வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். – நாடாளுமன்றத்தில் உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் !
வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடான தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டுமொத்த மக்களின் நலனையும், வாழ்வியலையும் மேம்படுத்த தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகைள முன்னெடுப்போம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது
பதுளை தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றியை பெற்றுக் கொடுத்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சியினர் காலம் கடந்த பல்லவியை மாத்திரம் பாடிக் கொண்டு விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.
எமது மலையக சமூகம் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டிலும் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
உரிமைகள் மறுக்கப்பட்டு வெறும் சலுகை கோட்பாடுகளுக்குள் மாத்திரமே மலையக சமூகம் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் எம்மையும் இணைத்துக் கொண்டு அரசியல் உரிமைகளை வழங்கியுள்ளது.
200 வருடகால பின்னணியை கொண்டுள்ள நாங்கள் பல சவால்களை கடந்து வந்துள்ளோம். 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது.
மலையக பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி கொள்கையுடைன செஞ்சட்டை அமைப்பை ஆதரித்தனர். இதனைத் தொடர்ந்து பதுளை மாவட்டத்தில் இருந்து நடராஜா என்பவர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி அமைப்பினை ஆதரிப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமையை பறித்தது.
இதன் பின்னர் மலையக மக்கள் நாட்டுக்குள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டு பெருந்தோட்ட மக்களை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியது.
கலவரத்தின் பின்னர் ரெட்மானா தொண்டு நிறுவனத்தின் ஊடாக வன்னி, கிளிநொச்சி உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களுக்கு பெருந்தோட்ட மக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் எமது மக்கள் ஈழவாத கருத்தியலுடன் ஒன்றிணைந்து 30 வருடகால போராட்டத்தில் போராளிகளானார்கள். ஆனால் தமிழ் பேரினவாத சிந்தனையுடையவர்கள். 30 வருடகால போர் வடக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள்.
வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை முழுமையாக நிராகரிக்கிறோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடான தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டுமொத்த மக்களின் நலனையும் , வாழ்வியலையும் மேம்படுத்த தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவற்றை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
எமது சமூகத்துக்கான காணி உரிமையை வழங்க வேண்டும். 1946 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் காணி அமைச்சராக பதவி வகித்த டி.எஸ். சேனாநாயக்க விசேட சட்டத்தை கொண்டு வந்தார். இந்திய வம்சாவளியுடைய பெருந்தோட்ட மக்கள் வந்தேறு குடிகள் அவர்களுக்கு இந்த நாட்டில் காணி உரிமை வழங்க கூடாது என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் எதிரொலியாக மேல்மாகாணத்தில் உருளவெல்லி தோட்டத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து முழு மலையக பகுதிகளிலும் 21 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது. மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்க வேண்டும் என்பது பிரதான கோசமாக காணப்பட்டது.காணி உரிமைக்காக மலையக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிவனு லட்சுமணன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆகவே இந்த இளைஞனின் கனவை நனவாக்குவது தேசிய மக்கள் சக்தியாக எமது கடமையாகும்.காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
மதுவரி அனுமதிப்பத்திரங்களை சட்டத்திற்கு முரணான வகையில் கையாள வேண்டாம் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு !
ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பட்டியல் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த காலப்பகுதியில் 361 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 172 பேர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டவை எனவும் புதிதாக வேறு மதுபான சாலை அனுமதி வழங்குவதை நிறுத்திவைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.
மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை நடைமுறைபடுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பாராளுமன்ற புலிக்குட்டிகளின் வரிசையில் புதிய புலிக்குட்டியாக இணைந்தார் ஊசி அர்ச்சுனா – முழங்கும் புலம்பெயர் தேசத்து ஊடகங்கள்!
சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ மாபியாக்களை இனங்காட்டியதன் மூலமாக ஓர் புதிய பயணத்தை இலங்கை தமிழர் பகுதிகளில் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஊசி அர்ச்சுனா தன்னுடைய அதீத மேதாவித்தனத்தால் சமூக வலைத்தளவாசிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளானார். மேலும் அவரால் முன்வைக்கப்பட்ட சில மருத்துவ குற்றங்களை தாண்டி வேறு எவற்றுக்குமான ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஓர் ஆசனத்தை உறுதிசெய்தார் ஊசி அர்ச்சுனா. பாராளுமன்றத்திற்கு சென்ற பிறகாவது ஓரளவுக்கு கேலித்தனங்கள் இல்லாமல் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் எதிர்க்கட்சித் தலைவருடன் கதிரைக்கு சண்டை, எதிர்க்கட்சி உறுப்பினர் தாக்கிவிட்டார் என முன்பள்ளி மாணாக்கர்கள் போல முறைப்பாடு என தமிழர் ஓர் தெளிவற்ற நபரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டார்கள் என எண்ணுமளவிள்கு நடந்து கொண்டார்.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருடைய கன்னி உரை 04.12.2024 அன்று ஆற்றப்பட்டது. அதில் மருத்துவ மாபியா தொடர்பான விடயங்களையும் அதற்கு எதிராக தான் போராடியது பற்றியதும் சிறை சென்றது பற்றியும் பேசுவார் என்று பார்த்தால் வழமையான தூண்டிவிடும் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் போல தலைவருக்கு வணக்கம், மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்றும் முழங்கிக் தள்ளினார். ஏற்கனவே தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை புலிகள் பாணியில் துரோகி முத்திரை குத்தி செல்லும் ஊசி அர்ச்சுனா மாவீரர்கள் பற்றியும் புலம்பெயர் தேசத்து முதலீடுகள் பற்றியும் பேசியதன் மூலம் புலம்பெயர் புலிக்குட்டிகளை உசுப்பி விட்டு அதன் மூலம் தனது பாக்கெட்டினை நிரப்பு போகிறார் என ஊசி எதிர்ப்பு குழுவினர் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதேவேளை ஊசி அர்ச்சுனாவின் மொழிப்புலமை அவரை ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதனை குறிப்பிட்டு பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இனவாதத்தை யார் தூண்டினாலும் கைதுகள் தொடரும் – ராஜபக்சக்களின் சகாக்களை எச்சரிக்கிறது என்.பி.பி.
பொலிஸ் விசாரணைகளின் படி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துபவர்களில் கணிசமானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் சட்டம் அமுல்படுத்தப்பட்டு புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் அல்லது இனவாதம் தோற்கடிக்கப்படும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளருமான ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு குறித்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவமானது பலத்த அதிர்வலைகளை சில பொழுதுகளில் ஊடகங்களில் ஏற்படுத்தியிருந்தது. மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவும் – இனவாத கருத்துக்களை தூண்டியமைக்காகவும் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ச்சியாக இனவாத மில்லாத ஓர் நாடு என்ற தொனிப்பொருளில் இயங்கிவருவதை தனித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் காட்டி வருகின்றது. பெரும்பாலும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மை இனங்களின் மீது மட்டுமே கடந்த அரசாங்க காலங்களில் பிரயோகிக்கப்பட்டு வந்ததுடன் தென்னிலங்கை அரசியல்வாதிகளோ அல்லது பிரஜைகளோ இனவாத கருத்துக்களை முன்வைத்த போது அதுசார்ந்த கைதுகள் இடம்பெறுவதில்லை. பொலிஸாரும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டனர். இந்த நிலையில் முதன்முறையாக பயங்கரவாத கருத்துக்களை முன்வைத்தோம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தென்னிலங்கையிலும் கைது செய்யப்பட்டு வருவதுடன் தேசிய மக்கள் சக்தியின் தென்னிலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களே இனவாத கருத்துக்களை எதிர்ப்பது தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை சிறுபான்மை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராஜபக்ஷ தரப்பை சேர்ந்த பிரதான நபர் கைது செய்யப்பட்டுள்ளமையானது இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுத அமைப்புக்களை தோற்கடிக்க வேண்டும் என்றபுலனாய்வுச் சதியின் பின் பொதுக்கட்டமைப்பின் செல்வின், நிலாந்தன், யோதிலிங்கம்.
ரெலோவின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன்
ரெலோவின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தனுடனான நேர்காணல். இந்த நேர்காணலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டோரின் தோல்விக்கான பின்னணி, அனுர அலை ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், பாராளுமன்ற உறுப்பினராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவாகியுள்ள நிலையில் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், உள்ளூராட்சி தேர்தல் கால திட்டமிடல்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
“மாகாணசபை வேண்டாம், ஆனால் வேணும்“ தமிழ் தேசியம் – “மாகாணசபை நீக்கப்படாது” அரசு உத்தரவாதம்
லாகூர்னே சிவனும் ஆவாக் குழுவின் அழித்தலும்!
1. “மாகாணசபை வேண்டாம், ஆனால் வேணும்“ தமிழ் தேசியம் – “மாகாணசபை நீக்கப்படாது” அரசு உத்தரவாதம்!
அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் புதிய அரசியலமைப்பொன்று உருவாகும் போது மாகாணசபை முறை நீக்கப்படும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியது ‘மாகாணசபை நீக்கப்படும்’ எனக் குறுக்கப்பட்டு தமிழ் தேசியவாதத்திற்கு அவல் கிடைத்தது போல் ஆகியது. இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம். மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் தெரிவித்தார்.
ரில்வின் சில்வா மாகாணசபை பற்றிப் பேசிய கருத்தை வைத்து என்.பி.பி அரசு மீதான எதிர்ப்பு அரசியலை தமிழ்த் தேசிய தரப்பு பதிவு செய்து வருகின்றது. இந்த நிலையில் “மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவே இல்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்த்தை வழங்கக்கூடிய ஓர் அரசமைப்பு தேவை. அதில் மாகாணசபை இருக்குமா? இல்லையா? என்பதே விடயம்” என ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துகொள்ள ரில்வின் சில்வா “2024 நவம்பர் 30 வீரகேசரி செய்தித்தாள் என்னுடன் நடாத்திய நேர்காணலைச் சார்ந்ததாக பிரசுரித்துள்ள பிரதான செய்தி மற்றும் அதற்காக இடப்பட்டுள்ள தலைப்பு ஊடாக நான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இந்த செய்தி மற்றும் தலைப்பு காரணமாக வாசகர் மத்தியில் தவறான கருத்து தோன்றுவதால் அதனை சரிசெய்ய வேண்டியுள்ளது. வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987 இல் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தம் தவறியுள்ளதெனவும் அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளதெனவும், அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13 வது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை எனவுமே அதன்போது நான் கூறினேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நாட்டின் சகல இனத்தவராலும் ஏற்றுக்கொண்ட ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை இனங்களின் அரசியல் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக என்.பி.பி மீது கல் எறிவதற்கான சூழலை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். இனவாதம் நீங்கிப் போனால் தாம் அரசியல் செய்ய முடியாது என்ற அச்சத்தின் வெளிப்பாடே தமிழ்த் தேசிய தலைமைகளின் எதிர்ப்புக்கு காரணம் என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் 13ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபை முறையை தமிழர்கள் தம் ஆஸ்தான நாயகர்கள் என கூறப்படும் புலிகளே ஏற்றுக்கொள்ளவில்லை என சட்டத்தரணி பஷீர் செய்யத் தேசம் நெட் நேர்காணலில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2. வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னணியில் கடற்தொழிலாளர்! குருநகரில் புதிய துறைமுகம்!
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் யாழ் வந்த ஜனாதிபதி அனுராவின் மாபெரும் கூட்டம் குருநகரிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அரசாங்கம் இந்திய மீனவர்களின் விடயத்தில் மிக இறுக்கமான போக்கைக் கடைப்பிடித்து எல்லை மீறும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்து வருகின்றது. அவர்களுடைய கடற்தொழில் உபகரணங்களை படகுகளைக் கைப்பற்றி வருகின்றது. மேலும் கடற்படைவீரர் ஒருவர் அத்துமீறிய இந்திய மீனவர்களால் படுகொலை செய்யப்பட்ட போது நூற்றுக்கணக்கான வடக்கு மீனவர்கள் தென்பகுதி சென்று அக்கடற்படை வீரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.
இச்சூழலில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் குருநகர் கடற்தொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழாவில் கலந்து சிறப்பித்துளார். மேலும் அங்கு மக்களிடம் பேசிய ஆளுநர் “கடற்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இராமலிங்கம் சந்திரசேகர், எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர். அவர் பலவற்றை உங்களுக்காகச் செய்வார். குருநகர் பகுதிக்கு ஓர் துறைமுகம் தேவை என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இணைந்து இப்பகுதியில் துறைமுகம் அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தல்கள் ஊழலுக்கு எதிரானதாக இருந்தாலும் வடக்கு – கிழக்கில் தமிழர் பகுதிகளில் எந்த பொருளாதார அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்க தமிழ் தேசியவாத பாராளுமன்ற உறுப்பினர்களே முட்டுக்கட்டையாக இருந்த நிலை தொடர்ந்தது. அதற்கு தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளித்திருந்தனர். தற்போது யாழ் மக்கள் தெரிவு செய்த தேசிய மக்கள் சக்தியின் புதிய மூன்று பிரதிநிதிகளுடனும் மக்கள் தேன்நிலவைக் களிக்கின்றனர். குறிப்பாக அரசாங்கத்தின் பிரதிநிதியாக பொறுப்பேற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு மக்கள் தமது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதையும் அவதானிக்க முடிகிறது. அவர் ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை வடக்கில் முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பாதைகள் கூட ஆளுநர் வேதநாயகனின் கோரிக்கையின்படியே என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
எதிர்ப்பு அரசியலை விட்டு மக்களும் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்து வருவதன் மூலம் எதிர்ப்பில்லாமல் பல அபிவிருத்திகளை தமிழர் பகுதிகளில் இனிவரும் காலங்களில் எதிர்பார்க்க முடியும் என சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தெரிவித்துள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
3. லாகூர்னே சிவனும் ஆவாக் குழுவின் அழித்தலும்!
பண, வரி மோசடிக்காக முற்றுகையிடப்பட்ட லாகூர்னே சிவன் கோவில் அங்குள்ள வன்முறைக் குழுக்களுடன் மட்டுமல்ல ஆவா குழுவுடனும் தொடர்பு பட்டிருப்பது தெரியவந்துள்ளது. லாகூர்னே சிவன் கோவிலின் பண வரி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆலயத்தின் பணிகளோடு தொடர்புடைய கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் இன்னமும் விடுவிக்கபடவில்லை. இப்பின்னணியில் பரம் பாரிஸ்வரி ( Param Paariswary) என்ற பெயரில் பதியப்பட்டு இயங்கும் லார்க்கூர்னே சிவன் கோயிலானது பாரிஸில் இயங்கிவரும் ரவுடிக் குழுக்களின் பின்னணியில் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இக்கோயிலுடன் தொடர்புபட்டிருந்த ஆவாக்குழுவின் பிரசன்னா பாரிஸில் படுகொலை செய்து தப்பியோடி தற்போது கனடாவில் மாட்டுப்பட்டு உள்ளார்.
1985 களில் பாரிஸில் அட்டகாசங்கள் புரிந்த குளுமாஸ் குழுவின் முக்கிய உறுப்பினரான வட்டி லிங்கம் என்று அழைக்கப்படும் புஸ்பராஜா குமாரசுவாமி லார்க்கூர்னே சிவன் கோயிலின் கணக்காளராகவும் புஸ்பராஜாவின் மனைவியும் குளுமாஸ்ஸின் சகோதரியுமான மயில்வாகனம் புஸ்பராஜா தவேஸ்வரி சிவன் கோயிலின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்கள்.
இது இப்படி இருக்க கனடாவில் கைது செய்யப்பட்ட ஆவா குழு பிரான்ஸ் கிளையை சேர்ந்த பிரசன்னா நல்லலிங்கமும் லார்க்கூர்னே சிவன் கோயில் நிர்வாகத்துடன் தொடர்புபட்டிருந்ததாக தகவல்கள் தெரியவருகின்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களிலில் யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டு வருகின்ற ஆவாகுழுவின் பிரான்ஸ் கிளையின் தலைவராக செயற்பட்டு வந்த நபரே சன்னா என்றழைக்கப்படும் பிரசன்னா நல்லலிங்கம். சன்னா தலைமையில் LC Boys என்ற பெயரில் லார்க்கூர்னேயில் இக்குழு இயங்கியது.
இக்குழுவின் பெயரில் பிரான்ஸ் தொலைபேசி இலக்கத்துடன் சிவன் கோயிலின் உரிமையாளரான குடும்பி ஜெயா என்றழைக்கப்படும் வெற்றிவேலு ஜெயேந்திரனின் தூண்டுதலில் குடும்பியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
சன்னா தலைமையிலான ஆவாகுழுவிற்கும் பிறிதொரு ரவுடிக்குழுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் செப்ரெம்பர் 21 ஆம் திகதி 2022 ஆண்டு இரண்டு இளைஞர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் அபிராமன் பாலகிருஸ்ணன் உயிரிழந்தார். பிரசாந்த் குலசேகரம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்.
சன்னா ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற ஒரு கொலைக்காக தேடப்பட்டு வந்த நபராக இருந்திருக்கின்றார். இறுதியாக பாரிஸில் நடத்திய கொலைக் குற்றத்திற்கான தண்டணையிலிருந்து கனடாவிற்கு தப்பியோடி கீயூபெக் மாநிலத்தில் மறைந்து வாழு;ந்து வந்தார். இவரை தற்போது இன்ரபோல் பொலிஸார் கைது செய்துள்ளனர். விரைவில் கொலை வழக்கு விசாரணைகளுக்காக பிரசன்னா பிரான்ஸ் கொண்டுவரப்பட இருக்கிறார். பிரான்ஸில் விசாரணைகள் நடக்கும் போது இவ்வாறான ரவுடிக்குழுக்களை நிதி உதவிசெய்து பின்னணியிலிருந்து இயங்குபவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விசாரணைகளில் லாகூர்னே சிவன் ஆலயத்துடன் தொடர்புபட்ட பலர் சிக்க வாய்ப்புள்ளது.
சமீபகாலங்களில் பாரிஸ் சிவன் கோயிலில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பின்னணியிலிருந்து செயற்பட காட்டான் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது. லார்க்கூர்னே சிவன் கோயிலின் முன்னாள் குருக்களான சுதன் ஐயரை வலுக்கட்டாயமாக காட்டான் குழுவினூடாக மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் சிவன் கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வெற்றிவேலு ஜெயேந்திரனால் காட்டான் குழுவின் தலைவருக்கு மாதாந்தம் 1000 யூரோக்கள் கப்பம் கட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது.
4. மாவீரர் தினம்: தூண்டியவர்கள் கைது செய்யப்பட்டார்கள்! கொண்டாடியவர்கள் கைது செய்யப்படவில்லை? கொழும்பு பிரதான நீதவான்!
நாட்டில் மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை? என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர். மாவீரர் நிகழ்வுகளை கொண்டாடியவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஏன் கைது செய்யவில்லை? என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னில்ங்கையைச் சேர்ந்த கெலும் ஹர்ஷனவை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதவான் , சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு, குற்ற விசாரணைப் பிரிவிவைக் கேட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமற் செய்வோம் என்று உறுதியளித்த தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இவ்வாறான சில்லறை விடயங்களுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது பொருத்தமா? என்ற கேள்வி மனித உரிமைவாதிகள் மத்தியில் எழுந்துள்ளது. இது அரசின் திட்டமிட்ட நடவடிக்கையா? அல்லது பொலிஸார் கடந்தகாலங்களில் மேற்கொண்டதையே தொடர்ந்தும் செய்கின்றார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று வம்பிழுத்து ரிக்ரொக் போட்டு மீண்டுமொரு குறளிவித்தை காட்டி தனது ரிக்ரொக் வாசிகளுக்கு கிலுகிலுப்புக் காட்டியுள்ளார் ஊசி அர்ச்சுனா. இலங்கை மக்களும் தமிழ் மக்களும் எவ்வளவோ நெருக்கடியான சூழலில் இருக்கின்றபோது பாராளுமன்றம் கூடிய இரு தினங்களிலும் ஊசி அர்ச்சுனா ஊத்தைவாளி அர்ச்சுனாவாகவே தன்னை வெளிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் குறுக்கிட்டு குழறுபடி, உளறுபடி செய்தார் பா உ ஊசி அர்ச்சுனா. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து அர்ச்சுனாவே பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார். இதேவேளை மற்றுமொரு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என சபையில் தெரிவித்தார்.
ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பில் பாராளுமன்றம் சென்றிருக்கும் ஒருவரது பொறுப்பற்ற நடவடிக்கைகள் தமிழ் மக்களை ஒரு பரிகசிப்பிற்குரிய சமூகமாகவே மற்றவர்கள் நோக்கும் நிலைமையை ஏற்படுத்தும். அவர் பாராளுமன்றத்துக்குள் பேசும் ஒவ்வொரு விடயமும் மற்றவர்களால் நகைச்சுவையாக நோக்கப்படுகின்றது. இது தொடருமாயின் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் அனைத்தும் பரிகசிப்பிற்குரிய ஒன்றாகவே நோக்கப்படும்” என யாழில் இருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகை அதன் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
6. டிகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் லண்டன் வந்து சேர்ந்தனர்!
டிகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகமோசமான ஆள்நடமாட்டம் அற்ற தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 சிறுவர்கள் உட்பட்ட தமிழ் அகதிகள் லண்டன் கட்விக் விமான நிலையம் வந்தடைந்தனர். மூன்று வருடங்களாக இடம்பெற்ற சட்டப் போராட்டத்தின் பின் இவர்களை பிரித்தானியாவிற்கு அழைத்துவர பிரித்தானிய உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தது சட்டத்திற்கு புறம்பானது என இவர்களின் விடுதலைக்காகப் போராடிய மனித உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடா செல்லப் புறப்பட்ட இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்ட இன்னல்களை விபரித்த இந்த அகதிக்குழுவில் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி அருண் கணநாதன் அவர்கள் மிகுந்த உளவியல் வலிகளோடும் தான் பிரித்தானியாவில் வந்திறங்கி உள்ளதாகவும் பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான கடும்போக்கைக் கடைப்பிடித்த கொன்சவேடிவ் ஆட்சி போய் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த அகதிகளை இங்கு அழைத்து வருவதற்கான சூழலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இவர்களைப் போன்று இன்னும் நூற்றுக்கணக்கான அகதிகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடும் துயரங்களை அனுபவிக்கின்றனர். சிலர் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்ய இராணுவத்தில் பலாத்காரமாக இணைக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை இலங்கையில் உள்ள ரஸ்யத் தூதரகம் மறுத்துள்ளது. தாங்கள் யாரையும் பலாத்காரமாக இராணுவத்தில் இணைக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
7. ‘அனுர ரட்டே’ யோடு கைகோர்த்து பயணிக்க தயாராகவுள்ளோம் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி !
ஜனாதிபதி அனுராவோடு கைகோர்த்து பயணிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான நேற்றைய விவாதத்தின் போது பா உ சிறிதரன் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி அனுர தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினையை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது என பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். சிங்களவர்களால் நடத்தப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், இந்த அரசாங்கத்தோடு கைகோர்த்து பயணிக்க தயாராகவுள்ளோம். 2/3 பெரும்பாண்மையை பெற்றுள்ள இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு தரப்போகின்றது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லிணக்க அரசியல் சூழல் ஒன்று இல்லாத சூழலே இலங்கையின் அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படையாகியுள்ளது என என்.பி.பி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரும் அனுர அரசுடன் இணைந்து பயணிக்க ஏற்கனவே பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி இணைந்து செயற்பட முன்வருவதாக கூறியிருக்கின்றார்.
நினைவேந்தல் உரிமைகள் தமிழருக்கு வழங்கப்படுதல், அரசினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுதல் என்பன மூலம் தாம் தமிழ்மக்களை உள்ளிருந்து புரிந்து கொள்கிறோம் என்பதை அனுர அரசு வெளிப்படுத்துகிறது எனவும் தமிழ் மக்கள், தேசிய மக்கள் சக்தி தொடர்பில் அச்சம் கொள்ளத்தைவையில்லை எனவும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான பஷீர் செய்யத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது.
இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார்.
அத்துடன், பெண் பாராளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே பிரதி இணைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி விஜேரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க வழிமொழிந்தார்.
மேலும் மற்றுமொரு பிரதி இணைத்தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச்செல்வி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே வழிமொழிந்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்க வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது சிறந்த வெற்றியாகும் என்றார். எனவே, அரசியல் வேறுபாடுகள் இன்றி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது ஒன்றியத்தின் நோக்கம் என இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
அத்துடன், ஒன்றியத்தால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரு துணைத் தலைவர்கள் தலைமையில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவின் பரிந்துரைக்கு அமைய பாலின அடிப்படையில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான தினத்தை எதிர்வரும் 06ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்டத்தை தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய இராமலிங்கம் சந்திரசேகர்,
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பாரிய ஆதரவு இல்லை என பலரும் குற்றஞ்சாட்டினார்கள். நான்காவது ஸ்தானத்தில் தான் அறுவை யாழ் மக்கள் வைத்திருக்கிறார்கள் என கூறினார்கள். அப்போது நாங்கள் கூறினோம் இலங்கையின் மொத்தமான மாவட்ட ரீதியாக கடந்தகால தேர்தலுடன் ஒப்பிடும் போது முதலாவது ஸ்தானத்தில் இருக்க கூடிய மாற்றம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது என்று. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எங்களை முழுமையாக நம்பி எங்களை முதல் ஸ்தானத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. நாம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தமிழர் மீதும் முஸ்லீம்கள் மீதும் இனக்கலவரம் வெடிக்கும், மீள ஒரு இருண்ட யுகம் உருவாகும், டொலர் 400 ரூபாயாக போகிறது, என்றெல்லாம் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இவற்றை தாண்டி மக்கள் எங்களை நம்பினார்கள். அந்த நம்பிக்கையை நாம் ஏற்படுத்தினோம். இந்த மக்களின் நம்பிக்கையை இந்த அரசு காப்பாற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்திருந்தார். கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நீதித்துறையின் மாண்பு மீள உறுதி செய்யப்படும், ஊழல் – பக்கச்சார்பற்ற அரசசேவை முன்னெடுக்கப்படும், இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை, இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை, நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் போன்ற விடயங்களை வலியுறுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கது.
கிளிநொச்சியில் 16 புதிய மதுபான சாலைகள் – போரால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட பார் பெர்மிட் அபிவிருத்தி !
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டது முதல் பார்பெர்மிட் தொடர்பான விடயங்கள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில் புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
”இக்காலப் பகுதியில் மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.
மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.
சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாவட்ட ரீதியாக பார்க்கும் பொழுது அதிகூடிய மக்கள்தொகையையும் – மிகப்பெரிய வியாபார மையங்களாகவும் காணப்படும் கொழும்பு மாவட்டத்துக்கு 24 அனுமதிகளும், கம்பஹா மாவட்டத்துக்கு 18 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ள அதே வேளை இவற்றுக்கு அடுத்தபடியாக வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியான மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள விடயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு மாகாணத்தை பொருத்த வரையில் புதிய மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் அடிப்படையில் யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2 என்ற வகையிலும் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான சாலைகள் தொடர்பில் அப்பகுதி அரசியல்வாதிகளான சிறீதரன் எம்.பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மறந்தும் இதுவரை வாய்திறந்தது கிடையாது. ஏற்கனவே கிளிநொச்சி பகுதிகளில் வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை, என சமூக சீர்கேடுகள் மலிந்து போயுள்ள நிலையில் புதிதாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான சாலைகளில் பெட்டிக்கடைகள் போல மதுபான சாலைகள் குவிந்து போயுள்ளது என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இதேவேளை பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை அண்மித்த வகையில் மதுபான சாலைகள் அமைக்கப்படக்கூடாது என்ற தியதி காணப்படும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பிரதான நகரப் பாடசாலைகளுக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று என்ற வகையில் சாராயக் கடைகள் காணப்படுவது எதிர்கால தலைமையினருக்கு கல்வி மீதான நாட்டம் குறைவடைய காரணமாக அமையும் எனவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்கினேஸ்வரன் ஓர் மதுபான சாலைகளுக்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்று ஓர் பெண்ணுக்கான வாழ்வாதார உதவி வழங்கியதாக கூறியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.