24

24

யாழ் தேர்தல் குறித்து புத்தளம் மக்களிடையே ஆர்வம் இல்லை?

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்திலிருந்து 19 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களிடையே ஆர்வம் இல்லை என்று எமது செய்தியாளர் கூறுகிறார்.

அங்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான முடிவுகளை ஆடவர்களே எடுப்பார்கள் என்றும் புத்தளம் பகுதியில் இருக்கும் சில மகளிர் கருத்து வெளியிட்டுள்ளனர். யாழ் பகுதியில் இருக்கும் தமிழ் மக்களிடையே கூட இந்தத் தேர்தல் நடத்தப்படுவதில் விருப்பமில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜஃபருல்லா.

தமது உறவினர்கள் வவுனியா மற்றும் இதரப் பகுதிகளில் இருக்கும் முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதே தேர்தலுக்கு மக்களிடையே ஆதரவு இல்லாதததுக்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார். எனினும் தேர்தலுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்கின்றன

கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலை – 7 மாதங்களில் சீமெந்து உற்பத்தியை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

யாழ். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற் சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

‘வடக்கு வசந்தம்’ திட்டத்தின் கீழ் ஏழு மாதகாலங்களில் மீள இத்தொழிற்சாலையைக் கட்டியெழுப்புவதுடன், சீமெந்து உற்பத்தியை ஆரம்பிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் செல்வநாயகம் தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளது. இவ்விஜயத்தின் போது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் நிலைமையை நேரடியாகப் பார்வையிட்ட அமைச்சர்; ஏற்கனவே அங்கிருந்த இயந்திராதிகளை மீள உபயோகிக்க முடியுமாஎன்பதையும் ஆராய்ந்துள்ளார். பயங்கரவாத சூழல் காரணமாகக் கடந்த மூன்று தசாப்த காலங்களாக மேற்படி தொழிற்சாலை மூடப்பட்டிருந்ததுடன் அங்குள்ள இயந்திராதிகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

யுத்தத்துக்கு முன்னர் இத்தொழிற்சாலை இயங்கியபோது வருடாந்தம் இங்கு பத்து இலட்சம் மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளதுடன் அது நாட்டின் சீமெந்து தேவையில் பெருமளவை ஈடுசெய்துள்ளது.

இத்தொழிற்சாலையை மீள ஆரம்பித்து சீமெந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை வெளிமாவட்டங்களிலிருந்தாயினும் பெற்று தேசிய சீமெந்து உற்பத்தித்துறைக்குப் பங்களிப்புச் செய்வதே நமது நோக்கமெனவும் அமைச்சர் வெல்கம தெரிவித்துள்ளார்