மிகப் பிரமாண்டமான செலவில் (25-40 அமெரிக்க கோடிகள்), தயாரிக்கப்பட்டு ஒரே நாளில் உலகில் 2250 திரைகளில் வெளியிடப்பட்ட படம் எந்திரன். முதல்நாள் காட்சிகளே 25 கோடி (அமெரிக்க டாலர்ஸ்) களுக்கு விற்கப் பட்டிருக்கிறதாம். படத்தின் ஆதிமூலம் தமிழாகவிருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் ‘டப்’ பண்ணப் பட்டிருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு ஆங்கில மொழியில் சப் டைடிலும் போடப் பட்டிருக்கிறது. ஒரேயடியாக உலகமெல்லாம் 2250 திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் பலரின் பலவிதமான எதிர்பார்ப்புக்களையும் தூண்டி விட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பட வசூலைக் கொடுப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களின் பொழுது போக்குக்குத் தமிழ்ப் படங்களை நாடுகிறார்கள். இவர்களால் தமிழத் திரையுலகம் நன்றாகப் பணம் படைக்கிறது. தமிழ்த் திரையுலகம் என்ன படத்தைக் கொடுத்தாலும் அதை விழுந்தடித்துக் கொண்டு பார்க்க புலம்பெயர்ந்த தமிழ்க் கூட்டம் இருக்கிறது. நோர்வேயில் ‘எந்திரன்’ ஒரு பிரமாண்டமான ‘கொலோசியக் கட்டிடத்தில்’ திரையிடப்படுவதாத் தமிழகப் பத்திரிகைகள் பீற்றிக்கொண்டன.
நோர்வேய்த் தமிழர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழர்கள். இப்படம் அவர்களுக்கு என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்ற தெரியாது. திரையிடப்படும் இடங்கள் திருவிழா காண்கிறது என்று தென்னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகள் பறைசாற்றின. ஆனால் ஹிந்தியில் ‘ரோபோர்ட்’ என்ற பெயரில் (எந்திரன்) திரையிடப்பட்ட விடயங்களில் கைவிட்ட எண்ணக்கூடிய கூட்டம்தான் வந்திருந்தது. (01.10.10).
இது ஒரு வழக்கமான தமிழ்ப் படம், காதலிக்காக உலகத்தை அழிக்க முயலும் தமிழ்த் திரைப்படக் கதாநாயக வடிவத்தின் ‘இயந்திர் சொருபமாக ‘எந்திரன்’ படைக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருத்தரான சங்கரின் கதையமைப்பு, இயக்கத்தில் மிக மிகப் பணச்செலவில் தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலப் படங்களான ‘அவதார’, ‘மெட்டரிக்ஸ்’ போன்றவற்றிக்கு இணையானது இப்படம் என்று இந்திய தமிழ்ப் படங்கள் பெருமை கொட்டிக்கொள்கிறது.
கதாநாயகன் ( ரஜனிகாந்த், அறுபது வயதைத் தாண்டியவரா அல்லது தொட்டுக்கொண்டிருப்பவரா) டொக்டர் வசீகரன் (?) பத்துவருட கால கட்டங்களாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய ஒரு இயந்திர மனிதனுக்கு டொக்டரின் காதலியான ஐஸ்வரியாவின் முத்தம் கன்னத்தில் பட்டதும் மனித உணர்வுகள் வந்து ஐஸ்வரியாவின் காதலை முழுமையாகப் பெற விஞ்ஞானத்தையே விழுங்குமளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டு இயந்திர மனிதன் போராடுவதுதான் கதை.
திரைப் படங்கள் எடுப்பவர்கள் தனக்குத் தெரிந்த ஒரு கருத்தையோ தத்துவத்தையோ சாதாரண மக்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் படம் எடுப்பார்கள். அல்லது பொழுதுபோக்குக்காக ஜனரஞ்சகமான படங்கள் எடுப்பார்கள். அல்லது சமயத்தைப்போதிக்கக் கடவுள்களின் மகிமைகளைக் காட்டும் படங்களை எடுப்பார்கள்.
இதை எடுத்த சங்கரால், தென்னிந்தியாவின் பிரபல நடிகரின் பல நாள் ஆசையான எப்படியும் உலக அழகியாகப் பட்டம் எடுத்த (1992) ஐஸ்வரியாவின் காதலான நெருங்கி நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தத்தான இந்தப் படம் எடுக்கப் பட்டதா என்ற கேள்வியின் திரைப்பட அமைப்பு எழுப்புகிறது.
அறுபது வயது முதுமை (பாவம் பார்க்கப் பரிதாபம்) முப்பத்தியாறு (மூ)முத்தழகுடன் பல நாடுகளுக்கும் பறந்து படம் பார்க்க வரும் இளைஞர்களைக் கிளு கிளுப்படைய வைக்க முயற்சிக்கிறது. இந்தக் கருத்துக்கு உதாரணம், காதலன் காதலி ஊடலில் தான்கொடுத்த முத்தங்களைத் திருப்பித் தரசொல்லிக் கதாநாயகன் கேட்க காதலி, காதலன் வசீகரனின் கன்னத்தில் பட் பட்டென்று ‘உம்மாக்கள்’ கொடுக்க, அவள்கொடுக்கும் ‘இச்சுக்களின்’ நெருக்கம் பத்தாதென்று அடம் படிக்கிறார். உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த இயந்திர மனிதனை உருவாக்கிய ‘க(ல்)லாநிதி, இந்தக் கட்டத்தில் என்ன புதிய காதல் உத்தியை உட்புகுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. (இக்கட்டத்தைப் பெரிதுபடுத்தி விமர்சனம் எழுதப்பட்டதால் இதை எழுத வேண்டியிருக்கிறது.)
இயந்திரத்துக்கு டாக்டரின் காதலி சானாவில் வந்த (ஐஸ்வரியாவில்) வந்த காதலைப் புரிந்து கொண்ட, கதாநாயகனின் எதிரியான இன்னொரு விஞ்ஞானி, இயந்திர மனிதனை மடக்கித் தன் தேவைகளுக்குப் பாவித்துப் பணம் சேர்க்க அயல் நாட்டு சக்திகளுடன் கூட்டுச்சேர்கிறான். ஐஸ்வரியாவின் காதலைத் தவிர வேறு எதையும் கண்டுகொள்ளாத இயங்திர மனிதன் தன்னனைப் போல் இன்னும் பல் நூறு இயந்திரங்களை உருவாக்கி சானாவுக்காக உலகை அழிக்க முயல்கிறான்.
தனது காதலியை இயந்திரத்திடமிருந்து காப்பாற்றவும் அதேநேரம் உலகைக் காப்பாற்றவும் கதா நாயகன் வசீகரன்(?) தனது விஞ்ஞான அறிவைப் பாவித்து இயந்திர மனிதனை அழித்து விடுகிறார்.
இயக்குனர் சங்கர் தனது உதவி இயக்குனர்களுக்குப் பல ஆங்கிலப் படங்களைக் கொடுத்து அவற்றில் வரும் விறு விறுப்பான கட்டங்களைப் பற்றிய தகவல்களைச் கேகரித்துத் தனது படங்களின் ‘தேவைகளுக்குப்’ பாவிப்பதாக எங்கேயோ படித்திருக்கிறேன். பல ஆங்கிலப் படங்கனின் காட்சிகளின், கருத்துக்களின் சாயல்கள் இப்படத்தில் தொட்டுத்தடவிக் கிடக்கின்றன.
இந்தப் படத்தில் கதை பற்றியோ நடிப்பு பற்றியோ பெரிதாக ஒன்றும் இல்லை. ஐஸ்வரியாவுடன் பல நாடுகளுக்குப் போய்க் கவர்ச்சி நடனம் ஆடவும் ஐஸ்வரியாவுக்கு விதமான ஆடைகளைப் போட்டு அழகு பார்க்கவும் பிரமாண்ட செலவு செய்யப்பட்டிருக்கிறது
அதுசரி ‘கிளி மான்சரோ’ பாட்டுக்குரிய ஆட்டக் காட்சியை ஏன் தென் அமெரிக்காவில் பெரும்பாலும் எடுத்தார்கள்? கிளிமாஞ்சரோ ஆபிரிக்காவிலல்லவா இருக்கிறது? (தமிழர்களுக்குச் சரித்தரம் தெரியாதென்ற நினைவு போலும்!) இவர்கள் அந்தப் பாடலுக்குப் படம் எடுத்த இடம் ஒருகாலத்தில் நாகரிக மனிதர்களாயிருந்து ஸ்பானிய காலனித்துவ வாதியான பிரான்கோயி பிச்சாரோ (1528) என்பரால் அழிக்கப்பட்ட ‘இங்கா’ என்ற இன மக்களைக் கொண்டிருந்த ‘மாச்சுப்பூச்சி’ (1400 ஆண்டுகளில் உருவாக்கிய நகர்) என்ற தென்னமரிக்க இடமாகும்.
இந்தப் படத்தை மக்கள் திரணடு வந்த பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி படத்தை ஓட்டுவது பிரமாண்டமான டெக்னிக் காட்சிகளாகும். இப்படியான காட்சிகளைப் பார்க்க விரும்புவர்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பக்கத்தில் அவர்கள் கொம்பியுட்டர் கேம் விளையாடும் போது சேர்ந்திருந்தால் மிகவும் விறுவிறுப்பாகவிருக்கும்.
இறுதியாக, இப்படம் 12 வயதுக்கு மேலுள்ள வயதுள்ளவர்கள் பார்க்க வேண்டிய படம் என்று மேற்குலக தணிக்கை சபை சொல்லியிருக்கும் போது ‘எந்திரன்’ குடும்பத்துடன் சேர்ந்திருந்து பார்க்கக்கூடிய படம் என்று தென்னிந்தியத் தமிழ் இணையத்தளம் ஒன்று புழுகித் தள்ளியிருக்கிறது.
குடும்பம் என்றால் அதில் சிறு குழந்தைகளும் அடங்குவார்கள், அதைப்பற்றி ஒரு சின்னச் சந்தேகம், கதாநாயகியை வில்லர்கள் துரத்தித் தங்கள் கூட்டத்தின் நடுவிற் கிடத்தி துப்பட்டாவை உரிவதை அந்தக் கூட்டத்திலுள்ள ஒருத்தர் மோபைலில் படம் எடுக்கிறார். இக்கேவலமான கட்டத்தை சுப்பஸ்ரார் ரஜனிகாந்த் தனது பேரன் யாத்திராவுடன் சேர்ந்திருந்து பார்ப்பாரா?
