திருகோண மலையிலும் கிளிநொச்சியிலும் இரு முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் குழு அறையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
கிளிநொச்சியில் நிலக்கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாடத காரணத்தினால் அங்கு முதலீட்டு வலயம் அமைப்பதில் சிறிது காலத் தாமதம் ஏற்படலாம்;. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவது இலேசான காரியமல்ல. இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மோப்ப நாய்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றன. கடும் உஷ்ணம் காரணமாக மூன்று மோப்ப நாய்கள் சுகவீனமடைந்துள்ளன. இப்பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அது ஐ.நா.வால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இங்கு மீள் குடியேற்றம் இடம்பெறும். அதன் பின்னரே முதலீட்டு வலயம் அமைக்கப்படும்.
இடம்பெயாந்த மக்களுக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் வழங்கியுள்ளபோதிலும் எதிக்கட்சிகள் அவற்றில் குறைகண்டு அரசியல் இலாபம் தேடுகின்றன. இதே மக்கள் புலிகளின் பிடியில் உணவின்றித் தவித்தபோது இந்த எதிக்கட்சி உறுப்பினர்கள் ஏன் வாய் திறக்கவில்லை என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.