17

17

2023 இல் உலகநாடுகளில் கொலை செய்யப்பட்ட 99 பத்திரிகையாளர்களில் 72 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனியர்கள் !

2023 இல் 99 பத்திரிகையாளர்கள் உலகநாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு இவர்களில் 72 பத்திரிகையாளர்கள் பாலஸ்தீனியர்கள் என தெரிவித்துள்ளது.

காசாவில் இவ்வளவு பெருந்தொகையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் கடந்த வருடம் உலகில் கொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை முன்னைய வருடங்களை விட குறைவாக காணப்பட்டிருக்கும் என  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசா- இஸ்ரேல் யுத்தத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒருநாடொன்றில் ஒருவருடத்தில் கொல்லப்பட்டதை விட அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசாவில் கொல்லப்பட்ட 77 பத்திரிகையாளர்களில் 72 பேர் பாலஸ்தீனியர்கள் மூவர் லெபனானை சேர்ந்தவர்கள் இருவர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என சிபிஜே தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களிற்கான அச்சுறுத்தல் என்ற விடயத்தை பொறுத்தவரை காசா யுத்தம் முன்னொருபோதும் இல்லாத அச்றுத்தலாக காணப்படுகின்றது என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஜோடி கின்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தை பொறுத்தவரை காசா பத்திரிகையாளர்களால் மாத்திரமே காசாவிற்குள் என்ன நடைபெறுகின்றது என்ற செய்தியை வெளியுலகிற்கு தெரிவிக்கமுடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள சிபிஜேயின் தலைவர் சர்வதேச பத்திரிiயாளர்களிற்கு காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தினர் அழைத்துச்சென்றால் மாத்திரமே சர்வதேச பத்திரிகையாளர்களால் அங்கு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாங்கள் செய்திகளை வெளிக்கொணர்வதற்காக  தங்கள் உயிர்களை பணயம்வைக்கும்  பாலஸ்தீன பத்திரிகையாளர்களையே நம்பியிருக்கின்றோம் எனவும் ஜோடி கின்ஸ்பேர்க்தெரிவித்துள்ளார்.

காசா யுத்தத்தின் போது பாலஸ்தீன பத்திரிகையாளர்களிற்கு போதிய ஆதரவின்மை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள யுத்தம் என்பதால் காசாவில் இலக்குவைக்கப்படுபவர்கள் கொல்லப்படுபவர்களுக்கான ஆதரவை வெளியிட  மேற்குலகம் தயங்குகின்றது எனவும் தெரிவித்துள்ள  பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் இஸ்ரேல் இந்த  யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச ஊடகங்கள் பிளவுபட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்தவருடங்களுடன் ஒப்பிடும்போது உக்ரைனிலும் மெக்சிக்கோவிலும் கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 2023 இல் குறைவடைந்து காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக மெக்சிக்கோ பிலிப்பைன்ஸ் சோமாலியா காணப்படுவதாகவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஸ்ய எதிர்கட்சி தலைவர் சிறைச்சாலையில் உயிரிழப்பு – புடினே காரணம் என்கிறார் பைடன் !

ரஸ்ய எதிர்கட்சி தலைவரும் விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்தவருமான  அலெக்சே நவல்னி சிறையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையில் அவர் உயிரிழந்துள்ளார் என ரஸ்ய சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை நவல்னி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டார் சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் என ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரஸ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின்  மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.