15

15

திருகோணமலையில் மீன்பிடித் தடைகள் நீக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு

fishermen.jpgகிழக்கு மாகாணக் கடலில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட அறிவுறுத்தலின் படி இம்மீன்பிடித் தடை நேற்று முதல் நீக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. மூதூர் மற்றும் திருமலை மீனவர்களை நேற்று நேரில் சந்தித்துக் கூறினார்.

சுமார் ஐந்து வருடங்கள் கிழக்கு கடலில் மீன்பிடிப்பது மட்டுப்படுத்தப்பட்டும், தடைவிதிக்கப்பட்டும் இருந்தது தெரிந்ததே. தற்போது அமைதி நிலைமை ஏற்பட்டிருப்பதால் மீனவர்களின் நலன் கருதி இத்தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். இதன்படி திருமலை துறைமுகத்திற்கு வெளியே கடலில் 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தெப்பம் தவிர்ந்த படகுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.தெப்பங்களில் மீன்பிடிப்பவர்கள் அதிகாலை 4.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரையும் மீன்பிடிக்க இடமளிக்கப்பட்டுள்ளது.

டிங்கி படகுகளுக்கு 15 குதிரை வலு கொண்ட இயந்திரங்களைப் பாவிப்பதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனுமதி 25 குதிரைவலு வரையான இயந்திரங்களைப் பாவிக்கவும் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.மீனவர்கள் திருமலைத் துறைமுகத்தின் ஊடாக கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவென கொரிடோரும் அமைக்கப்படவுள்ளது.

திருமலை துறைமுகத்தினுள் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த மட்டப்படுத்தலை ஐந்து மடங்கு வரை தளர்த்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் பெரிய வலைகளைப் பாவித்து மீன்பிடிப்பதில் ஈடுபடுபவர்கள் இரவு 8.00 மணிக்குள் கரைக்கு திரும்பிவிடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இத்தீர்மானங்கள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அமைச்சர்கள் நஜீப் ஏ மஜீத், சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத் துரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா உட்பட்ட முக்கியஸ்தர்களால் திருமலை மூதூர் மீனவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

புலிகளின் மற்றொரு நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடலில் மீட்பு

தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை முல்லைத்தீவு, வெள்ளை முள்ளி வாய்க்கால் பகுதிக்கு அண்மித்த கடலில் புலிகளின் மற்றொரு நீர் மூழ்கியொன்றை கண்டெடுத்திருப்பதாக இரா ணுவப் பேச்சாளர் அலுவலக அதிகாரி யொருவர் தெரிவித்தார்.

நான்கு அடிகள் உயரமும், 24 அடிகள் நீளமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வெள்ளைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தின் கரையிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கடலிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

இராணுவத்தின் எட்டாவது விசேட படையணிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. இந்நீர்மூழ்கி ஏற்கனவே பாவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

3 ஓட்டங்களால் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

t20-world-cup.jpgசுப்பர் 8 சுற்றில் இந்திய  மற்றும் இங்கிலாந்து  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய  இந்திய  அணி 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

கிழக்கு, தென் கிழக்கு, மன்னார் கடற் பரப்பில் கொந்தளிப்பு – இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

fishing_peoples.jpgகிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடற் பரப்புக்கள் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரித்திகா ஜயக்கொடி நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பிற்பகலில் பெய்யும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு அடிக்கடி மழை பெய்யக் கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் காலப் பகுதியில் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30- 40 கிலோ மீட்டர் வேகத்தில் காணப்படும். அது சில சமயங்களில் 50 கிலோ மீட்டர் வரையும் அதிகரிக்க முடியும்.

இதன் காரணத்தினால் இப்பிரதேச கடல் பரப்பு கொந்தளிப்பாக இருக்கும். ஏனைய பிரதேச கடற்பரப்புக்கள் இடையிடையே கொந்தளிப்பு நிலையை அடையும். அதன் காரணத்தினால் இந்த நாட்களில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த முன் அவதானத்துடன் நடந்து கொள்ளுவது அவசியம். இதேவேளை நேற்றுக் காலையுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் லபுகமவிலேயே அதிக மழை பெய்துள்ளது என்றார்.