தாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது.
இதுவரை போர் நிறுத்தப்படாமல் சிறீலங்கா அரசானது தொடர்ந்து வன்னியில் தமிழ்மக்கள்மீது தாக்குதல்களை நடாத்தியதை அறிந்து நேற்று மாலையிலிருந்து மூன்று தாய்மார், இரண்டு ஆண்கள் என ஐந்து பொதுமக்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இதற்கு காவற்துறை அனுமதி மறுத்திருந்தது. உண்ணாவிரதம் இருந்தவர்களையும் அவர்களிற்கு ஆதரவாக போராட்டத்தினை நடாத்தியவர்களையும் கலைந்து போகுமாறும் இல்லையேல் கைது செய்வோம் எனவும் காவற்துறை எச்சரித்திருந்தது.
இருந்தும் எமது உறவுகள் படுகொலை செய்யப்படுகின்றபொழுது இதனை உடன் தடுத்து நிறுத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என காவற்துறைக்கு அறிவித்து போராட்டத்தில் உறுதியாக இருந்தனர்.
இதன்பின் அனைவரையும் சுற்றிவளைத்து காவற்துறையினர் கைது செய்தபொழுது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இக் கைதை எதிர்த்து கோசங்களை எழுப்பியபொழுது அம்மாணவர்களை காவற்துறையினர் தாக்கி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். முப்பது பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
பிரித்தானியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மாணவர்கள் ஐ.நா சபைக்கு அனுப்பிவைக்கப்படுவர்
இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெற்று வரும் போராட்டம் 5வது நாளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப் போராட்டத்துடன் இணைந்த வகையில் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று 4ஆவது நாளாகும்
பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும், இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இன்று 4ஆவது நாளாகவும் தொடர்ந்து நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன், சிவதர்சன் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக போவதை அறிந்து காவற்துறை மருத்துவர்கள் அடிக்கடி இவர்களின் உடல்நிலையை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.
இறுதியாக, நீர் அருந்தாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என தெரிவித்திருந்தனர். இதனை அறிந்த மிட்சம் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மைக் டொனால்ட் நேரடியாக உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வந்து நீரை அருந்துமாறு வேண்டிக்கொண்டார்.
ஆனால், தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்த உடனடிப் போர் நிறுத்தத்தை இம்மாணவர்கள் வலியுறுத்தினர். இறுதியாக, அடுத்த வாரம் அமெரிக்கா, நியூயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ. நா சபைக்கு இம்மாணவர்களை அனுப்புவதாக திரு.மைக் டொனால்ட் உறுதியளித்தார். இதன்பின்னர், இம்மாணவர்கள் நீர் அருந்தி உண்ணாவிரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை சிவதர்ஷன் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை தந்து சந்திப்பை நடத்தியிருக்கின்றார். இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பிற்கு செல்ல வேண்டிய காரணத்தால் சிவதர்சன் சிவகுமாரின் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரித்தானிய அரசின் சார்பில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். உறுதிமொழியை அடுத்தே சிவதர்சன் சிவகுமாரின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வார் என்று பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியையும் இறக்குமாறு பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடியும் இறக்கப்பட்டுள்ளதுடன் ஒலிபெருக்கிகளில் முழக்கமிடுவதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் நிறுத்தியுள்ளனர்.
நியுசிலாந்தில் மூவர் உண்ணாநிலைப் போராட்டம்
நியுசிலாந்தில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக நியுசிலாந்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் மூவர் உண்ணாநிலை போராட்டத்தை நேற்றிலிருந்து ஆரம்பித்திருந்தனர்.
பிரான்சில் புதிய இடத்தில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வில் உண்ணாவிரதம்.
கடந்த திங்கட்கிழமையில் இருந்து, இன்வலிட் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சியான கவனயீர்ப்பு நிகழ்வானது, நேற்றுப் புதன்கிழமையில் இருந்து ஈவிள் கோபுரம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் தொடரப்பட்டது. பேரெழுச்சியுடன் நடைபெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை நிலவரம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இரவு முதல் பிரான்ஸில் தமிழர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். ரவிராஜ் ஆனந்தகுமாரசாமி, வர்ணன் விக்கினேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதே வேளை வியாழக்கிழமை (09.04.2009) பாரீஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டமும், உண்ணாநிலைப் போராட்டமும் தொடரப்பட்டு வருவதுடன், மேலும் நவநீதம் சண்முகராஜா, செல்வகுமார் அல்பேட் ஆகியோரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.