கிளிநொச்சியில் 16 புதிய மதுபான சாலைகள் – போரால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்ட பார் பெர்மிட் அபிவிருத்தி !
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டது முதல் பார்பெர்மிட் தொடர்பான விடயங்கள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில் புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
”இக்காலப் பகுதியில் மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.
மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, வடக்கு மாகாணத்துக்கு 32, கிழக்கு மாகாணத்துக்கு 22, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.
சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்களானது பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாவட்ட ரீதியாக பார்க்கும் பொழுது அதிகூடிய மக்கள்தொகையையும் – மிகப்பெரிய வியாபார மையங்களாகவும் காணப்படும் கொழும்பு மாவட்டத்துக்கு 24 அனுமதிகளும், கம்பஹா மாவட்டத்துக்கு 18 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ள அதே வேளை இவற்றுக்கு அடுத்தபடியாக வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியான மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள விடயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு மாகாணத்தை பொருத்த வரையில் புதிய மதுபான சாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் அடிப்படையில் யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2 என்ற வகையிலும் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான சாலைகள் தொடர்பில் அப்பகுதி அரசியல்வாதிகளான சிறீதரன் எம்.பி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மறந்தும் இதுவரை வாய்திறந்தது கிடையாது. ஏற்கனவே கிளிநொச்சி பகுதிகளில் வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை, என சமூக சீர்கேடுகள் மலிந்து போயுள்ள நிலையில் புதிதாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான சாலைகளில் பெட்டிக்கடைகள் போல மதுபான சாலைகள் குவிந்து போயுள்ளது என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இதேவேளை பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை அண்மித்த வகையில் மதுபான சாலைகள் அமைக்கப்படக்கூடாது என்ற தியதி காணப்படும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பிரதான நகரப் பாடசாலைகளுக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று என்ற வகையில் சாராயக் கடைகள் காணப்படுவது எதிர்கால தலைமையினருக்கு கல்வி மீதான நாட்டம் குறைவடைய காரணமாக அமையும் எனவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்கினேஸ்வரன் ஓர் மதுபான சாலைகளுக்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்று ஓர் பெண்ணுக்கான வாழ்வாதார உதவி வழங்கியதாக கூறியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.