03

03

களுத்துறை, மாத்தளை, கண்டி இன்று நீர்வெட்டு

மாத்தளை, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று (3ம் திகதி) நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நேற்று அறிவித்தது.

மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று காலை 5.00 மணி முதல் 24 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் அச்சபை குறிப்பிட்டிருக்கிறது. தம்புள்ள நகரம், பொருளாதார மத்திய நிலையம், குருநாகல் வீதி, பொஹரன்வெவ, இப்பன்கட்டுவ நீர்த்தேக்க வீதி, அனுராதபுர வீதி, தெமதஓயா, பெல்வெஹர, கம்உதாவ, கல்வெட்டியாவ, மாத்தளை வீதி, கபுவத்தை, தம்புளுஓயா, நிசங்க வீதி, பஹல வெவ, கண்டலம வீதி, பட்டுயாய, ரத்மல்கஹஎல, மகாயாய, எருவலசந்தி ஆகிய பிரதேசங்களுக்கே 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட விருக்கிறது.

தம்புள்ள நீர்வழங்கல் திட்ட நிர்மாணம் மற்றும் பராமரிப்பு காரணமாக 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் நீரை வீண் விரயம் செய்ய வேண்டாமெனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பாவனையாளர்களைக் கேட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையிலான 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட விருக்கிறது. கெத்ஹேன முதல் பேருவளை வரையான நீர்வழங்கல் குழாயில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாகவே பயாகல, மக்கொன, பேருவளை, மொரகல்ல, அலுத்கம, தர்காநகர், பெந்தர ஆகிய பிரதேசங்களுக்கு இன்று ஒன்பது மணிநேர நீர்வெட்டு அமுல்படுத் தப்படவிருப்பதாகவும் அச்சபை அறிவித்திருக்கிறது.

பாடசாலைகளின் டெங்கு ஒழிப்பு வாரம் 8-15 வரை அமைச்சர் சுசில் பிரகடனம்

mosquito_preventionss.jpg“பாடசா லைகளில் டெங்கு ஒழிப்பு வாரம்” ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பிரகடனப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை “பாடசாலைகள் டெங்கு ஒழிப்பு வாரம்” அனுஷ்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். டெங்குக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு தொடர்பான வேலைத் திட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் வேகமாக முன்னெடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வாரத்தினுள் சகல பாடசாலைகளிலும் அதன் சுற்றுப் புறச் சூழல்களில் டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாடசாலை மாண வர்களைக் கொண்டே டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைகளை செய்யுமாறும் அமைச்சர் சகல மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினங்களிலும் காலை 7.30 மணி முதல் 8.00 மணிவரை பாடசாலை சுற்றுப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு முன்னேற்பாடுகளை செய்யுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சகல பாடசாலை அதிபர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்