யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் தெரிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி இணைய வலையில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின் ( யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன் ) பிரதிகளை ‘டயஸ்பொறா டயலக்’ அமைப்பின் சார்பில் ரி கொன்ஸ்ரன்ரைன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார். நேற்று (ஒக்ரோபர் 17 2010) கொழும்பில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாவணம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர் இடம்பெற்ற உரையாடலில் புலம்பெயர்ந்தும் தாயகத்திலும் வாழும் யாழ் பல்கலைக்கழக்தின் நலன்விரும்பிகளின் நிலைப்பாட்டை தான் அமைச்சருக்கு எடுத்துக் கூறியதாகவும் அவர்களுடைய எண்ணப்பாடுகளைக் கவனத்தில் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.
பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தெரிவுசெய்யும்படி கோரும் போராட்டம் இத்துடன் முடிவடையவில்லை எனத் தெரிவித்த ரி கொன்ஸ்ரன்ரைன் நலன்விரும்பிகள் தொடர்ந்தும் கையெழுத்துக்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm இக்கையொப்பப் போராட்டத்தின் பிரதிகள் கல்வி அமைச்சர் எஸ் பி திஸ்ஸநாயக்காவிடம் ஒக்ரோபர் 21ல் கையளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
._._._._._.
யாழ் பல்கலையில் பொறியியல் பீடம் அமைப்பது பற்றி வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு அமைச்சருடன் சந்திப்பு:
இந்நிகழ்வுக்கு முன்னதாக வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் (Institution of Engineers Sri Lanka – North) குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது தொடர்பாக இக்குழு இச்சந்திப்பை மேற்கொண்டது. இச்சந்திப்பின் போது அமைச்சரின் அழைப்பில் ரி கொன்ஸ்ரன்ரைன், மற்றும் பேராசிரியரும் ஒக்ரோபர் 6 பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப்பட்டம் பெற்றவருமான பாலசுந்தரம்பிள்ளை ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழுவிற்கு இலங்கை மின்சாரத் திணைக்களத்தின் ஜிஎம் ஆர் முத்துராமநாதன் தலைமை தாங்கினார். இக்குழுவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், டொக்டர் அற்புதராஜன், டொக்டர் பிரபாகரன், தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் நவரட்ணராஜா கலந்துகொள்வதாக இருந்த போதும் அவரால் இச்சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை.
இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் விசேட ஆலோசகர் திருமதி விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது, 2006ல் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யைத் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் உப வேந்தராக தெரிவு செய்ய தான் போராடியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆனால் அவர் அப்பதவியை ஏற்று செயற்பட முற்பட்ட போதும் கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியதை ஒரு குற்றச்சாட்டாகவே தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அழுத்தமாகவே தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ”என்னுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல்களை விட்டனர். எனது மகளுக்கு அவளுடைய தம்பியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டினர். மனைவியை வெள்ளைச் சேலை அணிய வேண்டி வரும் என மிரட்டினர். உங்களைப் போன்ற தைரியம் எனக்கில்லை. அதனால் நான் நாட்டைவிட்டு வெளியேறி விட்டேன். ஆனால் இப்போது திரும்பி வந்திருக்கிறேன்” என்றார்.
இச்சந்திப்பில் தற்போதைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பற்றிய அதிருப்தி அமைச்சரவைக் குழுவில் வெளிப்பட்டது. அண்மையில் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்களின் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அதற்கு அங்கு கடமையாற்றுகின்ற பேராசிரியர்களே காரணம் என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னணியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிருப்தியும் வெளிப்பட்டது.
வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கு அமைச்சரின் ஒத்துழைப்பையும் கோரினர். யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் பீடத்தை அமைக்க வேண்டும் என்று சில அறிக்கைகளை வெளியிட்டதற்கு அப்பால் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. யாழ் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தை அமைக்கும் முயற்சி நீண்டகாலமாக கிடப்பிலேயே உள்ளது. அதனால் வடமாகாண கற்கைநிலைய பொறியியலாளர்கள் குழு தங்கள் ஆர்வமேலீட்டால் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கான அழுத்தத்தை மேற்கொண்டனர்.
”பொறியியல் பீடத்தை விருத்தி செய்வது என்பது சாதாரண விடயமல்ல” என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான திட்ட ஆவணங்களையும் திட்ட வரைபுகளையும் தயாரித்து தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். பொறியியல் பீடத்திற்கான திட்ட ஆவணங்களும் திட்ட வரைபுகளும் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் அது பற்றி கவனம் கொள்ளாததால் அமைச்சர் தன்னைச் சந்தித்த பொறியியலாளர் குழுவிடம் அவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கான நிதி ஒதுக்கீடு பற்றி கருத்து வெளியிட்ட விஜயலக்ஸ்மி ஜெயராஜசிங்கம், ”முறையான திட்ட ஆவணங்கதை தயாரித்து வந்தால் 2011 – 2012 நிதி ஆண்டிலேயே அந்த நிதிக் கோரிக்கையை வைக்கமுடியும்” என்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”உலகம் முழுவதுமே அரசாங்கங்கள் பொதுத்துறைக்கான நிதியை குறைக்கின்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கோரிக்கை அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.
இலங்கை அரசாங்கத்தின் நிதிநிலமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைக் குழு இந்தியாவினதும் சர்வதேச அணுசரனையுடனும் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கான உதவியைப் பெற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
”ஊடகங்களில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்த போதும் அவ்வாறான உதவிகள் வருவதில்லை” என பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிட்டார். ”இந்தியா உதவி அளிப்பதாக செய்திகள் வந்ததைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தான் அங்குள்ள கல்வியியலாளர்களுடன் பேசும்போது அவர்கள் அவ்வாறான எவ்வித உதவியும் வழங்கப்படுவது பற்றி அறிந்திருக்கவில்லை” எனச் சுட்டிக்காட்டினார்.
இது பற்றிக் கருத்து வெளியிட்ட அமைச்சரவைக் குழு உறுப்பினர் சந்திரமோகன், ”அரசாங்கம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டும் என்ற அரசியல் ரீதியான கோரிக்கைகள் பலனளிக்காது” எனத் தெரிவித்தார். ”இலங்கையில் இவ்வளவு மோசமான அழிவுக்கு வித்திட்டதில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது” எனவும் அவர் குற்றம் சாட்டினார். ”பல்கலைக்கழகத்தினுள்ளேயே பொங்குதமிழ் கொண்டாடி விட்டு, இப்போது பல்கலைக்கழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இடித்துக் கேட்க முடியாது” எனவும் சந்திரமோகன் குறிப்பிட்டார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்கப்படுவதற்கு தான் முழு முயற்சி எடுப்பேன் என உறுதியளித்த அமைச்சர் வேண்டிய அவணங்கள் தயாரிக்கப்பட்டதும் அமைச்சரவையில் முன்வைத்து வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி அளித்தார்.
(தகவல் ரி கொன்ஸ்ரன்ரைன்)
._._._._._.
லண்டன் குரல் (ஒக்ரோபர் 07 2010) இதழ் 36ல் வெளியான செய்தி:
தமிழ் கல்விச் சமூகத்தை யாழ் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வர வேண்டும்!
யாழ் பல்கலையின் நலன்விரும்பிகள் இணைய வலையில் கையொப்பப் போராட்டம்!!!
”யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் வெற்றிடங்களை நிரப்புகின்ற போது முறைகேடான நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக இதைச் சுட்டிக்காட்டிய போதும் இதனைச் சீர்செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”
எஸ் சுவர்னஜோதி, ஓடிறர் ஜென்ரல், ஓடிற் 2009
இது மலையெனக் குவிந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சீரழிவின் ஒரு சிறு பகுதியே.
யுத்த சூழலில் இருந்து மீண்டுள்ள தமிழ்க் கல்விச் சமூகம் தமது கல்விக் கட்டமைப்புகளில் உள்ள சமூகவிரோத சக்திகளின் செயற்பாடுகளினால் அதிர்ந்து போயுள்ளனர். தமிழ் சமூகத்தினை வேரறுக்கும் அளவிற்கு கல்விக் கட்டமைப்புகளில் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகச் சீர்கேடு, ஊழல், மோசடி, பாலியல் பலாத்காரம் என்பன மலிந்து போயுள்ளன. யாழ் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள் அர்த்தமற்றவையாகிக் கொண்டுள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்தைச் இச்சீரழிவில் இருந்து மீள்விக்க அமைச்சர் தேவானந்தாவும் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நலன்விரும்பிகள் இணையப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
நவம்பரில் நடைபெறவுள்ள யாழ் பல்கலையின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில் இப்பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்ததொரு பல்கலைக் கழகமாக்க கனவு கண்ட பேராசிரியர் கைலாசபதியின் கனவை நனவாக்கக் கூடிய ஒருவரையே அமைச்சர் தேவானந்தாவும் கவுன்சில் உறுப்பினர்களும் தெரிவு செய்ய வேண்டும் என்கிறார் இப்போராட்டத்தை முன்னெடுக்கும் ரரின் கொன்ஸ்ரன்ரைன்.
இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கம், கலைப்பீடத்தின் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமரன், வரலாற்றுத்துறையின் தலைவர் பேராசிரியர் சத்தியசீலன் ஆகியோர் முக்கியமாகப் போட்டியிடுகின்றனர். யாழ் பல்கலைக்கழகம் சீரழிந்து கீழ்நிலைக்குச் சென்றதற்கு மிகமுக்கிய பொறுப்புக்களில் இருந்த இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் பல நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இவர்களே காரணமாகவும் இருந்தள்ளனர்.
அதனால் யாழ் பல்கலைக்கழகத்தை மீள்விக்க சிரழிவுக்கு வெளியே இருந்து கல்வித் தகமையும், நிர்வாகத் திறனும் உடைய ஒருவரைக் கொண்டுவருவதே பொருத்தமானது என போராட்டத்தில் இணைந்து கையொப்பம் இட்டுள்ள பலரும் கருத்து வெளியிட்டு உள்ளனர். அந்த வகையில் உபவேந்தர் பதவிக்கு போட்டியிடுகின்ற சர்வதேச பல்கலைக்கழக அனுபவமும் தகமையும் நிர்வாகத் திறனும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களே இப்பதவிக்கு பொருத்தமானவர் எனக் கருதப்படுகிறார்.
தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ் கல்விச் சமூகத்தை 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப கட்டியெழுப்ப விரும்பினால் அமைச்சர் தேவானந்தா பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலுக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று அமைச்சருக்கு நீண்டகாலம் தம் அரசியல் ஆதரவை வழங்கிவரும் வி சிவலிங்கம், எம் சூரியசேகரம், ராஜேஸ் பாலா உட்படப் பலர் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் ஹூல் இலங்கையிலேயே தகமைபெற்ற ஒருவர் என்றும் அவர் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பணியாற்றுவதற்கு வாழத்துக்கள் என்றும் ஈபிடிபி கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா ரிபிசி வானொலியில் தெரிவித்து இருந்தார்.
தமிழ் மக்களின் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற அமைச்சர், பரிசு பெறும் மாணவி தன் காலத்தில் யாழ் பல்கலையில் பாதுகாப்பாகவும் பெருமிதத்துடனும் கற்க வழிசெய்வார் என நம்புவோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்
மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்
யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்
தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்
பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்