23

23

தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமிலுள்ள 23 பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பெண்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இப்பெண்களை அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பழையில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் இவர்களின் விடுதலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் டியூ குணசேகர வழங்கினார். தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டவர்களாவர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகரா வவுனியா ஓமந்தை புனர்வாழ்வு நிலையத்தின் புனர்வாழ்வு முகாம் மூடப்படுவதாக தெரிவித்தார். அந்த முகாமில் இருப்பவர்களில் சுமார் 150 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்படுவதாகவும், ஏனையவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர் திசநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுகந்த ரணசிங்க, புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் சமரசிங்க, தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் மற்றும் புனர்வாழ்வு நிலைய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக யாழ். அரச செயலகத்திற்கு நேற்று அமைச்சர் டியூ குணசேகர வருகை தந்த போது அங்கு காத்திருந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெற்றோர், உறவினர், காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர் என்போர் அமைச்சரை சந்தித்து கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் உறவினர்களை விடுதலைசெய்யுமாறும், காணாமல் போனோர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே இவர்கள் அமைச்சரிடம் அழுது மன்றாடினர். பொதுமக்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதேவேளை, தடுப்பு முகாமில் உள்ளவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த விபரங்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றை அமைச்சர் டியூ குணசேகர நேற்று யாழ். கேட்போர் கூடத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இன்று சனிக்கிழமை முதல் இந்த இணையத்தளத்தில் இவ்விபரங்களைப் பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் சுடுகாட்டில் தமிழ்க் கலாச்சார வீரநடைபோடும் ஆங்கிலத்தின் அடிமைகள். : யூட் ரட்ணசிங்கம்

Convocation_UoJ1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தபோது அது தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக தள்ளிவிடுகிறது என்று கோஷமிட்டு ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தார்கள் அன்றைய தமிழ் அரசியல் வாதிகள்.

அவர்களின் அன்றைய அகிம்சைப் போராட்டமே இறுதியில் ஆயுதப் போராட்டத்துக்கு வழி அமைத்தது.

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் பல தொடக்கப் புள்ளிகளில் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றுதான் யாழ்ப்பாணப்  பல்கலைக் கழகம்.

விடுதலைப்போர் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் அந்த போராட்டங்களின் பின்புலத்தில் அந்தந்த நாட்டு பல்கலைக் கழகங்கள் பங்கு பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியில் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் ஒன்று.

இது கல்விசார் வரலாற்றுத் தொடர்ச்சியை மட்டுமல்ல தமிழ் ஆயுதப் போராட்ட வரலாற்றையும் வடுக்களையும் கடந்த மே 18 வரை காவி நின்றது.

குறிப்பாக தமிழுக்காக உயிர் கொடுக்க வேண்டும் என்ற இளைஞர்களை உசுப்பேத்தும்  அரசியல் உருவாக்கத்தின் ஒரு புள்ளியும் கூட இந்த யாழ் பல்கலைக்கழகம்.

Convocation_UoJஇந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 26வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்ததான செய்தியும் புகைப்படங்களும்  அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

அந்த புகைப்படங்களைப் பார்த்த போது வீணடிக்கப்பட்ட அந்த உயிர்களான முத்துக்குமாரும் முருகதாசும் என் கண்முன்னேவந்து போனார்கள்.

இரண்டு இலட்சம் அப்பாவி உயிர்களை காவுகொண்ட அந்த கொடூரமான போரின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றான இந்த யாழ் பல்கலைக் கழகம் தனது 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழிலும் எழுதுவதற்கு தயங்குகிறது.

ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதோ அதில் புலமை பெறுவதோ தவறில்லை. ஆங்கிலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்பதும் அனைவரும் அறிவர். பல்கலைக் கழகங்களில் அம்மொழியின் அவசியம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல மிக அவசியமானதும் கூட.

ஆனால் தன் தாய் மொழியை பேசுவதும் பயன்படுத்துவதும் தரம் கெட்ட செயல் என்று கருதும் ஒரேயொரு இனம் அது ஈழத் தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாக தமிழர்களின் துறைசார் அறிவுஜீவிகள் என்று கருதக்கூடியவர்களே தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள்தான்  தமிழினத்தின் மூளைகளாம்.

அண்மையில் இலண்டனில் தமிழர் தகவல் நடுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஓர் கருத்தரங்கிற்கு ஈழத்திலிருந்து ஓய்வுபெற்ற 4 துறைசார் அறிவுஜீவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆங்கிலமே அங்கு ஆட்சி மொழியாக இருந்தது. வந்தவர்களோ ஈழத்தமிழர்கள். ஆங்கிலத்தில் விளாசித்தள்ளினார்கள்.

அம்பாறை மாவட்ட MP பியசேன அளித்த செவ்வியில் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு கூடுகின்ற போது ஆங்கிலத்தில் பேசி ஓர் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் அயல்நாட்டிலிருந்து அபகரித்துக்கொண்ட அடையாளங்களும் கலாச்சாரமும் வரலாறுகளும்தான் இன்றுவரை நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தெய்வங்கள்.

அரச ஆட்சி தொட்டு பின் வந்த அந்நிய ஆட்சி வரை அடிமை வாழ்வு. இந்த அடிமைத் தனத்திலே சுகம் கண்ட இனங்களில் ஈழத் தமிழ் இனமும் ஒன்று. அந்த அடிமை வாழ்விலிருந்து மீளமுடியாது மிச்ச சொச்சங்களையும் காவி வருகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அம்பாறை மாவட்ட TNA MP  பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இலண்டனில் இருந்து இயங்கும் GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம்  சிவகுரு பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்த சம்பவத்தை ஒரு மரபணுப் பிரச்சனை என்று கண்டு பிடித்திருந்தார்.

தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ?

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம் – 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

tree.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு மற்றும் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் திட்டமொன்று நவம்பர் 15ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான ஏற்பாடுகளை சுற்றாடல் வளத்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.

நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், மற்றும் பாடசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் யாப்பா, 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது.

பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு ஒரே தடவையில் அதிகளவு கன்றுகளை நட்டிய நாடு பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரையில் இல்லை என்பதால் சிலவேளை இதுவொரு கின்னஸ் சாதனையாகக் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவோருக்கு 10 வருட சிறை

கனடாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது. சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும்.

மேலும் அவர்களது நிரந்தர வதிவுரிமைக் கோரிக்கை நிராகரிக்கப்படலாமென்றும், அதுமட்டுமின்றி அவர்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் 5 வருடங்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாதென்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேற்ற வாசிகளை கனடாவுக்குள் அழைத்துச் செல்பவர்களுக்கும் குறைந்தபட்சம் 10 வருட காலச் சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த கனேடிய அமைச்சர் விக்டோல்ஸ்; கடந்த வருடங்களில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் கனடா வருகை அதிகரித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் அகதிகளுக்கு கனடா வழங்கிவரும் சலுகையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகள்அதிகரித்துள்ளன.இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் ஆட்கடத்தல் காரர்களுக்கும், சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 492 இலங்கையர்கள் எம். வி. சன்.  கப்பல் மூலம் சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைந்து, தமக்குப் புகலிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்தே, கனடா சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது.

இதன் ஒரு அங்கமாக ஆட்கடத்தல்காரர்களுக்கும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குடிவரவுச் சட்டம் நேற்று முன்தினம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பாரியளவில் ஆதரவளிக்கும் நாடாகக் கனடா உள்ளது. ஆனால் இந்தச் சலுகையை யாரும் துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கப்படாது எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா நாடுகளின் தெரிவில் இலங்கைக்கு முதலிடம்.

சுற்றுலாவுக்கு ஏற்ற நாடுகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 31 நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை நடத்திய தெரிவு ஒன்றின் மூலம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்த சூழ்நிலை நீங்கி அமைதியுடனான அரசியல் நிரந்தரத் தன்மை நிலவுவதே இதற்கான காரணம் என சஞ்சிகை தெரிவிக்கின்றது.

இதேவேளை நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவ்வருடம் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என எதிர்பார்க்கப்பட்ட தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக ஆசிய பசுபிக் சுற்றுலா சங்கம் உறுதி செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

due-00000.jpgமக்களால் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படுகின்றது. இந் நிவாரணம், யுத்தத்தால் மரணமடைந்த ஒரு பிரிவினருக்கும், காயமடைந்து அங்க குறைபாடுடையவர்களுக்கு ஒரு பிரிவாகவும், யுத்தத்தால் சொத்திழப்படைந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினருக்காகவும் 100 பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக இருபத்தைந்து மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.அவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவித்து வருகின்றோம். இது வரை 4860பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்ட முகாமில் 300 பேர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்.

இவர்களுடன் தடுப்பு முகாமில் இருந்த பெண்கள் வயோதிபர்கள், சிறுவர்கள் அங்கவீனமானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியிருப்பவர்களில் 1000 பேர் வரை சட்ட நியதிக்கமைய விசாரணைக்குட்படுத்தப்படுவர் அவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் நிரபராதியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவர்களும் விடுக்கப்படுவர். தடுப்பு முகாமில் இருப்பவர்களில் 10 சதவீதத்தினர் பாடசாலை செல்லாதவர்கள், எழுபது சத விகிதத்தினர் 3, 5, 8 ம் ஆண்டு வரை கற்றவர்கள். இவர்கள் விரும்பும் தொழில் பயிற்சியையும் கல்வியையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. வட பகுதி மக்கள் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அநேகமானவராவர். 80 சத வீதமான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அமைச்சு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது என்றார்.

உடன் உணவு, பானங்கள் பாடசாலைகளில் தடை

அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்கள் என்பவற்றில் இருக்கும் சிற்றுண்டிச் சாலைகளில் உடன் உணவு (Fast Food)  இனிப்பு பானங்கள் ஆகியவற்றின் விற்பனை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட சுற்று நிரூபம் உடனடியாக சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன நேற்று தெரிவித்தார். பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் உடன் உணவு (Fast Food) இனிப்பு பானங்கள் என்பவற்றின் விற்பனை உடனடியாகத் தடை செய்யப்படவிருக்கின்றது.

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களும், பானங்களும் மாத்திரமே பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள், பானங்கள் தொடர்பாகவும், அவற்றின் தரம் குறித்தும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார அதிகாரிகள் சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் எலும்பு பலவீனம், நீரிழிவு, கண் நோய்கள், உடல் பருமன் உட்பட பல தொற்றா நோய்கள் பெரிதும் அதி கரித்துள்ளன. இது சுகாதாரத் துறையினரின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கிலேயே சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கைக்குப் பங்களிப்பு செய் யவிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வேளாவேளைக்கு காலை உணவை உட்கொள்ளாமல் உடன் உணவு (Fast Food) வகைகளையும், இனிப்பு பானங்களையும் உட்கொள்வதற்கு பெரும்பாலான மாணவர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மத்தியில் போஷாக்கின்மையும், நீரிழிவும், உடல் பருமனும் பெரிதும் அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போஷாக்கு மிக்க உள்ளூர் உணவுப் பொருட்களை உண்பதற்கு எமது மாணவ சமூகத்தைப் பழக்கிக்கொள்ளும் போது நோய்கள் பலவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத் துக்கொள்ள முடியுமென பதில் சுகாதார அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களும் நாமே! அரசாங்கமும் நாமே! : யாழ் வட்டுக்கோட்டை – துணைவி (சங்கரத்தை) மாதர் சங்கத்தில் ஒரு சந்திப்பு

Sangarathai_Mathar_Sangamதுணைவி (சங்கரத்தை) மாதர் சங்கம்
கலந்துரையாடல் மினிட்ஸ் (Minutes)
இடம்:  துணைவி-சங்கரத்தை அபிவிருத்தி மையம்
திகதி: நேரம் – 10 புரட்டாசி 2010 – மாலை 3.30

நோக்கம்:

துணவி – சங்கரத்தை வளர்ச்சியையும் மக்களின் எதிர்பார்ப்பையும் ஒன்றுகூட்டல்.

பொது அடிப்படையின் விளக்கம்

நாம் செய்யும் வேலைக்கு உடல், மனம், உள்ளம் /ஆன்மா போல மூன்று வகையான விளைவுகள் உண்டு. அவை
1. பணம் பொருள் சம்பந்தமான விளைவுகள் (Money)
2. மனிதர்/மக்கள் சம்பந்தமான விளைவுகள (People)
3. சொந்தம் /ஈடுபாடு (Ownership)
இவற்றில் முதலாவது ரகம் வெளிப்படையாக தெரியும் விளைவுகள். (Objective Outcomes)
இரண்டாவது ரகம் – பதவியும் நல்லெண்ணமும்
மூன்றாவது – நாம் அதுவாகி அமைப்பை நாமே இயக்கிறோம்.

காசும் பதவியும் மற்றவர்களது கையில் இருந்து வரும். ஆனால் சொந்தம் எங்களது கட்டுப்பாட்டில் எங்களுக்குள் இருந்து எங்களை இயக்குகிறது.

ஆகவே நாம் உண்மையாக வேலை செய்தால் கண்ணுக்குத் தெரியும் பணமும் பதவியும் கிடைக்காவிட்டாலும்கூட ஈடுபாடு வளர்ந்து சொந்தமாகி, நாம் அதுவாகி முழுமையை உணர்கிறோம். சுதந்திரமாக செயற்படுகிறோம். சொந்தம் உள்ள எல்லாரும் இயற்கையாக ஒருவராகிறோம்.

அந்த அடிப்படையில், மக்களும் நாமே அரசாங்கமும் நாமே.

நடந்தது:

வருகை தந்திருந்த மாதர்கள் இரண்டாகப் பிரிந்து ஒரு குழு மக்கள் என்றும், மற்றப் பகுதி அரசாங்கம் என்றும் பதவி எடுத்தோம்.
மக்கள் பகுதி தங்கள் பிரச்சனைகளைச் சொல்ல, அரசாங்கப் பகுதி தமக்குத் தெரிந்த ஆலோசணைகளை பகிர்ந்தார்கள்
(i)வேலை பற்றாக் குறை
(ii)வேலைப் பயிற்சி பற்றாக் குறை
(iii)அரசாங்க வேலைகளிலும் தொழிற் பயிற்சியிலும் சம சந்தர்ப்பம் தெரியாத அவநம்பிக்கை. இது லஞ்சம் காரணமாகவும் இருக்கலாமோ என்ற சந்தேகம்
(iv)அடிப்படை வீட்டு வசதிகள் இல்லாமை
(v)இளம் பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்புகள்

வேலை பற்றாக் குறை:

Sangarathai_Mathar_Sangamஎங்கள் சுற்றாடலில் உள்ள வேலை வாய்ப்புகளை எப்படி அடையாளம் கண்டு அவற்றை பாவிக்க வேலை இல்லாதவர்கள் ஊக்கம் எடுப்பதுடன் மாதர் சங்கம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை நல்ல தராதரத்தில் தயாரிக்க ஊக்கமெடுக்கலாம் என்று ஆராய்ந்தோம்.

எங்கள் சுற்றாடலில் வேலை வாய்ப்புகள் போதிய அளவு இல்லாவிட்டால் நாம் வேலை வாய்ப்புகள் இருக்கும் இடங்களை நாடிப் போக வேண்டும் என்று ஆராய்ந்தோம்.

ஒரு பெண் தான் தோட்டவேலை செய்வதாகவும் அதற்கு தனக்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு ரூபா 150 மட்டுமே என்றார். கிடைக்கும் வருமானம் வீட்டுச் செலவிற்கு போதாது என்றார். எமது கேள்விக்கு அவர் சொன்னார் முன்பு அதைவிட கூடுதலாக உழைக்கவில்லை என்று. அப்படியென்றால் அவர் வேறு வேலை செய்பவர்களுடனோ அல்லது வேறு இடத்தில் அதே வேலை செய்பவர்களுடனோ தன்னை ஒப்பிட்டு பார்க்கிறார் என்று கூறியதை ஏற்றுக் கொண்டார். மனம்தான் அவரது கவலைக்கு முக்கிய காரணம் என்று ஆராய்ந்தோம்.

சிலர் கூடிய ஊதியத்திற்காக, வேலைசெய்ய தொடங்கமுன் அதற்குரிய படிப்பும் பயிற்சியும் அவர்கள் கற்று வந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிபந்தனை இருந்தால் அவர்களுக்கு கூடிய கூலி கிடைப்பது நியாயம் என்று ஒத்துக் கொண்டார். அது கஞ்சிக்கு உப்பில்லை என அழுபவரின் கஷ்டமும் பாலுக்கு சீனி இல்லை என்று அழுபவரின் நோவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் நாம் எமது இயற்கையான சூழ்நிலையில் இருந்தால் இப்படியான நோ, மாயை என்பது தெரியும் என்று கதைத்தோம். இறுதியில் நாம் எமது மனத்துடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதால் இந்த மனப்பக்குவம் எமக்கு நிம்மதியான வாழ்க்கையை காட்டும் என்றோம்.

வேலைப் பயிற்சி பற்றாக் குறை:

தற்போதைய சூழ்நிலையில் இருக்கும் வேலைகள் கிடைக்க தேவையான பயிற்சிகளைப் பெறுவதற்கு மாதர் சங்கம் மூலம் உதவ மாதர் சங்கத்தில் ஒரு குழு அமைத்து அவர்களுக்கு வேண்டிய பயிற்சியை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

ஒரே மாதிரியான தொழிலில் ஈடுபட்டவர்கள் ஒன்றுகூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்வதுடன் பொதுவான அமைப்பின்மூலம் பொது நம்பிக்கையை வளர்த்து பலன்பெற ஊக்குவித்தோம்.

Sangarathai_MS_Nurseஇளம்பெண் ஒருவர் தாதி பயிற்சிக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த அனுபவம் தனக்கு திருப்தியாக உள்ளது என்று சொன்னதை நல்ல வழி என்று மெச்சினோம். அந்த அனுபவம் அடுத்த முயற்சிக்கு உதவும் என்று ஊக்குவித்தோம். அதாவது, உண்மையாக எமக்கு இயலுமானதை நாம் செய்யும்போது, அந்த முயற்சி நிச்சயமாக பலனளிக்கும். இதில் அதி உயர்ந்த பலன் சொந்தம்/பங்களிப்பு. அது சுதந்திரமாக இயக்கும் சக்தி. எங்கும் எப்பவும் வேலை செய்யும்.

இந்த அடிப்படையில், நாம் செய்யும் உண்மையான ஒவ்வொரு வேலைக்கும் பலனுண்டு.

சம சந்தர்ப்பம்:

வேலை பெறுவதற்கும், வேலைப்பயிற்சிக்கு இடம் பெறுவதற்கும் லஞ்சம் ஒரு முக்கிய தடையாக உள்ளது என்ற கருத்தை ஒரு இளம் பெண் முன் வைத்தார். அதற்கு பதில் அளிக்கையில் நாம் கூறியது –
நாம் முதலில் எங்களில் என்ன திருத்தம் செய்ய முடியும் என்று பார்த்தால் அது எங்களது வைராக்கியத்தை பலப்படுத்தும். மற்றவர்களில் குறை கண்டால் அந்தக் குறையை நாம் திருத்தக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லது அதனால் எங்களுக்கு வந்த இழப்பிற்கு / நோவிற்கு எங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், குற்றம் காண வேண்டிய பதவி பொறுப்பும் இல்லாமல் குறை கண்டால் அது எங்கள் மனத்தில் தோல்வி மனப்பான்மையை வளர்க்கும் சாத்திய கூறுகள் அதிகம். அத்துடன் எங்களால் உணர்வுமூலம் திருத்தக்கூடியவர்கள் மட்டுமே எங்கள் சொந்தம். மற்றோர் பிறத்தியர். அவர்களுடன் நாம் பொது நியதிப்படி உண்மையாக நடந்ததை (Facts) வைத்து சரி பிழை கணிக்க வேண்டும். இந்த லஞ்சக் குற்றச்சாட்டு எவ்வகை?

இன்னுமொரு இளம்பெண் இவ்விஷயமாக சொன்னார் – லஞ்சம் வாங்குவது உண்டென்றாலும் – மக்கள் திறமை மூலம் மட்டுமே அந்த சந்தர்ப்பங்களைப் பாவித்தால் அது எங்களைத் தாக்காது என்று. லஞ்சம் வேலை விஷயத்தில் பிழை போல – நிவாரணம் எடுத்து அதற்காக நாம் எம்மால் இயலுமானதை பொது நலனுக்கு செய்யாவிட்டால், அதுவும் லஞ்சம்தான். ஏனெனில், நிவாரணம் பொது நலனில் அதிக ஈடுபாடு உள்ளவர்களின் பிரதிபலிப்பு.

நிவாரணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் நிவாரணம் கொடுப்பவர்களில் நம்பிக்கை வைத்திருந்தால் அவர்கள் ஒரு குடும்பத்தை / சமூகத்தைச் சார்ந்தவர்களாகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உணர்வால் பிணைக்கப்பட்டவர்கள். ஆகவே உணர்வுடன் நிவாரணம் ஏற்றுக் கொள்பவர்கள் நிவாரணம் கொடுப்பவர்களுடன் இணைகிறார்கள். அதேபோல் நிவாரணம் கொடுப்பவர்களும் நிவாரணம் கொடுக்கப்படுபவர்களும் தங்களில் ஒரு பகுதி என்ற உணர்வுடன் மட்டுமே கொடுத்தால் நிவாரணம் பெறுபவர்களது கஷ்டம் நிவாரணம் கொடுப்பவர்கள் பட்ட கஷ்டம் ஆகிறது. இருவர் ஒருவர் ஆகின்றனர்

முதலில் உணர்வு இல்லாவிட்டாலும் அறிவுமுலம் யோசித்து, பொதுக் கொள்கை அடிப்படையில் கணித்து செயல்படும்பொழுது கொடுக்கும்/கிடைக்கும் காசு/பொருள் இரண்டாம்பட்சமாகி கொடுப்பவர் முதலாம்பட்சமாகத் தொடங்க நம்பிக்கை உருவாகிறது. நம்பிக்கை உணர்வாகிறது. உணர்வு இருபக்கத்தையும் ஒருவராக்கி ஒருவர் மற்றவருக்கு கடனாளியாகாமல் பாதுகாக்கும். கொடுப்பவர் பதவி போன்ற பலனுக்காகவும் வாங்குபவர் பணம்போன்ற பலனுக்காகவும் ஏற்றுக் கொண்டால் அது ஏற்ற தாழ்வை வளர்த்து கெடுதலை உருவாக்கும். ஒருவிதமான தாக்கம் இன்னொருவிதமான தாக்கமாக உருமாறும். அது சமுக வளர்ச்சியின் எதிரி.

அடிப்படை வீட்டு வசதிகள்:

இந்த நிவாரண கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை எங்கள் துணைவி-சங்கரத்தையிலும் நடந்தபடியால் பலர் வீடு இருந்தும் இல்லாத மன நிலையில் உள்ளனர். மேலும், கொடுப்பவர்களது உணர்வு பற்றாமையால், வீடுகளில் தண்ணீர் மலசலகூட வசதிகள் முன்போடப் படவில்லை.

நிவாரணம் கொடுப்பவர்களது அடிமட்ட வீட்டின் தன்மைகளும் நிவாரணம் வாங்குபவர்களின் அடிமட்ட வீட்டின் தன்மைகளும் ஒன்றாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. உருவங்கள் வேறாக இருக்கலாம் – ஒன்று கல் வீடு, மற்றது ஓலைக் குடுசை-. ஆனால் சுத்தம் ஒரு தராதரமாக இருக்க முடியும். அடிப்படை கலாச்சாரத்துடன் எடுக்காவிட்டால், பீத்தல் பறங்கி மாதிரி, கொச்சைத் தமிழ்போல அங்குமில்லாமல் இங்குமில்லாமல் அமையும்.

ஆகவே குடும்ப வீட்டின் நல்ல தன்மைகளை முதலில் வளம்படுத்த முடிவு செய்தோம். அதில் முன்னேற்றம் காட்டுபவர்களுக்கும் அதற்காக நிவாரணம் கொடுப்பவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

வறுமையை மாத்திரம் பார்த்துக் கணக்கிட்டால், ஏற்கனவே இன, சாதி அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் இன்னும் தங்களைத் தாழ்த்திக் கொள்ளும் சாத்தியம் அதிகம் உண்டு. அப்படியல்லாமல் உருவத்தில் சமத்துவத்தை காட்டப் பார்ப்பவர்கள் முயற்சியை பின்போடப் பார்ப்பார்கள்.

பால் குடித்துப் பழகியவர் கஞ்சி குடித்து உப்பு காணுமா? என்றும் பார்க்கலாம், கஞ்சி குடித்துப் பழகியவர் திறமையால் உழைத்து பால் வாங்கி சீனி காணுமா? என்றும் பார்க்கலாம். முதலாம் ரகத்தவர் ஒறுத்தல்/தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். இரண்டாம் ரகத்தவர் உழைப்பை முன் போடுபவர்களாக இருப்பர்.

பாதுகாப்பு:

குடும்பத்தில் மனோ பலமும் உடல் பலமும் கொண்டவர்கள் பலம் குறைந்தவர்களை பாதுகாக்கும் பண்பு வளரவேண்டும். அது சமூக மட்டத்திலும் அப்ப நடக்க மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அதிகாரிகள் உதவ வேண்டும். சமீபத்தில் சில பெண்கள் தம்மை வேலைக்கு என்று கூப்பிட்டு விபசாரம் செய்யப் போகிறார்கள் என்று தாம் பயம் கொண்டதாக கூறினார்கள். முறைப்படி வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் இப்படியான பயங்களில் இருந்து பாதுகாக்கப்படுவர் என்று முடிவு செய்தோம்.

தீர்மானங்கள்:

மேற்கூறிய வகையில் எங்களை வழம்படுத்த ஈடுபாடுள்ளவர்களுடன் சேர்ந்து முயற்சிக்க முடிவு செய்துள்ளோம்.