April

April

ஜனாதிபதி மஹிந்த ஒரு துணிகரமான தலைவர்

karuna_amman.jpg கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு துணிச்சல் மிக்க தலைவர் என சமூக நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சிப் பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்தமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வாகும். ஏனெனில் இதுவரை காலமும் நாட்டின் எந்தவொரு ஜனாதிபதியும் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்யவில்லை. ஆனால் எமது ஜனாதிபதி புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கள நிலைவரங்களை அவதானித்ததோடு, அங்குள்ள படை வீரர்களுடன் சந்தோஷமாக புத்தாண்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளார். இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

ஏனெனில் இன்று அங்குள்ள படையினர் தமது உறவுகளையும் குடும்பங்களையும் பிரிந்த நிலையில் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இணைந்து புத்தாண்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

புலிகளிடமிருந்து வாகரைப் பிரதேசம் கைப்பற்றப்பட்டபோது கூட ஜனாதிபதி அங்கும் நேரடியாக விஜயம் செய்திருந்தார். இப்போது கிளிநொச்சிக்கும் சென்றுள்ளார். இவ்வாறான பல திருப்புமுனைகளை அவர் ஏற்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி மேற்கொள்ளும் இவ்வாறான விஜயங்கள் மூலம் எதிர்காலத்தில் வடக்கிலும் பல அபிவிருத்திகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அப்பிரதேசங்களை நேரடியாகச் சென்று பார்க்கும்போதுதான் அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

தற்போது வன்னிப் பிரதேசம் முற்றாக மீட்கப்பட்டுள்ள நிலையில் வடக்கின் வசந்தம் எனும் திட்டத்தினூடாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் விரைவில் அப்பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக மாறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 இல் மே மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலைபற்றி ஜெயின் ஆணைக்குழு விசாரணை நடத்தியது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு நளினி, முருகன், சாந்தன், ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி, அறிவு ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

ஜெயின் ஆணைக்குழு விசாரணை 1998 இல் தான் முடிந்தது. அதற்கு முன்பே 7 பேருக்கும் பூந்தமல்லி நீதிமன்றம் தண்டனை விதித்துவிட்டது. ஜெயின் ஆணைக்குழு அறிக்கையில் புகார் கூறப்பட்ட சந்திராசுவாமி, சுப்பிரமணியசாமி ஆகியோரை விட்டுவிட்டார்கள். எனவே தண்டனை பெற்ற நளினி, முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

bharathiraja1.jpgஇலங்கை போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை.என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

உண்ணாவிரத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் -வைகோ

india-election.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டுமே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ம.தி.மு.க.பொதுச் செயலரும் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான வைகோ தெரிவித்தார். ராஜபாளையம் அடுத்த சிவலிங்காபுரத்தில் தனது தேர்தலில் பிரசாரத்தை புதன்கிழமை துவக்கி வைகோ பேசியதாவது;

இலங்கை அரசு அறிவித்த இருநாள் போர்நிறுத்தம் வெறும் கண்துடைப்பாகும், இந்த இரு நாட்களில் இலங்கை இராணுவம் காங்கிரஸ் கட்சியின் பேராதரவுடன் ஆயுதங்களைப் பலப்படுத்தியுள்ளது.இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவும் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுக்கவும் உங்களுக்கு சேவை செய்யவும் என்னை வெற்றிபெறச்செய்யுங்கள்.

நதிநீர் இணைப்புத்திட்டத்தை முதன்முதலில் பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறி அந்த மசோதா நிறைவேறச் செய்ததில் எனக்கு முக்கியபங்கு உண்டு. தமிழகத்தில் மின்வெட்டு,உரத்தட்டுப்பாடு போன்றவற்றால் விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். நாட்டிலேயே தென்தமிழகத்தில் தான் விவசாய நிலங்கள் அதிகம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்.இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

பொலிஸ் அத்தியட்சர் ஜமால்தீனின் கொலை – கல்முனை மாநகர சபையில் அனுதாப பிரேரணை

jamaldeen.jpg மருதமுனையைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சர் எச்.எஸ். ஜமால்தீன் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகுமென கல்முனை மாநகர சபையின் மாதாந்த செயலமர்வில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொலிஸ் அத்தியட்சர் ஜமால்தீனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை ஒன்று செயலமர்வில் முன்மொழியப்பட்டபோது பிரேரணை மீது உரையாற்றிய உறுப்பினர்கள் இக்கருத்தை வெளியிட்டனர்.

மாநகர சபையின் பிரதிமேயர் அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா மேற்படி அனுதாபப் பிரேரணையை முன்மொழிய, தமிழரசுக்கட்சி உறுப்பினர் காத்தமுத்து கணேஷ் வழிமொழிந்து சபையில் ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

உண்ணா மறுப்புப் போராட்டத்தை ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றார் ஈழவேந்தன் ..

eelaventhan_.jpgமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க ஈழவேந்தன் தென்னாபிரிக்கா, டேர்பன் நகரில் அமைந்துள்ள அருட்பாக் கழகத்தில் தனது உண்ணா மறுப்புப் போராட்டத்தை ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றார். அவரது உடல்நிலை தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளமையும், அவரது தோற்றத்தில் களைப்புத் தன்மையையும் அவதானிக்கக் கூடியவாறு இருந்தது.

கடந்த சில நாட்களில், தமிழின உணர்வாளர் பழ. நெடுமாறான் உள்ளடங்கலாக பலர் இந்தியாவிலிருந்து தொலைபேசி மூலம் அவருக்கு ஆசி வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.  தனது உண்ணா மறுப்பு முயற்சி பயனளிக்காமல் போகவில்லை. தென்னாபிரிக்க அரசியல் வட்டாரத்தில், தமிழ்த் தேசியப் பிரச்சினை எந்தவித தாமதமும் இல்லாமல் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்துநிலை உருவாகியுள்ளது.

அவர்கள் கொடுத்த செய்தி முன்னுரிமைக்காக ஊடகங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என ஈழவேந்தன் குறிப்பிட்டார்.

450 பேர் கிறீன் ஓசியன் கப்பல் மூலமாக புல்மோட்டை வைத்தியசாலைக்கு

taking-to-green-ocean.jpgபுது மாத்தளன் வைத்தியசாலையில் இருந்து போர்க்காயமடைந்தவர்கள் உட்பட்ட நோயாளர்களை அரச கட்டுப்பாட்டில் உள்ள வைத்திய சாலைகளுக்கு ஐ.சி.ஆர்.சியின் மனிதாபிமான சேவையின் மூலம் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கையில் மேலும் 450 பேர் இன்று புல்மோட்டை வைத்தியசாலைக்கு கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து புதுமாத்தளனுக்கு இன்று காலை சென்றடைந்த கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகவே இந்த நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பல் நாளையும் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபடும் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘எழவு வீட்டில் ஓட்டு கேட்கும் சோனியா’ – பாரதிராஜா

bharathiraja1.jpg இலங்கையில் போரை நிறுத்தி விட்டுத்தான் தமிழகத்திற்கு சோனியா காந்தி வர வேண்டும். அதை விட்டு விட்டு எழவு வீட்டில் வந்து அவர் ஓட்டு கேட்கக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், சென்னையில், மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட திரையுலகினர் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாரதிராஜாவும், சத்யராஜும் உணர்ச்சிகரமாக பேசினார்.

ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசாத கூட்டமைப்பினர் இந்திய தலைமைகளுடன் பேசுவதில் அர்த்தமில்லை – அரசாங்கம் அறிவிப்பு

axman-yappa.jpg“தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழமாநிலம் அமைய பாடுபடுவோம் -அதிமுக தேர்தல் அறிக்கை

jayalalitha.jpgஇலங்கையில் இனப்படுகொலையை நிறுத்தி, அமைதி திரும்ப பாடுபடுவோம். அது முடியாவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய பாடுபடுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத் திடலில் நடந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்…

– பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்கு சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும்.

-இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.

– அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.

– தமிழ் உட்பட எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள நாட்டின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்கவும், அத்துடன் நேரு அளித்துள்ள உறுதிப்படி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை மாற்று மொழியாக ஆங்கிலம் நீடிக்கவும் வழி வகை செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரும்படி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள அரசிடம் அ.தி.மு.க. வலியுறுத்தும்.

– கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

– இன்றைய திட்டத்தின்படி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்காக பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட ராமர் பாலம் இடிக்கப்படும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தை அதிமுக ரத்து செய்யும்.

இதற்குப் பதில், தென் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் இருந்து சென்னை அல்லது பெங்களூருக்கு சரக்குகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அதிமுக கொண்டு வரும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு மாற்று துறைமுகமாக மேம்படுத்தப்படும்.

இவ்வாறும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.