12

12

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்த உடன்படிக்கையை வெளிப்படுத்த வேண்டும்- லக்ஷ்மன் கிரியெல்ல

kiriella.jpgநாட்டின் நிதி நிலைவரமானது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது நாட்டின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளன. இதற்கு அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கையே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்படவுள்ள 1,500 மில்லியன் டொலர் கடன் தொகையானது, எந்த அடிப்படையில் அல்லது எவ்வாறான உடன்படிக்கையின் கீழ் பெறப்பட்டது என்பதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி அரசாங்கத்தை கோருகின்றது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது எமது நாட்டுக்கு 4500 மில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைக்கவிருந்தது. டோக்கியோ பேச்சுவார்த்தையின் பின்னர் மேற்படி நிதி கிடைக்கும் தருணத்தில் இன்றைய அரச தரப்பினரும் ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய ஆகிய இனவாதக் கட்சிகளும் இணைந்து கொண்டு இந்த நிதி திரும்பிச் செல்வதற்கான சகல சூழ்ச்சிகளையும் மேற்கொண்டன. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதாக பிரசாரங்களை மேற்கொண்டன. ஆனால், கடந்த மூன்று வருட காலமாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டமைப்பு அரசாங்கமானது நாட்டையும் மக்களையும் கொள்ளையடித்ததே தவிர வேறெதனையும் செய்யவில்லை.

சர்வதேச மற்றும் உள்ளூர் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களை கொள்ளையடித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளது. தற்போது அரசாங்கம் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டித் தொகையாக 6,000 கோடி ரூபாவை செலுத்தவிருக்கின்ற அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1,900 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் விடயத்தில் கையை விரித்ததையடுத்தே தற்போது சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இருக்கின்ற இன்றைய கட்டத்தில், தமது அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களில் நம்பியிருக்கவில்லை என்றும், அப்படியான கடன்கள் தமக்குத் தேவையில்லையென்றும் கூறிவந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச கொடுக்கல் வாங்கலின் அவசியத்தை ஐக்கிய தேசியக் கட்சி உணர்ந்திருந்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத கூட்டமைப்பு அரசாங்கம் எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு இனாமாகக் கிடைக்கவிருந்த நிதி தொடர்பில் கூச்சலிட்ட ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச குழுவினர், தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள கபடத் தன்மை குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர் எனக் கேட்க விரும்புகிறேன். எமது நாட்டின் நிதி நிலைவரம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இன்னும் இரண்டு வார காலத்திற்கே நாட்டைக் கொண்டு நடத்தமுடியாத நிலையை அரசாங்கம் எட்டியுள்ளது. இதற்காகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறத் துடிக்கின்றது. இந்த கடன் திட்டத்தில் சந்தேகம் நிலவுகின்றது.

வெளிநாட்டுக் கடன்களை நம்பியிருக்கவில்லையென பொய்கூறி மக்களை ஏமாற்றியவர்கள் இப்போது எவ்வாறான உடன்படிக்கையின் அடிப்படையில் மேற்படி கடனைப் பெற்றுக்கொள்ளப் போகின்றனர் என்பது எவரும் அறியாத விடயமாகும். எனவே, இதன் ரகசியத்தை வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது என்றார்.

பெருந்தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டுத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

sri-lanka-upcountry.jpgநுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பொகவந்தலாவை தெரேசியா, கிலானி மோறார் ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தொழிலாளர் தேசிய சங்கத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களை நாம் வழங்கிய போது பெரும் வரவேற்புக் கிடைத்தது. உயர்தர மாணவர்கள் மேலதிக அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் வழங்கிய இந்நூல்கள் தமக்குப் பெரும் பயனை அளித்ததாக எமக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய கல்வி மேம்பாட்டுத்திட்டங்களை நாம் எவ்வித அரசியல் தொழிற்சங்கப் பேதங்களுமின்றியே மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு நூல்களை வழங்கும் திட்டத்தினை இவ்வருடமும் நாம் மேற்கொள்ளவுள்ளோம். இதற்குப் பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இன்று வறுமையினால் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதில் கூட மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு மலையகத்தின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான உதவிகள் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவியாக அமையும்.

இந்திய மருத்துவ குழு திருகோணமலை சென்றுள்ளது

india-dr.jpgஅமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இலங்கை வந்துள்ள இந்திய மருத்துவ உதவிக் குழு திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சென்றுள்ளது.  இலங்கையின் வடக்கே இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவது 52 பேர் கொண்ட இந்திய மருத்துவ குழுவின் நோக்கம்.

எட்டு விசேட மருத்துவர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் உட்பட சகல ஆளணி வசதிகளைக் கொண்டு சுயமாக இயங்கக்கூடியது இந்த மருத்துவக்குழு என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழு தன்னுடன் சகல மருத்துவப் பொருட்கள் முதற்கொண்டு, சத்திரசிகிச்சை உபகரணங்கள் வரையான சகல வசதிகளையும் எடுத்துவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆளணி உபகரணங்கள் யாவும் சுமார் 20 லொறிகளில் ஏற்கனவே புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அநேகமான இவ்வார இறுதிக்கு முன்பதாக இவர்கள் தம்முடைய சேவையை ஆரம்ப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் வசந்த்குமார் தலைமையிலான இந்த இந்திய மருத்துவக்குழு இன்று காலை புல்மோட்டைக்குப் புறப்படுமுன்னதாக கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் இலங்கை சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களை வரவேற்று வழியனுப்பிவைத்தார்.

இந்த நிகழ்வின் போது இந்தியாவினால் வழங்கப்பட்ட சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்களையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது. இந்தக் குழு ஒரு மாத காலத்திற்கே இங்கு தங்கியிருக்குமென்று தற்போதைக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றாலும் தேவைக்கேற்ப காலம் நீடிக்கப்படலாம் என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

பொதுமக்கள், அதிமுக்கியஸ்தர்கள் பங்குபற்றும் கூட்டங்களுக்கு பாதுகாப்பு முன் அனுமதி கட்டாயம்

udaya_nanayakkara_.jpgபொது மக்கள் பங்குபற்றும் பொது வைபவங்கள், பொதுக் கூட்டங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை பாதுகாப்பு அமைச்சு நேற்று முதல் அமுல்படுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்ற அதேசமயம் அதன் உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் அந்தக் கூட்டம் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய மீலாதுந் நபி விழாவின் போது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து அரசாங்கமும், பாதுகாப்பு அமைச்சும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியையும், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கும் பட்சத்தில் அந்த வைபவம் சிறப்பாக நடைபெற்று முடிவதற்குத் தேவையான போது பாதுகாப்புகளை வழங்க முடிவதுடன், இது போன்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பேரழிவுகளிலிருந்து முன் கூட்டியே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை எதிர்நோக்கியுள்ள அதேசமயம் அதனையொட்டிய பல்வேறு முக்கிய சமய நிகழ்வுகள், விளையாட்டு வைபவமும் இடம்பெறவுள்ளன. இதன் போதும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே தெரிவித்தார்.

தேசிய மட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், அமைச்சர்கள் மற்றும் அதி முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு மாத்திரமின்றி பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடும் கூட்டம் மற்றும் நிகழ்வுகளின் போதும், ஊர்வலங்களின் போதும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

வன்னி மனிதாபிமான படை நடவடிக்கைகள் மூலம் புலிகள் முற்றாக முடக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்துள்ள புலிகள் இது போன்ற தாக்குதல்களை நடத்தி பதற்ற நிலைமைகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கலாம். இவற்றைக் கருத்திற் கொண்டும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் வகையிலேயே இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இடிமின்னலுடன் பலத்த காற்று வீசும்; நிக்கவெரட்டியவில் 10 வீடுகள் சேதம்

climate.jpgநீரேந்து பகுதிகள் உட்பட மேல், மத்திய, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. இடியும் கடும் காற்று வீசும் எனவும் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

கடும் காற்று வீசியதன் காரணமாக நிக்கவெரட்டிய பகுதியில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீட்டு கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு சில இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வரட்சியான காலநிலை காணப்பட்டதால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதிகளில் போதியளவு மழை பெய்து வருவதாக காலநிலை அவதான நிலையம் கூறியது.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடும் காற்று வீசும் அபாயம் உள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது.

இணையத்தளங்கள், பத்திரிகைகளை அழித்தொழித்துவிடும் சாத்தியம்

computer.jpgபத்திரிகை கள் இணையத்தளத்தில் தமது பதிப்புகளை வெளியிடும் நிலைமைக்கு தம்மை மாற்றிக்கொள்ளாவிடின் நாளடைவில் அழிந்தொழிந்துவிடும் சாத்தியமுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் பேராசிரியரான அலன் நையிற்றால் நடத்தப்பட்ட இணையத்தளமூடான ஆய்வொன்றின் பிரகாரம் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக பேராசிரியர் அலன் நைற் தெரிவிக்கையில்; இருநூறுக்கும் மேற்பட்ட முதலாண்டு ஊடகவியல் மாணவர்கள் சர்வதேச ரீதியிலான இந்த இணையத்தள ஆய்வில் செய்தித்தாள் வாசிப்பது தொடர்பான தமது கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த இளம் ஊடகவியலாளர்கள் 21 வயதிற்கு குறைவானவர்களாக இருப்பதுடன் அவர்களில் 90 வீதமானோர் பத்திரிகை வாசிப்பதை விரும்பவில்லை. ஆனால் ஊடகவியலாளர்களாவதற்கு விரும்புகின்றனர். அத்தொகையில் 60 வீதமானவர்கள் வாரத்திற்கு ஒருதடவையோ அல்லது அதற்குக் குறைவாகவோ பத்திரிகை வாசிக்கின்றனர்.

ஆனாலும் 95 வீதமானவர்கள் செய்திகள் தொடர்பில் ஆர்வம் உடையவர்களாக உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வர்த்தகத் தொலைக்காட்சிச் சேவைகளின் செய்திகளே மூலமாக உள்ளதுடன் 50 வீதமானோர் ஒரு நாளைக்கு ஒருதடவையேனும் தொலைக்காட்சிச் செய்தியை பார்க்கின்றனர்.  தொலைக்காட்சிச் செய்திச் சேவைக்கு அடுத்தபடியாக இணையத்தளங்களூடான செய்தியினை இம்மாணவர்கள் விரும்பிப்பார்க்கின்றதுடன் கூகுள் (Google) நைன்ஸ்மென் (Ninesmen) பேஸ்புக் (Face book) விக்கி பீடியா (wikipedia) ஆகிய தளங்கள் பிரபலமானவையாகவும் உள்ளன.

computer.jpgஇதன் மூலம் ஊடகவியல் கற்கைநெறியைப் பயிலும் மாணவர்கள் கூட பத்திரிகைகளை வாசிப்பதில்லைபென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி, இணையத்தளங்களில் பிரசுரிப்பதற்கான விளம்பர வருமானங்களின் இழப்பு ஆகியவற்றால் பத்திரிகைக்குள்ள அச்சுறுத்தலைவிட இவ்விடயம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில் ஊடகவியலாளர்களே எதிர்காலத்தில் பத்திரிகைகளை வாசிக்காவிடில் பத்திரிகைகளை வாசிப்பது யாரென அலன் நைற் கேள்வி எழுப்பியுள்ளார்.