தற்போதைய இலங்கையின் காலநிலை நாடு முழுவதும் மோசமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் அனர்த்தங்களை ஏற்படுத்தி வருகிறது. காலி, கல்வடுகொட பிரதேசத்தில் வீசிய கடும் காற்றுக் காரணமாக பஞ்சுமரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக ஐந்து பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.
பலியானவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களும், இரு சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடும் மழை காரணமாக காசல் நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக களனி கங்கையின் கரையோரத்தில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போதைய காலநிலை தொடந்தும் நிலவும் என கால நிலைய அவதான நிலையம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான கடற்பிரதேசங்களில் தற்போது 40 கிலோமீற்றர் தொடக்கம் 50 கிலோமீற்றர் வரையிலான காற்றின் வேகம், 60 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.