கடவுச் சீட்டு தயாரிக்கப்பட்டதும் அதனை யைடக்கத் தொலைபேசியில் குறுந் தகவல் மூலம் விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருவதாக உள்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
குடிவரவுகுடியகல்வு திணைக்களம் மக்களுக்கான தமது சேவையை விரிவுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு அம்சமாகவே மேற்படி திட்டம் இன்று முதல் நடைமுறைக்குவருவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் திணைக்களத்தின் முதலாவது மாடி மக்களை வரவேற்று, அவர்களின் தேவைகளைக் கேட்டறியும் பிரிவாக இன்று முதல் இயங்கவுள்ளது. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் மக்களின் நலன் கருதி விசேட வசதிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசேட நிகழ்வொன்று இன்று கொழும்பு புஞ்சிபொரளையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் குடியவரவு குடியகல்வு நிர்வாகச் செயலாளர் நாயகம் பி. பீ. அபேயகோன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத் தலைவர் லேஹா டீ சில்வா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.