March

March

உதயன் அலுவலகம் மீது கைக்குண்டு தாக்குதல்.

uthayan_logo.gif
யாழ்ப்பாணத்திலுள்ள “உதயன்” அலுவலகம் மீது நேற்றுநள்ளிரவு இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரவு 11.10 மணியளவில் இக்கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைக்குண்டுத் தாக்குதலால் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமாவாசைக்கு காத்திருக்கும் ஜெயலலிதா: ‘யுத்தம் என்றால் மக்கள் சாவது இயற்கை’ என்ற சிங்களத்துக் காளிகாதேவி ‘ஜெ’க்கு, இப்போது மட்டும் இலங்கை தமிழர் மீது ஏன் திடீர் அக்கறை? -கருணாநிதி

karunanithi.jpgஇலங்கை அரசு கச்சத்தீவை புனித பூமியாக அறிவித்தால் மத்திய அரசு மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்று ஒரு பாடல் வரி உண்டு. அதற்கு இன்று ஒட்டுமொத்த சான்றாக தமிழகத்திலே விளங்கி வருபவர் ஜெயலலிதா தான். அறிக்கைகள் என்ற பெயரால் தன்னால் முடிந்த அளவிற்கு மக்கள் நம்புகிறார்களோ, இல்லையோ- எதையாவது எழுதி மக்களை நம்ப வைக்கும் முயற்சியில் அன்றாடம் முயன்று வருகிறார்.

22.3.2009 தேதியிட்ட அறிக்கையில் ஜெயா `கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்தவர் தான் தற்போது தமிழகத்தில் முதல்வராக இருக்கிறார்’ என்ற பச்சைப் பொய்யைச் சொல்லியிருக்கிறார்.

கச்சத்தீவை இந்தியர் தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாக சொல்கிறாரே, நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதாரபூர்வமாக எடுத்துச் சொன்னால், எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?

15.8.1991 அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்து கோட்டையிலே சுதந்திர தின விழாவினைக் கொண்டாடியபோது ஆற்றிய உரைக்கு அனைத்து பத்திரிகைகளும் கொடுத்த தலைப்பே, `கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா சபதம்’ என்பதுதான்.

ஆனால், 1991 முதல் 1996 வரையிலும், பிறகு 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலும் பத்தாண்டு காலம் முதல்வராக இருந்தபோது கச்சத்தீவை அவர் ஏன் மீட்கவில்லை?. 91ம் ஆண்டு சபதம் என்னவாயிற்று? அதற்காக அவர் மத்திய அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் என்ன? அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதைத் தவிர வேறு என்ன கிழித்தார்?.

`கச்சத்தீவு’ என்றால் கச்சேரிக்கு எடுத்து செல்லும் வீணை என்று நினைத்துக் கொண்டு அதை `மீட்டுவேன்’ என்று சபதம் செய்திருப்பார். பாவம். அவர் கோட்டை கொத்தளத்தில் சபதம் செய்து ஆட்சியிலே இருந்தபோது எதை மீட்டிக் கொண்டிருந்தார்? ஆனால் நேற்று எழுதியுள்ள அறிக்கையிலே தனது ஆட்சி காலத்தில் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன் என்று பொய்யாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கழகம் ஏன் ஆட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யக்கூடாது என்று வக்கணையாக அறிக்கைவிடும் ஜெயலலிதா அப்போது பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தபோது கச்சத் தீவை மீட்கும் பிரச்சினையிலே தனது சபதத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சி ராஜினாமா செய்யும் என்று அறிவித்தது உண்டா? ராஜினாமா செய்ததுதான் உண்டா?.

விடுதலை நாள் விழாவிலே கோட்டை கொத்தளத்திலே இருந்துகொண்டு வாய் சவடாலாக முழங்கிவிட்டு, அந்த பேச்சு பத்திரிகைகளில் எல்லாம் கொட்டை எழுத்துகளில் வெளிவந்ததே தவிர வேறு என்ன செய்தார்? இரண்டு மூன்று கடிதங்களை மத்திய அரசுக்கு எழுதிவிட்டு, ஒருமுறை பிரதமரிடம் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததோடு சரி.

ஆனால் நான் ஏதோ ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்ததாக அறிக்கையிலே வாய்நீளம் காட்டியிருக்கிறார்.

மத்திய அரசால் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மையா?

1974ம் ஆண்டிலேயே ஆகஸ்டு 21ம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு பற்றி நான் முன்மொழிந்த தீர்மானம் இதோ. `இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி, இந்த பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.’

எனவே, திமுக அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்கவில்லை.

மேலும் அந்த தீர்மானத்தில் நான் பேசும்போது, `கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது, தமிழ் மக்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதைப் பற்றி பல நேரங்களில் மத்திய பேரரசுக்கு தமிழக அரசு எடுத்து சொல்லி இருக்கிறது. நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் இந்தியா கச்சத் தீவை விட்டுத் தருவது கூடாது என்ற கருத்து திமுக அரசின் சார்பாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.’

கச்சத்தீவு பிரச்சினையை முடிந்துவிட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்கின்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதில் தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் அல்லது அந்த மக்களுக்கு பிரதிநிதிகளாக இருக்கின்ற எந்த கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பதற்கு எந்த வகையான நியாயமும் இல்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்.

தமிழக அரசை இதுபோன்ற பெரிய பிரச்சினையில் மத்திய அரசு தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை. ஆக்கபூர்வமான முறையில் பிரதமர், முதல்வர் இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்கு வாய்ப்புக் கூறுகள் வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

அனைத்து கட்சியினுடைய தலைவர்கள் அடங்கிய கூட்டத்திலே கூட-எத்தனை முறை இதுபற்றி பிரதமரிடத்திலே தமிழக அரசின் சார்பிலே ஒரு முறையீடாக இந்த அரசு கச்சத்தீவுப் பிரச்சினையில் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியது, பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்திலே எவ்வளவு ஏராளமான ஆதாரங்களை- கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் வழங்கியது, அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது என்பதையும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

மேலும் அப்போது நான் ஆற்றிய உரையில், `1974ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திடீரென்று கச்சத்தீவை இலங்கையிடம் தரும் அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இதுபற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27ம்ந் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லா கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். சில பேருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்த காரியத்தில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதில் எந்த விதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப்பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறேன்’.

17.8.1991 அன்றே `தினமணி’ பத்திரிகை எழுதிய தலையங்கத்தில், 1974ல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, பண்டார நாயாகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகு முன்னர் இதைப்பற்றி தமிழக மக்களிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று அப்போதே எழுதியிருந்தது. அதே தலையங்கத்தில், `1976ல் இந்திய நாட்டில் அமலில் இருந்த நெருக்கடி காலத்தில், மக்களை கலந்தாலோசிக்காமல் இலங்கை அரசுடன் செய்து கொண்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் பரம்பரை உரிமையும் விட்டுக் கொடுக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டிருப்பதிலிருந்தே, திமுக ஆட்சியிலே இருந்த காலத்தில் மீன்பிடிக்கும் உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டதாக கூறுவது அசல் மோசடியும், பித்தலாட்டமும் ஆகும்.

ஜெயலலிதா மேலும் தனது அறிக்கையில் இலங்கை அமைச்சர் ஒருவர் கச்சத்தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார் என்றும், அதற்கு மத்திய-மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும், இதன்மூலம் இலங்கை அரசின் அறிவிப்புக்கு இந்திய அரசும், தமிழக அரசும் உறுதுணையாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் ஜெயலலிதா எழுதியுள்ளார்.

இந்த பொருள் பற்றிய அறிக்கையை 22ம் தேதி காலையில் வைகோ விடுத்திருந்தார். அதே பொருள் பற்றி 22ம் தேதி மாலையில் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். பொதுவாக ஜெயலலிதா அறிக்கை விட்டபிறகு, அதே பொருள் பற்றி அடுத்த நாள் வைகோ அறிக்கை விடுவார். இது இலங்கை பிரச்சினை என்பதால், வைகோ அறிக்கை விடுத்து, அதனை ஜெயலலிதா பின்பற்றியிருக்கிறார் போலும்.

`கச்சத்தீவை முழுவதுமாக தனித்த புனித இடமாக இலங்கை அரசு அறிவிக்கப் போகிறதாம்’ என்று தான் இவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி விசாரித்த அளவில்- இலங்கை அரசு கச்சத்தீவை புனித பூமியாக அறிவிக்க இருப்பதாக எந்த நோக்கமும் இல்லை என்றும், ஆனால் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது ஜெயலலிதா மொழியிலே சொல்வதென்றால் ‘வாய் தவறி’ சொல்லியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது.

எது எப்படியிருந்தபோதிலும், அது உண்மையாக இருந்து அப்படி அறிவித்துச் செயல்படத் தொடங்கினால் திமுக அரசு அதற்கான விளக்கம் கேட்டு பெற்று; அதை வன்மையாக கண்டிக்கவும்- மத்திய அரசுக்கு அறிவித்து-உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் தயங்கப் போவதில்லை.

இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்- திடீரென்று ஜெயலலிதாவுக்கு இலங்கை மீது இவ்வளவு இன உணர்வு மிக்க அக்கறை எப்படி வந்தது? ஏன் வந்தது? என்பதுதான்.

சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளைத்தான் வேட்டையாடுகிறார்கள்; அப்பாவித் தமிழர்களை அல்ல என்றும், யுத்தம் என்றால் அதில் அப்பாவி மக்கள் சாவது இயற்கை தான் என்றும் சிங்களத்துக் காளிகாதேவியாக நின்று முழங்கிய ஜெயலலிதாவுக்கு இப்போது திடீரென்று இலங்கை தமிழர் மீதும்- கச்சத்தீவு மீதும் இவ்வளவு அக்கறை வருவானேன்? எல்லாம் தேர்தல் தேதி நெருங்குகிறது என்பதால் தானே?.

ஆமாம்; `பிரபாகரனை இலங்கையில் கைது செய்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வருக’ என்று ஜெயலலிதா; முதல்-அமைச்சராக இருந்தபோது 16.4.2002 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாரே; அந்த ஜெயலலிதா தானா இந்த ஜெயலலிதா?.

அய்யோ பாவம்; அவர் தான் இவர் என்று தெளிவடைய அவர் முகமூடியைத் திறந்து பாருங்கள் என்று தான் கூறவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

அமாவாசைக்கு காத்திருக்கும் ஜெயலலிதா

தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை வரும் 26ம் தேதி அறிவிக்கவுள்ளன. காரணம், அன்றைய தினம் நிறைந்த அமாவாசையாகும்.

வரும் வியாழக்கிழமை நிறைந்த அமாவாசை தினம் வருகிறது. வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகும், அதுவும் அன்றைய தினம் சித்த யோகத்துடன் கூடிய நிறைந்த அமாவாசையும் கூடி வருகிறது.

அதன் பிறகு வளர்பிறை ஆரம்பிப்பதால், அன்றைய தினம் தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெல்லும் என்பது நம்பிக்கை.

இதில் பெரும் நம்பிக்கை கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அன்றைய தினம் தனது வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.

பாஜகவும் அன்றைய தினமே வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அன்றுதான் கன்னியாகுமரியில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திட்டவட்டமாக அறிவிக்கிறார்.

யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் இருக்கும் பாமகவின் பொதுக்குழு கூட்டமும் அன்றுதான் கூடுகிறது. கூட்டணி பற்றிய முக்கிய முடிவை அன்று தான் அதன் தலைவர் டாக்டர் ராமதாஸ் எடுக்கிறார்.

949 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம் – உதய நாணயக்கார

navy_rescue_civil.jpgபுலிகளின் பிடியிலிருந்து வந்த 949 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவர்களில் 810 பொது மக்கள் இராணுவத்தினரிடமும், 139 பொது மக்கள் கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 810 பொது மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை டிங்கிப் படகுகள் மூலம் இரு தடவைகளாக 129 பொது மக்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். முதலாவது குழுவில் 126 பொது மக்களும் இரண்டாவது குழுவில் 13 பொது மக்களும் படகுகள் மூலம் தப்பி வந்துள்ளனர். இவர்களில் 43 ஆண்கள், 43 பெண்கள் மற்றும் 40 சிறுவர்கள் அடங்குவர்.

இவர்களில் காயமடைந்தவர்களுக்கு கடற்படையினர் உடனடி முதலுதவிகளை வழங்கியுள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

இவ்வருட ஐ.பி.எல். தென்னாப்பிரிக்காவில்

_ipl_graphic_.jpgபாது காப்புக் காரணங்களுக்காக இந்தியாவுக்கு வெளியே நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை, தென்னாபிரிக்காவில் நடத்துவது என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாக சபை உறுதி செய்துள்ளது.

முன்னர் தீர்மானிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வாரகாலம் தாமதமாக ஏப்ரல் 10ஆம் திகதி முதலாவது ஆட்டம் ஆரம்பமாகும் என்றும், அது ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே இந்தச் சுற்றுப் போட்டியும் நடக்கவிருந்ததால், அதற்கான பாதுகாப்பு அங்கீகாரத்தை பெற போட்டிகளை நடத்துபவர்கள் தவறிவிட்டதால், இதனை இங்கிலாந்தில் நடத்தலாமா என்றும் முதலில் ஆராயப்பட்டது.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்- நவநீதம் பிள்ளை

nawaneetappilli.jpgஇலங்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை புதுடெல்லியில் சந்தித்த ஐ.நா. மன்றத் தலைவர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதை மீண்டும் வலியுறுத்தப் போகிறேன் என்று தெரிவித்தார் நவநீதம் பிள்ளை. இராணுவ நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குத் தீ்ர்வு காண முடியாது. அதை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க முடியும் என்பதே ஐ.நா.மன்றத்தின் கருத்து என்று தெரிவித்த நவநீதம் பிள்ளை, சிவிலியன்களின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் மனித உரிமை நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து்ம் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பாக பொதுமக்களின் கவலைகள் குறித்தும் இந்திய அமைச்சர்களிடம் விவாதித்தாக நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.

கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று அவசர சந்திப்பு

tna-mp-22.jpgஜனாதி பதியுடனான சந்திப்பு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (25) கொழும்பில் அவசர சந்திப்பொன்றை நடத்துகின்றனர்.

நாளைய தினம் (26) பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக இன்று முடிவெடுக்கப்படுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதேநேரம், ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று பேச்சுவார்த் தைக்குச் செல்வது சிறந்ததாகுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனித் தனியாக அனுப்பி வைத்த கடிதம், நேற்றைய தினமே கிடைத்ததாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர். எனினும் நேற்றைய தினமே அவசரமாகக் கூடுவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொழும்புக்கு வெளியில் உள்ள சில உறுப்பினர்களின் வசதி கருதி இன்றைய தினம் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாளை வியாழக்கிழமை மாலை 6.30 இற்கு நடைபெறும் ஜனாதிபதியுடனான கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று சாதகமான முடிவு எடுக்கப்படலாமெனத் தெரியவருகின்றது.

முன்பு, கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. தற்போது திடீரென கிடைத்துள்ள அழைப்பை கூட்டமைப்பினர் தவறவிடக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

tna-mp-22.jpg

தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் விரைவு

t-mala-stu.pngதிரு கோணமலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கென கொழும்பிலிருந்து தொற்று நோய்ப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் ஒருவர் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்.

 இவர் திருகோணமலையில் தற்போது விசாரணைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவக் குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இரசாயன பரிசோதனை மற்றும் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் பரிசோதனைகள் இடம்பெறுவதுடன் அதன் அறிக்கைகளை விரைவாக சுகாதார அமைச்சுக்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதும் ‘குறுந்தகவல் மூலம்’ தகவல். இன்று முதல் புதிய நடைமுறை

கடவுச் சீட்டு தயாரிக்கப்பட்டதும் அதனை யைடக்கத் தொலைபேசியில் குறுந் தகவல் மூலம் விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருவதாக உள்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

குடிவரவுகுடியகல்வு திணைக்களம் மக்களுக்கான தமது சேவையை விரிவுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு அம்சமாகவே மேற்படி திட்டம் இன்று முதல் நடைமுறைக்குவருவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் திணைக்களத்தின் முதலாவது மாடி மக்களை வரவேற்று, அவர்களின் தேவைகளைக் கேட்டறியும் பிரிவாக இன்று முதல் இயங்கவுள்ளது. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் மக்களின் நலன் கருதி விசேட வசதிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசேட நிகழ்வொன்று இன்று கொழும்பு புஞ்சிபொரளையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் குடியவரவு குடியகல்வு நிர்வாகச் செயலாளர் நாயகம் பி. பீ. அபேயகோன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவர் லேஹா டீ சில்வா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதிபர்கள் பதவி விலகல் கடிதங்களை கையளித்தால் அதனை ஏற்க தயார் – கல்வி அமைச்சர்

susil-premaja.jpgபாடசாலை அதிபர்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தால், அவற்றை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

அதிபர்களின் பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், எட்டப்பட்டுள்ள தீர்வினை அரசசேவை ஆணைக்குழு மூலம் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறிய அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், அதிபர்களுக்குச் சம்பந்தமில்லாத ஆசிரிய சங்கமொன்று, பதவிகளை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

குறித்த சங்கத்திற்குப் பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும், எனினும், அந்த அழைப்பை ஏற்காது தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறெனினும், அவர்களின் பதவி விலகல் கடிதங்களை ஏற்றுக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் தயாராகவே உள்ளாரென்று அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, திட்டமிட்டபடி அதிபர்கள் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளிப்பதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரிய தொழில் சார்ந்தோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த தர்மசிறி தெரிவித்தார்.

சேவை மூப்பின் அடிப்படையில் அதிபர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமலிருக்கும் இந்தப் பிரச்சினையை கல்வி அமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.  இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த கல்வி அமைச்சர், ஏற்கனவே, தீர்க்கப்பட்டுவிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சங்கம் பிரபல்யத்தைத் தேட முனைவதாகவும் தெரிவித்தார்.

இன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு அதிபர்களைக் கல்வி அமைச்சுக்கு வரவழைத்துள்ள இந்தத் தொழிற்சங்கம், பதவி விலகல் கடிதங்களைத் தனியே கையளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வாமையில் ஏற்பட்ட அதிர்ச்சியே சிறுமியின் மரணத்துக்கு காரணம் – ருபெல்லா ஆரம்ப விசாரணைகளில் தகவல்

vaccina.jpgதடுப்பு மருந்தில் எவ்வித பிழையுமில்லை. ஒவ்வாமையினால் ஏற்பட்ட அதிர்ச்சியே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் என்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட சுகாதார அமைச்சு மருத்துவர்கள் குழுவின் அறிக்கை, மரண பரிசோதனை அறிக்கை, இரத்த பரிசோதனை அறிக்கை, உலக சுகாதார நிறுவன நிபுணர்களின் பரிசோதனை அறிக்கை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே இறுதி முடிவொன்றுக்கு வரமுடியுமெனவும் அவர் தெரிவித்தார். சம்பவ தினத்தன்று குறித்த சிறுமியின் தாய் எழுதியிருந்த கடிதக் குறிப்பில் சம்பந்த ப்பட்ட டாக்டர் கவனமெடுத்தல் அவசிய மென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவ தாகவும் அவர் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை பாடசாலை மாணவி மரணமடைந்தமை தொடர்பில் நேற்று சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை தொடர்பில் பல்வேறு தரப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் விசாரணை அறிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் பார்வைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இத் தடுப்பு மருந்து ஏற்றல் திட்டத்தை ஆரம்பிப்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் அவர் மேலும் விளக்கமளித்த போது :-

பசுப்பால் சம்பந்தப்பட்ட ஆகாரங்கள் தமது மகளின் உடலுக்கு ஒவ்வாததெனவும் ருபெல்லா தடுப்பூசி வழங்குபவர்கள் இது விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் மரணமடைந்த சிறுமியின் தாயார் கடிதக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். இதனை தடுப்பூசி வழங்கிய டாக்டர் கவனத்திலெடுத்திருக்கலாம் என்பதே பலரதும் கருத்தாகிறது.

ருபெல்லா தடுப்பு மருந்து 1996ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் இலட்சக்கணக்கானவர்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு விமர்சனங்களை மேற் கொள்வோர் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றன. விசாரணை முடிவில் குற்றம் ஒப்புவிக்கப்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் பின்னிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய இச்செய்தியாளர் மாநாட்டிற்கு மேற்படி தடுப்பு மருந்துடன் தொடர்புபடும் சுகாதார நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு இது குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.