Multiple Page/Post

சிறுமிகளின் மரணம்; விசாரணைக்கு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் – ஆகஸ்ட் 23இல் மஸ்கெலியாவில்

girl2222.gifமஸ்கெலியா முள்ளுகாமம் தோட்டத்தைச்சேர்ந்த சிறுமிகள் இருவர் கொழும்பில் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பில், உரிய விசாரணைகளைப் பக்கச்சார்பின்றி நடத்தக்கோரி மஸ்கெலியா நகரில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடப்போவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.  திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சிறுமிகளின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சிவசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு திகாம்பரம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; குடும்பத்தின் வறுமைகாரணமாக கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமிகள் இருவர் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையானது பேரதிர்ச்சியைத்தருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக தாம் பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளதாக மரணமான சிறுமிகளின் பெற்றோர் எமது கவனத்துக்கொண்டு வந்துள்ளனர். கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் யுவதிகள் இளைஞர்கள் சொல்லொணா துயரங்களுடன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் கல்விகற்க வேண்டிய வயதிலுள்ள சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு தோட்டப்பகுதி சிறுவர்களை வெளிமாவட்டங்களில் வீட்டு வேலைக்கு அமர்த்துவதற்கு தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த ஒரு சிலர் உடந்தையாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், முள்ளுகாமத்தோட்டத்தைச்சேர்ந்த இரண்டு சிறுமிகளின் மரணமானது, முழு மலையக தமிழ் சமூகத்துக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமது வறுமையைப்போக்கிக் கொள்வதற்காக தலைநகரம் சென்ற சிறுமிகளின் இந்தப்பரிதாபகரமான நிலைமைக்கு யார் காரணம், என்பதை கண்டறிந்து சட்டத்துக்கு முன்நிறுத்துவதற்கு அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு இவ்வாறு இடம்பெற்ற இந்த அநீதிக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில், மஸ்கெலியா பிரதேச பொதுமக்கள், மலையக சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.

தலைபிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

muslim-prayer.jpgஹிஜ்ரி 1430 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இன்று மஃரிப் தொழுகை நேரமாகிய 6.24 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைமைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-2390783, 2432110, 2434651 மற்றும் 0777-366099 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளவாசலின் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியா, தக்கியா, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆயுள்வேத வைத்தியசாலைகள் அரசுடமையாகும்

ep-map.jpgஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளை அரசுடமையாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்வைத்திருந்தார்

யூனானி மற்றும் சித்த வைத்திய முறைகள் பல்கலைக்கழகத்தில் போதிக்கப்பட்டுவருவதால் அந்த வைத்திய முறைகளையும் அவை தொடர்பான ஆய்வுகளையும் அரசாங்கத்தால் மேற்கொள்வதற்கு வசதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.

தென்னிலங்கை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கும் “தண்டனை விலக்கீட்டு உரிமை’

court222.jpgஇலங் கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது குற்றச் செயல்களுக்கு தண்டனையிலிருந்தும் விலக்கீட்டு உரிமை பெறும் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துவதாக உருவாகியுள்ளது. 1971 இல் மாக்ஸிஸ்ட் கிளர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் பாதுகாப்பு சேவைத்துறையின் உறுப்பினர்கள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் நாட்டின் செல்வாக்கும் அரசியல் ரீதியில் தொடர்பும் உடைய வட்டாரங்களில் தந்திரோபாயமான ஆதரவுடன் சித்திரவதை அல்லது தண்டனைகளை முன்னெடுத்துச் சென்ற, செல்கின்ற வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட அல்லது வர்த்தக அல்லது அரசியல் காரணங்களுக்காக இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு விலக்கீட்டு உரிமை பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பொறுமை காக்கப்படும் நிலைமை இல்லாமல் போய்விடும் நிலைமை உருவாகியிருக்கிறது. தண்டனை விலக்கீட்டு உரிமையானது முதலீட்டாளர்களுக்கு நட்புறவுடனான நாடு என்ற பிரதிமையை இலங்கை மீள ஏற்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிக்கு சவாலாக உள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மீது பொதுமக்கள் விசனமடைந்துள்ளதை வெளிக்காட்டுவதாக ஆசிரியர் தலையங்கங்கள் வெளிவந்திருக்கின்றன. யுத்தகாலத்தில் விமர்சிப்போரை துரோகிகளென பட்டியலிடும் நிலையில் இது அபூர்வமாக உள்ளது. தப்பிச் செல்ல முடியாத யதார்த்தம் என்னவெனில் இயல்பு நிலை அல்லது இயல்பு நிலையை அண்மித்த நிலை உருவாக்கப்பட்ட நிலைமையில் மக்கள் தமது கண்களை திறந்து வைத்திருக்கின்றனர். சாதாரண மக்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் இப்போது தமது கண்களை திறந்துள்ளனர் என்று ஞாயிறு ஐலண்ட் பத்திரிகை இந்த வாரம் தெரிவித்துள்ளது.  இப்போது எமக்கு தேவை…. தெளிவான முறையில் சிதைவடைந்திருக்கும் முறைமையை துப்புரவு படுத்துவதே என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவன் ஒருவனை கடத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் திங்கட்கிழமை 11 பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. செல்வாக்குமிக்க பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனுடனான தகராறு தொடர்பாகவே நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவை விடுத்திருந்தது. சிரேஷ்ட அதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார். ஆனால் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பொதுமக்கள் பொலிஸ் நிலையமொன்றை முற்றுகையிட்டு ரயில்களை தடுத்தனர். இருவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரியின் பெண் சிநேகிதியை இந்த ஆட்கள் கடுமையாக விமர்சித்திருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

பொலிஸார் அவர்களை கைது செய்திருந்ததன் பின்னர் இருவரின் சடலங்கள் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. பொறுப்பதிகாரி உட்பட 7 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குற்றத் தொடர்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் முறைமையானது சிலசமயம் ஸ்திரமின்மையையும் குழப்பத்தையும் தோற்றுவித்திருக்கலாம். இதற்கு இலங்கையிலுள்ள பொலிஸார் அதிகளவு பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்று ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த பசில் பெர்னாண்டோ கூறியுள்ளார். பாதாள உலகத்தவருக்கு எதிரான யுத்தத்தை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

குற்றச்செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. கிடைக்கும் சான்றாதாரத்தின் அடிப்டையில் எந்த நிலைமையில் அல்லது சிரேஷ்ட தரத்தில் இருந்தாலும் குற்றச் செயலில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் தயங்கமாட்டோம் என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறியுள்ளார்.

பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயரிடுங்கள் : -வைகோ

vaiko-pira.jpgதேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டடிருந்த பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் பொருட்டு புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வொன்றில் பேசிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வை.கோபாலசாமி தமிழ் நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயரிடுங்கள் என வேண்டியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றை ஆதரித்து பேசுவது குற்றம் என்பது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

திருமலையிலும் கிளிநொச்சியிலும் இரு முதலீட்டு வலயங்கள் – அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா அறிவிப்பு

anurapriyadarsanayapa.jpgதிருகோண மலையிலும் கிளிநொச்சியிலும் இரு முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

கிளிநொச்சியில் நிலக்கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாடத காரணத்தினால் அங்கு முதலீட்டு வலயம் அமைப்பதில் சிறிது காலத் தாமதம் ஏற்படலாம்;. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது இலேசான காரியமல்ல. இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மோப்ப நாய்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றன. கடும் உஷ்ணம் காரணமாக மூன்று மோப்ப நாய்கள் சுகவீனமடைந்துள்ளன. இப்பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அது ஐ.நா.வால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இங்கு மீள் குடியேற்றம் இடம்பெறும். அதன் பின்னரே முதலீட்டு வலயம் அமைக்கப்படும்.

இடம்பெயாந்த மக்களுக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் வழங்கியுள்ளபோதிலும் எதிக்கட்சிகள் அவற்றில் குறைகண்டு அரசியல் இலாபம் தேடுகின்றன. இதே மக்கள் புலிகளின் பிடியில் உணவின்றித் தவித்தபோது இந்த எதிக்கட்சி உறுப்பினர்கள் ஏன் வாய் திறக்கவில்லை என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மட்டு வைத்தியசாலைக்கு புற்றுநோய்ப் பிரிவு!

ep-map.jpgமட்டக் களப்பு போதனா வைத்திய சாலையில் புற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் தனியான பிரிவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார்.

மூன்று தினங்களில் இலங்கையில் 900 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தகவல்

gl_p_s.jpgகடந்த மூன்று தினங்களில் திறைசேரி உண்டியல் விற்பனை மூலம் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கையின் பொருளாதரக் கட்டமைப்பின்மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். பொருளாதாரம் சிறந்த முறையில் இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் பயமின்றி முதலீடு செய்யும் நிலை உருவாகியுள்ளது. அதனால்தான் பெரும் எண்ணிக்கையிலான  முதலீட்டாளர்கள்  இலங்கை மீது தமது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு பெருந்தொகையான வெளிநாட்டுப் பணம் கிடைத்துள்ளதனால் தனியார் வங்கிகளிடம் கடன் பெறவேண்டிய தேவை ஏற்படாது. தனியார் வங்கிகளும் தங்களது வியாபார நடவடிக்கைகளை சிறப்பான முறையில் முன்னெடுக்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மூலம் இவ்வருட இறுதியில் வட்டிவீதம் மேலும் குறைவடையும். சுமார் 9 வீதம் வரைக் குறையுமென எதிர்பாக்கமுடியும். இதனால்  தொழில் வாய்ப்புக்கள் மென்மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். 

ஆப்கன் தேர்தலில் வன்முறை – 4 இடங்களில் குண்டுத்தாக்குதல்

ஆப்கா னிஸ்தானின் தலை நகர் காபூல் உட்பட 4 இடங்களில் இன்று தலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான் தீவிரவாதிகள் விரட்டப்பட்ட பிறகு 2ஆவது முறையாக இன்று அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லா உட்பட 41 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் கடந்த 2 நாட்களாக தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் காபூல் நகருக்குள் புகுந்து ஜனாதிபதி மாளிகை மீது ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். நேற்றும் 3 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் மீண்டும் வன்முறையில் இறங்கினார்கள். தலைநகரம் காபூல் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி இன்னமும் தகவல் வெளியாகவில்லை.

தேர்தல் பாதுகாப்பு பணியில் அமெரிக்கக் கூட்டு படைகள் உட்பட 3 லட்சம் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள 8 மாவட்டங்களில்  இன்று வாக்குப்பதிவு நடக்கவில்லை 

வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கான தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம்!

anurapriyadarsanayapa.jpgகொக்கா வில் ஒலி, ஒளிபரப்பு பரிவர்த்தனை மத்திய நிலையத்துக்கான அடிக்கல்லை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யும் ஊடகத்துறையமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் நாட்டினர். நேற்று நண்பகல் 12.45 அளவில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் 180 நாள் திட்டத் தின்கீழ் வட மாகாண ஒலி, ஒளிபரப்பு தொலைத் தொடர்பு தேவைகளை; பூர்த்தி செய்யும் வகையில் 400 மில்லியன் ரூபா செலவில் உருவாகவுள்ள 172 மீற்றர் உயரம் கொண்ட தொலைத் தொடர்பு கோபுரத்துடனான பரிமாற்று நிலையம் டிசம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி,  முல்லைத்தீவு,, யாழ்ப்பாணம் ஆகிய  மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையம் செயற்படவுள்ளது. அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உட்பட அனைத்து தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் இதனூடாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில்,  அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன,  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,  இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், ஐ.ரீ.என். ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.