அமெரிக்கத் தூதரகம் நோக்கிச் சென்றனர். அமெரிக்கத் தூதரகம் முன்பாக அவர்கள் சுமார் அரைமணி நேரம் வரை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். “இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை ஒரு போர்க்குற்றமா?”, “அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்கன் 6 லட்சம் பேரைக் கொன்றமை சரியா?”, போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
அத்தோடு அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ரொபேர்ட்ஓ பிளேக், அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்ரன் ஆகியோரைக் கண்டித்தும் அவர்கள் கோஷமெழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் வண.அத்து ரலிய ரத்தினதேரர் அங்கு உரையாற்றிய போது இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதை அமெரிக்கா விரும்பவில்லை.
இங்கு யுத்தம் முடிவடைந்துள்ளதால் அமெரிக்காவால் இங்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாதுள்ளது. இதனால் மீண்டும் இங்கு பயங்கரவாதத்தை வளர்க்கவே அந்நாடு முயற்சிக்கிறது. இந்நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் செயற்பாடுகளைத் தேசப்பற்றாளர்களான எம்மால் ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். என்றார் அவர்.
புலிகளுக்கு வழங்கப்படும் ஆதரவினை சட்ட ரீதியானதாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் வழங்கப்படக் கூடிய ஆதரவினை சட்ட ரீதியாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அசராங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எந்த வகையிலும் உதவிகளை வழங்ககக் கூடாது என ஒபாமா அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவதனை சட்ட ரீதியானதாக மாற்றும் முயற்சியில் அந்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு குறித்த அமைப்பு நீதிமன்ற உதவியை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள மனுவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணைகள் அடுத்த ஆண்டு அளவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.