03

03

படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவம் இன்று

nationalflagflatteringsss.gifநாட்டி லிருந்து தீவிரவாதத்தை முழுமையாக முறியடித்த படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று கொழும்பில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

மிகவும் பிரமாண்டமான முறையில் கொழும்பு,  காலி முகத்திடலில் இன்று காலை நடைபெறவுள்ள இவ்வைபவத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க,  சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா,  அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள்,  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் வெற்றியைப் பாராட்டும் வகையிலும், அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்புக்களும் இன்று இடம்பெறவுள்ளன. அணிவகுப்பின்போது யுத்த நடவடிக்கைகளில் அங்கவீனமுற்ற படைவீர்ரகளும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு பங்கேற்கவுள்ளனர்.

இந்த அணிவகுப்பின்போது யுத்தத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும்,  கடல் மற்றும் விமானப் படையினரின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளதுடன் வடக்கு,  கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து செயற்பட்ட படைவீரர்கள் மற்றும் படைத் தளபதிகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதுதவிர பாடசாலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்புக்களும்,  கலாசார பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய பங்காளி இந்தியா – அமைச்சர் போகொல்லாகம

rohitabogallaagama.jpgஅரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலாக புதிய தீர்வுத்திட்ட யோசனையானது இப்போது “தீர்மானிக்கப்படும் கட்டத்தில்’ இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்திருப்பதுடன், இதன் மூலம் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகள் அதிகளவில் “உறுதிப்படுத்தப்பட்டவை’யாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.  சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் போகொல்லாகம “இந்து’ பத்திரிகைக்கு இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் “இந்தியாவை முக்கியமான பங்காளியாக’ இலங்கை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறியுள்ள அமைச்சர் போகொல்லாகம; “”உள்நாட்டில் உருவாக்கப்படும் (அரசியல்) நடவடிக்கைகளில் இந்தியா எப்போதும் அங்கமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார். ஆனால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான முன்முயற்சிகளை இலங்கை உருவாக்குவது தொடர்பாகவோ அல்லது துரிதமாக முன்னகர்த்துவது குறித்தோ இந்தியா எந்தவிதமான பங்களிப்பை வழங்கமுடியும் என்பது பற்றி அவர் விசேடப்படுத்திக் குறிப்பிட்டிருக்கவில்லை.

புதுடில்லியானது யோசனைகள் உள்நாட்டு மட்டத்திலிருந்து உருவாக்கப்படுவதற்கு மதிப்பளித்துள்ளது. இலங்கை இந்திய உடன்படிக்கையிலிருந்தே அதிகாரப்பகிர்வு தொடர்பான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமான விளைவையே சட்டமூலம் ஏற்படுத்தியுள்ளது.

புதிய சூத்திரமான “13 ஆவது திருத்தத்திலும் கூடுதலானது’ இப்போது தீர்மானிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறது. இது அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை அதிகளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டதாக கொண்டதாக அமையும் என்றும் போகொல்லாகம கூறியுள்ளார்.

தற்போதைய நடவடிக்கையானது மத்தியில் பிராந்திய மட்டப் பிரதிநிதித்துவத்தை விரிவானதாக்குவதற்கும் வழி வகுக்கக்கூடும். அதாவது இரு சபைகள் என்ற அணுகுமுறை மூலம் பிராந்திய மட்ட பிரதிநிதித்துவத்தை மத்தியில் விரிவுபடுத்துவதற்கு வழிசமைக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதியின் விசேட உரிமையின் பரிமாணம் குறித்து அவர் வெளிப்படுத்தவில்லை. பொருளாதார ரீதியில் இப்போது அபிவிருத்தி நிகழ்ச்சிநிரல் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்தியாவுடன் இருக்கும் வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் சீனா, பாகிஸ்தானின் ஏதாவது அரசியல், அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களில் சம்பந்தப்பட்ட பங்களிப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்; வர்த்தகத் துறைமுகத்திற்காக கடனடிப்படையில் சீன அரசு உதவியுள்ளதாகவும் இது சீன ஒப்பந்தக் காரர்களால் நிர்மாணிக்கப்படுவதாகவும் அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். பொதுவாகக் கூறினால் எமது பாதுகாப்புத் தொடர்பான தேவைகள், நாம் பெற்றுக்கொள்பவை பற்றி இந்தியாவுக்கு நன்கு தெரியும். ஆதலால், எமது பாதுகாப்பு தேவைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது தொடர்பாக பகிரங்கமாக ஒலிபரப்புவதற்கான தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 5 ஆம் திகதி

மூன்றாண்டுகளாக பிற்போடப்பட்டு வரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண செயலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடைசியாக 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது. இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைக் கூட்ட அரசாங்க அதிபர் மூன்று முறை அறிவித்திருந்தும் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்துக்கு சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வடமாகாண விசேட செயலணிக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானாந்தா தலைமை தாங்குவார். கூட்டத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், வடமாகாண சபையின் செயலாளர் ஆகியோர் பங்கு கொள்வரென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்

ira1thiru.JPGபுதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும். புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் பற்றிய சில குறிப்புகள்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர். இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர்.

புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார்.இவர்தம் பெற்றோர் பெயர் அ.அரசு,இரா.அரங்கநாயகி. திருமுருகனாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும்.தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.

இவர் பண்டிதம்(1951),கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப்பட்டயம் (1973),கலைமுதுவர்,கல்வியியல் முதுவர்,மொழியியல் சான்றிதழ்(1983),முனைவர்(1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர்.44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும்,புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.

இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும்,இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும்,தமிழ்நலம் கெடும் இடங்களிலில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.

தமிழ்ப்பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியிள்ளன. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப்பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும்.இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.

இலக்கணச்சுடர்,இயலிசைச்செம்மல்,முத்தமிழ்ச்சான்றோர்,நல்லாசிரியர்(நடுவணரசு),மொழிப்போர் மறவர், சிந்திசைச்செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம்,பாவேந்தர் பைந்தமிழ்க்காவலர் உள்ளிட்ட பட்டங்ஙகளும் விருதுகளும் குறிப்பிடத்தகுந்தன.

முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:

01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001

மொழி வளர்ச்சி

13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்–7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994

பாடல்

27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999

இசை

31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000

வரலாறு

35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003

தகவல் ; முனைவர் மு.இளங்கோவன்

விமானம் விபத்துக்குள்ளான இடம் தெரிந்தது

01-air-france.jpgவிபத்துக் குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தின் பாகங்கள் பிரேசிலுக்கு 650 கி.மீ. வட கிழக்கே அட்லாண்டிக் கடலில் கிடப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் பிரான்ஸ், பிரேசில் விமானப் படையினரும் கடற்படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் பயணிகள் யாரும் உயிர் தப்பவில்லை என்று தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 228 பயணிகளுடன் AF 447 என்ற அந்த விமானம் இரவு 11.30 மணிக்கு பிரேசிலில் இருந்து புறப்பட்டது. ஆனால், நள்ளிரவு 2.33 மணிக்கு அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது.

நேற்று மாலை பிரேசிலின் பெர்னான்டோ டி நொரோன்ஹா என்ற தீவுக்கு 650 வட கிழக்கே விமானத்தின் சிதறிய பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு விமான சீட், ஒரு மிதவை, ஒரு இறக்கைத் துண்டு உள்ளிட்ட பாகங்கள் அங்கு மிதக்கின்றன. அப் பகுதியில் விமான எரிபொருளும் கசிந்து கிடக்கிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதை ஆய்வு செய்தால் தான் விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் தெரியவரும்.

இப்போதைக்கு கடும் காற்றோட்டம் காரணமாக ஏற்பட்ட திடீர் அதிர்வினால் அல்லது மின்னல் தாக்கியதால் விமானத்தின் கருவிகள் செயலிழந்து விபத்துக்குளாகியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமானத்தில் 3 பைலட்டுகள் இருந்தும் கூட கடைசி நிமிட பிரச்சனை குறித்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தரக் கூட கால அவகாசம் இல்லாத அளவுக்கு படுவேகத்தில் விபத்து நடந்து முடிந்துள்ளது.

விபத்தின்போது விமானத்தின் உள் காற்றழுத்தம் (pressure) குறைந்துவிட்டதாகவும், பல மின்சார எந்திரங்கள் செயல்படவில்லை என்றும் அதன் கம்ப்யூட்டர்கள் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தந்தது குறிப்பிடத்தக்கது. தயாரிக்கப்பட்டு 4 வருடமே ஆன இந்த விமானத்தில் கடந்த ஏப்ரலில் வழக்கமான பராமரிப்புப் பணியும் நடந்துள்ளது.

இன்று கருணாநிதியின் 86வது பிறந்த நாள்

karunanithi.jpgமுதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவர் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

இன்று காலை பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு அவரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

உத்தேச தீர்வுத் திட்டம் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் – ஜனாதிபதி ராஜபக்ஷ

mahinda-0000.jpgஉத்தேச அரசியல் தீர்வானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகலருமே அதனை அமுல்படுத்துவதற்கு அவசியம் இணங்குவதாக இந்த 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வு விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த உத்தேச யோசனைகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து தீர்மானிக்க வேண்டியது அவசியமென்றும் தான் இந்த விடயத்தில் அவர்களை நிர்ப்பந்திக்கப் போவதில்லை என்றும் தீர்வுத் திட்டமானது ஒவ்வொரு மக்கள் மத்தியில் இருந்தும், தலைவர்களிடமிருந்தும் வெளிவர வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் சேகர் குப்தாவிற்கு என்.டி.ரி.வி.யின், “வோக் த ரோக்’ நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திலிருந்து, விடுதலைபெற்ற நிலையில் சேகர் குப்தாவுடன் தற்போது தான் உரையாடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது;  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இழைத்த பாரிய தவறு ராஜீவ் காந்தியை கொன்றதாகும். ஏனெனில், இந்தியாவின் முழு அனுதாபத்தையும் அவர்கள் பகைத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் அவர் செய்த பாரிய தவறு இதுவென நான் நினைக்கிறேன். இரண்டாவதாக அவர் தெற்கின் சக்தியைப் பற்றி அளவிட்டிருக்கவில்லை. அவர் இழைத்த மற்றொரு தவறாகும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவர் விரும்பியிருக்கவில்லை. முழு நாட்டையுமே அவர் கைப்பற்ற விரும்பியிருந்தார். அவருடைய திட்டம் முழு நாட்டையும் கைப்பற்றுவதாகும். பயங்கரவாதத்தினாலும், துப்பாக்கியினாலும் சகலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நினைத்திருந்தார். 30 வருடங்களில் அவருடைய பாரிய தவறு ராஜீவ் காந்தியின் படுகொலையாகும். அதுவே அவரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பது உண்மையாகும்.

இந்தப் பிரச்சினையை யார் உருவாக்கியது என்பது உங்களுக்கு தெரியும். இந்த மனிதர் எப்பொழுது இதனை ஆரம்பித்தார் மற்றும் இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். இறுதியாக அவர்கள் இந்திய மக்களால் அன்பு செலுத்தப்பட்ட தலைவரை கொன்றனர். தமிழ் மக்களால் மட்டுமன்றி முழு இந்தியாவுமே அன்பு செலுத்தியவரை அவர்கள் கொன்றனர். தமிழ்நாட்டில் அவரைக் கொன்றனர். தமது ஜாக்கெட்டை அவர் (ராஜீவ்) கொடுத்தார் என்று நான் கேள்விப்பட்டேன். இது சரியானதா என்பது எனக்கு தெரியாது. அவர் இந்த மனிதருக்கு தமது சொந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டை கொடுத்தார். எமது அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் (ராஜீவ் காந்தி) முயற்சித்தார். அதனை நாம் இப்போது வைத்திருக்கின்றோம். இந்திய சமாதானப்படை இலங்கைக்கு வந்தபோது நாம் மகிழ்ச்சியடையவில்லை. நானும் கூட சந்தோஷப்படவில்லை. நான் எதிர்த்தரப்பில் இருந்தேன். அந்த நேரத்தில் நாம் எதிர்த்தோம். ஆனால், இப்போது அவர்கள், அல்லது நாம் இந்திய அமைதி காக்கும் படையை மேலும் ஓரிரு மாதங்களுக்கு தங்கியிருக்க அனுமதித்திருந்தால் இதனை அவர்கள் முடித்து வைத்திருப்பார்கள்.

இந்திய அமைதி காக்கும் படையுடன், போரிட பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்ததாக லலித் அத்துலத் முதலி தமக்கு கூறியதாக சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது, சரி என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார். 5 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கிகளை புலிகளுக்கு அவர் கொடுத்ததாக கேள்வியெழுப்பப்பட்டபோது, ஆம் என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் எப்போதுமே யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியோ அல்லது இந்தியாவையோ அல்லது மேற்கு சக்திகளையோ பயன்படுத்த முயன்றதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகள் பிரேமதாஸாவை கொன்றனர், அவர்களுக்கு உதவியவர்களை கொன்றனர், ராஜீவ் காந்தியை கொன்றனர், காமினி திசாநாயக்காவை கொன்றனர், அமிர்தலிங்கம், லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வன் போன்ற அவர்களின் சொந்த தலைவர்களையே கொன்றனர். சமாதானத்தை விரும்பியவர்களை கொன்றனர்.

ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் அவர் ஏன் இந்த மாதிரியான பாரிய தவறினை செய்தார். அதுபற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்களா? ஏதாவது தகவல்களை பெற்றுள்ளீர்களா? என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, ராஜீவ் காந்தி அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயன்றார் என்றும், அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால் ராஜீவ் காந்தியை அவர் வெறுத்தார் என்றும், தான் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அவர் (பிரபாகரன்) எந்த தீர்வையும் விரும்பவில்லை. தான் மன்னனென கருதினார். இந்தியா தமிழ்நாட்டின் மனநிலை குறித்து அவர் கவலைப்படவில்லை. அவருடன் அனுதாபம் கொண்ட சில தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களைப் பற்றி குறிப்பிட நான் விரும்பவில்லை. அவர்களின் பெயரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் யாவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதி நாட்களைப் பற்றி கூறுமாறும் இறுதியாக எவ்வாறு அவரையும் ஏனைய முக்கியமான தலைவர்களையும் கண்டுபிடித்ததாகவும் சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது பதிலளித்த ஜனாதிபதி, அவர்கள் தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், சிறிய நிலப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த அவர்கள் 3 குழுக்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த 3 குழுக்களில் ஒரு சாரார் வடக்கு பக்கமாகவும், மற்றவர்கள் தெற்கு பக்கமாகவும் இடையில் ஏரிப் பக்கமாகவும் சென்றதாகவும், பிரபாகரனும் ஏனையவர்களும் முன்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சமயம் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார். அப்போது அவர்கள் சுற்றிவளைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டாரில் ஜனாதிபதி இருந்தபோது பிரபாகரனின் மரணம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாக சேகர் குப்தா குறிப்பிட்டபோது, இல்லை எனவும் 19 ஆம் திகதியே தாம் செய்தியை பெற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து அதிகளவிலான பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டதா, உதாரணமாக ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெற்ற போது, என்று சேகர் குப்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஒன்றுமே நடைபெறவில்லை என்றும் அது ஒரு பிரசாரம் என்றும் மருத்துவர்கள் தங்களுடன் இருப்பதாகவும் இந்த மாதிரியாக அறிவிக்குமாறும், தங்களுக்கு கூறப்பட்டதென அவர்கள் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெறவில்லை எனவும், இது முற்றுமுழுதான பிரசாரம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் இழப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது 100 இலும் குறைவானவர்களே இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படக்கூடாது என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அவர்கள் செய்தது போன்று நாம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது செய்மதி மூலமான பிரதிமைகளைப் பெற உதவியை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்கப்பட்டபோது, எங்கிருந்தும் நாங்கள் செய்மதி புகைப்படங்கள் தொடர்பாக உதவியைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தேர்தல் வேளையில் அதாவது ஆறு கிழமைகள் தொடக்கம் பிரபாகரனின் மரணம் வரை இந்தியாவுடனான தொடர்பாடல் எவ்விதம் அமைந்திருந்தது என்று கேட்கப்பட்டபோது, நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் அவர்கள் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலையடைந்திருந்தனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவர்கள் ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்தார்களா எனக் கேட்டபோது, அவ்வாறான அழுத்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், நண்பர்கள் மத்தியில் அழுத்தங்கள் இருக்க முடியாது என்று கூறினார்.

நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். சமாதானத்தை எவ்வாறு இப்போது தோற்றுவிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, முதலாவதாக நாங்கள் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். முகாம்களுக்குள் இருந்தவாறு மக்களால் அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாது உடனடியாக நாம் மேற்கொள்ளப்படவேண்டியது அந்தப் பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும்.

இதற்கு 180 நாட்கள் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிரண்டு பில்லியன் தேவைப்படுகிறது. இந்தியா எமக்கு உதவவேண்டும். அவர்கள் அதனைச் செய்வார்கள் என நினைக்கிறேன். மீளக் கட்டியெழுப்ப அவர்கள் உதவவேண்டும்.

தமிழ் மக்களை சமனான பிரஜைகளாக நீங்கள் நடத்துவீர்களா என்றும் உங்களது முறைமையில் சமத்துவம் உள்ளதா எனவும் இப்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதாகத் தென்படுகிறதெனவும் கேட்கப்பட்டபோது எனது பாராளுமன்ற உரையை நீங்கள் பார்த்தால் இனிமேல் இங்கு சிறுபான்மையினர் இல்லையென்று நான் கூறியுள்ளேன். இங்கு இரண்டு வகையான மக்களே இருப்பார்கள். ஒன்று இலங்கையை நேசிப்பவர்கள் மற்றவர்கள் இலங்கையை நேசிக்காதோர். இதுவே மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடாக அமையும். சகல மக்களும் எனது மக்கள். அவர்கள் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிம்களோ மலாயர்களோ, யாராகவிருந்தாலும் அவர்கள் எமது மக்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். யாவரையும் தான் சமமாகவே நடத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

1983 இல் இது தொடர்பாக வரலாறு உள்ளது என்று கேட்கப்பட்டபோது, வரலாற்றை நாம் மறந்துவிட வேண்டும். நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நீங்கள் வேறுபாட்டைக் காண்பிப்பதில்லையா என்று கேட்டபோது, இல்லை, நான் அவ்வாறு செய்யமுடியாது. ஏனெனில், எனது உறவினர்களில் சிலர் தமிழர்கள். எனது பெறாமகள் ஒரு தமிழரைத் திருமணம் செய்துள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

உங்களது விருப்பத்துக்குரிய கிரிக்கெட் கதாநாயகன் தமிழரான முத்தையா முரளிதரனா என்று கேட்கப்பட்டபோது, எவ்வாறு அதை நான் கூறமுடியும். எனது சொந்த வீட்டிற்குள் அதனை அவ்வாறு கூறமுடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மேலாதிக்கவாதம் என்பது யதார்த்தமானதாக இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் அதனைக் கூறமாட்டேன். ஏனென்றால், சகல அரசியல்வாதிகளுமே அதனைத் தொடக்கியிருந்தனர் என்று தெரிவித்தார். நீங்கள் கிராமத்துக்குச் சென்றால் தமிழர்களுடன் பேசினால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதனைச் செய்கிறார்கள் என்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரே வழியாக அது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு அந்தமாதிரியாக செயற்படும் நோக்கமில்லை என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, முழு நாடுமே தமக்கு வாக்களிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். துரிதமாக தேர்தல் இடம்பெறும் சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, நவம்பர் மாதத்தில் அது தொடர்பாக தம்மால் தீர்மானம் எடுக்க முடியுமென்று கூறியுள்ளார்.

நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் தமிழ் மக்களையும் உள்ளீர்த்துக் கொள்வதை ஏற்கனவே செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழர்களுக்கெதிரான பிரசாரத்தை மேற்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. எனக்குத் தமிழ் வாக்குத் தேவை. தமிழர்களோ முஸ்லிம்களோ சகலரது வாக்குகளும் தேவை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.  இராணுவ ரீதியான தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, அது பயங்கரவாதத்திற்கு எதிரானதொன்றல்லவா என ஜனாதிபதி பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகரத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் ஜெனரல்கள், படைவீரர்கள் உள்ள சுவரொட்டிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த வருட பிற்பகுதியில் இடம்பெறும் தேர்தலில் இவை உங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுமென நீங்கள் கருதவில்லையா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. தேவையற்றது, நாட்டை மீண்டும் பிளவுபடுத்த நான் விரும்பவில்லை. நான் ஒருபோதும் அதனைச் செய்யமாட்டேன். எனது அமைச்சரவையைப் பாருங்கள் எவ்வளவு முஸ்லிம், எவ்வளவு தமிழர்கள் இருக்கின்றார்கள். மலைநாட்டுத் தமிழர்கள் உள்ளனர். அவர்களை சிலர் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கின்றனர். அவர்களுக்குத் தலைவராக தொண்டமான் இருக்கிறார். வடக்கிலிருந்தும் எமது அமைச்சரவையில் அமைச்சர் இருக்கின்றார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

பல ஜனநாயக நாடுகளில் இந்தப் பிரச்சினையுண்டு. அதாவது; அவர்கள் பெரிய யுத்தத்தில் ஈடுபட்டபோது இராணுவ ஜெனரல்கள் கதாநாயகர்களாகின்றனர். இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவெடுக்கின்றது. அவர்கள் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாக உருவாகின்றனர். அவர்கள் மக்கள் தமது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்யும் போது, அரசியல்வாதிகள் ஏனைய மக்களுக்காக தங்கள் வாழ்வைத் தியாகம் செய்வதிலிருந்து தாங்கள் அனுகூலம் பெறுகின்றனர் என்று சேகர் குப்தா குறிப்பிட்டபோது ஜனாதிபதி ஆம் என்று பதிலளித்தார்.

யுத்தம் முடிவடைந்த போது இதனை கீழே கொண்டுவருவதற்கான சவால் ஜனநாயக நாடுகளிடம் காணப்படுகின்றன. இது தொடர்பான திட்டம் ஏதாவது உண்டா என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, இல்லை. இந்த நாட்டு மக்கள் கல்வி கற்றவர்கள். என்ன நடைபெறுகிறது என்பது அவர்களுக்குத் தெரியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜெனரல்கள் வல்லமை பெற்றவர்களாக உருவாகிவருவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. நான் கவலைப்படவில்லை. நோக்கத்தில் அவர்கள் மிகவும் விசுவாசமானர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு ஏதாவது அரசியல் அபிலாசைகள் இருக்குமென்று நான் நினைக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

நூற்றுப் பத்துக் கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அதன் ஆயுதப் படைகளின் தொகை 13 இலட்சமாகும். 2 கோடி மக்களைக் கொண்ட உங்கள் நாட்டில் 2 இலட்சம் இராணுவத்தினர் உள்ளனர் என்று கேட்கப்பட்டபோது, இத்தொகையை நாங்கள் அதிகரிக்க வேண்டியிருந்தது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

ஆள் வீத அடிப்படையில் எமது இராணுவத்தை விட உங்கள் இராணுவம் நூறு மடங்கு அதிகமாக உள்ளதே இப்போது உங்களுக்கு இது தேவைப்படாதே என்று சேகர் குப்தா கேட்டபோது அவ்வாறு கூறவேண்டாம். நிர்மாணப் பணிகளுக்கு அவர்களை நாம் பயன்படுத்த முடியும் என்றும் அவர்களை ஏனைய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்த விரும்புகிறோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காலப்போக்கில் அவர்களின் எண்ணிக்கையை குறைப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது, இப்போது அதற்குரிய திட்டங்கள் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

200,000 இராணுவத்திற்கு சமாதானமான இலங்கை மிகவும் சிறியதொன்றாகும். பாதுகாப்பதற்கான எல்லைகள் எதுவும் இல்லை. வெளிமட்டப் பகைவர்களும் இல்லை என்று சேகர் குப்தா கூறியபோது, நாம் எமது சொந்தப் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சொந்தப் பாதுகாப்பிற்காக அவர்களை வைத்துள்ளோம். இலங்கைக்கு 2 இலட்சம் படையினர் அதிகமான தொகையல்ல. இத்தொகையே நாம் வைத்திருப்போம். மேலதிகமாகச் சேர்க்கமாட்டோம். அவர்களை ஐ.நா. சமாதானப் படைக்கு அனுப்பமுடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

யுத்த வேளையில் இந்தியாவை விட வேறு ஏதாவது அழுத்தங்கள் ஏற்பட்டதா. மில்லிபான்ட் இங்கு வந்த போதும் நோர்வே காரர்களுடனும் மகிழ்ச்சியற்றதான சில விடயங்களை நாம் பார்த்தோம் என்று கேட்கப்பட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அவர்களில் சிலரின் மனப்போக்கு எங்களை அவர்களின் காலனியாகக் கருதியதாகும். இலங்கை எவரதும் காலனி அல்ல. அவருடைய மனப்போக்கிற்கு எங்களால் எதனைச் செய்ய முடியும் என்று பதிலளித்திருக்கிறார்.

சீனா, பாகிஸ்தானுடன் உங்கள் உறவுகள் தொடர்பாக இந்தியா தரப்பிலிருந்து கவலைகள் காணப்படுகிறதே என்று கேட்கப்பட்டபோது இலங்கையைப் பற்றி இந்தியா எந்தக் கவலையும் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் இருக்கின்றோம். இந்தியா எம்மீது அதிகளவு பரந்த மனதைக் கொண்டிருக்கிறது. நாங்கள் உறவு ரீதியான நண்பர்கள். ஆரம்பத்திலிருந்தே அதாவது முதல் நாளில் இருந்தே இந்தியா எமது அயல் நாடு. இராணுவ ரீதியில் சீனாவிடம் இருந்து நாங்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தோம். இஸ்ரேல், பாகிஸ்தான், ரஷ்யா, உக்ரைனிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இதேவேளை, இந்தியாவிற்கு தாம் விஜயம் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தில் ஒருபுறம் இந்திய சமாதானப் படை மறுபுறம் துன்பியல் என்பன இருக்கையில் 13 ஆவது திருத்தமும் அதிகாரப் பகிர்வுப் பொதியும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு இப்போது என்ன நடக்கும். அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா அதற்கு அப்பால் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா என்று சேகர் குப்தா கேள்வி எழுப்பிய போது, 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலானது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இப்போது யுத்தம் முடிந்து விட்டது இலங்கைத் தமிழர்களுக்கான உங்களது செய்தி என்ன என்று கேட்கப்பட்ட போது, யுத்தம் முடிவடைந்து விட்டது நாம் ஒன்று சேர்ந்து இந்த நாட்டில் இருக்க வேண்டும் சம பிரஜைகளாக இருப்பார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சிங்கள அரசியலில் இப்போதும் சக்திகள் உள்ளனவே என்று கேட்கப்பட்ட போது, தமிழ் அரசியலிலும் அந்த சக்திகள் உண்டு என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சிங்களவர்கள் அரசியல் ரீதியாக மேலாதிக்கம் உடையவர்களாக இருக்கிறார்களே என்று கேட்கப்பட்ட போது, இல்லை என்றார்.

 நன்றி: தினக்குரல்

முஸ்லிம் தலைமைகளிடமுள்ள ஒற்றுமை தமிழ் தலைவர்களிடம் இல்லை – அமைச்சர் முரளி

karuna0000.jpgஅமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) காத்தான்குடிக்கு நேற்று முன்தினம் மாலை விஜயம் செய்தார். புலிகள் இயக்கத்திலிருந்து அவர் பிரிந்ததன் பின்னரும், அமைச்சரானதன் பின்னரும் காத்தான்குடிக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், அவரது மாகாண அமைச்சில் காத்தான்குடி காரியாலயத்தில் பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், பள்ளிவாயல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் முரளிதரன், பிரபாகரனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளினாலேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்த நிலைக்குச் சென்றுள்ளது. பல தடவைகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சின் மூலம் தீர்வைக் காண்போம் என நான் கூறிய போதெல்லாம் அவற்றை எல்லாம் அவர் உதாசீனம் செய்துவிட்டார். எனது கருத்துக்களை அவர் உள்வாங்கியிருந்தால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது உயிருடனும் இருந்திருப்பார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் எதனையுமே சாதிக்க முடியாது.

ஜனநாயக வழியில் தேசிய ரீதியில் ஆழுகின்ற அரசுகளுக்கு ஆதரவு வழங்கியதனாலேயே முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. 30 வருடங்களாக முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் தமது பிரதேசங்களை அபிவிருத்திச் செய்துள்ளனர். ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எதையுமே செய்ய முடியவில்லை. முஸ்லிம் தலைமைகளிடம் ஒற்றுமை உண்டு தனது சமூகத்திற்கு ஏதுமென்றால் ஒன்றாகி விடுவார்கள்.

ஆனால் தமிழ் தலைமைகள் அவ்வாறில்லை. 14 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ள தலைமைக்காக மோதுவதைத் தவிர எதையுமே ஆரோக்கியமாகச் செய்தவரலாறில்லை. ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டின் போதும் தமிழ் அரசியல் தலைமைகள் மோதுகின்ற அளவிற்கு வேற்றுமை மாத்திரமே மிஞ்சியிருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள். வெறும் பசப்பு வார்த்தை பேசிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிகின்றனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை ஆளும் கட்சியான சு.க. ஊடாக அதிகரிப்பதே எனது இலக்கு. கிழக்கில் மாத்திரமல்ல வடக்கிலும் ஆளும் கட்சியூடான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆதரிக்கவேண்டும்.

தமிழ், முஸ்லிம் சமூக வேற்றுமைகளை மறந்து, ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும். அதற்காகவே தேசிய நல்லிணக்க அமைச்சைப் பொறுப்பேற்றேன். யுத்தம் முடிந்துவிட்டது. இனி இனங்களிடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்ப வேண்டும். அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அதாஉல்லா, அமீர்அலி, ரிஷாட் பதியுதீன் ஆகிய முஸ்லிம் அமைச்சர்களின் சேவைகளைப் பாராட்டுகின்றேன். வன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு அங்கேயே நின்று ரிஷாட் அமைச்சர் அம்மக்களின் நலன் விடயங்களில் அக்கறைகாட்டி வருகின்றார். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு அவர் அங்கு ஆற்றிவரும் சேவையானது வரவேற்கத்தக்கதாகும்.

அமைச்சர் ஹிஸ்புல்லாவும் தமிழ், முஸ்லிம் வேறுபாடில்லாமல் சேவையாற்றி வருகின்றார். இந்த நேரத்தில் அவர் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அன்று நான் பிரபாகரனிடத்தில் அடிக்கடி கூறுவேன் முஸ்லிம்களை புறக்கணிக்காதீர்கள், முஸ்லிம் தலைவர்களுடன் பேசுங்கள் என்று. அதுதான் அவர் இறுதியில் முஸ்லிம் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தமாகும்.

இலங்கையில் ஏற்கமுடியாத அளவுக்கு மக்கள் உயிரிழப்பு- ஐ நா பொதுச் செயலர்

uno.jpgஇலங் கையில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ஏற்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயம் குறித்து ஐக்கியநாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக்கு விளக்கிப் பேசிய அவர், இறந்தவர்களில் தொகையாக ஐ. நாவினால் எந்தவொரு எண்ணிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும், அப்படியாக ஐ.நாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுவது தவறு என்றும் கூறினார்.

அதேவேளை, இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐக்கிய நாடுகள் சபை குறைத்து வெளியிட்டது என்று கூறப்படுவதையும் தான் குறிப்பாக நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.

அது பற்றி செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஐ.நா தலைமைச் செயலரின் சார்பில் பேசிய மிஷேல் மொண்டாஸ் அவர்கள், இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ நா பொதுச் செயலர் தனது கடுமையான கவலையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து கருத்துக் கூறிய அவர், இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னமும் வெளியாகவில்லை என்றும், வெளியான பல தகவல்கள் ஐ.நாவில் இருந்து வெளியானவில்லை என்றும், பெரும்பாலானவை எமது வெளியீடுகளில் இருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்றும் கூறினார்.

அதே நேரம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவாக இருந்த போதிலும், அது ஏற்கப்பட முடியாத அளவுக்கு அதிகமானது என்றும் பான் கீ மூன் சார்பில் பேசவல்ல அதிகாரியான மிஷேல் மொண்டாஸ் கூறினார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகளால் விடுக்கப்படுகின்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று மே மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதி தான் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ஐ. நாவின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் முழுமையான பொறுப்பேற்றலும், வெளிப்படைத்தன்மையும் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை தமிழ் பாடசாலைகள் நேற்றும்செயலிழப்பு – ஆசிரியர் இடமாற்ற விவகாரத்திற்கு தீர்வு

teacher.jpgகல்முனை வலயத்தில் சர்ச்சைக்குள்ளான ஆசிரிய இடமாற்ற விவகாரத்திற்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஆயினும் கல்முனை தமிழ்ப் பாடசாலைகள் நேற்று 2வது நாளாகவும் மூடப்பட்டிருந்தன.

தமிழ்ப் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆசிரியர்களும், முஸ்லிம் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள தமிழ் ஆசிரியர்களும் மீண்டும் அவரவர் இனப் பாடசாலைகளுக்கு இடமாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களது இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான முறையான இடமாற்றக் கடிதம் எதிர்வரும் 8ம் திகதி முதல் செயற்படும்படியாக அந்தந்த அதிபர்களிடம் 05.06.2009 அன்று வழங்கப்படும்.

இது தொடர்பான எழுத்து மூல உறுதி மொழியை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. அப்துல் நிசாம் ஒப்பமிட்டு சகல தமிழ்ப் பாடசாலை அதிபர்களுக்கும் நேற்று கையளித்துள்ளார். 08 வருடங்களுக்கு குறைவான சேவையுடைய ஆசிரியர்கள் தொடர்பில் பாடசாலைத் தேவைகள், கோரிக்கைகளைக் கவனத்திற்கொண்டு அப்பாடசாலைகளில் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவர். 08 வருடங்களுக்கு மேலதிக சேவையுடையவர்களுக்கும் இது பொருந்தும்.

ஆசிரியர்களது மேன்முறையீடுகள் யாவும் இடமாற்றத் திட்டத்தின் படி கடமையேற்று 04.06.2009க்கு முன்பு காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். மேன்முறையீடுகள் அனைத்தும் எதிர்வரும் 08.06.2009 முதல் 12.06.2009 வரை பரிசீலனை செய்யப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் எதிர்வரும் 15.06.2009 முதல் செயற்படும் படியாக மீள் இடமாற்றங்கள் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

தமிழ்ப் பாடசாலைகளின் இத்தகைய விடயங்களுக்குப் பொறுப்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். கே. ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றங்கள் சார்பில் பாடசாலைகளில் தோன்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், பாடசாலைகள் சுமுகமாக இயங்குவதற்கான எடுத்த முயற்சிகளுக்காக ஜனாதிபதியின் மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு நன்றி கூறுவதாக வும் பணிப்பாளரின் அதிபர்களுக்கான கையெழுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளரின் இவ் அறிக்கையை கல்முனை, சம்மாந்துறை வலய கல்விப் பொறுப்பாளர் வரதன் சகல தமிழ்ப் பாடசாலை அதிபர்களுக்கும் நேற்று விநியோகித்தார்.

கல்முனை வலய தமிழ்ப் பாடசலைகளின் கல்விச் சமூகத்தை அழைத்து திங்களன்று நண்பகல் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி கல்முனை கல்விப் பணிமனையில் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் கல் முனை மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். கே. ஆனந்தராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ஜலீல், இலிகிதர் கையூம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கல்முனை, சம்மாந்துறை கல்விப் பொறுப்பாளர் வரதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்குச் சமுகமளித்த அதிபர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் கருத்துத் தெரிவித்தனர்.

கல்முனை வலய தமிழ்ப் பாடசாலைகள் சார்பாக கலந்து கொண்ட பெற்றார் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மிகவும் காரசாரமாக தமது நியாயங்களை முன்வைத்தனர்.தமிழ்ப் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியைத் திட்ட மிட்டு அழிக்கும் ஒரு செயற் பாடாகவே இவ்விடமாற்றத்தை நாம் கருதுவதாக சமுகமளித்தோர் குற்றம் சாட்டினர். பதிலளிக்க உரிய அதிகாரியின்மையால் கூட்டம் பல மணிநேரம் நீடி த்தது. தொலைபேசி உரை யாடல்கள் தொடர்ந்தன. ஈற்றில் மாலை 6.00 மணியளவில் தீர்வு சொல்வதாகக் கூறி கூட்டம் முடிவுக்கு வந்தது. முடிவு உரிய வேளையில் கிடைக்காமையினால் நேற்றுப் பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.