March

March

காயமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சை

pak-2nd-test.jpg
மருத்துவமனையில் இலங்கை கிரிக்கெட் வீரர் பரணவிதாரண பாகிஸ்தானின் லாகூர் நகரில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து தாயகம் திரும்பியுள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை தேறிவருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தன, உபதலைவர் குமார் சங்கக்கார, ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தரங்க பரணவிதாரண, மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரர்களான திலான் சமரவீர, வேகப்பந்து வீச்சாளர்களான திலின துஷார, சுரங்க லக்மால், சுழல்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் ஆகியோருடன், அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர் பால் ஃபர்பிரீஸ் போன்றோர் காயம்பட்டிருந்தனர்.

புதனன்று நாடு திரும்பிய இவர்களில் நால்வர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தனர். தாக்குதலின் பின்னர் உடல் உளரீதியாக சோர்வடைந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தத்தமது பழைய நிலைக்குத் திரும்பிவருகிறார்கள் என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரீ.எம்.வி.பி ஆயுதப்பிரிவு கலைப்பு

tmvp2.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரீ. எம். வீ. பி) ஆயுதப் பிரிவு உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியிருக்கும் ஆயுதங்கள் நாளை மட்டக்களப்பில் வைத்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுமென ரீ. எம். வீ. பி. கட்சியின் பேச்சாளர் ஆஷாத் மெளலானா தெரிவித்தார். முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கட்சியின் உயர்பீட செயற்குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சரின் தலைமையிலான மாகாணசபைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரீ. எம். வி. பி. ஆயுதப்பிரிவு உறுப்பினர்களாக இருந்தவர்களின் எதிர்காலம் தொடர்பில் ஐ. ஓ. எம். நிறுவனத்துடனும் பாதுகாப்பு அமைச்சுடனும் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு, நிதி உதவிகள் மூலம் சிறந்த எதிர்காலம் உத்தரவாதப் படுத்தப்பட்டிருக்கிறது.

அரச பாதுகாப்புப் படையினருடன் இணைய விரும்புபவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும். கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஏனைய சட்ட விரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் விரைவில் களையுமென தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

புலிகளுக்கு பெரும் ஆளணிப்பற்றாக்குறை; சூசை, பொட்டு உட்பட சிரேஷ்ட தலைவர்கள் களத்தில்

uthaya_nanayakara_.jpgபுலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகளும், அதிரடி படை அணியும் பல முனைகளில் வேகமாக முன்னேறிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினரின் கடுமையான தாக்குதல்களையும், படை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் கள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், கடற் புலிகளின் தலைவர் சூசை கடல் வழி நடவடிக்கைகளிலும், லோரன்ஸ், பொட்டு அம்மான் மற்றும் விதுஷன் ஆகியோர் உட்பட சிரேஷ்ட தலைவர்கள் தரைவழி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனரென்று புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுவதாகவும் அவர்தெரிவித்தார்.

ஏ-35 வீதியின் வடக்கே அதாவது புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்காக இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவும், ஏ-35 வீதியின் தெற்கே அதாவது புதுக்குடியிருப்பு சந்திக்கு தெற்காக இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான படைப் பிரிவும் புலிகளின் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வேகமாக முன்னேறி வரு கின்றனர்.

இந்த இரு படைப் பிரிவுகளுக்கும் உதவியாக இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சாலையை மற்றும் புதுமாத்தளன் வட பகுதியை கைப்பற்றிய இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படைப்பிரிவின் புதுமாத்தளன் தென்பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

கிழக்கு கடலோரமாக முன்னேறும் படையினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலிகள் பாதுகாப்பு மதில்களை அமைத்து வருகின்ற போதிலும் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்கள் மூலம் அதனை தகர்த்து வருகின்றனர் என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலய பகுதியிலிருந்து புலிகள் இராணுவத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்மிடமிருந்த சகல கோட்டைகளையும் பிரதான நகர்களையும் முற்றாக இழந்து குறுகிய காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிடப்பட்டுள்ள புலிகள் தற்பொழுது ஆளணி பற்றாக்குறையை எதிர் நோக்கியுள்ளமை அவர்களின் சிரேஷ்ட தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளமையை காண்பிப்பதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

இதேவேளை புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலின் போதும் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஜெயலலிதா உண்ணாவிரதம்: இலங்கை எம்.பி. கருத்து

05-jayalalitha.jpg
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 10ம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து இலங்கை தமிழ் எம்.பி.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருச்சி உழவர்சந்தையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், – இலங்கையில் தமிழர்களை காப்பற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளதாக தெரிவித்தார் .

அவருடைய அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த போராட்டம் இலங்கை தமிழர் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும். இதன்மூலமாக மத்திய,மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படும்’ என்றும் தெரிவித்தார்.

யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து மக்களை மீளக்குடியமர்த்துவதே அரசின் இலக்கு

anura_priyadarshana_yapa.jpgவன்னியில் யுத்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் போதே உண்மையான சந்தோசத்தை அவர்கள் அடைவார்கள். இதனை இலக்காகக் கொண்டே அரசாங்கம் செயற்படுகிறது என ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

புலிகளின் பிடிக்குள்ளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் இல்லையென்றாலும் எமது முழு சக்தியையும் பிரயோகித்து அவர்களுக்குரிய பாதுகாப்பு, உணவு, இருப்பிட வசதி, அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து வருகிறது எனவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவினர் அரச அதிகாரிகளின் வழிகாட்டலுடன் சென்று நேரில் நிவாரணக் கிராமங்களை பார்வையிட்டனர். வெகுவாகப் பாராட்டியும் உள்ளனர். ஆனால் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அங்கு மக்கள் வசதியின்றியும் உண்ண உணவின்றியும், மலசலம் கழிக்கக் கூட வசதியில்லாத நிலை இருப்பதாக கூறியிருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் கேட்டதுடன் இம்மக்களை எவ்வளவு காலம் நிவாரணக் கிராமங்களில் வைத்திருக்கப் போகிர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அரச கட்டுப்பாட்டுக்குள் வரும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதுடன் தேவையான உணவு, உடை இருப்பிட வசதிகளையும் எம்மால் இயன்றளவு வழங்குகிறோம். சில குறைபாடுகள் இருக்கலாம். அவர்கள் தமது வீடுகளில் அனுபவித்த வசதிகளை பெற்றுக் கொடுத்துவிட முடியாது தான். அதற்காக ஹியுமன் ரைட்ஸ் வொட்ச் நபர் கூறியது அனைத்தையும் ஏற்க முடியாது. அவற்றை நான் நிராகரிக்கிறேன். ஒரேயடியாக 2000 பேர் எமது நிவாரணக் கிராமங்களுக்கு வரும் போது 100 வீதமான வசதியை ஒரே தடவையில் வழங்கிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் தாம் எதிர்பார்க்கின்ற வசதிகளை 100 வீதம் வழங்கவும் முடியாது.

எனவே தான் இறுதிக்கட்ட யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அகற்றப்பட்டு விட்டதற்கான சான்றிதழ்கள் பெறப்பட்டதும் உடனடியாக அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். அப்போது தான் அவர்கள் உண்மையான சந்தோசத்தை அடைவார்கள். சுமார் 30 வருடங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவாறு யுத்தம் தான் ஒரேவழி என்ற மனநிலைக்குள் இருந்தவர்கள் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து கொண்ருக்கிறார்கள்.

இவர்களை ஒவ்வொருவராக சோதனையிட்டுத் தான் எடுக்கின்றோம். இதில் கூட சிக்கல்கள் உள்ளன. மனித வெடிகுண்டுடன் கூட வந்தது நாம் அனைவரும் அறிந்த விடயம்தானே என்றும் குறிப்பிட்டார். அத்துடன், புலிகள் இந்த மக்களை மந்தைகள் போல் அங்கும் இங்குமாக அழைத்து திரிந்த போது அடிப்படை வசதிகள் கிடைத்ததா? எந்த சர்வதேச அமைப்பு இவற்றை கண்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

இரண்டு இலங்கையர்களுக்கு சவூதியில் தூக்குத் தண்டனை மேன்முறையீடு நிராகரிப்பு

saudi-arabia.jpgதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் இருவரின் மேன்முறையீட்டை சவூதி அரேபிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதன் படி வெகுவிரைவில் இவர்களின் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஜோடா பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம் கொள்ளையிட்டது, வீட்டு உரிமையாளரை கொலை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஹலீமா காதர் மற்றும் பண்டாரநாயக்க ஆகிய இருவருக்கும் சவூதி அரேபியாவின் ஜோடா நீதிமன்றம் 6 மாதங்களுக்கு முன் தூக்குத் தண்டனை விதித்திருந்தது. தண்டனை அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் இருவரும் மேன்முறையீடு செய்திருந்தனர். இதற்கு சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரம் தேவையான உதவிகளை வழங்கியிருந்தது.

மேன்முறையீட்டை ஆராய்ந்த சவூதி அரேபியா ஜோடா நீதிமன்றம் மேன்முறையீட்டை நிராகரித்ததோடு தண்டனையை நிறைவேற்றுமாறும் உத்தரவிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று முதல் புத்த பகவானின் புனித தந்த தரிசனம்

kandy.jpgநாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சாந்தியும் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் நிலை பெற வேண்டி கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் இன்று (6) மதியம் 1.00 மணி முதல் புத்த பெருமானின் புனித தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் புத்த பெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

மதியம் 1.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பக்தர்கள் இதனை பார்வையிட முடியும் என ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே தெரிவித்தார். இதனை பார்வையிட நாடு முழுவதிலுமிருந்து 10 இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் புனித மாளிகை வளாகத்தையும் நகரத்தையும் அசுத்தப்படுத்தா வண்ணம் சூழல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசேடமாக ஸ்ரீதலதா மாளிகை அமையப் பெற்றுள்ள பகுதிகளிலும் சில குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மதுபான சாலைகள் போன்ற மற்றும் இறைச்சிக் கடைகள் போன்றனவற்றை மூடுவதற்கு ஏலவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதலதா மாளிகை அருகிலும் அதனை அண்மித்துள்ள பிரதேசங்களிலும் உள்ள அரச காரியாலயங்கள் மற்றும் பெளத்த விகாரைகளில் பெளத்த கொடிகளை பறக்கவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இறைமை, நிரந்தர சமாதானம் ஏற்பட மற்றும் மல்வத்த மகா நாயக்க ஆகியோர்களினது ஆலோசனையின் பேரில் ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் திலங்க தேவ பண்டார இதனை ஏற்பாடு செய்துள்ளார்.

செல்போன் மூலம் துப்பு துலங்கியது; நால்வரின் படங்களும் வெளியீடு

20090302.jpgபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் மொத்தம் 12 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதைவைத்து துப்பு துலக்கி இருக்கிறார்கள் பாகிஸ்தான் பொலிஸார்.

அந்த செல்போன் ரஹீம் யார்கான் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் பிடித்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் தவிர மேலும் 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் குவெட்டா நகரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் லாகூரையும், 2 பேர் கராச்சியையும் சேர்ந்தவர்கள்.

இது பற்றி மூத்த பொலிஸ் அதிகாரி ஹபிபூர் ரகுமான் கூறும் போது, “நாங்கள் லாகூரிலும் பக்கத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்தி சிலரை கைது செய்து இருக்கிறோம். அவர்களைப் பற்றிய விவரங்களை இப்போது வெளியே சொல்ல முடியாது. ஆனால் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன” என்றார். லாகூரில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அங்கு இரத்தக்கறை படிந்த ஆடைகள் கிடைத்தன. இது தீவிரவாதிகள் ஆடை என்று கருதுகின்றனர்.

எனவே இந்த தாக்குதலில் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மாணவர்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் முடிந்த பிறகு தீவிரவாதிகள் இங்கு சிறிய நேரம் தங்கியிருந்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒருவர் கமராவில் பதிவு செய்து இருந்தார். இந்த படம் ஏற்கனவே வெளியானது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கமராவில் இந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கியுடனும் சாவகாசமாக நடந்து வருவதும், தாக்குதல் நடத்துவதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது.

தாக்குதல் முடிந்த பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்கின்றனர். அதுவும் கேமராவில் பதிவாகி உள்ளது. 12 தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டது. இதை கேமராவில் பதிவாகி இருக்கும் படங்களை பார்க்கும் போது 14 தீவிரவாதிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

கோரமின்றி சபை 5 தடவை ஒத்திவைப்பு

srilanka-parliament.jpgபாராளு மன்றத்தில் நேற்று (05) சபை நடவடிக்கைகள் இடம்பெற்ற போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பிரசன்னமாகி இராததால் காலை முதல் மாலை வரை ஐந்து தடவை கோர மணி ஒலிக்கச் செய்யப்பட்டது. இதில் அரை மணி நேரத்திற்குள் நான்கு தடவை ஒலி எழுப்பப்பட்டது. வரிக்கட்டளைச் சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் ஐ. தே. க. எம்.பி., ரவி கருணாநாயக்க உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அவ்வேளையில் சபையில் கோரத்துக்கான உறுப்பினர்கள் இருக்கவில்லை. இது குறித்து சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் ரவிகருணாநாயக்க எம். பி. சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கோர மணி ஒலிக்கச் செய்யப்பட்டதும், ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சிலர் வருகை தந்தனர். ரவி எம்.பி. உரையைத் தொடர்ந்த சில நிமிட நேரத்திற்குள் மீண்டும் எம். பி.க்கள் சபையிலிருந்து வெளியேறினர். இதனால் மீண்டும் மணி ஒலித்தது. எனினும் எம்.பிக்கள் சபைக்குள் வருவதும் போவதுமாய் இருந்தனர். இதனால் ஐந்து தடவைகள் கோர மணி ஒலிக்க வேண்டியதாயிற்று.

கோர மணி ஒலித்ததும் முகத்தைச் சுளித்துக் கொண்டு வந்த சில ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், ரவி கருணாநாயக்க எம். பி.யிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்டு அவரை குடைந்தெடுத்தனர். அமைச்சர்கள் பலர் இருந்தும் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களைச் செவிமடுப்பதற்கு சபையில் எவரும் இல்லையே என ஐ. தே. க. எம்.பிக்கள் சுட்டிக் காட்டினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, ‘எமக்கு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்குப் 10 நிமிடங்கள் போதுமானது. எதிர்க்கட்சியினருக்காகவே விவாதம் நடத்தப்படுகிறது. எனவே, எதிர்க்கட்சியினர் அல்லவா சபையில் இருக்க வேண்டும் என்றார். அதேநேரம், ‘ரவி கருணாநாயக்க எம்.பியின் உரையைக் கேட்க ஐ. தே. க. வினரே விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் சபையில் இல்லை’ என்று மேலும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. வரிக் கட்டளைச் சட்ட மூலங்கள் ஐந்தும் சபையில் நிறைவேற்றப்பட்டன. இரண்டு கட்டளைச் சட்டங்கள் வாக்கெடுப்பின் மூலமாகவும், ஏனைய மூன்றும் வாக்கெடுப்பு இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன.

பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் : த ஜெயபாலன்

Wanni_Warஊர்வலம் : சனி 07 / 03 / 2009 நேரம் மாலை 15:00
இடம் : Place Georges Pompidou
Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles

மார்ச் 7ல் பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாரிஸில் இடம்பெற்ற கண்டனப் போராட்டங்கள் அனைத்தும் புலி ஆதரவு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 7ல் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டம் Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் இந்தக் கண்டனப் போராட்டத்திற்கான தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உள்ளன. தமிழர்களல்லாதவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வகைப் போராட்டம் அண்மைக் காலத்தில் இப்போதே பாரிஸில் இடம்பெறுகிறது. இவ்வகையான போராட்டங்கள் லண்டனில் Committie for Workers International இனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு பரிஸில் உள்ள மாற்றுக் கருத்து அரசியல் ஆர்வலர்களும் பிரான்ஸ் இடதுசாரி ஆர்வலர்களும் இணைந்து உருவாக்கிய அமைப்பு. இவர்கள் தொழிற்சங்கம் போன்றே தமது செயற்பாட்டைக் கொண்டு உள்ளனர். இவர்கள் உணவகத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் வதிவிட உரிமைக்கான போராட்டங்களை தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்காக மேற்கொண்டு உள்ளனர்.

இக்கண்டனப் போராட்டம் தொடர்பாக  Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு வெளயிட்டுள்ள அறிக்கையில் எல்ரிரிஈ; என்ற சந்தேகத்தில் அல்லது தமிழர்கள் என்பதற்காக இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தல், எழுந்தமானமான கைதுகள், தடுத்து வைத்தல்கள், சித்திரவதைகள், கூட்டுப்படுகொலைகள் என்பனவற்றை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அதே அறிக்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுத தந்திரோபாயங்களால் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தி தாங்களே அம்மக்களின் ஏகபிரதிநிதிகளாக செய்றபடுவதாகவும் மற்றைய தமிழ் அரசியல் அமைப்புகளை இல்லாதொழித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இலங்கையில் உள்ள ஏனைய ஆயுதக் குழுக்களும் இந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டு உள்ளது. EPDP, PLOTE, TELO, TMVP ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்டுவதாகவும் இவர்கள் கடத்தல் கப்பம் என்று வன்முறையில் ஈடுபடுவதாகவும் இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. (இந்த அறிக்கையைக் கீழே காணலாம்.)

Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்டனப் போராட்டத்தில் பின்வரும் கோசங்களை முன்வைப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

._._._._._.

Crisis in Sri Lanka

The Government of Sri Lanka launched a major military offensive in the month of September 2008 against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Since the separatist campaign launched by the LTTE against the government in 1972, the conflict has claimed tens of thousands of lives.

The government forces have long oppressed the Tamil population through massacre, raids, arbitrary detention and torture of thousands for mere suspicion of being a Tiger sympathiser or even for just being a Tamil.

The Tamils are safe nowhere in Sri Lanka. They are victims of segregation worthy of Apartheid. The slightest movement is controlled; all Tamils are obliged to get registered in police stations and military camps.

Meanwhile, the tigers with their strong arm tactics have kept the tamil population under their control claiming exclusive representation of the community working for their emancipation. They have eliminated all other representatives of the Tamil political organisation.

The “Tigers” forcibly recruit adults and children alike for their armed struggle. Since 1990, the Tigers have imposed a blockade on the populations of the areas under their control and those who have to crossover are obliged to leave their family members as hostage.

The situation has worsened for the civilians since the government launched its offensive in the month of September 2008.

The blockade has condemned civilians who are caught in the cross-fire Those who manage to escape are held in virtual concentration camps which could be termed the lawless areas where the military eliminates any individual who is a suspect.

To date, hundreds of refugees have disappeared. A safety zone has been created, too small to contain populations which is in the conflict are (approx. 500,000 people), which suffers from both the blockade of the “Tigers” and the artillery bombardment and those from air force.

The situation is further complicated by the fact that other Tamil paramilitary groups, including the EPDP, PLOTE, TELO, TMVP, (militia formed by former members of the Tigers)… are collaborating with the Sri Lankan army and bully the people through acts of extortion, of violence and abductions of children — all with the blessing of the Sri Lankan State.

We demand:

•End of massacre in Sri Lanka!
•Freedom for all oppressed peoples of Sri Lanka!

We call for the solidarity, support and relief from the entire French population, associations, trade unions and politicians.

We seek your participation at the rally to be held
On Saturday, 07 March 2009
This event will start at 15:00 Place Georges Pompidou, Paris.