June

June

ஜூன்:26, உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் (World Anti – Drugs Day) – புன்னியாமீன்

world-anti-drugs-day.jpgஉலக ளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை,  போதைப்பொருள் கடத்தல்,  போதைப்பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப் பொருள் கடத்தலுக்காக சில அரசுகள் மரண தண்டனையைக் கூட சட்டமாகப் பிரயோகித்து வருகின்றது. எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும்கூட,  போதைப்பொருளை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை. போதைப்பொருட் பாவனையால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட தினமாகவே ( ஜூன் – 26) உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் (World Anti – Drugs Day) காணப்படுகின்றது. 

போதைப் பொருட்களை பாவிப்பதனால் பாவிப்பவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்குட்படுவதோடு பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர். இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. சில நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளின் போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் போதைப் பொருட்கடத்தல் மேற்கொள்ளப்படுகின்றன. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதனாலும்,  இதற்கு உடந்தையாக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறிவருகின்றது. போதைப் பொருட்பாவனையால் ஏற்படும் தீங்குகளும், பாதிப்புகளும்,  அழிவுகளும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜுன் 26ம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து போதைப் பொருட்பாவனை பண்டையகாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது. அபின்,  கஞ்சா,  கள்ளு,  சாராயம், கசிப்பு, பீடி,  சிகரட்,  சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வந்ததை நாம் தெரிந்து வைத்துள்ளோம். சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருட்கள் ஒளடதமாகவும் பாவிக்கப்பட்டது. பொதுவாக களியாட்ட காலங்களில் மக்கள் போதை தரும் பானவகைகளையும்,  புகையிலை வஸ்துக்களையும் பாவித்தனர்.

world-anti-drugs-day.jpgஆனால், விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அவை நவீன உருவிலும், இலகுவான தன்மையிலும் தயாரிக்கப்பட்டன. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும்,  இவை இலகுவாகக் கடத்தவும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ப்பாக அமைந்தன. மேலைநாடுகளில தயாரிக்கப்பட்ட ஹெரோயின்,  கொகேய்ன்,  மர்ஜுவானா,  ஹஸீஸ் போன்ற நவீன போதைப்பொருட்களும் மற்றும் குளிசை வடிவத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எஸ்.டி. தூக்க மாத்திரை போன்ற வஸ்துக்களும் அதிமிகு போதையைத் தரும் மதுபானங்களும், சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. சில நாடுகளின் பொருளாதாரம் போதைப்பொருள் வியாபாரத்திலேயே தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஊசி மூலம் போதைப்பொருளை உடலிற் செலுத்திக் கொள்ளும் பழக்கம்,  தீவிர பாவனையாளரிடையே உள்ளது. இதனால் இப்படிப்பட்டவர்களிடத்தில் எய்ட்ஸ் வைரசும் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

இவைகள் பற்றி விளக்கம் வழங்கத்தக்க வகையில் 1988இல் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருளுக்கெதிரான உலக மகாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

world-anti-drugs-day.jpgஇலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை,  உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகள் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன. இலங்கையில் போதை பொருட்கள் 1980களில் பரவ ஆரம்பித்தது. இலங்கையில் ஹெரோயின் விற்பனையாளர் முதன் முதலில் 1981 மே 26 இல் 70கிராம் ஹெரோயினுடன் பேருவளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டை போதைப்பொருள்கள் அற்ற ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை,  குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக அண்மையில் விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி திட்டம் மட்டுமே போதுமானதல்ல,  சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் .போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது,  புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதே நேரம்  இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயினைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

2009 மே மாதத்தில் மாத்திரம் இலங்கையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது 1, 202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

world-anti-drugs-day.jpg1984இல் தாபிக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது. நாட்டைக் குட்டிச் சுவராக்கி,  குடும்ப வாழ்வைச் சீரழித்து நாட்டுக்குழைக்கக்கூடிய நல்லவர்களை நடைப்பிணமாக்கியுள்ள போதைப்பொருட்பாவனையை வேரோடு களைய வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வுமே இப்பாவனையை இல்லாதொழிக்கும்.  

போதைப் பொருளுக்குப் பதிலாக போதைக் குறைந்த சில பொருட்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளும் சிலநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை பலத்த விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளன. போதைப்பொருள் பயன்பாட்டை போதைப்பொருளை வைத்தே தடுக்க முயற்சிப்பது இயலாதது என்று திருப்பீடம் சர்வதேச சமுதாயத்தை எச்சரித்துள்ளது.

வியன்னாவில் கடந்த (2009) மார்ச் மாதம் நிறைவு பெற்ற போதைப் பொருள் தடுப்புக்கான ஐ.நா.அவையில் உரையாற்றிய மேய்ப்புப்பணி உதவிகளுக்கான திருப்பீட அவையின் செயலர் ஆயர் ஹோசே லூயிஸ் ரெத்ராதோ மர்க்கித்தே,  இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் உலகளாவிய கத்தோலிக்க நலப்பணி நிறுவனங்களின் அனுபவங்களின் அடிப்படையில் பேசும் போது இதனைத் தெரிவித்தார் . வீரியம் குறைந்த போதைப்பொருள்களை விநியோகிப்பதை அடிப்படையாகக் கொண்டு மிகவும் வீரியமான போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்குப் பல நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆயர் மர்க்கித்தே தெரிவித்தார் .

போதைப்பொருட் பாவனையானது பொதுவாக சிறுவர் பராயத்தில் ஏற்பட்டுவிடுவதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. பொதுவாக பாடசாலைப் பருவத்தில் தீய நண்பர்களின் சகவாசம் காரணமாக இது ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் புகைப்பிடித்தலுடன் ஆரம்பமாகும் இப்பழக்கம் படிப்படியாக போதைப் பொருட் பாவனை வரை வளர்வதாக கூறப்படுகின்றது.

world-anti-drugs-day.jpgபெற்றோர்களுக்கு பொதுவாக தங்கள் பிள்ளைகள் மது அருந்துதல், புகை பிடித்தல் அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடப் போகிறார்களோ என்ற ஐயம் இக்காலத்தில் தோன்றுவதற்கு இதுவே மூலகாரணமாகின்றது. இப்பழக்கத்துக்கு மேலைத்தியம், கீழைத்தேயம் என்று வித்தியாசமிருப்பதில்லை. 2005 இல் அமெரிக்காவில் போதைப்பொருட்கள் உபயோகிப்பதைப் பற்றிக் கண்காணிக்கும் கல்விக்கழகம் (National institute of drug abuse monitoring future), மாணவர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் மூலம் 1990 இல் மிகவும் அதிகமான மாணவர்கள் போதைப்பழக்கத்தில் இருந்ததாகவும் அரசாங்கமும் பாடசாலைகளும்,  சமூகநல அமைப்புகளும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையினால் புகைபிடிக்கும் பழக்கம்,  மற்றும் மது அருந்தும் பழக்கமும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவொரு நேர்மறை விளைவைக் காட்டிநின்றாலும்கூட, போதைப்பொருட் பாவனை இன்று புதிய வடிவத்தில் மாணவர்கள் மத்தியில் பரவிவருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது,  சில மருந்துவகைகளை மாணவர்கள் போதைக்காகப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களால் பரிந்திரை செய்யப்படும் ஆக்சிகோடின் (OxyContin), விகோடின் (Vicodin) போன்ற மருந்துகளின் உபயோகம் கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 2005 வருட முடிவில் விகோடின் என்ற மருந்தை உபயோகிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 12.5% சதவிகிதம் அதிகரித்திருந்ததாகவும் சில வகை தூக்கமருந்துகளின் உபயோகம் 25 % மாணவர்களிடையே அதிகரித்திருந்ததாகவும் ஆஸ்த்மாவிற்காகப் பரிந்துரைக்கப்படும் அட்வேர் போன்ற மருந்து பாவனை (இவை மூச்சிழுக்கப்படும்) அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்து.

 போதைப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதைவிட மருந்துவகைகளைப் பெற்றுக் கொள்வது எளிதானதே. தங்கள் பிள்ளைகள் மருந்துவகைகள் அதிகமாகப் பயன்படுத்துகின்றார்களா என்பதையும் பெற்றோர்கள் அவதானிக்க வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுக்குப் பதிலாக மருந்துப்பாவனை மேற்கத்திய நாடுகளில் அதிகரித்துக் காணப்பட்டபோதிலும்கூட, கீழைத்தேய நாடுகளிலும் இப்பாவனை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

world-anti-drugs-day.jpgசில அறிக்கைகளின்படி தமது பிள்ளைகளிடத்தில் தன்னம்பிக்கை குறைதல், படிப்பு மற்றும் விளையாட்டுக்களில் ஆர்வம் குறைதல்,  சோம்பல் மற்றும் சற்றே ஆர்வம் குறைந்த தோற்றம்,  பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் அதிக வாக்குவாதங்கள் செய்வது போன்றவை தன்மைகள் காணப்படின் கூடிய விழிப்புணர்வுடன் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளேயாயினும் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும்.   உங்கள் குழந்தைகள் மருந்துப் பொருட்களை அதிகமாகப் பயன் படுத்துவது தெரிந்தால் உடனே மருத்துவமனை,  போதைப்பொருட்கள் அடிமைத்தனத்தைப் போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பதற்கு மறக்காதீர்கள்.

நிவாரணக் கிராமங்களுக்கு ஐ.ஓ.எம். உதவி

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவ புலம் பெயர்தலுக்கான சர்வ தேச நிறுவனம் (IOM)  முன்வந்துள்ளது. இதற் காக இந்நிறுவனம் ஐந்து (5) தண்ணீர் பெளசர்களை யும் ஐந்து (5) மலசலம் அகற்றும் பவுசர்களையும் வழங்கியுள்ளது.

இவற்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். கொழும்பிலுள்ள ஐ. ஓ. எம். நிறுவனத்தில் இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (23) நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மொஹமட் அப்திகார் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் இவற்றை கையளித்தார்.

சர்வதேச கடற்பரப்பில் கப்டன் அலி கப்பல்

ships000.jpgமோதல் களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களுடன் வந்த கப்டன் அலி (வணங்கா மண்) கப்பல் இந்திய கடற்பரப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை இலங்கை கடற்படையினர், நிவாரணப் பொருட்களை இறக்காமலேயே திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது. 

‘ருவன்டி-20’ உலக லெவன் அணியில் டில்சான், மென்டிஸ் – ஐ.சி.சி. அறிவிப்பு

_dilshan_.jpgஇருபது ஓவர்களைக்கொண்ட ‘ருவன்டி-20’ கிரிக்கெட் போட்டிகளுக்கான ‘உலக லெவன்’ அணியில் இலங்கை வீரர்களான திலகரத்ன டில்ஷான் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த ‘ருவன்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சிறந்த வீரர்களைத் தெரிவு செய்து ‘உலக லெவன்’ கனவு அணியை அறிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக நடைபெற்ற இத்தொடரில் சம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்,  2ஆவது இடம்பெற்ற இலங்கை,  அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவான தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகளின் வீரர்கள் இந்த ‘உலக லெவன்’அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை,  கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ‘ருவன்டி-20’ தொடரில் சம்பியனான இந்திய அணி வீரர்கள் எவரும் இம்முறை ‘உலக லெவன்’ அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஐ.சி.சி. ~ருவன்டி-20’ உலக லெவன் அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
யூனிஸ்கான் (கப்டன்),  கம்ரன் அக்மல்,  ஷஹீத் அப்ரிடி,  உமர்குல் (பாகிஸ்தான்),  ஜெக் கலீஸ்,  டிவிலியர்ஸ்,  வெய்ன்ர்லொஸ், (தென்னாபிரிக்கா) திலகரத்ன டில்ஷான்,  அஜந்த மெண்டிஸ் (இலங்கை), கிறிஸ் கெயில், பிராவோ (மே.இ.தீவுகள்). 
 

இந்தியா சென்றுள்ள பசில் தலைமையிலான குழு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!

basil.jpgஇந்தியா விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு இந்திய உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயண், வெளிவிவகார செயலாளர் ஷிவ்சங்கர் மேனன். பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருடன் இலங்கைப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலமானார்

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அப்துல் மஜீத் மொஹமட் மர்லின் யெமனில் காலமானார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இவர் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி நிமிக்கப்பட்டார் 71 வயதான இவர் யெமனில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே அங்கு மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸாஹிராக் கல்லூரியன் பழைய மாணவரான இவர் 1966 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்தார். இஸ்லாமிய அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோர் தூதுவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நல்லடக்கம் செய்வதற்காக அவரது ஜனாஸாவை இங்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதித் தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானது. இதேவேளை,  ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி., ஐக்கிய சோசலிஷக் கட்சி,  மலையக மக்கள் முன்னணி,  ஜனசக்தி முன்னணி மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி.,  ஐக்கிய சோசலிஷக் கட்சி, சிங்களே மஹா சம்பத பூமிபுத்ர கட்சி, எக்சத் லங்கா மஹா சபாவ,  தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணி,  இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஜனசக்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தானியர்களில் மூன்றில் ஒருவரிடம் போலி விசாக்கள்

பாகிஸ் தானில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் மாணவர் விசாவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் சுற்றுலா விசாவிலும் பிசினெஸ் விசாவிலும் இங்கிலாந்து செல்கின்றனர். அவர்களில் 3ல் ஒருவர் போலி விசா வைத்து இருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானியர்களின் விசா விண்ணப்பங்களில் பெரும்பாலானவை நம்பகத்தன்மை இல்லாதவை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அனுப்பப்பட்ட அறிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை தடுப்பதற்காக அதிக அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஊழல் காரணமாக தான் இப்படி மோசடி நடக்கிறது. இதில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு இருக்கிறோம். அவர்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என் றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மறைமுக நோக்கங்களற்ற வன்னி மக்களுக்கான போராட்டங்கள் அவசியம்! த ஜெயபாலன்

Veddaiyadu Vilayaduஇன்று (யூன் 24 2009) மாலை நான்கு மணி முதல் மாலை ஆறு மணிவரை லண்டனில் உள்ள கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன்பாக வன்னியில் உள்ள இடம்பெயர்வு முகாம்களை உடனடியாக மூடி மக்களை மீளக் குடியேற்றும்படி கோரி போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதே நிதியுதவிகளுக்கு என்ன நடக்கின்றது என்றும் இப்போராட்டம் கேள்வி எழுப்பி உள்ளது. ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டமே புலிகளின் அரசியல் நலன்களுக்கு வெளியே வன்னி மக்களின் நலனில் அக்கறையுடன் நடத்தப்படுகின்ற போராட்டமாகும். ஸ்ரொப் தி ஸ்லோட்டர் ஒப் ரமில்ஸ் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தற்போது முகாமில் உள்ள மக்களை வெளியேற்றும்படி கோரும் இப்போராட்டத்தை ரமிழ் சொலிடாரிற்றி என்பதன் கீழ் முன்னெடுக்கின்றனர். இப்போராட்டங்களில் மட்டுமே தமிழரல்லாத பிற சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான ஆதரவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான போராட்டம் பிராஸ்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளின் கூட்டான சமூகப் பாதுகாப்பு அமைப்பினால் Comité de Défense Social முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யூன் 20ல் சர்வதேச அகதிகள் தினம். கடந்த ஆண்டு முடிவு வரை 42 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளதாக யுஎன்எச்சிஆர் குறிப்பிடுகின்றது. இவர்களில் 26 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளினுள்ளேயே தமது வாழ்விடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கின்றனர். ஏனையவர்கள் அகதிகளாகவும் அரசியல் தஞ்சம் கோரியும் வேறு நாடுகளில் வாழ்கின்றனரர். 2008 முடிவில் 504 800 பேர் இடம்பெயர்க்கப்பட்டு வாழ்ந்தனர். இவர்களில் வன்னி மக்கள் 300 000 பேர்வரை தற்போது வடக்கு கிழக்கில் உள்ள 20 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் 1990 ஒக்ரோபர் 20ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய வடக்கு மாவட்டங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட் முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளத்திலும் கிழக்கிலும் வாழ்கின்றனர்.

மே 18ல் பிரபாகரனின் மரணத்துடன் முடிவுக்கு வந்த இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசு சர்வதேச யுத்த விதிகளை மீறி தனது சொந்த மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் அந்த மக்கள் செறிந்திருந்த பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதை சர்வதேச உரிமை அமைப்புகள் அனைத்துமே சுட்டிக்காட்டி உள்ளன. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் எவற்றையும் அனுமதிக்காமல் சாட்சியமற்ற யுத்தத்தை மனிதப்படுகொலைகளை நிகழ்தியதாக அவை சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளன.

அதே சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களைப் பாதுகாப்பதற்காக மக்களை மனிதக் கேடயங்களாக்கி மக்கள் மத்தியில் இருந்தே தாக்குதலை நடத்தி மனித அவலம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். இதனை முழுமையாக அறிந்திருந்த பிரிஎப் ரிவைஓ மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு அமைப்புக்கள் வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி கோராமல் வன்னி மக்களும் புலிகளும் ஒன்று, மக்கள் சுயவிருப்பிலேயே யுத்தப் பகுதிக்குள் இருக்கின்றனர் என பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர்.

20 000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு பிரிஎப் உம் பொறுப்புடையது என தீபம் தொலைக்காட்சியில் யூன் 19ல் இடம்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ‘தேசம்நெற்’ சார்பிலும் ஏனைய நேயர்கள் சிலரும் கேள்வி எழுப்பிய போது பிரிஎப் சார்பில் கலந்துகொண்ட பத்மநாதன் விடுதலைப் ‘புலிகள் யார்? அவர்களும் எம்மவர்கள்தானே. அவர்களை விட்டுவிட்டு எப்படி மக்களை வெளியேறும்படி கேட்க முடியும்.’ என்று பதிலளித்தார். விடுதலைப் புலிகளுக்கு அந்த மக்களை கேடயங்களாக வைத்திருக்க பிரிஎப் உம் உடந்தையாக இருந்ததை அப்பதில் தெளிவாக்கி உள்ளது. அதே நிகழ்ச்சியில் பிரிஎப் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் வழங்கிய மிகைப்படுத்திய பொய்யான தகவல்களே இவ்வளவு மோசமான அழிவுக்கு இட்டுச்சென்றது அதற்கு பிரிஎப் வன்னி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பத்மநாதனிடம் பதில் இருக்கவில்லை.

நடந்து முடிந்த மனித உரிமை மீறல்களுக்கும் படுகொலைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சம பொறுப்புடையவர்கள் என்பது பரவலாக அனைத்து மனிதாபிமான மற்றும் உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அப்படியான நிலையில் சிங்கங் கொடியையும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் கொண்டுவந்து மனித உரிமை பற்றி பேசுவது எவ்வளவு கேலியானதோ அதே போல் புலிக்கொடியையும் அதன் தலைவர் பிரபாகரனது படத்தையும் கொண்டு வந்து மனித உரிமைப் போராட்டம் செய்வதும் கேலிக்குரியதே. வன்னி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த இவை எப்போதும் மனிதஉரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

அந்த வகையில் வன்னி மக்களின் இரத்தக் கறைபடியாத ரமிழ் சொலிடாரிற்ரி போன்ற அமைப்புகளின் போராட்டங்களே மனித உரிமையை வென்றெடுக்க வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்காக குரல் எழுப்ப தகமையுடையன. இப்போராட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவினதாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாயம் கௌரவிக்கப்படும்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வன்னி முகாம்களில் உள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு முகாம் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையின் குறைந்தபட்ச விடயங்கள் கூட இன்னமும் முகாம்களில் பிரச்சினையாகவே உள்ளது. சர்வதேச உதவி அமைப்புகளைக் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவர்கள் பணியாற்றுவதைத் தடுக்கின்றது. அரசு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையில் வன்னி முகாம்களை பரமரிப்பதில் நிதித் தட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது. ஆனாலும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையும் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவில்லை. இவை இலங்கையரசு தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே நடத்துகின்றது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இடம்பெயர்ந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வை மட்டுமே கவனத்திற்கொண்டு அம்மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் மறைமுக நோக்கங்களற்ற ரமிழ் சொலிடாரிற்றி போன்ற அமைப்புகளின் போராட்டங்கள் இலங்கை அரசு மீது தொடர்ச்சியான அழுத்தங்களை மேற்கொள்வதற்கு அவசியம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளது.

lttelogo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக பட்டியல் படுத்துவதாக இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அமைதி வழிப் போராட்டங்களின் மூலம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்து பாராட்டுக்குரியதென இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி கிரேஜ் சுவில்லியன் தெரிவித்துள்ளார்.
 
எனினும், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.