வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும் மூன்றாம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை மற்றும் பூவரசங்குளம் பிரதேசங்கள் உட்பட 25 கிராமங்களில் முதற்கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .
மீள்குடியமர்த்துவதற்காக சுமார் 800 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நலன்புரி முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள இறுதித் திட்ட அறிக்கை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பமாகுமென்று வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் நேற்று பிற்பகல் கூட்டமொன்றும் நடைபெற்றது. வடக்கு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் மன்னார் முசலி பகுதியில் மக்கள் தமது சொந்த வாழ் விடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள்.
வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தற்போது வவுனியா மாவட்டத்திலும் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது என்று அரச அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் உள்ள நலன் புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை நிவாரணக் கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .
வவுனியா மாவட்ட கல்வி வலயத்தின் 17 பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் நலன்புரி நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த நிலையங்களில் இருந்த மக்கள் நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ள ப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் ஓரிரண்டு பாடசாலைகளே விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.