June

June

மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி

Nanthi_Kadal”கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம்.”

தமது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பல இடங்களில் தங்கி சகல உடமைகளையும் இழந்து ஆனால் உயிர்தப்பி தற்போது முகாமில் இருக்கும் ஒரு இளம்குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நேரடி உரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொண்ட, அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மனக்கசப்புகள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பே இக்கட்டுரையாகும்.

”கிளிநொச்சியில் ஏ9 அருகாமையில் அமைந்த எங்கள் வீடு, வசதிகளுடன் கூடிய பெரியவீடு. இவ்வீட்டை தம்மிடம் தரும்படி பலதடவைகள் புலிகள் எங்களிடம் கேட்டனர். ஜந்துபேரைக் கொண்ட எமது குடும்பத்திற்கு அறைகளற்ற குடிசை வீடுகளை பதிலாகக் காட்டினார்கள். உறுதியை எழுதி அவ்வீட்டை எம்மிடமிருந்து எடுப்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. எப்படியும் எமதுவீடு பறிபோய்விடும் என்ற பயம் எமக்கிருந்தது. எனவே இதை வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனத்தினருக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு டிசம்பர் 2008 நடுப்பகுதியில் நாம் அக்கராயன் நோக்கி இடம்பெயர்ந்தோம்.

தொழில் – கம வசதிக்காகவும் அக்கராயன் போனோம். அங்கு எமக்குக் கிடைக்கும் மாத வருமானத்தைவிட அதிகமான பணத்தை புலிகள் அறவிடுவார்கள். என்றுமே புலிகளுக்கு இதைச் சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் தரவுமில்லை. தாம் நினைத்ததை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். இதன் காரணமாகவே தொழில்துறைகள் நஷ்டப்பட்டு அழிந்து போனது பலருடைய அனுபவங்கள். ஏ9 பாதையை அண்மித்த வியாபாரத் தளங்களின் வியாபாரிகள் இதற்கு நல்ல உதாரணம். எமது தொழில்துறைகளை அழித்தது மட்டுமல்ல கிளிநொச்சிக்கு இராணுவம் வருகின்றதென எவ்வித ஆயத்தங்களோ முன்னறிவிப்போ இன்றி உடனடியாக எம்மை வற்புறுத்தி வெளியேற்றியமை மிகவும் கொடுமையானது.

கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம். வெளியேறிய நாட்களிலிருந்து பல இடங்களில் தங்கினோம். எம்மிடமிருந்த உடமைகள் உடுப்புகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு இடத்திலும் தொலைத்தோம். குண்டுச் சத்தம் அருகாக கேட்கையில் பயத்தில் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு ஓடுவோம். திரும்பி வந்து பார்க்கையில் எமது பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். எமது அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இழந்தோம். இவையாவும் எமது மக்களுக்கான எமது தமிழ் இனத்திற்கான விடிவைத் தேடித்தரும் என்று நம்பினோமோ? இல்லையோ? இந்த வழியால் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயநிலை எமக்கு.

இலங்கை அரசும் இராணுவமும் எமது எதிரியா? அல்லது நண்பனா? நாம் என்றுமே பரீட்சித்துப் பார்க்கவில்லை. ஆனால் எம்மீது விழும் குண்டுகள் எமது எதிரிகளே. இது யாரிடமிருந்து வருகிறது என்றும் எமக்கு தெரியாது? ஆனால் இலங்கை இராணுவத்தின் கொடுமை என்ற பேச்சிலிருந்து நாம் விலகுவதில்லை. குண்டு வரும் திசை பார்க்க எமக்கு தெரியாது. எல்லா திசைகளுமே ஒரே திசையாகவே தெரிந்தது.

இடம்விட்டு இடம்மாறுவது கூட யாரோ சொல்வார்கள், மக்கள் அசைவார்கள் நாமும் போவோம். ஏன் மாறுகின்றோம்? காரணம் எப்போதும் ஒன்றாகவே இருந்தது. அது இலங்கை இராணுவம் முன்னேறுகின்றது என்பதே. நாம் எங்கே போகிறோம் என்று யாரும் கேட்பதில்லை. விலகிப்போகிறோம். செல்விழுந்தால் ஓடுவோம். யார்மீது விழுந்தது? அவரது நிலை என்ன? திரும்ப வந்து பார்த்தது கிடையாது. விலத்திப் போகிறோம். புதிய மண், புதிய கிராமம், புதிய குறிச்சி நோக்கி போகிறோம். ஒவ்வொரு புதிய இடங்களிலும் ஒவ்வோரு புதிய பிரச்சினைகள் வரும். தண்ணீர் கிடையாது. தண்ணீர் கிடைத்தால் மரநிழல் கிடையாது. இருந்த பிறகு தான் தெரியும் நாம் கடியெறும்பின்மேல் இருந்து விட்டோம் என்று. ஒழுங்கான நித்திரை கிடையாது. நித்திரையானால் மீண்டும் கண்விழிப்பமோ தெரியாது என்ற மனப்பயம் எப்போதுமிருக்கும். எவ்வளவு கேவலமாகவெல்லாம் நாம் நடத்தப்பட்டோம்.

பாரதிபுரம் ரெட்பார்னா விஸ்வமடு உடையார்கட்டு குரவயல் இருட்டுமடு அம்பலவன்பொக்கணை மாத்தளன் ஆகிய கிராமங்களைத் தாண்டி நந்திக்கடல் அருகே வந்தோம்.

நாம் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது ஒரு உழவுயந்திரம் ஒரு லொறி சமையற்பாத்திரங்கள் மாற்று உடைகள் நகைகள் பணம் எம்மிடம் இருந்தன. இன்று எம்மிடம் எந்த உடமைகளோ பொருட்களோ இல்லை. உடுத்த உடுப்பும் கையில் உள்மாற்று உடுப்புகளும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

நாம் இத்தனைகளையும் ஏன் இழந்தோம்? எமக்கு தெரியவில்லை? இத்தனை கஸ்டங்களை அனுபவித்தோம் – எதற்காக என்றும் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் எதை தரப்போகின்றது? என்பதுவும் எமக்கு தெரியவில்லை. பசி களைப்பு. சாப்பாடு தண்ணி எங்கு கிடைக்கும் என்பதைத்தவிர வேறெந்த சிந்தனையும் எம்மிடம் இருக்கவில்லை.

கடந்த 3 ,4 மாதங்களாக நடந்த இந்த மக்கள் யாத்திரையில் எத்தனை நாட்கள் உணவு கிடைத்தது என்று எம்மால் கூற முடியும். எந்த இடங்களில் எந்த மரங்கள் காபய்க்கவில்லை. கனிகள் இல்லை என்பதுவும் எமக்கு தெரியும். எமக்கு உணவுதர யாரும் இல்லை! பாதை சொல்ல யாரும் இல்லை! நடைபயணம் மட்டும் வெற்றிகரமாக முன்னேறியிருந்தது.

குழந்தைகளும் நாமும் படும் அவலங்கண்டு மாத்தளன் பகுதியிலுள்ள ஒரு பெரியவர் நாம் தப்பி ஓடுவதற்கு உதவி புரிந்தார். இவரது வீட்டில் புலிகளுக்குத் தெரியாமல் ஒளித்திருந்து பலர் இந்த வழியாக நந்திக்கடலில் நீந்தி இராணுவம் உள்ள பக்கத்திற்கு போயிருந்தனர். புலிகளின் சென்றி பொயின்ற்றுக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் மக்கள் ஒளித்திருந்து புலிகளின் சென்றி பொயின்ரில் அவர்கள் இல்லாத வேளைகளில் நந்திக்கடலினூடாக தப்பியோடுவார்கள். சிலசமயங்களில் புலிகள் வேறு இடத்தில் இராணுவத்தினரை மறிப்பதற்காக ஓடும்போதும் மக்கள் அலை அலையாக நந்திக்கடலில் இறங்கி ஓடுவது வழக்கமானது. பொதுவாக இரவு வேளைகளிலேயே தப்பியோடுவர்.

நந்திக்கடல் அருகே புலிகளின் நடமாட்டங்களை மற்றவர்கள் போல் நாமும் அவதானித்துக் கொண்டிருந்தோம். தப்பி ஓடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது எமக்கு இலங்கை இராணுவத்தின் திசை திட்டவட்டமாக தெரியும். அதை நோக்கி போக வேண்டும் என்பது மட்டுமே எமது இலக்காக இருந்தது.

இராணுவப் பகுதிக்குச் சென்றபின்னர் என்ன நடக்கும் என்றும் எமக்குத் தெரியாது. இலங்கை இராணுவம் உள்ள பக்கம் நோக்கிச் சென்றால் அங்கு எமக்கு தெரிந்த சிலராவது எமக்கு உதவுவார்கள் என நம்பினோம்.

எல்லோரையும் போலவே நாமும் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தோம் சிலநாட்களுக்கு முன்பு போல் அல்லாது தற்போது புலிகளின் நடமாட்டம் குறைவடைந்தது. பசியால் கதறும் குழந்தைகளையும் கொண்டு நந்திக்கடலை கடப்பதைவிட வேறு வழியில்லை என புரிந்து கொண்டோம். எனது சகோதரத்தையும் சேர்ந்து வரக் கேட்டேன். அவர்கள் எமக்கு இருப்பதோ ஒரு குழந்தை அந்தப் பிள்ளையை நந்திக்கடலுக்கு பலிகொடுப்பதைவிட இங்கேயே இருப்போம் என்றார். அவரது நியாயம் எனக்கு விளங்கியது. நாம் எமது குழந்தைகளுடன் நந்திக்கடலில் இறங்கினோம். இரவு 06மணி 45 நிமிடம். இரவு கவிழ ஆரம்பித்த நேரம். நாம் வாழ்வா சாவா என்ற தாயக்கட்டையில் இருந்த அந்தகணப்பொழுது இன்றும் நினைவுவரின் பயப்பிடுகிறோம்.

தப்பிஓட முயன்ற பலர் நந்திக்கடலில் இறங்கும்போது இவர்களால் நந்திக்கடல் சிவந்தது. உடல்கள் மிதந்தது. சிலர் தப்பி ஓடினர். எமது குடும்பத்தினருக்கும் எதுவும் நடக்கலாம். என்னவும் நடக்கட்டும் என்று இறங்கினோம். எமக்கு வேறு மாற்றுவழி எதுவுமே இருக்கவில்லை எம்பின்னால் இருந்து துப்பாக்கி ரவைகள் எம்மீது பாய்ந்தது. ஒவ்வொரு சத்தத்துக்கும் குழந்தைகளும் நாமும் தண்ணீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து தலைகள் மட்டும் தண்ணீருக்கு மேல் தெரிய மிருகங்கள் போல் புலிகளிடமிருந்து தப்பித்து ஓடினோம். கடலில் மிதந்த சடலங்கள் இந்தக் கடலை நிரப்பியிருந்ததை நாமும் குழந்தைகளும் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம். இடையிடையே ஆழமான பள்ளங்களுள் ஆள்மாறி ஆள்மாறி விழுந்தெழும்பினோம். அருகேவந்த மற்றவர்களின் முதுகில் புலிகளின் துப்பாக்கி வேட்டுக்கள் பட்டு அலறும் சத்தம் கேட்கையில் எமக்கும் உயிர்போகும். குழந்தைகள் பல தடவைகள் செத்துப் பிழைத்தனர. இந்தப்பயணம் முன்னைய பயணங்கள் போல் அல்லாத பசிதீர்க்கும் பயணமாகவே இருந்தது. குடிதண்ணீர் கிடைக்கக் கூடிய பயணமாகவே இருந்தது. பல மணிநேர போராட்டத்தின் பின் நள்ளிரவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி கரையேறினோம். நந்திக்கடலின் இறுதிக்கட்டத்தில் அடைமழை எம்மை மிகவும் வருத்திவிட்டது.

புலிகளின் பார்வையிலிருந்து தப்பி கரையேறும்போது இரவு 11மணி 30 நிமிடம் நாம் வரும்திசைகளை மிகதிட்டவட்டமாக அரச இராணுவம் அவதானித்திருந்தது. இந்த இருட்டினுள் இராணுவம் அடிக்கும் பரா லைட் வெளிச்சத்தில் எமது பயணம் தொடர்ந்தது. சிலர் வழிதவறிப் போய் நிலக்கண்ணி வெடியில் அகப்பட்டு உயிரிழந்தார்கள். அங்கங்களை இழந்தவர்களின் அலறும் குரல்களும் இருட்டினுள் அப்பா அம்மா என்று அலறும் குரல்களும் எம்மை மரணத்தின் விளிம்புக்கு எடுத்துப் போய்வந்தது. இவ்வளவு பரிதாபங்களையும் பராலைட் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டு இருட்டில் அசையும் போது நாம் அனுபவித்த மனவேதனையை நினைத்துப் பார்க்கும் போது இப்போதும் அழுகைவருகிறது.

அந்த நள்ளிரவில் எமது கண்ணீரை கழுவிப் போன அடை மழையையும் நாம் மறக்கவில்லை. எமக்கு தப்பியோட உதவிய முதியவரையும் நாம் இன்றும் நன்றியுடன் நினைக்கிறோம்.

இராணுவத்தின் பரா லைட் எமக்கு பாதுகாப்பாகவும் வழிகாட்டியாகவும் புலிகளுக்கு எம்மை காட்டிக் கொடுக்கும் எமனாகவும் அதே நேரத்தில் இருந்தது. ஆனாலும் நாம் இராணுவத்திடம் போய் சேர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். எம்மை மரணத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய புலிகள் எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை நாம் என்றும் மன்னிக்க மாட்டோம். இது எத்தனை சந்ததிக்கும் நினைவிருக்கும்.

மீண்டும் பசிப்போராட்டம். சாப்பிட ஏதும் இல்லை. இப்போது நாம் புலிகளின் பயறிங் றேஞ்சில் இல்லை (firing range) களைத்துப்போய் கரையில் பல மணிநேரம் இளைப்பாறினோம். குழைந்தைகளின் பசிக்களையை கண்டு கூட இருந்தவர் தான் கொண்டுவந்த ரொட்டியில் இரண்டை எமக்குத் தந்தார். அதை எனது மூன்று குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுத்தேன். தூரத்தே இலங்கை இராணுவம் தெரிந்தது. அவர்களை நோக்கி நடந்தோம். கற்களும் முட்களும் நிறைந்தபாதை எமக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

மாத்தளனில் புலிகளின் துப்பாக்கிகள் அவர்களின் கைகளில் எம்மை நோக்கியபடியே இருந்தன. தற்போது இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிகள். ஆனால் அவை அவர்களின் தோளில் இருந்தன. அவர்கள் கைகளில் பிஸ்கட் பைக்கட்டுக்ளுனும் தண்ணீர்ப் போத்தல்களுடனும் எம்மை அணுகினர். சாப்பிட்டோம் தண்ணீர் குடித்தோம். எமது குடும்பம் தப்பித்துக் கொண்டது என்ற நிம்மதியில் மரத்தடியில் அடுத்த 7 மணித்தியாலங்கள் உறங்கிவிட்டோம்.

பின்னர் இராணுவம் எம்மை அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தது. 7 நாட்களின் பின்னர் மாற்று உடுப்பு கிடைத்தது. கிளிநொச்சியில் ஆரம்பித்த பயணம் பல மாதத்தின் பின்னர் வவுனியா அகதி முகாமில் முடிவடைந்துள்ளது இனி என்ன? எமது எதிர்காலம் என்ன? எல்லாம் கேள்வியாகவே உள்ளது. யாரிடமும் பதில் இல்லை!

தற்போது சைவப்பிரகாச நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளோம். 3600 பேர் இங்குள்ளனர். ஒருசிறு கட்டிடத்தில் 55 பேர்கள் ஒரு வகுப்பறையில் படுத்திருக்கிறோம். இரவில் ஒருவரின் தலையில் ஒருவரின் கால்படுவது சாதாரணமானது எனினும் நித்திரைக்குப் போகிறோம். நித்திரை உண்மையிலேயே நித்திரைதான. நித்திரை விட்டு நிச்சயமாக எழுவோம். என்ற நம்பிக்கையுண்டு.

முகாமில் சாப்பாடு ஒருதரம் என்றாலும் நிச்சயம் கிடைக்கும். சாப்பாட்டின் தரம் என்பதைவிட சாப்பாடு கிடைக்கின்றது. குடிதண்ணீர் கிடைக்கின்றது. குழந்தைகள் ஓடி விளையாடுகிறார்கள்.
 
முகாமில் மக்கள் தொகை அதிகமாதலால் பலவிதமான அசௌகரியங்களை சந்திக்கிறோம். மலசலகூடமும் அதன் சீர்கேடுகளும் துர்நாற்றங்களும் சகிக்க முடியாது. குளிப்பதற்கு நீண்ட வரிசை காத்திருக்கும். நான் இரவு 12 மணியளவிலேயேதான் குளித்துள்ளேன்.

எமது மருத்துவப் பிரச்சினைகளுக்கு வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். எமது குழந்தை ஒன்றின் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு விசேட மருத்துவர் ஒழுங்கு செய்யப்பட்டும் தரப்பட்டுள்ளது.

எனது சகோதரர் குடும்பம் இறுதியாக வெளியேறிவர்களுடன் வெளியேறி வேறு முகாமில் உள்ளதாக அறிந்தேன்.

நாம் எப்போது எமது வீட்டுக்குத் திரும்பிப்போவோம் என்ற எதிர்பார்ப்புடன் முகாம்களில் காத்திருக்கின்றோம். எமது முகாமிற்கு டக்ளஸ் பல தடவைகள் வந்துள்ளார் எல்லோருடனும் தனித்தனியே கதைப்பார். நானும் கதைத்துள்ளேன். எமது தேவைகள் பற்றி சொல்லியுள்ளேன் பலர் கடிதங்களாக எழுதிக் கொடுப்பார்கள். நாம் எமது வாழ்விடங்களுக்கு திரும்பிப்போக வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். தற்போது நாம் இருக்கும் இந்தப் பள்ளிக் கூட அகதி முகாம் மிக விரைவில் உழுக்குளம் 6வது நிவாரணக் கிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அறிகிறோம். பிரிந்த குடும்பங்களை ஒன்றாகச் சேர்க்கின்றார்கள். அதே வேளை தத்தமது வசிப்பிடங்களுக்கு போக விரும்புவர்களது பெயர்விபரங்களும் சேகரிக்கப்படுகின்றது.”
 
இவ்வாறு இந்த இளம்தாய் தனது நீண்ட கொடுமையான பயணத்தை விளங்கப்படுத்தினார். மிகவும் மனம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெறுப்புடனும் உள்ள இவர்கள் மனஆறுதலுக்கு யாருடனாவது கதைப்பதற்கு ஏங்குவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. அவர்கள் இழந்தது சொத்து சுகமல்ல. அவர்களது வாழ்க்கை. தாம் வெளியேறிய பின்னர் நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு போர் முடிந்ததை தவிர எவ்வாறு முடிந்தது என்ற விபரம் தெரியாதுள்ளனர். தமது வாழ்வு வளம் தமது எதிர்காலம் எல்லாமே புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக குறைப்படும் இவர்களுக்கு தமது எதிர்காலத்தை எவ்வாறு ஆரம்பிக்கப் போகின்றோம் என்ற அச்சஉணர்வும் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நிதிஉதவி அளித்துத்தானே புலிகளை இந்த யுத்தத்தை செய்விக்கத் தூண்டினீர்கள். நாம் இன்று இந்த நிலைமைக்கு வர நீங்களும்தானே காரணம். நாம் எமது வாழ்விடங்களுக்கு போய் வாழ நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்? எனக் கேட்கிறார்கள். அவர்களிடம் கேள்விகள் மட்டுமே நிறையவே உண்டு.

ஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு 65 வீத வாக்குகள் பெற்று பெரு வெற்றி

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதியாக கலாநிதி மஹ்மூத் அஹமதி நெஜாத் மீண்டும் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கலாநிதி நெஜாத் 65% வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளாரென்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52 வயதான அஹமதி நெஜாத் ஈரானின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவியேற்கின்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமரான மிதவாத அரசியல்வாதியாகக் கருதப்படும் மிர் ஹுசேன் முசாவி 32.05% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பழைமைவாதியான அஹமதி நெஜாத்துக்குக் கிராமப்புற மக்கள் 75% வாக்களித்துள்ளனர். ஈரானின் 46.2 மில்லியன் வாக்காளர்களில், ஒரு கோடியே 40 இலட்சத்து 11,668 பேர் வாக்களித்துள்ளனர். எதிரணி வேட்பாளருக்கு 65 இலட்சத்து 75,844 பேர் வாக்களித்துள்ளனர்.

1979ஆம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், நடைபெற்ற இந்த 10வது ஜனாதிபதித் தேர்தலிலேயே கூடுதலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 45,713 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், மக்கள் அலை அலையாக வாக்களிக்கவென திரண்டு வந்தனர். இதனால் வாக்களிப்பு நேரத்தை இரண்டு மணித்தியாலம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால், வாக்களிப்பு நிறைவடைந்ததும் உடனடியாக செய்தியாளர் மாநாட்டைக் கூட்டிய முன்னாள் பிரதமர் ஹுசேன் மூஸ்வி, தாம் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென அறிவித்திருந்தார். ஆனால், நேற்றுக் காலை முதல் வெளியான முடிவுகளின்படி ஜனாதிபதி அஹமதி நெஜாத் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் வீதிகளில் திரண்டு தமது வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினர். இதனால், தலைநகர் தெஹ்ரானில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஜனாதிபதி அஹமதி நெஜாத்தின் வெற்றியை ஏற்க முடியாதென ஹுசேன் மூஸ்வி தெரிவித்துள்ளார். இது ஒரு மோசடியான தேர்தல் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேர்தலின்போது தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குறுந்தகவல் சேவை, இணையத்தளம் என்பவையும் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐ. அ. இராய்ச்சிய வெளி. அமைச்சர் நேற்று கொழும்பு வருகை அபிவிருத்திக்கு உதவ முன்வருகை

sheikh_abdullah_bin_zayed_al-uae.jpgஇலங் கையில், விவசாயம், நிர்மாணப்பணிகள், உல்லாசப் பயணத்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஐக்கிய அரபு இராய்ச்சியம் உதவ முன்வந்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (சனி) கொழும்புக்கு வருகை தந்த ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயிட் அல் நஃயான் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஐ.அ. இராய்ச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் முடிவில் பிற்பகல் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இரு அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்தனர். இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.அ. இராய்ச்சியத்தின் அமைச்சர், இந்த ஆண்டு ஒப்டோபர் மாதம் அளவில் இரு நாடுகளுக்கிடையிலும் கூட்டு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. அதன் பின்னரே முதலீடு செய்வது சாத்தியமாகுமெனக் கூறினார்.

ஐ.அ.இராய்ச்சியத்தின் அமைச்சர் ஷேக் அப்துல்லா, அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, ராஜித சேனாரத்ன உட்பட அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் ரோஹித போகொல்லாகம;

சுமார் இரண்டரை இலட்சம் இலங்கையர்கள் ஐ. அ. இராய்ச்சியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1976ம் ஆண்டு அவரின் தந்தையார் வந்தார்.  அதன்பின்னர் அமைச்சர் ஷேக் அப்துல்லா வந்துள்ளார் என அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.

ஈழத்தமிழர் பிள்ளைகள் கல்விக்காக நிதியுதவி: நடிகர் சிவகுமார்

sevakumar.jpgதமிழ கத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு கல்வி கற்க நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி வருகிறார்.  இந்தமுறை 30வது ஆண்டாக பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவர்களது மகன்களான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஒரு வேளை மட்டுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். கஷ்டப்பட்டு படித்ததால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன். மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அதுபோல தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது பற்றுக்கொண்டிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்த பிறகாவது நிம்மதி ஏற்படும் என்று பார்த்தால், அங்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காத நிலை இருக்கிறது. இலங்கையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் துன்பப்படுகிற ஈழத் தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

ஏகான் கிளாசிக் டென்னிஸ்: சானியா மிர்சா தோல்வி

27-saniamirza.jpgஇங்கி லாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., ஏகான் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் சனிக்கிழமை நடந்த ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுலோவேகியாவின் மக்டலினா ரிபரிகோவாவிடம் 6 3, 0 6, 3 6 என்ற செட் கணக்கில்  தோல்வியடைந்து வெளியேறினார்.

இருபதுக்கு இருபது கிரிக்கெட்: மேற்கிந்தியத் தீவிகளை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

11bravo20-20.jpgஃபிளெட்சரின் விக்கெட்டை எடுத்து மகிழும் பந்துவீச்சாளர் பார்னெல் இங்கிலாந்தில் நடந்துவரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடந்த ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி இருபது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி முதலில் மட்டைப்பிடித்து இருபது ஓவர்களில் 183 ரன்களைக் குவித்திருந்தது. ஹெர்ஷெல் கிப்ஸ் அதிகபட்சமாக 55 ரன்களைக் குவித்திருந்தார். துவக்க ஆட்டக்காரர்களான காலிஸ் மற்றும் அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோரும் அணியின் எண்ணிக்கை உயருவதற்கு கணிசமான பங்களிப்பு செய்திருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க பந்துவீச்சாளர் ஜெரோம் டெய்லர் மூன்று விட்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இரண்டாவதாக மட்டை பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை.

ஆனால் முதல் விக்கெட்டுக்காக களமிறங்கியிருந்த அண்ட்ரூ சிம்மன்ஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். 50 பந்துகளில் 77 ரன்களை அவர் குவித்திருந்தார்.

தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்ததோடு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன் குவிப்பு வேகத்தையும் கட்டுப்படுத்தினர்.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பார்னெல் தனக்கு வழங்கப்பட்ட நான்கு ஓவர்களில் பதிமூன்று ரன்களை மட்டுமே தந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இருபது ஓவர்களின் கடைசியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

‘225 எம்.பிக்களும் ஒத்துழைக்க வேண்டும்’ சபையில் அமைச்சர் டிலான்

parliament-of-sri-lanka.jpgஒருவருக் கொருவர் சேறுபூசும் அரசியல் கலாசாரத்தைக் கைவிட்டு தமிழ் மக்களுக் கான அரசியல் தீர்வை சகல கட்சிகளும் இணைந்து பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டியது முக்கியமெனவும் அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அமரர் சிவனேசனின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

எமக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். அதற்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனப்பட்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். குறுகிய அரசியலைக் கைவிட்டு நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சர்வகட்சிக் குழுவின் பக்கம் விரல் நீட்டாமல் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை எதிர்த்த ஜே.வி.பி. மலையகத் தோட்டத்துறை மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியது. இத் தருணத்தில் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அக்கட்சி செயற்படுதல் அவசியம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் படுகொலை செய்யப்படமாட்டார்கள். இப்போது பயங்கரவாதம் உருவாக மூலகாரணமான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டியது முக்கியம்.

இத்தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது குறுகிய அரசியல் சிந்தனையிலிருந்து வெளியே வரவேண்டும். ரவிராஜ், கதிர்காமர், ஜெயராஜ் உட்பட பல அரசியல்வாதிகள் படுகொலைகளுக்கு இச்சபையில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெற்றன.

புலிகள் இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டதையடுத்து இத்தகைய படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று மறைந்த சிவனேசன் எம்.பிக்கான அனுதாபப் பிரேரணை இடம்பெறுகிறது. தமிழ் மக்கள் பயங்கரவாதிகளால் பல்வேறு துயரங்களை கடந்த 30 வருடங்களாக அனுப வித்துள்ளனர். இன்று அந்த மக்கள் நலன்புரி முகாம்களில் வாழும் நிலையில் அவர்களைத் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதே சிவனேசன் எம்.பிக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உலக இரத்ததான தினம் World Blood Donor Day – புன்னியாமீன்

world-blood-donor-day.bmp  உலக இரத்ததான தினம் World Blood Donor Day (recognized by the UN) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இரத்ததானம் என்பது இன்னொருவருக்கு ஏற்றுவதற்காக இரத்தத்தை வழங்குவதை பொருள்படுத்தி நிற்கின்றது. இந்த தானத்தின் மூலம் சகல வழங்குநரும், பெருநரும் இதன் பிரதிபலன்களை அவர்களுடைய வாழ்நாளிலேயே அனுபவிக்கிறார்கள்.

விபத்தினாலோ, யுத்த அனர்த்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அளவிற்கு அதிகமான குருதி வெளியேற்றத்தினாலும், சத்திரசிகிச்சைகளின் போது குருதி தேவைப்படுமிடத்தும் மற்றும் குருதி மாற்றுச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படும்போதும் குருதியை தானமாக பெறுபவர்கள் பயன் அடைகிறார்கள். குருதியின் தேவை எச்சந்தர்ப்பத்தில் தேவைப்படும் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாது.

அதேநேரம், குருதியைப் பெறுபவர் தன் உயிரை மீளப் பெற்றுக் கொள்வதினூடாக நன்மையடைவதைப் போலவே இரத்ததானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள். இவர்களின் சிறிய செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் ஒரு உயிரைக் காப்பதற்கு உதவும் மனோநிலை இவர்களிடம் வளர்கின்றது. மறுபுறமாக இரத்ததானம் செய்பவர்களின் உடலில் புதிய குருதி உற்பத்தி செய்யப்படுவதால் அவர்களும் ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்கிறார்கள். இந்த உண்மையை இரத்ததானம் செய்வோர் என்ற வட்டத்திற்கு அல்லது எல்லைக்கு வெளியே இருந்து பார்ப்போர் புரிந்து கொள்வதில்லை.

உலக ரீதியில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கம் இரத்ததானம் வழங்குபவர்களை கௌரவப்படுத்துவதற்காகவே வேண்டியாகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியபோதிலும் இரத்தத்துக்கு மாற்றீடாக வேறு எந்த ஆக்கக்கூறுகளும் கண்டறியப்படவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தமே வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நோயாளி மரணிக்கவும் கூடும்.

2009ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருப்பொருள் ‘இரத்தம் வழங்களின் பாதுகாப்பையும், தன்னிறைவையும் செம்மைப்படுத்தி எவ்வித ஊதியமோ, வெகுமதியோ இன்றி சுயமாக தொண்டு செய்யும் நோக்குடன் இரத்ததானத்தை ஊக்குவிப்பதாகும்’. வருடாவருடம் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் 81 மில்லியனுக்குக் கூடிய அலகுகளை இரத்ததானமாக வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் என்றோ ஒருநாள் இரத்தத்தின் மூலம் சிகிச்சைச் செய்ய தேவை ஏற்படலாம் என்ற அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் மிகவும் பயபக்தியுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

அதேநேரம், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை பிரகாரம் உலக சனத்தொகையில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களே இரத்ததானத்தை செய்கின்றனர். எல்லா நோயாளர்களுக்கும் தேவையான இரத்தம் மூலமான சிகிச்சையை உத்தரவாதப்படுத்தி வழங்க இரத்ததானம் செய்வோரின் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

மேலும் உலக மக்கள் வழங்கும் இரத்ததானம் ஆண்டுதோறும் 81 மில்லியன் அலகுகளுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இதில் 38 வீதமான பங்களிப்பினையே வளர்முக நாடுகளில் வழங்கப்படுகின்றது. ஆனால், உலக சனத்தொகையின் 82வீதமானோர் வளர்முக நாடுகளில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு பல்வேறுபட்ட வகைகளில் புரிந்துணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

அன்று முதல் இன்றுவரை இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் இரத்ததானமாகும். ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் வைத்தியத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக குருதிதிரவ இழைய தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தானங்களும் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைந்துள்ளன. இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் தானம் செய்யும் கருணையுள்ளம் கொண்ட கொடையாளிகளின் இதயத்தில் இவையும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன என்பதேயன்றி வேறு எதுவும் இல்லை.

சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முத‌ல் 350 மில்லிலீட்டர் (ஒரு யூனிட்) இரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். பொதுவாக 17 – 60 வயதுக்கிடைப்பட்ட சுகதேகிகளால் இரத்ததானம் செய்ய முடியும்.

இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும். தானமாக அளித்த இரத்த அளவை, நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும். இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும். இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
உடலில் இருந்து இரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே இரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.

இரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.
இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. சர்க்கரை நோய், காசரோகம், எய்ட்ஸ் போன்று இரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

உலக இரத்தான தினத்தின் பிரதான குறிக்கோள்களாக பின்வருவன அமைகின்றன:-

எந்தவொரு வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்ததானத்தை வழங்குவோருக்கு நன்றி செலுத்துதல்.

நெருக்கடியான சூழ்நிலையில் உயிர்காக்கும் விலைமதிப்பற்ற வளத்தினை ஒழுங்காக வழங்கும் அற்புதமான விசேடமான தொண்டர் அணியைச் சேர்ந்தவர் என்ற மனநிலையை இரத்ததானம் புரிவோருக்கு ஏற்படுத்துதல்.

சுகதேகியாக உள்ள நண்பர்களையும், உறவினர்களையும் எவ்வித வெகுமதியோ அல்லது ஊதியமோ இன்றி இரத்தான நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்கமளித்தல்.

ஒரு குடும்ப அங்கத்தவருக்கு இரத்தம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் இரத்ததானம் செய்தவரை தொடர்ந்தும் இத்தகைய தொண்டர் பணியில் ஈடுபட ஊக்குவித்தல்.

இரத்ததானம் செய்வோருக்கு எவ்வாறு சுகமான வாழ்வினை மேற்கொள்ள முடியும், எவ்வாறு தமது இரத்தத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பது பற்றி அறிவுறுத்துதல்.

உலக இரத்ததான இயற்கை நிகழ்ச்சிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல்.

ஐக்கிய இராச்சியத்தில் பொதுமக்கள் பெருந்தன்மையுடன் இரத்ததானம் செய்கின்றார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இங்கிலாந்திலும், பிரேசிலிலும் நிச்சயிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக தேசிய இரத்த சேவை நிறுவனம் தினமும் 9000 இரத்த அலகுகளை சேகரிக்கின்றது என்றும், கடந்த வருடம் 1.3 மில்லியன் மக்களிடமிருந்து 2.3 மில்லியன் இரத்த அலகுகளை சேகரித்து வழங்கியமையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்றும் அற்றிக்கைகளில் குறிப்பிடுகின்றது.

எனவே, இது விடயமாக நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இரத்ததானம் என்பது ஒரு உயிரைக் காக்க நாங்கள் வழங்கும் பங்களிப்பு. இந்த உணர்வினை இத்தினத்தில் உறுதியாக எமது மனங்களில் பதித்துக் கொள்வோம்.

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0614-world-blood-donor-day.html

விடத்தல் தீவு பகுதியில் புதிய பொலிஸ் நிலையம்

sri-lankan-road.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்ட பகுதியான மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு பகுதியில் அண்மையில் பொலிஸாரினால் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திரந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளை நேரில் சென்று பார்ப்பதற்காக சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்ரம ரட்ன அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவருடன் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் வருகை தந்திருந்தார்.

இதன் போது விடத்தல் தீவு பகுதியில் அண்மையில் புதிதாக திரக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டதோடு அங்குள்ள குறை நிரைகளையும் கேட்டரிந்தார். இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜெயமகால், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் நி.டி.எஸ்.ஆர் அசன் , மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் திரக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர்மடத்தில் இரத்ததான நிகழ்வு

கொழும்பு – 13, கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் ஆரம்பிக்கப்பட்டு 140 வருடங்களாகின்றன.

இதன் 140வது வருடவிழாவையொட்டி நல்லாயன் கன்னியர் மடம் எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இக்கன்னியர் மடத்தில் இரத்ததான முகாமொன்றை நடத்தவுள்ளது.

18 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்ட 50 கிலோ கிறாம் எடை கொண்ட எவரும் இங்கு இரத்ததானம் செய்யலாம். இரத்த தானம் செய்ய வருபவர்கள் தேசிய அடையாள அட்டை கொண்டு வருமாறு கேட்கப் பட்டுள்ளது.